Saturday 7 April 2012

சிங்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள் கட்டி முடித்தனர் ?



இலங்கை அரசானது தான் HSBC வங்கியிடம் வாங்கிய 500 மில்லியன் டாலர் கடனை, முழுதாகக் கட்டி முடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. போர் உக்கிரமடைந்த காலகட்டமான 2007ம் ஆண்டு, சுமார் 500 மில்லியன் டாலர்களை அபிவிருத்தி என்ற போர்வையில், இலங்கை அரசு கடனாப் பெற்றது. இத்தொகையானது முழுதும் பணமாகவே இலங்கை அரசுக்கு குறிப்பிட்ட வங்கியால் வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடையம். இதனைக் கொண்டு இலங்கை அரசு பெரும் ஆயுதத்தளவாடங்களை வாங்கியிருந்தது. இச்செய்தியானது 2007ம் ஆண்டு பல ஊடகங்களால் வெளியானது மக்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் தற்போது இத்தொகையை வட்டியும் முதலுமாக முழுமையாகத் தாம் செலுத்தவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, தமது கையிருப்பில் சுமார் 6.1 பில்லியன் டாலர்கள் நிலுவையில் உள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் தேயிலை ஏற்றுமதி தொடக்கம், ஆடை ஏற்றுமதிவரை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கை எவ்வாறு லாபம் ஈட்டிவருகிறது என்று பலரும் எண்ணலாம். இலங்கைக்கு முன்னெப்போதும் இல்லாதவாறு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர். லட்சக்கணக்கில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் தேசிய விமானசேவையைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இலங்கைக்கு கொண்டுசென்று செலவுசெய்யும் பணம், இலங்கையின் அன்னியச்செலாவணியை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழ் மக்களும் இலங்கைக்குச் சென்றுவருவதை அதிகரித்துள்ளனர்.

இதனால் இலங்கை அரசானது தமிழர்களுக்கு எதிராக போர் நடத்த வாங்கிய கடனின் ஒரு பகுதியை அடைக்க, புலம்பெயர் தமிழ் மக்களே பணத்தைக் கொடுத்து உதவும் நிலை தோன்றியுள்ளது எனலாம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணித்தல், இலங்கைக்குச் செல்வதை தவிர்த்தல் என்பது போன்ற போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் மெல்லமெல்ல கைவிடும் நிலைதான் தற்போது தோன்றியுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment