இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்; ஜி.எல்.பீரிஸ் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து அவர் பதவி விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமக்கு நம்பிக்கையான மூத்த அமைச்சர்களுடன் அமைச்சர் பீரிஸ் மனந்திறந்து பேசியதாகவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறியதாகவும் தெரியவருகிறது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம மீண்டும் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது. அதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ரோஹித போகொல்லாகம தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இதேவேளை அமைச்சர் ரெஜனோல்ட் கூரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தாரெனவும், இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோகலாமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment