Thursday 22 March 2012

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!



ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.

உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?

தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இப்படி மெனக்கெட்டதாம்.

இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலியக்க வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.

சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.

ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.

இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.

இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.

இப்போது ஐநாவில் தோற்ற 'கடுப்பில்' உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

No comments:

Post a Comment