Monday 11 July 2016

ஈராக் மீதான சில்கோட் இன் ஆய்வு தீர்ப்பு: பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு போர் குற்றம்

அமெரிக்க தலைமையிலான 2003 ஈராக் படையெடுப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் வகித்த பாத்திரம் பற்றி புதனன்று வெளியிடப்பட்ட சில்கோட் விசாரணை அறிக்கை, அதை ஒழுங்கமைத்து தலைமை கொடுத்த பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா இரண்டினது அதிகாரிகளின் குற்றகரமான பாத்திரம் மற்றும் போரின் சட்டவிரோத குணாம்சத்தை மிகஅழிவுகரமாக நிரூபிக்கிறது.

சேர் ஜோன் சில்கோட் தலைமையிலான இந்த விசாரணை முடிவுகள், அது தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. 2.6 மில்லியன் வார்த்தைகள், 13 தொகுதிகளைக் கொண்ட இந்த அறிக்கை, 2001 மற்றும் 2009 க்கு இடையே பிரிட்டிஷ் அரசாங்கம், இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள் எடுத்த கொள்கை முடிவுகளைக் கையாண்டுள்ளது. இந்த விசாரணைக்கு சட்டபூர்வ அதிகாரங்கள் கிடையாது என்பதுடன், அந்த படையெடுப்பின் சட்டபூர்வதன்மை மீதான எந்தவொரு கண்டுபிடிப்பையும் குறிப்பாக அதை ஸ்தாபித்த கோர்டன் பிரௌன் இன் தொழிற் கட்சி அரசாங்கம் நிராகரித்திருந்தது.

எவ்வாறிருந்த போதினும் அந்த போருக்குப் பொறுப்பானவர்கள், மில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூறாயிரக் கணக்கானவர்களின் இரத்தத்தை அவர்களின் கரங்களில் கொண்டுள்ளனர் என்பதை அந்த அறிக்கை தீர்க்கமாக நிரூபிக்கிறது.

இது, உள்ளபடியே அந்த அறிக்கையில் அதிகளவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளவாறு, அப்படையெடுப்பிற்கு பிரிட்டனின் தலைமை-பொய்யராக செயல்பட்ட அப்போதைய தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயருக்கு மட்டும் பொருந்தும் என்பதல்ல. அதன் தொடர்ச்சியாக, அது அப்போரில் அமெரிக்காவின் பிரதான வடிவமைப்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ், துணை ஜனாதிபதி டிக் ஷென்னி, பாதுகாப்புத்துறை செயலர் டோனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் மற்றும் ஏனையவர்கள் மீதும், அத்துடன் இப்போதைய நிலையில் ஜனநாயக கட்சியின் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட அதை ஆதரித்த அனைத்து முன்னணி அதிகாரிகள் மீதும் வைக்கப்படும் ஒரு குற்றப்பத்திரிக்கையாக உள்ளது.

ஈராக்கிற்கு எதிராக போர் திட்டங்கள் எதுவும் இல்லையென வெளியில் பகிரங்கமாக கூறிக்கொண்டே, குறைந்தபட்சம் 2002 இன் ஆரம்பத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க-போரை பிளேயர் ஆதரித்திருந்தார் என்பதை அந்த அறிக்கையின் தனிநபர் சாட்சியங்களும், இரகசிய ஆவணங்களும் மற்றும் பிரத்தியேக குறிப்புரைகளும் உறுதிப்படுத்துகின்றன.

மார்ச் 20, 2003 இல் தொடங்கிய படையெடுப்பு, "ஆயுதக்குறைப்புக்கான சமாதான விருப்புரிமைகள்" காலாவதியாகும் முன்னரே நடந்ததாக சில்கோட் குறிப்பிடுகிறார். “அச்சமயத்தில் இராணுவ நடவடிக்கை கடைசியாக நாடப்படவில்லை,” என்றவர் அதிர்ச்சியூட்டும் விதத்தில் குறிப்பிடுகிறார்.
அச்சமயத்தில் ஈராக்கின் சதாம் ஹூசைன் ஓர் "உடனடி" அச்சுறுத்தலாக இருக்கவில்லை, ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களை வைத்திருந்தது என்ற வாதங்கள் "நிரூபிக்கப்படவில்லை". “பிழையான" உளவுத்துறை மதிப்பீடுகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் கேள்விக்கு உட்படுத்தப்படாத அவற்றின் அடித்தளத்தில் அந்த படையெடுப்பு தொடங்கப்பட்டதாக சில்கோட் குறிப்பிடுகிறார்.

இத்தகைய உண்மைகளே, அந்த படையெடுப்பு ஒரு அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் யதார்த்தம் இதை விட அதிகமான குற்றங்களை உள்ளடக்கி உள்ளது.

பிளேயர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு இடையிலான ஜூலை 2002 கூட்டத்தை நினைவூட்டி, இரகசியமாக வைத்திருப்பதிலிருந்து விடுவிக்கப்பட்ட டவுனிங் வீதி குறிப்புரை என்றழைக்கப்படும் ஒன்றும் சில்கோட் அறிக்கையில் உள்ளடங்கி உள்ளது, “பயங்கரவாதம் மற்றும் பேரழிவுகரமான ஆயுதங்களின் கலவையைக் கொண்டு நியாயப்படுத்தி, இராணுவ நடவடிக்கை மூலமாக, புஷ் சதாமை நீக்க விரும்பினார். ஆகவே உளவுத்தகவல்களும் உண்மைகளும் அக்கொள்கையைச் சுற்றி ஒழுங்கு செய்யப்பட்டன,” என்பதை அந்த குறிப்புரையில் பிரிட்டிஷ் உளவுத்துறையின் தலைவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்த, ஒரு ஆத்திரமூட்டலற்ற போரை நியாயப்படுத்த பொய்யான சாக்குபோக்கு ஒன்று தயாரிக்கப்பட்டு வந்தது.

ஐக்கிய இராஜ்ஜிய இராணுவ நடவடிக்கைக்கான சட்டபூர்வ விடயம் "திருப்திகரமாக இல்லை" என்று சில்கோட் குறிப்பிடுகிறார். அனைத்திற்கும் மேலாக இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இரண்டாவது தீர்மானத்தை பிரான்ஸ் ஆதரிக்கவில்லையென அதை பிளேயர் தாக்கி வந்த போதினும், “உண்மையில் ஐக்கிய இராஜ்ஜியம் தான் பாதுகாப்பு அவையின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தி வந்ததாக நாங்கள் [விசாரணை] கருதுகிறோம்.”

அப்படையெடுப்பு, அதன் அறிவித்திருந்த நோக்கங்களில் தவறி இருந்ததாக அவ்வறிக்கை காண்கிறது. “ஈராக்கிய உள்நாட்டு குழப்பத்தின் அபாயங்கள், ஈராக் அதன் நலன்களை செயலூக்கத்துடன் பின்தொடர்ந்தமை, பிராந்திய ஸ்திரமின்மை, மற்றும் ஈராக்கில் அல் கொய்தா ஆகிய ஒவ்வொன்றும் படையெடுப்புக்கு முன்னதாகவே வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டது,” என்று அது குறிப்பிடுகிறது.

(4,491 அமெரிக்க துருப்புகளுடன் சேர்ந்து) 176 பிரிட்டிஷ் படையினர் கொல்லப்பட்டனர் என்பது மட்டுமல்ல மற்றும் பல ஆயிரக் கணக்கானவர்கள் கொடூரமாக காயமடைந்தார்கள். “ஈராக்கிய மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.” மிகவும் நம்பகமான மதிப்பீடுகளின்படி, போரின் விளைவாக உயிரிழந்த ஈராக்கியர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1 மில்லியனாகும். ஒரு மதிப்பீட்டின்படி 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள். அந்நாடு இரத்தக்களரியான பிரிவினைவாத மற்றும் அதீத பொருளாதார குழப்பத்திலும் மற்றும் கடுமையான சமூக நிலைமைகளிலும் சிக்க வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஹேக் இன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்கொண்டுவரப்பட்ட ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லோரண்ட் ஹபக்போ மற்றும் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் போன்றவர்கள் உட்பட வேறு யாருமே பிளேயர் மற்றும் புஷ் ஆல் கொல்லப்பட்டவர்களில் அளவிற்கு ஒரு சிறு பகுதியினரை கொன்றதற்கு கூட பொறுப்பாக இருக்கவில்லை.

சில்கோட் விசாரணையானது கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பின்பற்றிய கொள்கை மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும். அதன் படுகொலை பரிமாணங்கள், பிரிவினைவாத மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பலப்படுத்துவதற்கு மட்டுமே சேவையாற்றி உள்ள ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா மீது நடத்தப்பட்ட பேரழிவுகளில் வெளிப்படையாக உள்ளன.

இந்த விசாரணை முடிவை போதுமானளவிற்கு தெளிவுபடுத்துவதாயின், பிளேயர், புஷ் மற்றும் இன்னும் பலரும் போர் குற்றவாளிகளாவர் என்றுதான் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள், அவர்களது சக-சூழ்ச்சியாளர்களுடன் சேர்ந்து, உடனடியாக விசாரணையை முகங்கொடுக்க வேண்டும்.

இரண்டாம் உலக போரைத் தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நூரெம்பேர்க் விசாரணைகள், அவற்றின் முக்கிய தீர்மானத்தில் தெளிவாகவும், ஐயப்பாட்டிற்கு இடமின்றியும் இருந்தன: அதாவது உடனடியாக நிகழவிருந்த ஆபத்து தொடர்பான அச்சம் இல்லாமல் அரசியல் இலக்கை அடைவதற்கு ஒரு யுத்தத்தை பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றமாகும். தூக்கிலிடப்பட்ட 12 நாஜி குற்றவாளிகளைப் போலவே புஷ் மற்றும் பிளேயரும் அதேயளவிற்கு குற்றவாளிகளாவர்.

போருக்குப் பின்னால் இருந்த நிஜமான நோக்கம் பேரழிவுகரமான ஆயுதங்கள் அல்லது பயங்கரவாதம் பற்றிய அச்சம் கிடையாது, மாறாக மூன்றாம் குடியரசின் தலைவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததைப் போலவே, உலகளாவிய மேலாதிக்கமாக இருந்தது என்பதை மிகத் தெளிவாக தெளிவாக்கும் வகையில் பிளேயரிடம் இருந்து புஷ் க்கு அனுப்பப்பட்ட முந்தைய இரகசிய குறிப்புரைகளை சில்கோட் கண்டுபிடிப்புகள் உள்ளடக்கி உள்ளன. புஷ்ஷிடம் இருந்து பிளேயருக்கு அனுப்பப்பட்டவை வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் இரகசியமாக வைக்கப்பட்டன. அப்படையெடுப்பின் ஒருசில நாட்களுக்குள், பிளேயர், இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை “பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய நிஜமான உலக ஒழுங்கை" ஸ்தாபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அறிவித்து, ஆர்ப்பரித்தார்.

இவ்வறிக்கை தொடர்பான ஈராக் சண்டையில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களின் குடும்பங்களில் பலரது பிரதிபலிப்புகள் குறிப்பிட்டு கூறும்படியானதாக உள்ளது. 2005 இல் ஈராக்கில் தனது சகோதரரை இழந்த சரா ஓ'கொன்னொர் கூறுகையில், “இந்த உலகின் ஒரு பயங்கரவாதியை உலகம் அறிந்து கொள்ள வேண்டும், அவரின் பெயர்தான் டோனி பிளேயர், உலகின் மிக மோசமான பயங்கரவாதி,” என்றார்.

பாஸ்ராவில் தன் மகன் மாத்தீவை இழந்த ரோஜர் பேகன் கூறுகையில், “பிரிட்டிஷ் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கும் வகையில் மற்றும் சாதகமான முடிவுகள் இன்றி ஒரு நாடே நாசமாவதற்கு இட்டுச் செல்லும் வகையில் மீண்டும் ஒருபோதும் இந்தளவிற்கு தவறுகள் செய்யக் கூடாது,” என்றார்.

2007 இல் கொல்லப்பட்ட கெவின் இன் தந்தை மார்க் தொம்சன் கூறினார், பிளேயர் "என்ன செய்தாரோ அவை ஒவ்வொன்றுக்காகவும் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். அதுவொரு சட்டவிரோதமான போர். என் மகன் வீணாக கொல்லப்பட்டார். அவர் காரணமின்றி கொல்லப்பட்டார்.”

உளவுத்தகவல்களை "அவர் தனக்கு சாதகமாக்கி, திரித்துக் கொண்டிருந்தார்" என்பது பிளேயருக்குத் தெரியும் என்று ரெக் கீஸ் தெரிவித்தார், இவரது மகன் தோமஸ் உம் கொல்லப்பட்டிருந்தார். அதேவேளையில் எடி ஹான்கோக், இவரின் மகன் ஜேமி உம் கொல்லப்பட்டிருந்த நிலையில், “மிகக் குறைந்தபட்சம்" "வாழ்க்கை முழுவதிற்கும் பொது பதவிகள் வகிப்பதை எந்தவொரு வடிவத்திலும்" பிளேயருக்கு "தடைவிதிக்க வேண்டும்" என்று அழைப்புவிட்டார்.

அத்தகைய நேர்மையான மற்றும் மற்றும் இதயப்பூர்வமான கருத்துக்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் விடையிறுப்புடன் கூர்மையாக முரண்படுகின்றன, இவர்கள் விசாரணையின் முடிவுகளை மூடிமறைத்து, எதிர்காலத்தில் இன்னும் நிறைய திறன்மிகுந்த போர்களை நடத்துவதற்கான ஒரு கட்டமைப்புக்குள் அதை திருப்ப முயற்சித்து வருகிறார்கள்.

ஈராக் விளைவு என்னவாக இருந்தாலும், “அந்த தலையீடு எப்போதுமே பிழையானது தான் என்று முடிவெடுப்பது தவறானது” என்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் வாதிட்டார்.

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் இவர்கள் அனைவருக்கும் மிகவும் கோழைத்தனமான அனுதாபியாக இருந்தார். ஈராக் மீது படையெடுக்கும் "நாசகரமான முடிவைக்" குறித்து புலம்பிய அவர், அது தொழிற் கட்சியின் மீது ஒரு "கரும்புள்ளியை" ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் பிளேயரை தொழிற் கட்சியிலிருந்து நீக்குவதை விவாதிக்க வேண்டுமென்பது ஒருபுறம் இருக்கட்டும், பிளேயரின் பெயரைக் கூட கோர்பின் குறிப்பிட விரும்பவில்லை.

இது, அந்த அறிக்கைக்கு பிளேயரின் திமிரான மற்றும் ஆக்ரோஷமான விடையிறுப்புக்குப் பாதை அமைத்து கொடுத்தது, அதில் அவர் கடந்தகால குற்றங்களை மட்டும் நியாயப்படுத்த முயலவில்லை, மாறாக புதிய குற்றங்களையும் நியாயப்படுத்த முனைந்தார். “என்னுடைய மதிப்பீட்டில், சதாம் ஹூசைன் இல்லாத இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருந்தது, இருக்கிறது" என்றார்.

அவரது டெக்சாஸ் பண்ணையில் இருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பிளேயரின் கருத்துக்களையே எதிரொலித்தார். “சதாம் ஹூசைன் இல்லாமல் முழு உலகமும் சிறப்பாக இருக்கிறது" என்று அறிவித்தார்.

இத்தகைய வெறிபிடித்த சமூகவிரோத கொலைகாரர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், அவர்களின் போரால் உயிரிழந்த 1 மில்லியன் மக்கள் இல்லாமல் "உலகம் சிறப்பாக" இருக்கிறதாம்.

இந்த விசாரணை கண்டுபிடிப்புகளுக்கு புஷ் மற்றும் பிளேயரின் விடையிறுப்பு மட்டுமின்றி, மாறாக அட்லாண்டிக் இன் இரண்டு தரப்புகளிலும் உள்ள ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் விடையிறுப்பும் என்ன வெளிப்படையாக தெளிவாக்குகிறது என்றால், உண்மை மற்றும் நீதிக்கான போராட்டமும் மற்றும் ஈராக்கிய மக்களுக்கான நஷ்டஈடும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் மட்டுமே தொடர முடியும் என்பதாகும்.

சில்கோட் அறிக்கை, மத்திய கிழக்கில் மட்டுமல்ல, மாறாக அத்துடன் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராகவும் அதிகரித்தளவில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பின்புலத்திற்கு எதிராகவும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவினது ஆராய்ச்சிகளின் கடந்த ஏழு ஆண்டுகளின் போது ஒரு மூன்றாம் உலக போருக்கான தயாரிப்புகள் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

“போருக்கு எதிரான போராட்டம், சமூகத்தின் மிகப் பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பின்னால் மக்களின் சகல முற்போக்கான கூறுபாடுகளையும் ஐக்கியப்படுத்துவதன் அடிப்படையில் அமைக்க வேண்டும்,” என்று பெப்ரவரி 18, 2016 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரசுரிக்கப்பட்ட"சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையின் இன்றியமையாத தீர்மானத்தையே இந்த விசாரணையின் படிப்பினைகள் உறுதிப்படுத்துகின்றன.

No comments:

Post a Comment