Saturday 22 August 2015

பொறிக்குள் சர்வதேச விசாரணை! வாக்குகள் விடை கொடுக்குமா?

உள்ளகப் பொறிமுறையென்பது, சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வதற்கான ஒரு பொறியே தவிர, தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பொறிமுறையல்ல என்று கருத்து மேலோங்கி வருகிற சூழலில், ஈழப்  போர் நான்கின் இறுதிக் கட்டங்களில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, தமிழ் மக்களுக்கு நீதியைத் தன்னிலும் வழங்குமா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.

இலங்கைத் தீவில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவரவிருந்த அறிக்கை செப்டெம்பர் மாதம் வரைக்கும் பிற்போடப்பட்டுள்ளது.
தற்போது, இந்த அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ம் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவரவிருக்கும் அறிக்கை, சிறீலங்கா அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தப் போவதில்லையென்றே மனித உரிமைகள் பேரவையின் நிகழ்வுகளோடு நெருங்கிச் செயற்படுபவர்களால் அறியமுடிகிறது.
முழுமையான சர்வதேச விசாரணையின் ஊடாக நீதியை எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு, உள்ளகப் பொறிமுறையின் ஊடாக பதில் வழங்குவதற்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியும், சிறீலங்கா அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தரப்புகளும் கூட்டாக முயற்சிப்பதாக அறியமுடிகிறது.

உள்ளகப் பொறிமுறையொன்றே உருவாக்கப்படப் போகிறதென எழுந்த சந்தேகங்களுக்கு, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் 4 வெளியிட்ட கசிந்த ஐ.நா ஆவணமும், கொழும்பிலுள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி கடந்த யூன் மாதம் 4ம் திகதி கொழும்பில் ஆற்றிய உரையும் பதிலை வழங்கியுள்ளது எனலாம்.

ஐ.நாவும் சிறீலங்கா அரசாங்கமும் இணைந்து உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு இரகசிய திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளன.
இதனை, ஐ.நாவின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் சிறீலங்காவின் பிரதமர் அலுவலகமும் வெளிநாட்டு அமைச்சும் நெறிப்படுத்தும் என சனல் 4 ன் செய்திகள் தெரிவித்திருந்தன.

ஐ.நாவின் இந்த நகர்வு, போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலிருந்து இன்று வரை சர்வதேச விசாரணைக்காக அர்ப்பணிப்போடு போராடுகிற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும், பெரும்பாலான தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணியுள்ளது.
சனல் 4ற்கு கருத்துரைத்த வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், இதனை ஐ.நா தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் என்ற தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், கூட்டமைப்பின் முக்கியஸ்தரான சுமந்திரன் அவர்கள், சனல் 4 ஆவணத்தை புனையப்பட்ட ஆவணம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் சனல் 4 ஆற்றிய பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கது. ஆதலாலேயே, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சனல் 4 வெளியிட்ட ஆதாரங்கள் பொய்யானவையென்றும் புனையப்பட்டவை என்றும் கூறி சனல் 4 ஐ மலினப்படுத்தும் செயற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியது.

ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக செயற்படுகின்ற சனல் 4 வெளியிட்ட ஆவணத்தை புனையப்பட்டதெனக் குறிப்பிட்டுள்ளமை பெரும்பாலான தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழர்கள் அல்லாத, தமிழ் மக்களுக்காக செயற்படும் மேற்குலகைச் சார்ந்தோருக்கும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

சிறீலங்காவின் நீதித்துறையாலோ அல்லது உள்ளகப் பொறிமுறைகளாலோ, தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காதென்பது வரலாற்று வழிவந்த அனுபவங்கள் ஊடாக அறியப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றம் செய்த சிறீலங்கா ஆயுதப் படையினரை சிறீலங்கா நீதியின் முன் நிறுத்தாதென்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் சனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமும், சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் வெளியிட்டுவரும் அண்மைக்கால கருத்துக்களும் சாட்சி.

ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும், இனஅழிப்புப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்களை சிறீலங்கா ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

பிரஜைகளின் உரிமைகள் மீறலில் அரசின் பங்கும் பொறுப்பும் இருப்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வது பொறுப்புக்கூறலுக்கு தேவையானது.
சர்வதேச குற்றங்களை இழைத்தலில் அரசுக்கு தொடர்பிருக்குமாயின், நீதி தொடர்பான நிர்வாகத்தில் அரசானது எத்தகைய பங்கையும் வகிக்க முடியாது என 2011 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நெறிகளின் படி, குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தனது வழக்கில் தான் நீதிபதியாக இருக்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் ஆயுதப் படைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் மீறியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு சர்வதேசரீதியாக உள்ளது.

தண்டனைகளிலிருந்து தப்பித்திருப்பதற்கான சூழல் இன்றும் சிறீலங்காவில் தொடர்கிறது. அதேவேளை, இனஅழிப்புப் போரின் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

இவையாவும் வெற்றியாளர்களின் நீதியை (Victors Justice) எடுத்தியம்பும் செயற்ப்பாடுகள் போலுள்ளது. ‘போர்க்குற்றங்கள் தொடர்பான வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வெற்றியாளர்கள் தண்டிக்கப்பட்ட ஒரு சம்பவமும் இல்லை.

தீர்ப்பாயங்கள் தோல்வியடைந்தவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதென்று’, போர்க்குற்றங்களைப் புரிந்த சிறீலங்கா ஆயுதப்படைகளை சர்வதேச நீதியின் முன்னிறுத்துவதை எதிர்த்த சிறீலங்காவின் இராசதந்திரி பாலித கோகன்ன 2009 ஒகஸ்ட்டில் கூறினார்.

அவரது கூற்று தவறானதாயினும், இன்று அவரது கூற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பது போலவே உள்ளகப் பொறிமுறை தொடர்பான செயற்பாடுகள் இருக்கின்றன.

ஆட்சிகள் மாறிய போதும், சிறீலங்காவையும் அதன் ஆயுதப்படைகளையும் தண்டனைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.


இதற்கான செயன்முறையே உள்ளகப் பொறிமுறையென்ற நகர்வு. இதில் மகிந்த ஆட்சி, மைத்திரி-ரணில் ஆட்சி என்ற வேறுபாடுகளில்லை. பல வியாக்கியானங்களை முன்வைத்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தரப்புகளும் உள்ளகப் பொறிமுறைக்கு சார்பாக செயற்படுகின்றமை தமிழ் மக்களின் நீதி தேடும் போராட்டத்திற்கு ஒரு பெரும் பின்னடைவு.

வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சர்வதேச விசாரணைக்கு ஆதரவான கருத்துக்களை தேர்தல் மேடைகளிலும், ஏனைய தருணங்களில் உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்பது முன்னுக்குப் பின் முரணானது மட்டுமல்ல. மாறாக படுகொலைசெய்யப்பட்ட ஆன்மாக்களும் தப்பித்து நீதிக்காக காத்திருப்போருக்கும் எதிரான செயற்பாடு.
உள்ளகப் பொறிமுறையூடாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதுவும், நேர்மையான உள்ளகப் பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது என்பதுவும் கற்றறிந்த பாடமாக கண்முன்னெ விரிந்து கிடக்கிறது.

ஆயினும், உள்ளகப் பொறிமுறையென்பதில் சிறீலங்கா அரசாங்கமும் அதற்கு ஆதரவான தரப்புகளும் தீவிரமாக நிற்கின்றன.

சர்வதேச தரத்துக்கு நிகரான விசாரணை என்று கூறுவதனூடாக, நடைபெறப் போவது சர்வதேச விசாரணை அல்ல என்பது புலனாகிறது. அத்துடன், இது சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வதற்கான ஒரு நகர்வு என்பதுவும் தெளிவாகிறது.

ஆகவே, சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டது அல்லது சர்வதேச தரத்துக்கு நிகரான விசாரணை நடக்கப் போகிறது என்று யாராவது சொல்வார்களானால், அது தமது சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாகத்தான் இருக்க முடியும். ஆதலால், இத்தகைய நகர்வுகள் தொடர்பாகவும், இதனை கூறுபவர்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நன்று.

இதேவேளை, கலப்புப் பொறிமுறை (Hybrid Mechanism) ஊடாகவும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குவதற்கான அரசியல் திடசித்தம் உள்ள தரப்புக்களாலேயே கலப்புப் பொறிமுறை ஊடாக நீதியை வழங்க முடியும்.

ஆனால், இழைத்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ அல்லது நீதியை வழங்குவதற்கான திடசித்தமோ சிறீலங்கா அரசிடம் இல்லையென்பது கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கலப்புப் பொறிமுறை அமைக்கப்பட்ட நாடுகளில் அது தோல்வியடைந்து வருகிறது என்ற சர்வதேச ரீதியான விமர்சனங்கள் உண்டு. அதன் அண்மைய உதாரணம் கம்போடிய. இது தொடர்பாக இக்கட்டுரையாளர் கடந்த மார்ச் மாதம் ஞாயிறு தினக்குரலில் எழுதியுமுள்ளார்.

ஆகவே, சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினூடாவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம். சர்வதேச விசாரணையென்ற நிலைப்பாட்டையெடுப்பது தமிழ் மக்களுக்கு நீதியை அடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறை.

அத்துடன், அது அரசியல் ரீதியான பேரம் பேசலுக்கும் துணைபுரியும். ஆதலால், இனஅழிப்புக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

வெளிவரவிருக்கும் அறிக்கையின் நகல் ஒன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் எதிர்வரும் ஒகஸ்ட் 21ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.

 இறுதி அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தினால் செம்டெம்பர் 30ம் திகதி வெளியிடப்படும். ஆதலால், இதன் ஒரு முக்கிய நகர்வாக, செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கின்ற அறிக்கையின் பரிந்துரைகளை பலமாக்குவதற்கான வேலைத்திட்டங்களை தமிழர் தரப்பு விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

அது வெற்றிபெறும் பட்சத்தில் உள்நாட்டுப் பொறிமுறை என்ற பொறியிலிருந்து தப்பி, முழுமையான சர்வதேச விசாரணைக்கான அடித்தளங்களை இடலாம்.


தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு நடந்தது இனஅழிப்பென்றோ அல்லது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றோ வலியுறுத்தவில்லை.

தமிழ் மக்களால் சனநாயக ரீதியாக தெரிவு செயப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், அதனை எடுத்துச் சொல்வதற்கான பொறுப்பும் கடப்பாடும் அவர்களுக்குண்டு. இதனை தனித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமன்றி எடுத்துச் சொல்ல வேண்டிய பல சூழல்களும் சந்தர்ப்பங்களும் உருவாகின.
அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தலைவர்கள் பயன்படுத்தவில்லை. மாறாக, சிறீலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு ஆதரவான கருத்துக்களே தீர்மானம் எடுப்போரால் வெளிப்படுத்தப்பட்டது.
ஆயினும், தற்போது தன்னிலும் தமிழ் மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஆதரவாக, வெளிவரவிருக்கின்ற அறிக்கையின் பரிந்துரைகளை பலமாக்குவதற்கான செயற்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தரப்பினர் பங்கெடுக்க வேண்டும்.

வடமாகாண சபை முதலமைச்சர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் முக்கிய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த செயற்திட்டத்தில் பங்கெடுப்பதற்கான தமது உறுதிப்பாட்டை தமது செயற்பாடுகள், அறிக்கைகள் மற்றும் உரைகள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனஅழிப்பு என்ற அடிப்படையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று, வடமாகாண சபையின் ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற ஒரு மில்லியன் கையொப்பங்களை திரட்டும் செயற்திட்டம் அதன் இலக்கை குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளது.

இதில், அதிகமான கையொப்பங்கள் இட்ட நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவதாக உள்ளதென்று, குறித்த கையொப்பத்தை இடுவதற்கென உருவாக்கப்பட்டிருந்த இணையத்தள இணைப்பினூடாக தெரியவருகிறது.
இவை தமிழ் மக்கள் சுதந்திரமான சர்வதேச விசாரணையிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டுவதையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆகவே, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அல்லது இலங்கைத் தீவில் இடம்பெற்ற இனஅழிப்பை விசாரிப்பதற்கான தனிப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதனூடாக,

வெளிவரவிருக்கின்ற அறிக்கையின் பரிந்துரைகளை பலமாக்கலாம். இதற்காக தமிழ்த் தரப்புகள் விரைவானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்த செயற்த்திட்டம் தமிழ் மக்களுக்கான நீதியை தாமதித்துக் கொண்டிருக்கிற ஐக்கிய நாடுகள் சபை, சிறீலங்காவின் உள்ளகப் பொறிமுறையை தவிர்த்து, சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தை நோக்கி நகர்வதற்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கவேண்டும்.

இது, இலகுவான விடயமல்ல. ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் நிறைவேற்றப்பட வேண்டிய பணி.
ச.பா.நிர்மானுசன்
nirmanusan@gmail.com

Friday 14 August 2015

தேர்தல் கால புரளிகளை நம்பி விடாதீர்கள்

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு பேய்கள் மீது நம்பிக்கை. மற்றவர் பேய் என்று எதுவும் கிடையாது எல்லாம் பிரமை என்று நினைப்பவர். ஒருநாள் இருவருக்கும் கடுமையான வாதம். பேய் இருக்கிறது; இல்லை என்பதுதான் வாதத் தலைப்பு.




இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். பேய் இல்லை என்று சொல்பவர் நடுச்சாமவேளையில், அந்த ஊரின் எல்லையில் இருக்கும் மயானத்திற்குச் சென்று, அங்குள்ள ஆலமரத்தில் ஏறி, ஆணி அறைந்து விட்டு வரவேண்டும். இதுவே நிபந்தனை.

பேய் இல்லை என்று வாதிட்டவன் அன்று நடுச் சாமத்தில் ஊரின் எல்லையில் உள்ள மயானம் நோக்கிச் சென்றான். தன்னுடன் சுத்தியலும் ஆணியும் எடுத்துக் கொண்டான். இப்போது நேரம் நடுநிசி. மயானத்தின் நடுப்பகுதியை அவன் சென்றடைகிறான்.

ஆந்தைகளின் அலறல், ஆட்காட்டிக் குருவிகளின் ஒலிகள். எந்தப் பயமும் இல்லாது அவன் ஆலமரத்தில் ஏறி, மரத்தில் குந்தி இருந்து கொண்டு தான் எடுத்துச் சென்ற பெரியஇரும்பு ஆணியை மரத்தில் அறைந்தான்.

ஆணி முழுவதும் அறையப்பட்டு விட்டது. இப்போது அவன் மரத்தில் இருந்து இறங்கும் போது, தன்னை யாரோ பின்னால் இழுப்பது போல உணர்ந்தான். அந்த இழுவையிலிருந்து அவனால் விடுபடமுடியவில்லை.

அதுவரை நேரமும் துணிச்சலாக இருந்தவன் பேய்தான் தன்னை இழுப்பதாக நினைத்து ஏக்க முற்றான். அவ்வளவுதான் ஆலமரத்தைப் பிடித்த படியே இறந்து போனான்.
மறுநாள் காலைப்பொழுதில், மயானத்திற்குச் சென்றவனைக் காணாத அவனின் நண்பனும் உறவினர்களும் மயானம் நோக்கிச் சென்றனர்.

அங்கே பேரதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது. பேய் இல்லை என்று வாதிட்ட தன் சக நண்பன் ஆலமரத்தில் இறந்து கிடக்கிறான். அவன் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி ஆணிக்குள் அகப்பட்டிருந்தது.

ஆம், ஆடையின் ஒரு பகுதி ஆணியுடன் அகப்பட்டு மரத்துடன் அறையப்பட்டதால் அவனால் மரத்திலிருந்து இறங்க முடியவில்லை. உண்மையை அறியாத அவன், பேய் தன்னைப் பிடித்து இழுப்பதாக ஏங்கியதால் இறந்தான் என்ற உண்மையை சக நண்பனும் உடன் சென்றவர்களும் உணர்ந்தனர்.

என்ன செய்வது? பேய் இல்லை என்று வாதிட்டவன் பேய் உள்ளது என்ற நினைப்போடு  இறந்தான். பேய் இருக்கிறது என்று நம்பியவன் தன் சக நண்பனின் மரணத்துக்கான காரணத்தை அறிந்தபோது, பேய் இல்லை என்பதை பூரணமாக ஏற்றுக்கொண்டான்.   

பார்த்தீர்களா? மிகத் துணிச்சலோடு சென்ற ஒருவன் நடப்பது; நடந்தது என்ன? என்பதை ஆராயாமல் விட்டதால் அவன் உயிரிழக்க வேண்டிய தாயிற்று.

இது போலத்தான் எல்லா விடயத்திலும் ஆராய்வு அவசியம். இல்லையேல் பேய் இல்லை என்றவன், பேய் இருக்கிறது என்ற நினைப்போடு இறக்கின்ற பரிதாபமே ஏற்படும்.

ஆம், எந்த விடயமாயினும் நாம் ஆராய்வது அவசியம். இது தேர்தல் காலம். மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு திருகுதாளங்கள் செய்யப்படும். இவற்றை நம்பாமல், இப்படி நடக்க முடியுமா? என்று ஒரு தடவை சிந்தியுங்கள். அதன் பின் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

தேர்தலின் இறுதிக் காலத்தில் அதிலும் குறிப்பாக தேர்தலுக்கு முதல் நாள் அல்லது தேர்தல் அன்று ஏகப்பட்ட புரளிகள் கட்டி விடப்படும். அதற்கான தயாரிப்புகள் இப்போது ஏற்பாடாகியிருக்கும். எது எப்படியாயினும் நிதானமும் தீர ஆராய்தலும் எங்களிடம் இருக்குமாயின் புரளிவிட்டவர்கள் பொய்த்துப் போவர்.   

“இலங்கை தேர்தல் முடிவுகளை வைத்தே இனப் பிரச்சனைக்கு தீர்வு”

இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை உள்ளடக்கிய ஒரு நீடித்த தீர்வு என்பது, இந்தத் தேர்தலில் முடிவுகளை வைத்தே அமையும் என க்ரைசிஸ் க்ரூப் அறிக்கை தெரிவித்துள்ளது.
 
 
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில் பிரிவினைவாத அரசியலின் சிக்கல்கள் மீண்டும் இலங்கையில் உருவெடுத்திருப்பதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் என்ற ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது.
 
தன் ஆட்சிக் காலத்தின் முதல் ஆறு மாதத்தில் குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்துள்ளதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் கூறுகிறது.
 
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அந்த அமைப்பு இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரச நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் சிறிசேன அரசின் முதல் ஆறு மாதங்களில் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், அரசுக்குள் இருந்த பிளவுகளின் காரணமாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் சிறிசேனவுக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவும் ஆழமான சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லையென்றும் இதன் காரணமாகவே ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் அரசியல்களத்திற்குத் திரும்பிவர முடிந்தது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
 
தன் ஆட்சிக் காலத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறிசேன குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்துள்ளார் என இன்டர்நேஷனல் கிரைசிஸ் க்ரூப் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக 19வது அரசியல் சாஸனத்திருத்தத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 
ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிறிசேன விரும்பாவிட்டாலும், கட்சிக்குள் ஆதரவில்லாததன் காரணமாக அதற்கு இணங்க வேண்டியிருந்தது.
 
சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதைப்போல முந்தைய அரசு செய்த மோசடி, அதிகார துஷ்பிரயோகம் குறித்து பல விசாரணைகள் துவங்கப்பட்டன என்றும் ஊழலுக்கு எதிராக இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கை பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கியது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
 
ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்படாதது வேறு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பல மாதங்களாக எதிர்ப்புத் தெரிவித்துவந்த சிறிசேன, தனக்குக் கட்சிக்குள் ஆதரவில்லாததன் காரணமாக, கடைசியில் அதற்கு இணங்க வேண்டியிருந்தது என அறிக்கை கூறுகிறது.
 
ராஜபக்சேவால் பிரதமராக முடியாவிட்டால்கூட, அவர் தலைமையில் நாடாளுமன்றத்தில் செயல்படும் சிங்கள தேசியவாதிகள், வரக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளக்கூடிய இணக்கப்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைபோட முடியும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 
சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, இனப்பிரச்சனையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சில விடுவிக்கப்பட்டிருப்பதையும் வடக்கு – கிழக்கை நிர்வகிப்பதில் அதன் பங்கு குறைந்திருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 
யுத்தம் குறித்து நம்பகத்தன்மைமிக்க உள்நாட்டு விசாரணை நடத்துவோம் என அரசு வாக்குறுதியளித்தாலும் இதுதொடர்பாக யாரையும் தண்டிக்க வேண்டுமென்றால் சட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் சில சீர்திருத்தங்களைச்செய்ய வேண்டுமென அறிக்கை கூறுகிறது.
 
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறு பிரிவினர், வேறு சில சிறிய கட்சிகளை இணைத்து தேசிய அரசை அமைக்க சிறிசேன திட்டமிட்டிருந்தாலும் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மிகத் தீவிரமாக களமிறங்கியிருப்பது அந்த முயற்சிகளுக்கு தடையாக அமையும் என அறிக்கை கூறியுள்ளது.
 
இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை உள்ளடக்கிய ஒரு நீடித்த தீர்வு என்பது, இந்தத் தேர்தலில் முடிவுகளை வைத்தே அமையும் என அறிக்கை தெரிவித்துள்ளது.

Tuesday 11 August 2015

கூகுள் நிறுவனத் தலைவரானார் தமிழரான சுந்தர் பிச்சை!

தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். 
 
 
 
கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர். 
 
2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த அதன் நிறுவனர் லாரி பேஜ் கவனித்து வந்த கூகுளின் சர்ச். கூகுள் பிளஸ், வர்த்தகம், விளம்பரம், கூகுள் மேப்ஸ், யூடியூப், ஆப்ஸ் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் பிச்சை நிர்வகிப்பார். 
 
இதில் கூகுள் சர்ச் மற்றும் கூகுள் ஆட்ஸ் எனப்படும் விளம்பரம் ஆகியவை தான் கூகுளின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதே நேரத்தில் கூகுளின் எதிர்கால அதி உயர் தொழில்நுட்பப் பிரிவுகளான காலிகோ, எக்ஸ் லேப்ஸ், உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவை கூகுளில் இருந்து பிரிக்கப்பட்டு ஆல்பபெட் என்ற பெயரில் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவை இனி லாரி பேஜ் கவனிப்பார். கூகுளின் முதலீட்டு நிறுவனமும் லாரி பேஜ் வசம் இருக்கும். அதே நேரத்தில் நிர்வாகரீதியில் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் கூகுள் இயங்கும். 
 
சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார் ஸ்டெனோகிராபராக இருந்தவர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை தனது புத்திசாலித்தனத்தாலும் கடும் உழைப்பாலும் இந்த நிலையை அடைந்துள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் தான் படித்தார். செமிகன்டர்டர்கள் குறித்த கல்விப் பிரிவில் சேர இவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் ஸ்டான்போர்ட் செல்ல விமான டிக்கெட் பணம் இல்லாமல் தவித்துள்ளனர் இவரது பெற்றோர். ஸ்டான்போர்டிலேயே பிஎச்டி சேர திட்டமிட்ட இவர், அதைத் தவிர்த்துவிட்டு கலிபோர்னியாவில் அப்ளைட் மெட்டீரியல்ஸ் என்ற செமி கண்டக்டர் நிறுவனத்தில் சேர்ந்தார். 
 
இதையடுத்து வார்ட்டன் கல்வி மையத்தில் எம்பிஏ படித்துவிட்டு மெக்கின்சேயில் பணியில் சேர்ந்தார். 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இவர் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் சர்ச்சை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது. 
 
ஆனால்,, நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும், நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார். முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால், அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார். இவர் மீது நம்பிக்கை வைத்த லாரி பேஜ், அந்த வேலையை பிச்சையிடமே தர, அடுத்த ஓராண்டில் கூகுள் குரோமை வெளியிட்டது பிச்சையின் டீம். இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்! 
 
இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பிச்சையின் நியமனம் மூலம் உலகின் டாப் 2 நிறுவனங்களான மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் பொறுப்பில் உள்ளனர். முன்னதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நடெல்லா நியமிக்கப்பட்டார். 
 
அதே போல பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி, மாஸ்டர் கார்ட் தலைவராக இந்தியரான அஜித் பங்கா, சான்டிஸ்க் தலைவராக சஞ்சய் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதே போல வாரன் பபெட்டின் பெர்க்ஸைர் ஹாத்வே முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியரான அஜித் ஜெயின் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Sunday 9 August 2015

வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!

மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல்.



முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழினம் சந்திக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.

வல்லரசுத் தேசங்களின் பார்வை முழுவதையும் இலங்கைத்தீவின் மீது குவிய வைத்திருக்கும் தேர்தல்.

•மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை அனைத்துலகத்தை தமிழர் பக்கம் திருப்புமா?
•அமெரிக்க – இந்திய அரசுகளின் நலன்கள் தமிழர் தலைவிதியை தீர்மானிக்குமா?
•தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்த முற்படும் புலம்பெயர் தேச செயற்பாடுகள் சரியானதா? – அது வாக்களிக்கும் உரிமைபெற்ற தாயகத் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைவானதா?
•தமிழரின் சுயாட்சிக் கோரிக்கையான சமஷ்டித் தீர்வை ஐ.தே.க நிராகரித்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்?
•மைத்திரிபால சிறீசேன தமிழர்களுக்கு எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்வதான வாக்குறுதியை நிறைவேற்றுவார்?

என்பன போன்ற கேள்விகளுக்கு விடைதேடுவதற்கான தேர்தலாக இது வந்து நிற்கிறது.
என்னதான், தலைகீழாக நின்றாலும், சிறிலங்கா நாடாளுமன்றம் ஒன்றும் தமிழரின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கின்ற ஒரு களமாக இருக்கும் என்று நாம் நம்பவில்லை.

உலகின் கண்களுக்கும், இராஜதந்திர சமூகத்துக்கும் எமது பலத்தையும், உறுதியையும் வெளிப்படுத்துவதற்கான களமாக மட்டுமே அமையக் கூடியது அது.
எனவே தான், ஒன்றுபட்ட பலத்தை தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டிய களமாக இது கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் பெரும்பாலான தமிழ்மக்களால் கடந்த 15 ஆண்டுகளாக ஆதரிக்கப்பட்டு வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் நிற்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து உடைந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக மாறிய தமிழ்க் காங்கிரஸ் மற்றொரு புறம் நிற்கிறது.

இந்த இரண்டு பாரம்பரிய தமிழ்க் கட்சிகளை விட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் ஜனநாயகப் போராளிகள், சுயேச்சைக்குழுவாக இன்னொரு பக்கம் நிற்கின்றனர்.

இவர்கள் தவிர, தமிழர்களால் அறியப்பட்ட- அறியப்படாத கட்சிகளும், சிங்களத் தேசியக் கட்சிகளும் கூட தமிழரின் வாக்குகளுக்காக காத்து நிற்கின்றன.

முள்ளிவாய்க்கால் மணல்வெளியில் எல்லாத் திசைகளிலும் இருந்து ஏவிவிடப்பட்ட எறிகணைகள் போல், தமிழ்மக்களைக் குறிவைத்து இவர்களின் பரப்புரைகள் வீசப்படுகின்றன.

யார் பக்கம் நிற்பது – யாருக்கு வாக்களிப்பது – யாரை ஆதரிப்பதால் நன்மை கிட்டும்? இவை தான் இப்போதைய கேள்விகள்.

எதுஎவ்வாறாயினும், தமிழ்த் தேசியத்தை கட்டிக்காக்கும், தமிழரின் உரிமைகளைப் பாதுகாக்கும், அதற்காக போராடும் குணம் படைத்தவர்களையே தமிழ்த் தேசிய இனம் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எம்முள் உண்டு.
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் வெளிப்படுத்திய திடமும், நம்பிக்கையும், தமிழரின் அரசியல் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாகியது.

அதன் மூலம் அடையப்பட்ட வடக்கு மாகாணசபை ஒரு ஓட்டைப் பாத்திரமாகவே இருந்தாலும், அனைத்துலக இராஜதந்திரக் கதவுகள் எமக்காக இன்னும் அகலத் திறப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

எனவே, சிங்களத் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கோ, வாக்குறுதிகளுக்கோ விலைபோகாத இனம் என்பதை மீண்டும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் இத் தேர்தலில்- தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழரின் உரிமைக்காக போராடுவதான வாக்குறுதிகளோடு வந்து நிற்கும், தரப்பு ஒன்றாக மட்டுமே இருந்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு புள்ளடிபோடும் பாக்கியசாலிகளாக தமிழர்கள் இருந்திருப்பர்.

ஆனால் ஈழத்தமிழினத்தின் சாபக்கேடு – அத்தகைய பாக்கியசாலிகளாகும் வாய்ப்பை வழங்கவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லவா, தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழர் தம் விடுதலைக்கான கோசத்தோடு களமிறங்கியிருக்கிறார்கள்.

இவர்களில் யாரைத் தெரிவு செய்து வாக்களிப்பது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலை தூக்கி நிறுத்திக் கொண்டு, அதனை முன்நோக்கி நகர்த்திச் சென்றதில் கூட்டமைப்புக்கு இருந்த பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட எம்மினம், மீண்டும் எழுந்திருக்காது- ஒரு தலைமையில் அணிதிரளாது- என்று மனப்பால் குடித்த சிங்களத்துக்கு, சவுக்கால் அடித்த பெருமை அதற்கேயுண்டு.

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலில் கூட்டமைப்புக்குத் தனிஇடம் இருக்கிறது.

அதனால், தான் இதுவரை நடந்த தேர்தல்களில் அதற்கு மக்களாதரவும் ஆணையும் கிடைத்து வந்திருக்கிறது.

ஆனாலும், கூட்டமைப்புக்குள் இருக்கின்ற முரண்பாடுகளும், கூட்டுப்பொறுப்பின்மையும் பலவேளைகளில் தமிழ்மக்களின் பொறுமையை சோதித்ததுண்டு.

இந்தப் பொருமலும் வெம்மையும் இன்னமும் கூடத் தமிழ்மக்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.

அதேவேளை, சிறிலங்காவில் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு செய்யக் கூடியதை விடவும், தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சியாக இருந்து சாதிக்கக் கூடியது மிகக்குறைந்தளவே.

அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்று இரண்டாந்தர அரசியல் நடத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டாது.

இந்தப் பலவீனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து, எதனை சாதித்தார்கள் என்று கேள்வி எழுப்புவது மடைமை.

அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொண்டு செல்லும் வாய்ப்பை கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.

தமிழர்களுக்கு நீதி கோருவதற்கான நகர்வுகளை காத்திரமாக முன்னெடுத்திருக்கிறது.
மக்களின் ஆணை தமக்கிருப்பதை தேர்தல்களில் நிரூபித்திருக்கிறது.

இவற்றுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைவுகளை எட்டுவதற்கான புறச்சூழல் சிறிலங்காவில் இருக்கவில்லை.

தமிழருக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கச் சிங்களத் தலைமைகள் தயாராக இல்லாத போது, அவர்களுடன் முட்டிமோதுவதை விட வேறெதைச் செய்ய முடியும்?

சிங்களத் தலைமைகளின் விருப்புக்கேற்ற ஒரு தீர்வை கூட்டமைப்பு பெற்றுத் தந்திருந்தால், அதைத் தான் தமிழ் மக்கள் ஏற்றிருப்பார்களா?

அப்படியொரு தீர்வுக்கு இணங்கினால், இணக்க அரசியல் செய்வதாக தமிழினம் வசைபாடாதா?

சிங்களத் தலைமைகள், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வழங்க இணங்கும் வரை, எந்தவொரு தமிழ்க் கட்சியாலும், எதையுமே வெட்டிப் பிடுங்க முடியாது.

மாகாணசபை, சுயாட்சி, இருதேசம் ஒரு நாடு- தீர்வு எதுவானாலும் இது தான் யதார்த்தம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதெல்லாம் சரியென நாம் வாதிடவில்லை.

இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே உலகஅரங்கில் ஈழத்தமிழினத்தின் குரலை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதே எம் கருத்து.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

2010 நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படாததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, பிரிந்து போனவர்கள்.

அப்போது தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி கண்டவர்கள்.

ஒரு நாடு இரு தேசம் என்ற கோசத்துடன், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

இடைப்பட்ட காலத்தில் வந்த தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணித்து, தமிழ் மக்களின் ஜனநாயக கட்டமைப்புகளில் பங்காற்றாமல் ஒதுங்கி நின்று விட்டு, இப்போது நாடாளுமன்றக் கதவைத் தட்டுகின்றனர்.

கூட்டமைப்பு கொள்கையை விற்று பிழைப்பு நடத்துவதாக குற்றம்சாட்டும் இவர்கள், தாமும் அங்கிருந்து தான் வந்தவர்கள் என்பதை மறந்து போயினர்.

இவர்களும், நாடாளுமன்ற ஆசனத்தின் சுவையை ருசித்தவர்கள் தான்.

அப்போது இவர்கள் எதனைச் செய்தார்கள் என்ற கேள்வி தம்மை நோக்கியும் கேட்கப்படும் என்று சிந்திக்கவில்லை.

தமது கோட்பாட்டு அரசியலை மக்கள் முன் தெளிவாக விளங்கப்படுத்த முடியாத நிலையில் இன்னமும் இருப்பது இவர்களின் பலவீனம்.

தமது இலக்கை அடைவதற்கு, சிறிலங்கா நாடாளுமன்றம் எந்த வகையில் உதவும் என்று தெளிவுபடுத்த முடியாதவர்கள் இவர்கள்.

எங்கிருந்தோ தொட்டிலை ஆட்டிவிடுவோரின் விருப்புக்கேற்ப, வெறுமனே வசைபாடும் விமர்சன அரசியல் மூலம் தலையெடுத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர்.
கொள்கையைப் பலப்படுத்துவது தான் நிலையான அரசியல் தளத்தை உருவாக்கும்.
அத்தகைய நாகரீக அரசியல் நிலையில் இருந்து விலகி, வெறுமனே கூட்டமைப்பு மீது சாணியடிக்கும் அரசியலையே செய்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

ஜனநாயக அரசியலில், கொள்கை வேறுபாடுகள் கருத்து முரண்பாடுகள் வழமை.
பல கட்சிகள் முட்டிமோதுவது தான் ஜனநாயகத்தின் அழகு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க விரும்பினால், அது வரவேற்புக்குரியது.

அது தமிழ்த் தேசிய இனத்தின் பலத்தை சிதைத்து விடாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஜனநாயகப் போராளிகள்

இப்போது தான் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் – கத்துக்குட்டிகள்.
இவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தனர் என்று சொல்வதா அல்லது எப்படி அழைத்து வரப்பட்டனர் என்று சொல்வதா?

ஆயுத மோதல்கள் முடிந்து ஐந்தரை ஆண்டுகளாக, இராணுவப் புலனாய்வுத்துறை தம்மைத் துரத்துகிறது, தூக்குகிறது என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள்.

அரசியலுக்கு வந்தவுடன், தம் மீதான சந்தேகப்பார்வை விலகி விட்டதாக கூறி, தமது அரசியல் விற்பன்னத்தை வெளிப்படுத்தியவர்கள் இவர்கள்.

அப்படியானால் விடுதலைப் புலிகளை அரசியல்வாதிகளாக்குவது தான், சிறிலங்கா தேசத்தின் நிகழ்ச்சி நிரலா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், ஆசனம் கேட்டு பேரம் பேசிச் சென்றவர்கள், அது கிடைக்காமல் போனதால் தான் தனித்துப் போட்டியிட வந்தனர்.

ஆசனம் கேட்டுப்போனவர்கள், கூட்டமைப்புக்கும் தமக்கும் கொள்கை வேறுபாடு இருப்பதாக எவ்வாறு கூற முடியும்? அவர்களை எப்படி விமர்சிக்க முடியும்?

உயிரைக் கொடுத்து- உடலில் விழுப்புண் ஏற்று- உறுப்புகளையும் தியாகம் செய்து, போராடிய வீர்ர்களை தமிழினம் என்றும் மறக்காது.

ஆனால், தேசத்துக்காக போராடிய வீரர்கள் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டு நிற்பதை, தமிழ்மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கிறது.


ஆனால், முன்னாள் போராளிகளின் திடீர் அரசியல் பிரவேச முடிவின் பின்னால் என்ன உள்ளதென்று ஆழமாகப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

இந்த மூன்று தரப்புகளை விட, உதிரிகளாக சில தமிழ்க் கட்சிகளும், சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் தேர்தல் களத்தில் நிற்கின்றன.

யாருக்கு வாக்களிக்கலாம் என்ற தெரிவு முற்றிலும் வாக்காளர்களைச் சார்ந்தது.
அந்த ஜனநாயக சுதந்திரத்தின் மீது தலையிடும் அதிகாரம் யாருக்குமில்லை.

ஆனால், மீண்டும் பேரினவாத வெறிகொண்டு மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்துள்ள இவ்வேளையில், தமிழ்மக்களை எல்லா வழிகளிலும் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்களை தலையெடுக்கவிடாமல் தடுக்கின்ற பொறுப்பு மீண்டும் தமிழ் மக்களுக்கு வந்திருப்பதை மறந்து விடலாகாது.

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலை ஏற்பட்டால், அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று விளக்கிக்கூற வேண்டியதில்லை.

அத்தகைய நரகநிலைக்குத் தள்ளிச் செல்வது தான் தமிழினத்துக்கு விடிவைப் பெற்றுத் தரப்போகிறதா?

ஒற்றையாட்சிக்குள் தான், தீர்வு என்று கொழும்பில் கூறிக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியம் பேசும், ஐதேகவுக்கு இம்முறையாவது தக்க பதிலடி கொடுக்கத் தயாராக வேண்டும்.
தமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து- சிங்களத் தேசியத்துக்குத் துணைபோகும் சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

ஒற்றுமையே பலம் என்பதை வெளிப்படுத்தி, தமிழரின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும்.

இத்தருணத்தில் தமிழ் மக்கள் எடுக்கும் முடிவு மிக முக்கியமானது.

அடுத்தமாதம் வெளியாகப் போகும் ஐ.நா விசாரணை அறிக்கையும் அதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையும் இந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
ஒருவேளை தமிழ் மக்கள் உதிரிகளாகப் பிரிந்து போகும்நிலை ஏற்பட்டால், சிறிலங்காவுடன் சேர்ந்து அனைத்துலக சமூகம் எம்தலையில் “எதையோ” ஒன்றைக் கட்டிவிடும் அபாயம் உள்ளது.

அதை தடுக்க வேண்டுமானால், தமிழரின் ஒன்றுபட்ட பலத்தை வெளிக்காட்ட வேண்டும். நாம் ஒரே நிலையில் நிற்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான பற்றுறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் போதே, அதை உறுதிப்படுத்த முடியும்.

ஏனென்றால், எமது இனத்தின் உரிமைப்போராட்டம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நீடித்துச் செல்லக் கூடாது- அடுத்த தேர்தல் வரை கூட நீளக்கூடாது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்குள், தீர்வைப் பெற்றுத் தருவதாக இரா.சம்பந்தன் அளித்துள்ள உறுதிமொழியை நம்புவதை விட வேறு வழியில்லை.

தூயவர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் மக்கள் குழம்ப வேண்டி இருக்காது

நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி தென்பகுதியில் பெரும் குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பாராளுமன்றத் தேர்தலில் இறங்கியதோடு இக்குழப்பம் எழுந்துள்ளது.பொய்யான பிரசாரங்கள், இனவாதக் கோ­ங்கள், மக்களைக் குழப்புகின்ற நடவடிக்கைகள் என ஏகப்பட்ட கூத்துக்கள் தென்பகுதியில் நடந்து வருகின்றன.

இதனிடையே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி விடாதபிடி என்றவாறு தேர்தலில் குதித்துள்ளது.மகிந்தவா? ரணிலா? அடுத்த பிரதமர் என்ற முடிவு வரும்வரை தென்பகுதித் தேர்தல் களத்தில் பலத்த வன்முறைகள் எழலாம் என்ற ஐயப்பாடுகளும் உண்டு.

இந்நிலையில் வடக்கின் தேர்தல் களத்தில் வேறு விதமான பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளேயே பிடுங்குப்படுகின்றனர்.விருப்பு வாக்குத் தேர்தல் முறைமை ஒரு கட்சியின் உறவை - கூட்டை அடியோடு உடைத்துவிடும்போல் தெரிகிறது.

தமக்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைக்கவேண்டும் என்ற நினைப்பில், தாம் சார்ந்த கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் சின்னத்தை சொல்ல மறந்து தமது விருப்பு இலக்கத்தை மட்டும் தெரியப்படுத்துகின்ற அளவில் தேர்தல் மறதி நம் வேட்பாளர்களை கடுமையாகத் தாக்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஒரே கட்சிக்குள் இருக்கும் வேட்பாளர்கள் செய்கின்ற தேர்தல் பிரசாரங்களிடையே முரண்பாடுகள் இருப்பதையும் கண்டு கொள்ளலாம்.ஒரு கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களின் பிரசாரங்கள் வேறுபட்டவையாக இருப்பதைக் காணும்போது அங்கு கட்சி ஒற்றுமை  கேள்விக்குறியாகிறது.

இவை ஒருபுறம் இருக்க கட்சிகள், சுயேட்சைக் குழுக்களை எடுத்தால்;இதில் இவர் நல்லவர், அதில் அவர் நல்லவர் என்ற பார்வை தமிழ் மக்களிடம் உள்ளது.ஒரு கட்சியில் அனைவரும் புனிதமான வேட்பாளர்கள் என்ற நிலைமை இல்லாததன் காரணமாக யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது.

ஒரு கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களித்து விட்டால், அந்தக் கட்சியில் இருப்பவர்கள் தான் தெரிவு செய்யப்படுவர்.இதனால் மக்கள் வெறுக்கின்ற வேட்பாளர்களும் வெல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

வெவ்வேறுபட்ட கட்சிகளில் உள்ள நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற தேர்தல் முறைமை இருக்குமாயின், மக்கள் எந்தவித குழப்பமும் அடையாமல் தமக்கு இருக்கக்கூடிய விருப்பு வாக்குகளை வெவ்வேறு கட்சிகளுக்கும் அந்தக் கட்சிகளில் போட்டியிடும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர்களுக்கும் அளிப்பர்.

இதனால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் மக்கள் மனங்களை வென்றவர்களாகவே இருப்பர்.ஆனால் நடை முறையில் இருக்கின்ற தேர்தல் அமைப்பில் இத்தகைய சந்தர்ப்பம் இல்லாமல்  போய்விடுகிறது.

எது எப்படியாயினும் நல்லவர்களை, நேர்மையானவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யும்போதுதான் மக்கள் நன்மை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

தமிழ் இனம் ஒன்றுபட்டிருந்தால் ஒரு கட்சியில் அனைத்து நேர்மையான வேட்பாளர்களும் களமிறங்கியிருக்க முடியும் என்ற உண்மையையும் இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

எனினும் இத்தகையதொரு ஒற்றுமை எங்களிடம் இருந்திருக்குமாயின், நாங்கள் என்றோ உரிமை பெற்ற இனமாக இருந்திருப்போம். பரவாயில்லை எங்கள் விதி இதுதான் என்பதற்காக நாங்கள் தெரிவு செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராகவும் இருக்கலாம் என்று நினைப்பது மிக மோசமானது.

எனவே எங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற கடமைப் பொறுப்பு விரும்பி யோ விரும்பாமலோ மக்களிடம் தரப்பட்டுள்ளதால் அந்தக் கடமையை அப்பழுக்கற்ற முறையில் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.

இதற்காக நாங்கள் நடந்துவந்த அரசியலில் சாதித்தது என்ன? சாதிக்க முடிந்தும் சாதிக்க முடியாமல் போனது யாருடைய தவறு என்பன பற்றிச் சிந்தித்து எங்களின் கடமையைப் பூர்த்தி செய்வோம்.

நன்றி  வலம்புரி 

பிரிவினையை நோக்கித் தள்ளப்படும் தமிழர்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்காளர்கள் மத்தியில், இனவாத – பிரிவினைவாதப் பிரசாரங்களே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




சில நாட்களுக்கு முன்னர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வில், இந்தத் தேர்தலில் வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு, அபிவிருத்தி ஆகியன தான் முக்கியமான விவகாரங்களாக இருக்கும் என்று மக்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், பொருளாதாரப் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி அரசியல் கட்சிகள் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

அதுபற்றிப் பேசுவதிலோ, அவற்றுக்காக தாம் முன்வைக்கப்போகும் தீர்வுகள் குறித்தோ பிரசாரத்தில் அவர்கள் ஈடுபடுவதை அரிதாகவே காணமுடிகிறது.
எங்கு பார்த்தாலும், இனவாதம் அல்லது பிரிவினைவாதம் பற்றிய பிரசாரங்களே கோலோச்சுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை முன்வைத்து, விமர்சனம் செய்வதிலேயே தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் முழுநேர வேலையாக மாறியிருக்கிறது.

சமஷ்டிக்கான புதிய அர்த்தம் கற்பிப்பதில் சிங்களக் கட்சிகளுக்கு இருக்கின்ற தீவிர ஈடுபாடு, அதன் மீதுள்ள அவர்களின் வெறுப்பைத் தாராளமாகவே பிரதிபலிக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்ட – பிரிக்கப்படாத இலங்கைக்குள், சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டித் தீர்வு ஒன்றையே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், சமஷ்டி என்பது பிரிவினையே என்று அர்த்தம் கற்பித்து ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி போன்ற எல்லாக் கட்சிகளுமே எம்பிக் குதிக்கின்றன. எந்தெவொரு தமிழ்க் கட்சியுமே இன்றைய நிலையில் பிரிவினையை ஆதரிக்கவில்லை.
தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட கூறும் நிலைக்கு வந்திருக்கிறது.

ஆக, வடக்கில் தனிநாட்டுக் கோரிக்கை, அதாவது பிரிவினைக் கோரிக்கை பலவீனப்பட்டுப் போயிருக்கின்ற நிலையில் தான், தெற்கில் அது தீவிரமாகியிருக்கிறது.
பிரிவினைவாதம் என்பது, தனியே தனிநாட்டை வலியுறுத்துவது மட்டும் அல்ல. அதனை நோக்கித் தூண்டி விடுவதும் கூட பிரிவினைவாதம் தான்.

இப்போது, மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும், அநுரகுமார திஸநாயக்கவும் ஏனைய சிங்களத் தலைவர்களும் செய்யும் பிரசாரம், தமிழர்களைப் பிரிவினையை நோக்கித் தள்ளும் வகையிலேயே உள்ளன.

தமிழர்களால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி என்பது, ஒரு கூட்டு அரசாங்க அமைப்பு முறையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக அதனைச் சமஷ்டி அல்லது சுயாட்சி என்கிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இதனை ‘ஒரு நாடு இருதேசம்’ என்கிறது. ஜனநாயகப் போராளிகள் – ஒஸ்லோ இணக்கப்பாடு, திம்பு கோட்பாடுகளின் அடிப்படையான தீர்வு என்கின்றனர்.

ஈபிடிபியின் நீண்டகால கோசமே, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான். அதனை அவர்கள் இப்போது வைத்திருக்கிறார்களா இல்லையா என்பது சந்தேகம்.
இங்கு தமிழ்க் கட்சிகள் தமிழர்களின் அபிலாஷை விடயத்தில் வேறு வேறு பெயர்களை முன்வைத்து பிரசாரம் செய்தாலும், அவற்றின் அடிப்படை அம்சம் கூட்டுஅரசாங்க முறைமை தான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், பல்வேறு தமிழ்க் கட்சிகளால் தமது கோசத்தின் அர்த்தம் என்னவென்று சரியாக வெளிப்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனை.

உதாரணத்துக்கு, ஒரு நாடு இருதேசம் என்ற தமது கோட்பாட்டுக்கு பலரும் தவறாக அர்த்தம் கற்பிப்பதாக சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

தேசம் என்பது நாடு அல்ல என்றும் அது தனிநாட்டைக் குறிக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

ஆனால், அந்தச் செய்தியில் கடைசி வரையில் அவர் தேசம் என்றால் என்ன- அதன் அர்த்தம் என்னவென்று கூறவில்லை.

தேசம் என்பது எதனைக் குறிக்கிறது என்பதில் அவருக்குக் கூட மயக்கம் இருக்கிறதா என்ற சந்தேகத்தையே அது ஏற்படுத்தியது.

அதுபோலவே ஜனநாயகப் போராளிகள் கட்சி கூறும் ஒஸ்லோ உடன்பாடு, உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி பற்றியே பேசுகிறது.

அது ஒரு பேச்சுக்கான அடிப்படையான இணக்கப்பாடே தவிர, இறுதியான முடிவு அல்லது உடன்பாடு அல்ல.

அவர்களும் கூட, தெளிவாக சமஷ்டி என்பதை வெளிப்படுத்த மறுக்கிறார்கள்.
அவ்வாறு செய்தால் அதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்று மக்கள் புரிந்து கொண்டு விடுவார்களோ என அச்சம் கொள்கிறார்கள் போலும்.

எவ்வாறாயினும், நாட்டைப் பிரிக்காமல் ஒன்றுபட்ட ஒரு கூட்டரசாங்க முறையை உருவாக்குவது தான் தமிழ் மக்களின் எண்ணமாக இருக்கிறது.

இது, பல ஐரோப்பிய நாடுகளிலும் வெற்றிகரமாக நடைமுறையில் இருக்கின்ற ஓர் ஆட்சி முறையாகும்.

ஆனால், சமஷ்டி என்பது பிரிவினையே என்று குதர்க்கமாக அர்த்தப்படுத்தி சிங்கள வாக்காளர்களை உசுப்பேற்றுவதில் பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார். சமஷ்டியை முன்வைத்தவர்கள் தமிழர்கள் இல்லை, சிங்களவர்களே என்று குறிப்பிட்டிருந்தார்.
அது உண்மை, 1928ஆம் ஆண்டில் முதல் முறையாக கண்டியைச் சிங்களவர்களால், டொனமூர் யாப்பு ஆணைக்குழுவிடம் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், தமிழர்கள் அப்போது அதனை ஏற்கவில்லை. பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் அதனை முன்வைத்தார்.

இப்போது தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கின்றனர். ஆனால், சிங்களவர்கள் அதனை நிராகரிக்கின்றனர்.

இதனைக் கூறிய ராஜித சேனாரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியை முன்வைத்திருப்பது தவறல்ல என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எப்போதுமே பெரிய கோரிக்கையை முன்வைத்தால் தான், குறைந்தபட்ச தீர்வேனும் கிட்டும் என்றும், எனவே அவர்கள் கூடுதல் அதிகாரப் பகிர்வைக் கோரியதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போல சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்படாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இன்னொரு பக்கத்தில், தற்போது மஹிந்த ராஜபக்ஷவின் வெளிவிவகார ஆலோகராக மாறியுள்ள கலாநிதி தயான் ஜெயதிலகவும், சமஷ்டிக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தில் பேச்சுக்களை நடத்தலாம் – ஆனால், சுயநிர்ணய உரிமையை வழங்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவின் வெளிவிகார ஆலோசகரான தயான் ஜெயதிலக தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், அதனை அடிப்படையாக வைத்துப் பேசலாம் என்கிறார்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷவோ அது பிரிவினை எனக் கூறுகிறார்.

நாடு பிளவுபடப் போகிறது, சமஷ்டியைக் கேட்கிறது கூட்டமைப்பு என்று மஹிந்த ராஜபக்ஷ பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்க, வடக்கு- கிழக்கைத் துண்டாடி தனிநாட்டை அமைத்துக் கொடுத்து விட்டு, புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்.
அது தான் ஐதேகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள புதிய நாடு என்றும் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரம் அமைந்திருக்கிறது.

அவரே இப்படியென்றால், தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களெல்லாம் எப்படி இருப்பார்கள் என்று கூற வேண்டியதில்லை.
இதனை, தமிழர்கள் கேட்காது போனாலும், தனிநாட்டைப் பிரித்துக் கொடுப்பதற்கு சிங்களத் தலைமைகள் தயாராகி விட்டனர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

பிரிவினை, தனிநாடு பற்றியே சிந்திக்காத தமிழர்களை அத்தகையதொரு நிலைப்பாட்டை நோக்கி தள்ளிச் செல்வது தான் உண்மையான பிரிவினைவாதம்.

சிங்களத் தலைமைகள் இப்போது செய்து கொண்டிருப்பது அதனைத் தான்.
ஆரம்பத்தில் சமஷ்டியை வேண்டாம் என்று நிராகரித்த தமிழர்களை சமஷ்டியையும், அதற்கு அப்பால் சென்று தனிநாட்டையும் கேட்கும் நிலைக்கு கொண்டு சென்றது சிங்களத் தலைமைகள் தான்.

இப்போது தனிநாடு வேண்டாம் சமஷ்டியே போதும் என்று வந்திருக்கிற தமிழர்களையும், தனிநாடு நோக்கித் தள்ளிச் செல்வதும் சிங்களத் தலைமைகள் தான்.
எப்போதும் இனவாதமே, அவர்களின் அரசியல் கோசமாகவும், பிரசார தந்திரமாகவும் மாறியிருக்கிறது.

அதிலிருந்து விலகி அவர்களால், ஆக்கபூர்வமான அரசியலை நடத்த தெரியாதிருந்திருக்கின்றனர்.

இனவாதம் அதிகம் பயனளிக்காது என்ற அச்சம் தோன்றிய கட்டத்தில் தான் அவர்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து, பிரிவினைவாத அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதனைச் சாதாரண சிங்கள வாக்காளர்களால் புரிந்துகொள்ள முடிகிறதா தெரியவில்லை.
ஆனால், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் போன்றவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அதனால் தான், பேசுவதற்கு எதுவும் இல்லாததால் தான், நாடு பிளவுபடப் போகிறதாக மஹிந்த ராஜபக்ஷ பிரசாரம் செய்வதாக கூறியிருக்கிறார்.

ஆக சிங்களத் தலைமைகளின் பிரிவினவாத அரசியல் நிகழ்ச்சி நிரலின் சாயம் இப்போது பௌத்த பீடங்களிடம் கூட எடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஜனநாயகம் பலம் பெறுமா? – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிக ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் நாடாளுமன்றைக் கலைத்தார்.ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள தேர்தலானது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்கும் இதன் ஊடாக நாட்டின் அரசியலிற்குள் நுழைவதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளது.




தான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகப் பதவி வகிக்கலாம் என்கின்ற கனவுடன் மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரியில் அதிபர் தேர்தலை நடத்தினார். ஆனால் இத்தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன அதிக வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபராகினார். இது உண்மையில் எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும்.

ராஜபக்ச சிறிலங்காவில் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக அதிபராகப் பணியாற்றியவர் என்ற வகையில் மக்களுக்கு இவரது அரசியல் நன்றாகத் தெரியும். சிறிலங்காவில் பல ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.

ஆனால் இவர் தனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்த அதிகாரம் மிக்க அரசியல் தந்திரோபாயங்களால் மக்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றன இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இவற்றை எல்லாம் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
இது தொடர்பான ஐ.நா போர்க் குற்ற அறிக்கை செப்ரெம்பரில் வெளியிடப்படவுள்ளது.
ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முன்வந்ததானது சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்குள் மிகவும் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே வாக்களித்தது போன்று அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான போதியளவு ஆதரவைப் பெற்றிராததாலேயே நாடாளுமன்றைக் கலைத்து தேர்தலை நடத்தத் தீர்மானித்தார்.

இது தொடர்பில் வாக்காளர்களின் ஆணையைப் பெறுவதென சிறிசேன தீர்மானித்தார். ஐ.ம.சு.கூட்டணியின் உறுப்பினராக ராஜபக்ச தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளமை சிறிலங்காவின் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சவிற்கும் சிறிசேனவிற்கும் இடையில் பல்வேறு கோட்பாட்டு சார் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணினார். கொழும்புத் துறைமுகத்தில் சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவதற்கு ராஜபக்ச தனது அனுமதியை வழங்கியிருந்தது மட்டுமன்றி, சீன வங்கிகளிடமிருந்து ஐந்து பில்லியன் டொலர்களும் சிறிலங்காவால் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

சீனக் கடன்கள் மற்றும் சிறிலங்காவில் இடம்பெறும் சீனத் திட்டங்கள் தொடர்பான சிறிசேனவின் ஆதரவாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சீனக் கடனின் 70 சதவீதத்தை கடன் வழங்குனர்களிடமிருந்து பெற்று வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் தொடர்ந்தும் சீனாவுடன் ஒப்பந்தம் செய்வார் என சிலர் கூறுகின்றனர்.

ராஜபக்ச இத்தேர்தலின் ஊடாக சிறிலங்காவின் பிரதமராக பதவி வகிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சிறிசேனவால் நிறைவேற்றப்பட்ட சில சட்ட சீர்திருத்தங்கள் மூலம் பிரதமராக வருகின்ற எவரும் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிக அதிகாரங்களைப் பெற முடியும் என்பதாலேயே ராஜபக்ச பிரதமராக தெரிவுசெய்யப்பட்டால் தாமும் நலன் பெறலாம் என இவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

சிறிசேன இதுவரை வெளிப்படையாக ராஜபக்சவை ஆதரித்து கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. இத்தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக ஏற்கனவே சிறிசேன அறிவித்துள்ளார். ‘ராஜபக்சவிற்கு ஆதரவாக இளைஞர்கள் வாக்களிக்கமாட்டார்கள். ஏனெனில் ராஜபக்ச தனது காலத்தில் இழைத்த பல்வேறு குற்றங்களை இந்த இளைஞர்கள் நன்கு உணர்வர். ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சியை இவர்கள் நன்கறிவர்’ என ஜூலை 14 அன்று சிறிலங்காவின் அதிபர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ளதால் இம்முறை நிச்சயமாக இக்கூட்டணி தோல்வியுறும்  எனவும் சிறிசேன எதிர்வுகூறியுள்ளார்.

ராஜபக்சவுக்கு எதிரான ஐ.ம.சு.கூட்டணி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இந்த முன்னணியானது கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிசேனவிற்கு ஆதரவளித்திருந்தது. இதன்மூலம் ரணிலின் தலைமையில் கடந்த ஜனவரியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆளுங்கட்சியாகச் செயற்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால் சிறிலங்காவின் எதிர்கால அரசியலில் பல்வேறு சீர்திருத்தங்கள் இடம்பெறலாம். தற்போது சிறிலங்காவின் ஜனநாயகம் சீரழிந்துள்ளது. இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டை ஆட்சி செய்தால் மீண்டும் சிறிலங்காவில் ஜனநாயகம் பலம்பெறும் என எதிர்வு கூறப்படுகிறது.

Sunday 2 August 2015

ஐ.நா.வின் அயோக்கியத்தனம்

எந்த சமூகத்தில் அமைதியும் சம உரிமையும் தனி மனித சுதந்திரமும் இருக்கிறதோ, அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவை. அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கின்றன, ஆராதிக்கின்றன.


எந்தச் சமூகத்துக்கு சுதந்திரம் இல்லையோ - எந்த சமூகத்துக்கு சம உரிமை மறுக்கப்படுகிறதோ - அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் அமைதியையோ ஆனந்தத்தையோ அனுபவிக்க முடிவதில்லை.
தணல் மீது இருக்கும் பால்மாதிரி கொதிநிலை குறையாமலேயே இருக்க வேண்டியிருக்கிறது. இன்றோ நாளையோ நாளை மறுநாளோ - என்றோ ஒருநாள் தம் இனத்தின் சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
ஈழத்தின் இளம் வேங்கைகள் விஷயத்திலும் இதுதான் நடந்தது. அடிமையாகப் பிறப்பவர்கள் அடிமையாகவேதான் இறக்க வேண்டும் - என்று சட்டவிதி ஏதாவது இருக்கிறதா என்ன!
சிங்கள இனத்தின் மேலாதிக்க வெறியும், அதைத் தட்டிக் கேட்ட தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதும் தான், தமிழ் இளைஞர்களை உஷ்ணப்படுத்தியது.
திருப்பித்தாக்க வேண்டும் - என்கிற எண்ணம் சிறிதுசிறிதாகத்தான் தலை தூக்கியது. இதை, சிங்களத் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேயில்லை. திருப்பித் திருப்பித் தாக்கினால் தான் தமிழர்கள் அடிமைகளாகவே வீழ்ந்து கிடப்பார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள்.
தமிழர்களை எப்படியாவது நசுக்கி விட வேண்டும் - என்கிற சிங்கள இனவெறி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அந்த வெறிக்கு, ஏறக்குறைய எழுபது வயது. இந்த வரலாற்றை மறைக்க முயல்வது அயோக்கியத்தனம்.
விடுதலைப்புலிகளைப் பார்த்து பயந்துதான் இலங்கை எதிர் நடவடிக்கையில் இறங்கியது - என்று சொல்வது, கடுகுக்குள்ளே கடப்பாரையை ஒளித்துவைக்கிற முயற்சி. உண்மையில், புலிகளைப் பார்த்து பயப்படுவதற்கு முன்பே, தமிழர்களைப் பார்த்து பயந்தது பௌத்தமும் சிங்களமும்! அந்த தேவையற்ற அச்சம்தான், பிரச்சினையின் ஊற்றுக்கண்.
சிங்கள மக்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, ஈழத் தமிழர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவர்கள். இவர்களைப் பார்த்து, இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான பௌத்த சிங்களர்கள் ஏன் பயப்பட்டார்கள் - என்பது விரிவாகப் பேச வேண்டிய தனிக் கதை.
'எங்கே காலை நீட்டுவேன், எங்கே கையை நீட்டுவேன்' என்றெல்லாம் கேட்ட துட்டகைமுனுவிலிருந்தே தொடங்கிவிடுகிறது அது.
சிங்கள இனம் தானாகவே பயந்ததா, அல்லது தங்களது அரசியல் ஆதாயத்துக்காக தமிழர்கள் குறித்த அச்சத்தை அரசியல்வாதிகள் செயற்கையாக ஏற்படுத்தினார்களா என்கிற கேள்வியெல்லாம் பிறகு!
புலிகளைப் பார்த்து பயப்படுவதற்கு முன்பே, தமிழர்களைப் பார்த்து சிங்கள மக்கள் அஞ்சி நடுங்கினார்களா இல்லையா? இது, சுற்றி வளைக்காத நேர்மையான கேள்வி.
தனிச் சிங்களச் சட்டம், கட்டாய பௌத்தச் சின்னம், தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் வேறு வேறு அளவுகோல் - என்பதெல்லாம் சிங்கள மக்களின் தேவையற்ற அச்சத்தின் எச்சங்கள். முள்ளிவாய்க்கால் அந்த அச்சத்தின் உச்சம். இன்றைக்கு தமிழர் தாய்மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிற்கிற ராணுவம்... அந்த அச்சத்தின் மிச்சம்.
வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளுக்கு நீதி கேட்டால், 'சிங்கள இனத்தைத் தேவையில்லாமல் உசுப்பி விடாதீர்கள்' என்கிற போதனையோடு நம் குறுக்கே வந்து நின்றார்கள் சமந்தகர்கள்.
கடந்த ஜனவரி எட்டாம் தேதி இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றம், அத்தனையையும் மாற்றிவிடும் - என்பது அந்த சாமர்த்தியசாலிகளின் வாதமாக இருந்தது. 'மைத்திரி ஆட்சி நல்லாட்சி' என்கிற கோஷ்டி கானத்தில் இணைந்து கொள்ளாதவர்கள் மீது கழுதைப்புலி போல பாய்ந்தார்கள். ராஜதந்திரம் தெரியாதவர்கள் - என்றார்கள்.
இப்படியெல்லாம் கரித்துக் கொட்டியவர்கள் எவ்வளவு ராஜதந்திரிகள் என்பதையும், மைத்திரி ஆட்சியின் லட்சணத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது, அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று.
தமிழின அழிப்புக்காக நீதி கேட்பதில் முன்னணியில் இருக்கிற கறுப்பினச் சகோதரி யாஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச அமைப்பின் (The International Truth and Justice Project - Sri Lanka) ஆய்வு, மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கும் மைத்திரிபாலா ஆட்சிக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருக்கிறது.
(2009ல் நாற்பதாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த ஐ.நா. குழுவில் உறுப்பினராக இருந்தாரே, அதே யாஸ்மின்.)
'மைத்திரியின் நல்லாட்சி' என்கிற முழக்கத்தை முன்வைத்து, இனப்படுகொலைக்கு நீதிகேட்பவர்களின் முயற்சிகளை முடக்கப்பார்த்தவர்களுக்கு யாஸ்மின் சூகா அமைப்பின் அறிக்கை, அதிர்ச்சி வைத்தியமாக இருந்திருக்கும்.
யாஸ்மின் குழுவின் அறிக்கைக்கு 'இன்னும் முடிவடையாத யுத்தம்' என்று தலைப்பு. அது, மிக மிகப் பொருத்தமாக இருக்கிறது. 2009 முதல் இன்றுவரை இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த விரிவான ஆய்வாக அது இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மட்டுமின்றி பாதுகாப்புப் படையினர் கொடுத்திருக்கும் ரகசியத் தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
இலங்கையில் இருக்கும் 40 சித்திரவதைக் கூடங்களைப் பட்டியலிட்டிருக்கிறது அந்த அறிக்கை. திருகோணமலை கடற்படை தளத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத தடுப்பு முகாமின் இருப்பிடத்தை ஒரு பறவைப் பார்வையில் காட்டும் வரைபடமும் அந்த அறிக்கைக்கு இடையே இருக்கிறது.
உலகின் நம்பர் ஒன் கொலைக்களம் - என்று கருதப்படும் வவுனியாவின் 'ஜோசாப்' (சுருக்கப் பெயர்) முகாம் குறித்தும் அறிக்கை பேசுகிறது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 40 சித்திரவதைக் கூடங்களில், பெரும்பாலானவை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை. மற்றவை காவல்துறை கட்டுப்பாட்டிலும், அரசின் புனர்வாழ்வு முகாம் என்கிற பெயரிலும் இயங்குபவை.
40 முகாம்களை அம்பலப்படுத்தியிருப்பதுடன் நில்லாமல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 60 அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறது யாஸ்மின் குழு அறிக்கை.
'எல்லாப் பெயர்களையும் நாங்கள் வெளியிட்டுவிடவில்லை. தகவல் தந்தவர்கள் மற்றும் சாட்சியமளித்தவர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வே அதற்குக் காரணம்' என்கிறார், இந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளரும் பிரிட்டிஷ் பத்திரிகையாளருமான சகோதரி பிரான்சேஸ் ஹாரிசன். (பிணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன - என்று கண்ணீரால் எழுதினாரே - அதே சகோதரி).
மகிந்த காலத்தில் நடந்த சித்திரவதைகள் மட்டுமின்றி, நல்லாட்சி நாயகர் மைத்திரியின் ஆட்சியில் தொடரும் சித்திரவதை மற்றும் பாலியல் கொடுமைகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது இந்த அறிக்கை.
சுமார் 180 கொடுமையான நிகழ்வுகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் மனத்தை உருக்கும் வாக்குமூலங்கள் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். என்ன நடந்தது - என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடாமல், எந்த முகாமில் நடந்தது, எந்த அதிகாரியின் கைங்கரியம் - என்பதையெல்லாம் தெரிவிக்கிறது அறிக்கை. யாஸ்மின் குழுவுக்குத் தெரிகிற இது பெத்தப் பெரிய அமைப்பான ஐ.நா.வுக்குத் தெரியாதா என்ன?
வாஷிங்டனின் பிரபல செய்தியாளரான டெய்லர் டிப்பட், மறுநாளே 'தி டிப்ளமேட்' பத்திரிகையில், "மிகச் சரியான நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது" என்று எழுதினார்.
 'தமிழர்கள் சித்திரவதை செய்யப்படும் விதம், பாலியல் வன்கொடுமைகள் மூலம் தமிழ்ப் பெண்கள் சீரழிக்கப்படும் விதம் - ஆகியவற்றை விவரிக்கும் பகுதிகளைப் படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.
இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் நயவஞ்சக சுபாவம் மாறவே இல்லை என்பது இந்த அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சிறீ வந்தபிறகும் ஸ்ரீலங்கா மாறவில்லை' என்று வேதனையுடன் எழுதியிருக்கிறார், டிப்பட்.
'இலங்கைத் தீவில் சிங்கள மேலாதிக்கம், பல தலைமுறைகளாக தமிழர்களை நசுக்கி வருகிறது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்படவேயில்லை.
நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், நுணுக்கமான (மறைமுக) யுத்தம் ஒன்று தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான சித்திரவதை, பாலியல் வன்முறை,
கடுமையான கண்காணிப்பு, ராணுவ மயமாக்கல், பாரபட்சம், மிரட்டல் - ஆகியவை தமிழ்ச் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் ஆபத்திலேயே வைத்திருக்கின்றன' என்கிறார் டிப்பட்.
வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இந்த அறிக்கை தொடர்பான வாசகர்களின் வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
'இந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. செப்டம்பரில் நடக்க இருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டமும், தமிழின அழிப்புக்கு நீதி தர மறுத்துவிடு என்கிற அச்சம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பேரவைக்கு இந்த அறிக்கை குறித்து அத்தனைப் பேரும் தெரியப்படுத்துவோம்' என்கிறார் ஒரு வாசகர்.
'ஐ.நா.வை மட்டுமே நம்பி இவ்வளவு நாட்கள் ஏமாந்திருக்கிறோம்' என்று வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார், சகோதரி உஷா ஸ்கந்தராஜா. தமிழினத்தின் துயர வரலாற்றுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் - என்கிற வைராக்கியத்துடன் சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருபவர் அவர்.
"ஐ.நா.செயலர் நாயகமே! உங்களுக்கு சித்திரவதை முகாம்கள் பற்றி தெரியும்..... கற்பழிப்புக் கொடுமை தொடர்வது தெரியும்.... பாலியல் வன்முறைகள் நிகழ்வது தெரியும்.... இதையெல்லாம் தடுக்க நீங்கள் ஒரு துரும்பைக் கூட தூக்கிவைக்கவில்லை.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றியும், 'இனப்படுகொலை' பற்றியும் அறிந்தே இருக்கிறீர்கள். ஆனால், அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துவிடாதபடி பார்த்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டுகிறீர்கள். ஐ.நா.மீதான நம்பிக்கையை நாங்கள் முழுமையாக இழந்துவிட்டோம்" - என்கிற சகோதரி உஷாவின் மனக்குமுறல், நம் ஒவ்வொருவரின் மனக் குமுறல்.
பின்னூட்டம் ஒன்றில், வவுனியாவின் ஜோசாப் சித்திரவதை முகாமில் என்ன நடக்கிறது என்பதை எழுதியிருக்கும் ஒரு வாசகரின் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
அப்பாவித் தமிழர்களும் போராளிகளும் வாகனங்களின் டயர்களுக்கு இடையில் உயிருடன் செருகப்பட்டு எரித்துக் கொல்லப்படுவது அந்த முகாமில் வழக்கமாக நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், குவித்துவைக்கப்பட்டிருக்கும் உமி நெருப்பில் போட்டு சாம்பலாக்கிவிடும் கொடுமையும் நிகழ்கிறது என்று எழுதியிருக்கிறார். படிக்கும்போதே உடல் பதறுகிறது.
இவ்வளவுக்குப் பிறகும் தமிழினம் அமைதி காத்தால்,
'விதியே விதியே
என் செய நினைத்திட்டாய்
என் தமிழ்ச் சாதியை....'
என்கிற பாரதியின் குமுறலை நமக்கு நினைவுபடுத்திய நெருப்புப் பிழம்பு முத்துக்குமார் நம்மை மன்னிக்கவே மாட்டான்.
ஐந்து மாதங்களுக்கு முன் மறைந்த எங்கள் இயக்குநர் ஆர்.சி.சக்தி அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது இப்போது! 'தமிழ்நாடும் இந்தியாவும் தான் தமிழர்களைக் கைவிட்டது என்றால், ஐ.நா.வுமா?'
இலங்கையில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டதால் அதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும் - என்று வாய்தா கேட்டது பாரதமும் அமெரிக்காவும்தான்!
ஆட்சி மாற்றத்தால் தமிழர் நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது யாஸ்மின் குழு அறிக்கை. வாய்தா வாங்கிக் கொடுத்தவர்கள் இதற்கு பதில் சொல்வார்கள் என்று நினைக்கிறீர்களா!
இவ்வளவுக்குப் பிறகும், செப்டம்பர் மாத மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திலும், தமிழர்கள் தலையில் மசாலாவே அரைக்கலாம் என்று ஐ.நா. நினைத்தால், அந்த நேர்மையற்ற அமைப்பை நேரடியாகவே எதிர்த்தாக வேண்டும் நாம். சொந்த இனத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு நியாயம் கேட்க இயலாத கையாலாகாத இனம் தமிழினம் - என்கிற வரலாற்றுக் களங்கம் நம்மீது படிந்துவிடக்கூடாது.
சுதந்திரமும், சம உரிமையும், நீதியும் மறுக்கப்பட்ட ஓர் இனத்தில் பிறக்க நேர்கிற அவலத்திலிருந்து நமது நாளைய தலைமுறைக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இன்றே இப்போதே நாம் போராடியாக வேண்டும்.
இல்லையேல், அந்தக் குழந்தைகளும் ஆயுதத்தைத்தான ஏந்த வேண்டியிருக்கும். குழந்தைப் போராளிகள் - என்கிற பெயரை அவர்களும் தாங்க வேண்டியிருக்கும். அதற்கு நாம் காரணமாக இருக்கலாமா?
எல்லா நாடுகளிலும் ஐ.நா. அலுவலகங்கள் இருக்கின்றன. 'அயோக்கிய ஐ.நா.வே, நீதி வழங்கு' என்று அந்த அலுவலகங்கள் முன் நின்று போராட நம்மால் முடியாதா என்ன? முருகதாசனின் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போல எழ வேண்டும் நாம்!
நமது எழுச்சி, அநீதிக்குத் துணைபோகும் ஐ.நா.வின் செவுளில் அறைவதாக இருக்க வேண்டும். அதை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
மனித இனத்துக்கு நீதி கிடைக்க முட்டுக்கட்டையாக இருந்த ஓர் அமைப்பைத் திருத்திய இனம் - என்கிற பெருமையுடன் பிறக்கட்டும், நாளைய தலைமுறை தமிழ்க் குழந்தைகள்!
புகழேந்தி தங்கராஜ்