Sunday 25 March 2012

இந்தியாவின் விமான வியூகங்கள்!



ந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுதக் கொள்முதல் செய்த நாடு... நம் இந்தியா. இந்திய ராணுவத்தில் கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப் படைப் பிரிவைச் சொல்லலாம்.  அடிக்கடி கீழே விழுந்து 'தற்கொலை’ செய்துகொள்ளும் 'மிக்’ ரக விமானங்களுக்குப் பதிலாக, சுகோய் - 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க, ஒப்பந்தம் செய்தது இந்தியா.

ஆனாலும், சுகோய்-30, மிராஜ் - 2000, ஜாக்குவார், தேஜஸ் போன்ற இந்திய படைப் பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர் விமானங்களோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் சுள்ளான்கள்தான். மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் 'ஜெனரேஷன் கேப்’ உண்டு.

மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல், பனிமலை, நிலம் என அனைத்துப் பிரதேசங்களிலும் தாக்குப்பிடித்து போர் புரிய முடியாது. அனைத்துப் பிரதேசங் களிலும் நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் நான்காம் தலைமுறைப் போர் விமானங்களை வாங்க இந்தியா 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, 126 விமானங்கள் வாங்க டெண்டர் விட்டபோது, பல ஆயுத நிறுவ னங்கள் அதற்கு அடித்துக்கொண்டன.


நான்காம் தலைமுறைப் போர் விமானங்களில் பெஸ்ட் ரஃபேலும் யூரோஃபைட் டரும்தான். இரண்டுமே வான், நிலம், கடல் மூன்றிலும் தாக்குதல் நடத்தக் கூடியவை. ரஃபேல்... பிரான்ஸின் தயாரிப்பு. யூரோ ஃபைட்டர்... ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, ஆஸ்திரியா, சவுதி அரேபியா ஆகிய ஆறு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு.

யூரோ ஃபைட்டரைவிட, ரஃபேல் விலை குறைவு. அதுவும்போக, இந்திய விமானப் படையில் இருக்கும் மிராஜ் - 2000... ரஃபேலின் முந்தைய வெர்ஷன். அதனால் ரஃபேலை இயக்க இந்திய விமானிகள் சிரமப்பட மாட்டார்கள். இதனால்,ரஃபேல் பக்கம் பார்வையைத் திருப்பியது இந்திய விமானப் படை.

அவ்வளவுதான்... இங்கிலாந்து, இத்தாலி ஆகியவை முட்டி முறைக்க ஆரம்பித்தன. 'இந்தியா தன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்!’ என்று அழுத்தமாகவே சொன்னார் இங்கிலாந்து பிரதமர். 'இந்தியா வளர்ந்த நாடு ஆகிவிட்டது.

அதன் சேரிப் பகுதி முன்னேற்றத்துக்காக என்.ஜி.ஓ-க்களுக்கு அளிக்கும் தொகையை இங்கிலாந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்!’ என்று ஐரோப்பியப் பத்திரிகைகள் கருத்துச் சொல்ல ஆரம்பித்தன.

ஆனாலும், ரஃபேலை வாங்குவதில் உறுதியாக இருக்கிறது இந்தியா. முதலில் 18 விமானங்களை நேரடியாக அளிக்க வேண்டும். மீதி 108 விமானங்களை இந்திய நிறுவனங்களோடு இணைந்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தது. அதாவது, ரஃபேல் விமானங்களைச் சொந்தமாக உருவாக்கிக்கொள்ள இந்தியா வுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

'அட! நல்லா இருக்கே’ என்று தோன்றுகிறதா? உண்மையில் இப்போது இருப்பதைவிட, 10 ஆண்டுகள் கழித்து இந்திய விமானப் படை பலமாகத்தான் இருக்கும். ஆனால், அப்போது சீனா பலவானாக இருக்கும். பெங்களூரில் போர் விமானம் தயாரிக்கும் பாரத் ஏரோநாட்டிகல் லிமிடெட்டைவிட, சீனாவின் போர்ப் படைப் பிரிவான செங்க்டு பல படிகள் முன்னணியில் நிற்கிறது.


அங்கே ஜே-20 ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்தை 2011 ஜனவரி மாதமே உருவாக்கிவிட்டார்கள். தற்போது அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக செயல்திறன் மிக்க விமானத்தை உருவாக் கும் தகுதி படைத்த மூன்றாவது நாடாகி விட்டது சீனா. 2017-க்குள் சீன ராணுவத்தில் ஜே-20 சேர்ந்துவிடும். அதாவது, ஐந்து வருடங்கள் கழித்து சீன ராணுவத்தில் ஐந்தாம் தலைமுறை ஜே-20 இருக்கும். 10 வருடங்கள் கழித்து, இந்தியாவில் நான்காம் தலைமுறை ரஃபேல் விமானங்கள் இருக்கும்.

இப்போது இந்திய ராணுவத்தில் உள்ள சுகோய், மிராஜ் விமானங்களைச் சமாளிக்க 2005-லேயே ஜே 10 விமானங்களை வடிவமைத்துவிட்டது சீனா. அப்போதே அவர்களிடம் இருந்து 36 ஜே-10 விமானங்களை வாங்க சீனாவோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது பாகிஸ்தான்.

இந்தியா ஏன் ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்கவில்லை? 2000 ஆண்டு வாக்கிலேயே ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வாங்க பட்ஜெட் ஒதுக்கியும், அப்போது அவை எதுவும் விலைக்குக் கிடைக்கவில்லை. வல்லரசு நாடுகள் தங்களுக்குத் தேவையான அளவு தயாரித்துவைத்துக்கொண்டு பின்னர்தான், விற்பனைக்காக விமானத்தை மார்க்கெட்டுக்கு அனுப்பும்.

அது விற்று முடிவதற்குள், அடுத்த தலைமுறைவிமானம் தயாராகிவிடும். இந்தியா ஐந்தாம் தலை முறை விமானத்துக்காகக் காத்திருக்க, சீனா பட்ஜெட்டில் எக்கச்சக்கப் பணம் ஒதுக்கி சொந்தமாக ஐந்தாம் தலைமுறை விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் 'பாதுகாப்புத் துறையில் சீனாவைவிட இந்தியா பின்தங்கியே இருக்கிறது’ என்று வருத்தத்துடன் சொன்னார் பிரதமர் மன்மோகன் சிங். இப்போதைக்கு போர் வராதுதான். போர் வராத வரை பிரச்னை இல்லைதான். யாருக்கு என்கிறீர்களா? யாருக்கோ!

No comments:

Post a Comment