Sunday 1 November 2015

பாலச்சந்திரன் படுகொலைக்கு உயர்மட்ட உத்தரவே காரணம் (மங்கள சமரவீர சுட்டிக்காட்டு)

உள்ளக விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.



சிறிலங்கா நாடாளுமன்றத்தில், இரண்டு நாட்களாக நடைபெற்ற, ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பற்றி சிலர் அர்த்தமற்றவகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னணி என்னவென்பது புரியாமலேயே அவர்கள் உளறுகின்றனர்.

உண்மை என்னவென தெரிந்திருந்தும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக போலிப்பிரசாரங்களை பரப்புகின்றனர்.

முன்னய அரசு சிறந்த இராஜதந்திர வெளியுறவுக் கொள்கையை பேணவில்லை.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தை எதிர்த்த முன்னைய அரசுக்கு சார்பாக 12 நாடுகளே குரல்கொடுத்தன. ஏனைய உறுப்பு நாடுகள் சிறிலங்கா மீது கடும் அதிருப்தியில் இருந்தன.

இதனால் அனைத்துலகத்தின் மத்தியில் சிறிலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
ஜனவரி 8 ஆம் நாள் சிறிலங்காவில் ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டது. புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டது.

இதன்பெறுபேறாக குறுகிய காலத்துக்குள் எம்மால் அனைத்துலகத்தின் நன்மதிப்பை பெறமுடிந்தது. அத்துடன் அமெரிக்காவின் யோசனையை சிறிலங்காவின் யோசனையாக மாற்றினோம்.

முன்னைய அரசால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகளுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டன. எனினும் தற்போது நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளும் தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 20 ஆவது பந்தி மிக முக்கியமானதாகும். இதைப்பற்றி எவரும் கதைக்கவில்லை.

சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தி அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் தொழில்நுட்ப உதவி ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே எதை செய்வதாக இருந்தாலும் அது சிறிலங்காவின் அனுமதியுடனேயே அது இடம்பெறவேண்டும் என்பது இதன் ஊடாக தெளிவாக புலனாகின்றது.
இந்த விடயம் இங்குள்ள பிள்ளே அணிக்கு (உதய கம்மன்பில தரப்பு) விளங்குவதில்லை.
ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டது சிறிலங்காவின் நடவடிக்கையாகும். வேறு நாட்டவர்களை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

ஆகவே சிறிலங்காவுக்கே உரிய பாணியில்தான் உள்ளகப் பொறிமுறை நிறுவப்படும்.
கலப்பு நீதிமன்றம் பற்றி பேசப்படுகிறது. அவ்வாறு எந்தவொரு யோசனையும் இதில் இல்லை.
கம்போடியாவில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கான நீதிபதிகளை ஐ.நா. பொதுச்செயலர் தான் நியமித்தார். இங்கு அப்படியொன்றும் நடைபெறாது. எந்த நாட்டவர்கள் வந்தாலும் எமது சட்டத்தின் பிரகாரமே நகர்வுகள் இடம்பெறும்.

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பாரதூரமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தொடர்பில் தனிவிவாதம் நடத்தினால்கூட பரவாயில்லை.

ஐ.நா. அறிக்கையில் கூட பெயர், விபரம் வெளியாகவில்லை. ஆனால் பரணகம குழுவில் அது நடந்துள்ளது.

உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிறுவுவதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஓர்அங்கமாகத்தான் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றுள்ளது. அடுத்தவாரமும் இந்த கூட்டம் நடைபெறும்.

உள்ளக விசாரணைக்கு நாம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தோம். இதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப் பெற்றுள்ளது.

காணாமல் போனவர்களுக்கான தனிப்பணியகம், கருணைச்சபை, உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உட்பட நான்கு நிறுவனங்கள் அமைக்கப்படும்.

இதில் காணாமல் போனோர் பணியகம் எதிர்காலத்திலும் இயங்கக்கூடிய வகையில் அமையும்.

அதேவேளை சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பு குறித்தும் பேசப்பட்டது. 1971 ஆம் ஆண்டு 1987 ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பு பலமாகத்தான் இருந்தது.

எனினும் முன்னைய அரசுதான் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து. அதன் கம்பீரத்தையும் சுயாதீனத்தையும் இல்லாது செய்தது.

பிரதம நீதியரசராக சரத் என் சில்வாவை நியமித்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது. நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு மெதமுலனவில் பாத்திரம் கழுவியவருக்கு நீதியரசர் பதவி வழங்கப்பட்டது.

இதனால் நீதித்துறைமீது இருந்த நம்பிக்கை கீழ்மட்டத்துக்கு வந்தது.

ஆட்சிமாற்றத்தின்பின்னர் நீதித்துறையை நேர்வழியில் பயணிக்க விட்டிருக்கின்றோம்.
சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதித்துறை முழுமையாக பலமடைய காலமெடுக்கும்.

எனவே உள்ளகப் பொறிமுறை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்து வதற்கு அனைத்துலகத்தின் பங்களிப்பு அவசியம்.

முன்னர் சிறிலங்கா இராணுவத்துக்கு உலகில் பெரும் கௌரவமிருந்தது. அது பின்னர் சீர்குலைக்கப்பட்டது. ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த இராணுவக்கட்டமைப்புக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இராணுவத்தின் நன்மதிப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக விசாரணை அவசியம்.

ஆயிரம் பேரின் நற்பெயரை பாதுகாப்பதற்கு ஒருவரை தண்டிப்பதில் தவறு கிடையாது. இராணுவம் பற்றி விசாரணை நடத்துவது அவசியம் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி மாநாட்டில் அனைத்துலக விசாரணைக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார் என்பதையும் இவ்விடயத் தில் கூறவிரும்புகின்றேன்.

சனல் 4 ஊடகம் போர்க்குற்ற ஆவணங்களை வெளியிட்ட போது அதன் ஊடகவியலாளரை விமர்சித்தீர் கள். அவர் சிறிலங்கா வந்தபோது கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டீர்கள்.
ஆனால் பரணகம ஆணைக்குழு சனல் 4 வீடியோவை நிராகரிக்கவில்லை. அது பற்றி நீதிமன்ற விசாரணை அவசியம் என கூறியுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த வர்கள், பிரபாகரனின் இளைய மகன் ஆகியோரை கொலை செய்யவேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்க வில்லை.

உயர்மட்டத்தில் இருந்து பிறப் பிக்கப்பட்ட கட்டளையின்படியே நடை பெற் றுள்ளது என்று கூறப்படுகின்றது.

அப்படியா னால் கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் அவசியம். இதற் கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment