Sunday 1 July 2012

சிறிலங்காவை விடமாட்டோம்... தொடர்ந்து துரத்துவோம் என்கிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்



வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் செய்தியாளர்களுடன் காணொலி மூலம் நேரலையாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்காவில் மிகப்பெரிய செயற்திட்டம் ஒன்று முடிக்கப்படாமல் உள்ளது குறித்து அமெரிக்கா முடிந்தளவு கரிசனை காட்டி வருகிறது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் அந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.“ என்று சிறிலங்கா ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு போஸ்னர் பதிலளித்தார்.

இந்த நேரலை காணொலிக் கலந்துரையாடல், அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட பூகோள மனிதஉரிமைகள் நிலை அறிக்கையை மையப்படுத்தியே இடம்பெற்றது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், தானும் அண்மையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் நடத்திய பேச்சுத் தொடர்பாக கருத்து வெளியிட்ட மைக்கல் போஸ்னர்,

“கரிசனைக்குரிய பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. அந்த விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

ஆனால், வடக்கில் இன்னமும் தொடரும் பாகுபாட்டை தீர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரவணைத்துக் கொள்வதற்கும் நல்லிணக்க விவகாரங்களை கையாள்வதற்கான செயற்திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment