''என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு (ஜெயலலிதா) அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்'' என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா திடீரென ஒரு பாச அறிக்கையை இன்று வெளியிட்டு அ.தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
''கடந்த மூன்று மாத காலமாக பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 1984-ம் ஆண்டில் முதன் முதலாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டார்.
1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இரவு-பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவிற்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை.
போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவிற்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை.
24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவை பிரிந்து, அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.
கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது. என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவிற்குத் துரோகம் நினைத்ததில்லை.
என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.
இவ்வாறு அக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவிற்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.
என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.
பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவிற்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்'' என்று சசிகலா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால் சசிகலாவின் இந்த திடீர் அறிக்கைக்கு பலவிர காரணங்கள் கூறப்படுகிறது. ஏற்கனவே நிலமோசடி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சசிகலா கணவர் நடராஜன், தம்பி திவாகரன், உறவினர் ராவணன், சசிகலா நடத்தி வரும் மிடாஸ் மதுபான நிறுவனத்தை நிர்வகித்து வரும் மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
போதாக்குறைக்கு சசிகலாவின் அக்காள் மகன் மகா தேவனை போலீஸார் கடந்த 4 நாட்களாக தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் மிடாஸ் மதுபானம் தொடர்பாக சசிகலா கைது செய்யப்படலாம் என்று வாரப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
கணவர், உறவினரை தொடர்ந்து தாமும் கைது செய்யப்படலாம் என்று கருதிய சசிகலா, திடீரென ஜெயலலிதாவை புகழ்ந்தும், '' உறவினர்கள், நண்பர்கள் ஜெயலலிதாவுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டனர், ஜெயலலிதாவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்'' என்று ஒரு பாச அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை பார்த்து அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் சசிகலா ஜெயலலிதாவிடம் சேர்ந்து விடுவாரோ என்றும் அ.தி.மு.க. உடன்பிறப்புகள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் அம்மா எடுத்த நடவடிக்கையில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டார், சசிகலாவை மீண்டும் சேர்ப்பது என்பது கனவிலும் நடக்காத ஒன்று உடன் பிறப்பு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
24 ஆண்டு கால தோழியை மீண்டும் ஜெயலலிதா சேர்ப்பாரா என்பது அவருக்கே வெளிச்சம்!
No comments:
Post a Comment