Saturday 7 April 2012

லத்தீன் அமெரிக்க நாடுகளில் காலூன்றும் விடுதலைப் புலிகள் – உயர்மட்ட இராஜதந்திரி எச்சரிக்கை



லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, சிறிலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை வலுப்படுத்தி, சிறிலங்கா எதிர்ப் பரப்புரைகளை வலிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், சிறிலங்காவின் தூதரகங்கள் அமைய வேண்டும்.

இந்த நடவடிக்கையில் லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளின் முக்கியத்துவம் சிறிலங்காவுக்கு அதிகரித்து வருகிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் தமது கடல் கடந்த செயற்பாடுகளை அதிகரித்து வருகின்றனர்.

அவர்கள் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் நுழைந்துள்ளனர்.

ஆர்ஜென்ரீனாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது எனக்குத் தெரியும்.

நாம் அந்தப் பிராந்தியத்தை தனிப்படக் கவனிக்க வேண்டும்.

அவர்களின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகள் அந்த நாட்டின் பிரதான ஊடகங்களில் வெளிவருகின்றன.

அந்த நாட்டு மக்கள் சிறிலங்காவைப் பற்றி மேற்குலக ஊடகங்களில் தான் படிப்பார்கள்“ என்றும் தாமரா குணநாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment