Tuesday 28 July 2015

சரித்திர நாயகன் அப்துல் கலாம்

“விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.”- இந்திய இளைஞர்களின், அவர்களது கனவுகளின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல் கலாம் காலமான செய்தியைக் கேட்டதும் இதுதான் தோன்றியது.


எப்போதும் மாணவர்கள் புடைசூழ இருப்பதையே விரும்பும் அப்துல் கலாம், அதே மாணவர்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, மேடையிலிருந்து சரிந்து விழுந்த புகைப்படத்தை பார்க்கையில், கண்களின் வழியும் கண்ணீர்த்துளிகளை மட்டுமே அவருக்கு காணிக்கையாக்க முடிகிறது.
நம் மனதில், கனவுகளை விதைத்தவர் விதைகளை நம்முடனே விட்டுச் சென்றிருக்கிறார்.
ராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையிலும் செம்மையாக படித்து விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் மரணம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு அகவை 83 ஆகும்.
மேகாலயா ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அவர், நேற்று மாலை 6.30 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார்.
இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15,1931-ம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தார்.
1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அப்துல் கலாம் அழைக்கப்பட்டார்.
அப்துல் கலாம் பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
அவர் தமிழகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 3-வது குடியரசுத் தலைவராவர்.
ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல் கலாம் மறைவையடுத்து இன்று இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்புக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை அவரது உடல், டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்துல் கலாம் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜெனுலாபுதீன் ஒரு படகுக்குச் சொந்தக்காரர்.
அப்துல் கலாமின் தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.
பள்ளிப் படிப்பை முடித்த அவர் செய்தித்தாள்களை வீடுவீடாக விநியோகிக்கும் வேலையில் ஈடுபட்டார்.
படிக்கும் காலங்களில் கணிதம் அவருடைய விருப்பமான பாடமாக இருந்தது.
இந்திய வான்படையின் போர் வானூர்தி ஓட்டுநராக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேறவில்லை.
1960-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார்.
பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1980 ஆம் ஆண்டு SLV -III உந்துகணைனையை பயன்படுத்தி ரோகினி-ஐ என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.
இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.
1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.
அவர் அனைவராலும் இந்திய இராணுவ உந்துகணை படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார்.
குடியரசு தலைவராவதற்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.
மேலும் “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம் பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்து விலகினார்.
அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012,எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.
கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
மக்களுக்காவே இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
கனவு காணுங்கள் எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில் என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்”
என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
அப்துல் கலாம் பெற்ற விருதுகள்:-
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 -தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது 2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 -பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
தன்னுடைய வாழ்நாளில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றாலும் அவருக்கு வழங்கப்பட்டதனால் இந்த விருதுகள்தான் பெருமை பெருகின்றன என்பதை ஒவ்வொரு இந்தியரும் அறிவார்கள்.

No comments:

Post a Comment