ஒரு நிதியமைச்சராக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட மன்மோகன் சிங், இன்று பிரதமர் பதவியில் இரண்டாவது முறையாக நீடித்தாலும் அவர் திறமையுடன் செயல்படவில்லை என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையாக கருதப்படும் டைம் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வார டைம் பத்திரிகையின் ஆசிய பதிப்பில் வெளியாகியுள்ள பிரதான கட்டுரை மன்மோகன் சிங்கை பற்றி எழுதபட்டுள்ளது. அதில், மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லை; நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், மன்மோகன் சிங் செல்வாக்கை இழந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது நம்பிக்கைத் ததும்பும் சாந்தமான முகத்தை மன்மோகன் சிங் இழந்துவிட்டார். அவர் தனது அமைச்சரவை சகாக்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் திணறுகிறார்.
தற்காலிகமாக நிதியமைச்சர் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தாலும், தான் கொண்டு வர முயற்சிக்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் உதவக்கூடிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் முட்டுக்கட்டை போடப்படுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக தனது தொலைநோக்குத் திட்டங்களின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த மன்மோகன் சிங், 1990-களில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டை வேகமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரது பொறுமை, நேர்மையான நடத்தையால் பலரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். பிரதமராக தனது முதல் பதவி காலத்தில் நாட்டின் வளர்ச்சியை 9.6 சதவீதமாக உயர்த்திக் காட்டினார்.
ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழலால் அவரது அரசுக்கு இப்போது கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே புகார் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்துவதற்காக மானியங்கள், சமூக நலத் திட்டங்களில் அரசு அதிக பணத்தைச் செலவிடுகிறது. அதே நேரம், வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு உகந்த சட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொழிலதிபர்கள் தெரிவிக்கும் யோசனைகளான மானியங்களை குறைத்தல், டீசல் விலை நிர்ணயத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே மேற்கொள்ள அனுமதித்தல், மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதியளிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் மன்மோகன் சிங் உள்ளார்.
அவரது அரசின் செயல்பாடுகள் மீதான மக்களின் மதிப்பீட்டை வரும் 2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தனது அதிகாரத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மன்மோகன் சிங் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், சீர்திருத்தங்களை மேற்கொள்ளமுடியாமல் அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன என்று "டைம்' பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment