Monday 26 March 2012

தமிழ்நாடே ஐக்கிய நாடுகளவையின் இலங்கைத் தீர்மான வெற்றிக்கான காரணி!



ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை அமர்வில் அமெரிக்கா இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்தவுடன் ஆரம்பித்தது அந்த இராஜதந்திரப் போர். பிரேரணை அவ்வளவு ஆழமாக எந்தவொரு விடயத்தையும் ஆராயாவிடினும் இது இலங்கை ஆட்சியாளர்களிற்கு எதிரான தாக்குதலின் ஆரம்பப்படி.


இருந்தபோதும் இந்த பிரேரணை நிறையவேற்றத்தின் பின்னணி நிறைவே விடயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் பேசு சக்தியாக ஏற்று அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் அவர்களை கடந்த நவம்பர் மாத இறுதியில் வாசிங்டனிற்கு அழைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பேச்சுக்கள் நடாத்தியிருந்தது. இச் சந்திப்பு ஒருதெளிவான பார்வையை அமெரிக்காவின் முடிவெடுக்கும் தரப்பிடம் ஏற்படுத்தியிருந்தது.

தங்களின் இத் தீர்மானம் தொடர்பான வரைபுகள் மேற்கொள்ளப்பட்ட போது கூட திரு.சுமந்திரன் பா.உ. அவர்களை  இரண்டாவது தடவையாயாக அமெரிக்காவிற்கு அழைத்து தமிழ் மக்களின் இன்றைய தேவை, நிலைப்பாடு என்பன குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்பட்டது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான ஒரு தீர்வு என்ற முயற்சியை எடுப்பதற்காக போரின் போதான கற்கைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வைத்தே இலங்கைக்கு எதிரான வரைபு வரையப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் அமெரிக்கா பிரேரணையை சமர்ப்பித்தவுடன்  இலங்கை மேற்கொண்ட இராஜதந்திரப் பிரச்சாரங்கள் இலங்கையின் எதிர்ப்பிரசார வலுவை எடுத்தியம்பியிருந்தன.

தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்தடுத்த தினங்களிலேயே அமெரிக்கா இந்தத் தீர்மானத்திற்கு 47 நாடுகளின் பங்களிப்பைப் பெறுவதென்பது சற்றே கடிணம் என்பதை அமெரிக்கா கண்டறிந்து கொண்டது.

உடனடியாகவே 50 ற்கு மேற்பட்ட இராஜாங்கத் திணைக்கள ஊழியர்கள் நட்புறவு வலைப்பின்னல் பணிக்காகவும் தீர்மானத்திற்கான ஆதரவுக்காகவும் தங்களது பணியை மேற்கொள்வதற்காக ஜெனிவாக் களத்தில் இறக்கப்பட்டனர்.

மேலதிக ஊக்குசக்தியாக அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் கூட ஜெனிவா அனுப்பப்பட்டார்.

ஆனால் அதனையும் மீறயதொரு தேவையை அமெரிக்கா கண்டறிந்தது.கியூபா, சீனா, ரஸ்யா ஆகியன எதிர்த்த போதும் 24 வாக்குகளைப் பெற்று அத் தீர்மானத்தை வெற்றியடையச் செய்வது சாத்தியப்படும் காரியமாகவே அமெரிக்காவிற்குத் தெரிந்தது.

இருந்தபோதும் இத் தீர்மாணத்தின் வெற்றிக்கு இந்தியாவின் நிலைப்பாடே மிகப்பெரிய தேவை என்பதை அது உணர்ந்து கொண்டது. இந்தியா தீர்மானத்தை ஆதரித்தால் ஐ.நா. மனிதவுரிமை அவையிலுள்ள ஏழு அல்லது எட்டு நாடுகள் அதனை ஆதரிக்கும். இந்தியா எதிர்த்தால் இந்த நாடுகளும் எதிர்க்கும் அல்லது நடுநிலை வகிக்கும் என்பதுவே அந்தக் காரணி.

உடனடியாக அமெரிக்கா தனது உயர்மட்ட பிரதிநிதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்காக கொழும்பிற்கு அனுப்பியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைச் சந்தித்த மேற்படி அதிகாரி இந்தியா தங்களது தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை தெட்டத் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதற்கான வழிவகைகளையும் அவரே பரிந்துரைத்தார். டெல்லியை அணுகுங்கள் தமிழ்நாட்டை டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கச் சொல்லுங்கள். இதுவே தீர்மானத்தின் வெற்றிக்கான உயிர்நாடி என்பதை எடுத்துரைத்தார்.
அதன்படியே அவர் கட்டளையைச் சிரமேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கள் பணிகளை இந்தியாவை நோக்கி திருப்பிவிட்டது.

குறிப்பாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயராம் ஜெயலலிதாவின் இறுக்கமான நிலைப்பாடு, ஏனைய கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோள் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றம் பெறச் செய்தன.

இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் தமிழ்நாடே இந்தத் தீர்மான வெற்றிக்கான முதலுமான முடிவுமான காரணி. அமெரிக்கா எதிர்பார்த்த வெற்றியும் கிடைத்தாகிவிட்டது. இலங்கையின் ஆட்சியாளர்களிற்கெதிரான சர்வதேச வலைப்பின்னலின் முதல்படியும் வெற்றியடைந்தாகி விட்டது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த அந்த உயரதிகாரியின் கேள்வி இன்னமுமே உலகத் தமிழர்களின் பரப்பில் தொக்கி நிற்கிறது.
“தமிழர்கள் அமெரிக்காவின் நிலைப்பாட்டைஆதரித்தால் மாத்திரமே இந்த த்தீர்மானம் வெற்றிபெறும்”, “தமிழர்கள் அமெரிக்காவை ஆதரிப்பார்களா?”
அமெரிக்காவின் இந்தக் கேள்விற்கான விடை தமிழ்நாட்டுத் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்த தமிழர்களிடமுமே உள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலைமையாக ஏற்பதும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு வலுச்சேர்ப்பதும் குரல்வளை நெரிக்கப்பட்டு குற்றுயுராகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழருக்கான வாழ்வை மீளப் பெற்றுத்தரும் என்பதை உணர்தல் மாத்திரமே இதனைச் சாத்தியப்படுத்தும்.

No comments:

Post a Comment