Thursday 1 September 2016

சம்பந்தர் சிந்திப்பது சரியா?

அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு.

ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதத்தக்க விமர்சகர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் மிகச்சிலரே உண்டு. அவர்களில் ஒருவரே மு.திருநாவுக்கரசு. அவருடைய அரசியலமைப்பைப் பற்றிய ஒரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. வவுனியாவிலும், லண்டனிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட இவ் நூலானது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது.

அரசியலமைப்பு விவகாரங்கள் கடினமானவைதான் என்ற போதிலும் அவை பற்றி கற்றகவும், தெளியவும் வேண்டிய ஒரு காலகட்டத்தில் இப்பொழுது ஈழத்தமிழர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இப் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டி இருக்கும். அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தில் இப்புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குவதற்கு ஆறு வாக்குகள் தேவைப்படுகின்றன. அந்த ஆறு வாக்குகளை அரசாங்கம் இரண்டு வழிகளில் பெறமுடியும். ஒன்று கூட்டமைப்பிடம் இருந்து பெறுவது, இரண்டு மகிந்த அணிக்குள் இருந்து மேலும் ஒரு தொகுதியினரை உருவி எடுப்பது. கூட்டமைப்பிடம் தங்கியிருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை கூட்டமைப்போடு ஏதோ ஓர் இணக்கத்திற்கு வரவேண்டியிருக்கும் அல்லது மகிந்த அணிக்குள் இருந்து ஆட்களைக் கழட்டுவதாக இருந்தால் சாம, பேத, தான,தண்டம் என்று ஏதாவது ஒரு வழியில் முயற்சிக்க வேண்டியிருக்கும்.

கிடைக்கப்பெறும் தகவல்களின்படி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திடமிருந்து ஒர் அறிவித்தல் வந்துள்ளது. அதன்படி இப்போது அவர்களிடமுள்ள வாகனத்தைத் தவிர மேலும் ஒரு புதிய வாகனம் அவர்களுக்கு வழங்ப்படக்கூடும். அது மிகவும் விலையுயர்ந்த சொகுசு வாகனமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வாகனத்திற்கு வேண்டிய ஒரு சாரதிக்குரிய விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சலுகைகளை வழங்குவதன் மூலம் மகிந்த அணியை மேலும் பிளவுபடுத்தலாம். அதற்குள்ளிருந்து உருவக்கூடிய ஆட்களை உருவி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை உருவாக்கலாம். அப்படிப்பட்ட ஒரு பெரும்பாண்மை உருவாக்குமிடத்து தமிழ் உறுப்பினர்களின் வாக்குகளில் தங்கியிருக்கும் தேவை ஏற்படாது. இதுவும் சிலசமயம் தீர்வின் அடர்த்தியை குறைத்து விடலாம்.

எப்படியோ மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுமிடத்து புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பின் அது பொதுசன வாக்கெடுப்பு ஒன்றிற்கு விடப்படும். இப்போது உள்ள நிலமைகளின்படி இரண்டு விடயங்கள் அந்த வாக்கெடுப்பின் முடிவை தீர்மானிக்ககூடும். முதலாவது மகிந்த அணி எவ்வளவு தூரத்திற்கு அதைக் குழப்ப முடியும் என்பது, இரண்டாவது தமிழ் மக்கள் எடுக்கப்போதும் முடிவு எத்தகையது என்பது. தமிழ் மக்கள் அந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் புதிய அரசியலமைப்பு மக்களாணையைப் பெற்று விடும். மாறாக தமிழ் மக்கள் வாக்களிப்பை பகிஷ;கரித்தாலோ அல்லது எதிராக வாக்களிக்க நினைத்தாலோ என்ன நடக்கும்?

சில சமயம் நாட்டில் இப்பொழுது நிலவும் ஸ்திரத்தன்மை குலைந்து போய்விடும். இலங்கைத்தீவு தொடர்பிலான மேற்கைத்தேய மற்றும் பிராந்திய வியூகங்கள் குழப்பப்படலாம். தமிழ் மக்களின் கேந்திர முக்கியத்துவம் மறுபடியும் உலக சமூகத்திற்கு உணர்த்தப்படலாம். நாடு மீண்டும் ஒருமுறை நிச்சயமற்றதோர் அரசியல் சூழலுக்குள் தள்ளப்படலாம். அதாவது தமிழ் மக்கள் எடுக்கப்போகும் முடிவு இந்த இடத்தில் நிர்ணயகரமானதாக இருக்கும்.

சில சமயம் தமிழ் மக்கள் மகிந்தவைப் பழி வாங்கவேண்டும் என்று இதற்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் சிந்தித்ததைப் போன்று சிந்திப்பார்களாக இருந்தால் இப்போது இருக்கும் ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் பெலப்படுத்தப்படும். எனவே தமிழ் மக்கள் எடுக்கப் போகும் முடிவுகளே இப் பிராந்தியத்தின் வலுச்சமநிலையை தீர்மானிக்கக் கூடிய ஓர் அரசியல் சூழல் இன்னும் சில மாதங்களில் இலங்கைத் தீவில் ஏற்படக்கூடும்.

ஆனால் வவுனியாவில் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியிட்டு வைக்கப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய புளட் இயக்க தலைவர் சித்தார்த்தன் கூறியவற்றின் அடிப்படையில் பார்த்தால் புதிய அரசியலமைப்பானது எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்குள் நாளாளுமன்றத்தில் சமர்;ப்பிக்கப்படுமா? என்ற ஐயமும் எழுகின்றது. சித்தார்த்தன் புதிய அரசியலமைப்பிற்கான உபகுழு ஒன்றில் அங்கம் வகிக்கின்றார். அந்த உபகுழுவைக் கூட்டுவதில் உள்ள கஷ;டங்களை அவர் அந்த உரையின் போது சுட்டிக் காட்டினார். ஆகக்குறைந்தது மூன்று உறுப்பினர்களாவது வருகை தந்தால்தான் ஓர் உபகுழுவைக் கூட்டமுடியுமாம். அவ்வாறு மூன்று உறுப்பினர்களைச் சேர்த்து தமது உபகுழுவைக் கூட்டுவதற்கு தாம் மிகவும் கஷ;டப்படுவதாகவும் அவர் அதில் சொன்னார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றுவது, தேர்தல் முறையை மாற்றுவது ஆகிய மூன்று பிரதான அம்சங்களிலும் உடன்பாடு எட்டப்படாத வரையிலும் புதிய அரசியலமைப்பு அதன் இறுதி வடிவத்தை பெறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எதிர்பார்க்கப்படும் ஒரு கால எல்லைக்குள் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பிற்கு விடப்படுமா என்ற கேள்வி எழக்கூடிய விதத்தில் அவருடைய உரை அமைந்திருந்தது.

இப்படியாக புதிய அரசியலமைப்பானது எப்பொழுது வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்பது தொடர்பில் சந்தேகங்கள் உண்டென்ற போதிலும் எதிர் காலத்தில் என்றைக்கோ ஒரு நாள் அப்படியொரு வாக்கெடுப்பை தமிழ் மக்கள் எதிர் கொள்ள வேண்டி வரலாம். அப்படியொரு நிலமை வரும் பொழுது கேந்திர முக்கியத்துவம் மிக்க தமது வாக்குகளை எவ்வாறு பிரயோகிப்பது என்பது தொடர்பில் அதாவது தமது அரசியல் பேரத்தை எப்படி மிக உயர்வாக வைத்துக் கொள்வது என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய ஒரு காலகட்டம் இதுவாகும். இப்படியொரு காலச்சூழலில்தான் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளிவந்திருக்கிறது. அந்நூலின் உள்ளடக்கத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.
இலங்கைத் தீவின் யாப்பு வரலாறு எனப்படுவதே இனஒடுக்கு முறையின் வரலாறுதான்.

சிங்கள, பௌத்த மேலாண்மை வாதமானது யாப்பை ஓர் ஒடுக்கும் கருவியாகவே கையாண்டு வந்திருக்கிறது. இவ்வாறு தமிழ் மக்களை ஒடுக்கும் ஒரு யாப்பு மரபெனப்படுவது பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தின் ஒரு தொடர்ச்சியே என்று மு.திருநாவுக்கரசு கூறுகின்றார். பிரித்தானியர் இச் சிறிய தீவை ஆண்ட போது முதலில் தமிழ்த் தலைவர்களை அரவணைத்து அதன் மூலம் சிங்களத் தலைவர்களைக் கையாண்டார்கள்; என்றும் ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்கள் காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டதை அடுத்து இந்தப் பிரித்தாளும் பொறிமுறையில் பிரித்தானியர் மாற்றத்தை ஏற்படுத்தினர் என்றும் மு.திருநாவுக்கரசு கூறுகின்றார்.

அதாவது ஹன்டி பேரின்பநாயகம் போன்ற தமிழ் தலைவர்கள் காந்தியின் அபிமானிகளாக மாறிய ஒரு பிராந்தியச் சூழலில் ஈழத்தமிழர்கள் இந்;தியச் சுதந்திரப் போராட்டத்தின் ஆதரவாளர்களாக காணப்பட்டனர். இதைக் கண்டு அஞ்சிய பிரித்தானியா சிங்களத் தலைவர்களை அரவணைக்கும் ஒரு போக்கை கடைப்பிடிக்கலாயிற்று. இதனால் பெரும்பாண்மையினரின் கையை ஓங்கச் செய்யும் ஓர் அரசியலமைப்பு பாரம்பரியத்தை அவர்கள் தொடக்கி வைத்தனர் என்றும் அதையே பின்வந்த சிங்களத் தலைவர்களும் மேலும் விஸ்தரித்துச் சென்றனர் என்றும் மு.திருநாவுக்கரசு கூறுகின்றார். அதாவது இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையிலான புவிசார் அரசியல் நெருக்கத்தை முன் வைத்தே பிரித்தானியர் அந்த முடிவை எடுத்ததாக மு.தி கூறுகின்றார். அங்கிருந்து தொடங்கி இன்றுவரையிலும் ஈழத்தமிழர்கள் பலியிடப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் வாதிடுகிறார்.
இந்தியாவின் பின்னணிக்குள் வைத்து ஈழத்தமிழர்களைப் பார்ப்பதால் தான் எல்;லாப் பெரிய நாடுகளும் ஈழத்தமிழர்களை பலியிட்டு வருகின்றன என்று அவர் கூறுகிறார்.

‘இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தையே சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மீது காலம் காலமாகப் புரிகின்றனர். தமிழ் மக்களை மொழி, பண்பாடு, இந்துமதம் சார்ந்து இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதினாலும், இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை பரவவிடாமல் தடுப்பதற்கு தமிழினத்தை அழிப்பது அவசியம் என்ற மேற்படி புவிசார் அரசியல் பார்வையின் விளைவாகவும் தமிழ் மக்கள் மீதான தமது இன அழிப்பு அரசியலை ஈவிரக்கம் இன்றியும், சமரசம் இன்றியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வரலாற்று ரீதியாக இந்தியா மீது சிங்கள-பௌத்தர்களுக்கு இருக்கும் அச்சமும் அதன் அடிப்படையிலான இந்திய எதிர்ப்புவாதமும், தமிழருக்கு எதிரான இன அழிப்பு அரசியலாய் வடிவம் பெற்ற நிலையில் ஈழத் தமிழ் மக்கள் புவிசார் அரசியலின் கைதிகளாய் அதற்குள் சிக்குண்டு அல்லல்படுகின்றனர்’ என்று மு.தி கூறுகிறார்.

‘சிங்கள-பௌத்தர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வரலாற்றுப் பகைமையை முதலீடாக்கி அதன் மூலம் இலங்கையின் நவீன வரலாற்றில் சிங்கள-பௌத்தர்களுக்கும், இந்தியாவிற்கும் இடையான பகைமையைத் தூண்டி வளர்த்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தமது கேந்திர நலன்களை அடைவதில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். இந்த அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர். பிரித்தானியர் சட்டபூர்வமாகத் தோற்றுவித்த அந்த அழிவுப் பாதையின் தொடர் வளர்ச்சியே இற்றை வரையான அரசியல் யாப்புக்களாகும்’ என்று கூறும் மு.தி இலங்கைத் தீவின் யாப்பு மரபை அதன் புவிசார் அரசியல் பின்னணிகளுக்கூடாக ஆராய்கிறார்.

அதாவது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை எனப்படுவதே ஒரு புவிசார் அரசியற் பிரச்சினைதான் என்பது அவருடைய வாதமாகும். எனவே அதற்குரிய தீர்வும் ஒரு புவிசார் அரசியல் தீர்மானத்திற்கூடாகவே கண்டடையப்பட வேண்டும் என்ற ஒரு முடிவிற்கு அவர் வருகிறார். இதில் யாப்பானது இன ஒடுக்கு முறையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு காரணத்தினால் அதில் இனி நிகழப்போகும் மாற்றங்களும் முன்னைய யாப்புக்களின் தொடர்ச்சியாகவே அமையக்கூடும் என்ற ஒரு முடிவிற்கு வாசகரை இந்நூல் நகர்த்திச் செல்கிறது. அதாவது இலங்கைத் தீவின் யாப்புப் பாரம்பரியம் எனப்படுவது தமிழ் மக்களுக்கு எதிரானது. அந்தப் பாரம்பரியத்தை மாற்றாமல் யாப்பின் இதயத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்ற ஒரு தெளிவிற்கு இந்நூல் இட்டுச்செல்கிறது.

rajavarothiam-sampanthan-60

ஆனால் மன்னாரில் நடந்த ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சம்பந்தர் வேறு விதமாகச் சிந்திப்பது தெரிகிறது. அங்கு தன்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறாது மறைமுகமான ஒரு தொகுப்புரையை அவர் வழங்கியிருந்தார். அத் தொகுப்புரையில் அவர் சந்திரிக்காவை, ரணிலை, மைத்திரியை தான் நம்புவதாகக் கூறியிருந்தார். சிங்களத் தலைவர்கள் தீர்வைத் தரமாட்டார்கள் என்ற வாதம் வறட்டுத்தனமானது என்றும் அவர் கூறினார்.அதைச் சொல்லும் போது அவருடைய குரலை உயர்த்தி அழுத்தி தீர்மானகரமாகக் கூறினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எல்லா அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றியே உருவாக்கப்பட்டன என்றும் ஆனால் இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்போடு ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது என்றும் அதில் கூட்டமைப்பானது வழிநடத்தும் குழுவில் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனவே சம்பந்தர் மன்னாரில் வைத்து கூறியவற்றை தொகுத்து நோக்கின் அவர் சிங்களத் தலைவர்களை நம்புகிறார் என்பது தெரிகிறது. சிங்களத் தலைவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் நம்புவது தெரிகிறது. இது மு.திருநாவுக்கரசுவின் நூலில் கட்டியெழுப்பப்படும் தர்க்கத்திற்கு எதிரானது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு திருமதி சந்திரிகா வழங்கிய பேட்டியில் அவரிடம் பின்வரும் தொனிப்பட கேட்கப்பட்டதாம்…… ‘நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்த தீர்வு யோசனைகள் இப்பொழுதும் பொருத்தமானவை என்று நம்புகிறீர்களா?’ என்று. அதற்கு அவர் சொன்னாராம்…..’அநேகமாக இல்லை…..ஏனெனில் இப்பொழுது புலிகள் இயக்கம் இல்லை’ என்ற தொனிப்பட.

இந்நிகழ்வில் உரையாற்றிய அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்; இந்நூல் சிங்கள பௌத்த பேரினவாதத்தை; மிகவும் துலக்கமாகவும், விரிவாகவும் தோலுரித்துக் காட்டுகின்றது என்று கூறினார். ஆனால் சம்பந்தர் கூறுகிறார் தான் இப்போதுள்ள அரசாங்கத்தின் தலைவர்களை நம்புவதாக. அதாவது தமிழ் தேசியப் பரப்பில் அதிகம் எழுதிக் கொண்டிருக்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் கருத்துக்களும் ஈழத்தமிழர்களின் அரசியலுக்கு தலைமை தாங்கும் சம்பந்தரின் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படுகின்றன. இதில் எது சரி? இன்னும் சில மாதங்களில் தமிழ் மக்கள் அதைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

அமெரிக்க அரசியலும், ஆலிவுட் அல்லக்கைகளும்…


media
 
ஒரு முக்கியமான பிரச்சனை மக்களின் பார்வைக்கு வருகிறபோதெல்லாம், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேறு ஏதாவது பிரச்சனையைக் கெளப்புவது அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு கைவந்தகலை. அப்படியான திசைதிருப்பலை செய்வதற்கென்றே சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு “SpinDoctors” என்று பெயர். ஒவ்வொரு முறையும் அமெரிக்காவில் தேர்தல் வருகிறபோதும், “தீவிர்வாதம்” என்கிற வார்த்தை எதற்காக ஊடகங்களில் அதிகமுறை பயன்படுத்தப்படுகிறது?
 
1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த மோனிகா லீவின்ஸ்கி என்கிற பெண்ணுடன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தகாதமுறையில் உறவுகொண்டார் என்று அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அக்குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மருத்துவந்தார். கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டனும் தன்னுடைய கணவனுக்கு ஆதரவாகவே பேசிவந்தார். ஒரு அப்பாவி மேல் இப்படி பழி சுமத்துகிறார்களே என்கிற அளவில் மக்களிடம் பில் கிளிண்டன் செல்வாக்குடன்தான் இருந்தார். ஆனால் நாளாக நாளாக அவருக்கு எதிரான சாட்சியங்களும் ஆதாரங்களும் கூடிக்கொண்டே போக, ஒரு கட்டத்திற்குமேல் உண்மையை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு பில் கிளிண்டன் தள்ளப்பட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி நீதிபதியிடம், “நான் மோனிகா லீவின்ஸ்கியுடன் முறையற்ற உடலுறவு கொண்டிருந்தேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அன்று மாலையே வானொலியிலும் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார் பில் கிளிண்டன். ஆகஸ்ட் 17 முதல் மக்களிடத்தில் கிளிண்டனின் செல்வாக்கு தடாலடியாக குறையத்துவங்கியது.

bill-clinton-ff 
செய்த தவறுக்கு அதிபராகவே இருந்தாலும் அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதுதானே முறையானது. ஆனால் பில் கிளிண்டன் அதிபராக இருப்பது அமெரிக்காவிற்கு அல்லவா. அதனால் சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய மக்கள் செல்வாக்கை உயர்த்திப்பிடிக்க ஒரு யுத்தி கையாளப்பட்டது. அதுதான் திசைதிருப்பல். ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் உண்மையை ஒப்புக்கொண்டதன் பின்னர், உடனடியாகவே சூடான் என்கிற நாட்டில் அல்கொய்தா பதுங்கியிருப்பதாகவும், அந்நாட்டிலிருந்த அல்-ஷிஃபா என்கிற மிகப்பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இரசாயன வெடிகுண்டுகள் தயாரிப்பதாகவும் செயதிகள் பரப்பப்பட்டன. அல்-ஷிஃபா வை விட்டுவைத்தால், இரசாயன குண்டுகள் வீசி உலகையே அல்கொய்தா அழித்துவிடும் என்று அமெரிக்க ஊடகங்கள் அச்சுறுத்தின. சூடானுக்கோ இவையெல்லாம் அதிர்ச்சிகரமான செயதியாக இருந்தது.

சூடானின் ஒட்டுமொத்த மருந்து தேவையின் 50% அளவிற்கு அல்-ஷிஃபா தொழிற்சாலையிலிருந்துதான் தயாராகிறது. அங்கே இரசாயன குண்டுகள் தயாரிக்கிறார்கள் என்பதை அமெரிக்கா எதை வைத்து முடிவுசெய்தது என்று சூடான் அரசு கேட்டது. ஆனால், அமெரிக்காவோ அதற்கு சரியான பதிலளிக்கவில்லை. அல்-ஷிஃபாநிறுவனத்திற்கு சற்று தொலைவில் மண்ணெடுத்து பரிசோதித்ததாகவும் அதில் எம்ப்டா எனப்படுகிற “ஓ-ஈத்தைல் மெத்தைல்போஸ்போனோதியோக்” என்கிற அமிலத்தின் கலப்பு இருப்பதாகவும், அது தடைசெய்யப்பட்ட மருந்து எனவும் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் உண்மையிலேயே சர்வதேச சட்டங்களின்படி எம்ப்டா தடைசெய்யப்பட்ட அமிலமல்ல. அதோடு அல்-ஷிஃபாவில் அது தயாரிக்கப்பட்டதாகவோ பயன்படுத்தப்பட்டதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. இதனை எதையும் அமெரிக்கா செவிமடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி (கிளிண்டன் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட மூன்றாவது நாளில்) ஆளில்லாத ஏவுகணைகள் வீசி அல்-ஷிஃபா மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தாக்கி அழித்தது அமெரிக்கா.
அல்கொய்தாவின் திட்டத்தை முறியடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து செயதிகள் சொல்லி, அமெரிக்க அதிபரின் செல்வாக்கை உயர்த்த முயற்சித்தன. இறுதியில் வெற்றியும் கண்டன. ஆனால் எவ்விதத் தொடர்புமே இல்லாத சூடான்தான் இதற்கு மிகப்பெரிய விலையினை கொடுக்கவேண்டியிருந்தது. ஏவுகணைத் தாக்குதலில் முழுவதும் சேதமடைந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்காமல் அப்படியே விட்டுவைத்தது சூடான் அரசு. அமெரிக்கா சொன்னபடி, இராசயன வெடிகுண்டு தயாரித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறதாவென பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று வெளிப்படையாக அறிவித்தது சூடான் அரசு. ஆனால், அமெரிக்க அரசோ அதற்கெல்லாம் தயாராக இல்லை. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பாவது கோரவேண்டுமென்று சூடான் அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தான் செய்தது சரிதான் என்றும் மறுவிசாரணைக்கோ மன்னிப்பிற்கோ இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது அமெரிக்கா.

ஐ.நா.வோ அல்லது சர்வதேச விசாரணைக்கு குழுவொன்றோ சூடான் வந்து விசாரிக்கவேண்டும் என்று மடியில் கனமில்லாத சூடான், ஐ.நா.சபையின் பாதுகாப்புக்கு கவுன்சில் வரை சென்று முறையிட்டது சூடான். ஆனால் எவ்வித விசாரணையும் இதில் நடத்தக்கூடாது என்றும் அமெரிக்கா சொன்னால் சொன்னதுதான் என்றும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் தடுத்தது அமெரிக்கா. இன்னும் ஒரு படிமேலே போய், alshifaமுற்றிலும் சேதமடைந்திருக்கும் அல்-ஷிஃபா மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை சீரமைக்க எந்த நாடும் உதவக்கூடாது என்றும் பல நாடுகளை நிர்ப்பந்தித்தது. அதனால்தான் மருந்து நிறுவனத்தை சரிசெய்வதற்கு சூடான் விடுத்த வேண்டுகோளையும் பிரிட்டன் நிராகரித்தது. ஏற்கனவே ஏழை நாடான சூடானுக்கு, தன்னுடைய உள்நாட்டு மருந்து உற்பத்தியில் 50%த்திற்கும் மேற்பட்ட அளவிற்கு மருந்து தயாரித்துக் கொண்டிருந்த அல்-ஷிஃபா நிறுவனம் அழிக்கப்பட்ட பின்னர் பெரியளவிற்கு இழப்பினை சந்திக்கவேண்டியிருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் இலட்சக்கணக்கானோர் மருந்து பற்றாக்குறையினால் மட்டுமே உயிரிழந்தனர். அவர்கள் வெறுமனே மரணித்தார்கள் என்று சொல்வதைவிட, ஆகஸ்ட் 20 ஆம் தேதி அமெரிக்கா வீசிய ஏவுகணைகளால் மறைமுகமாகக் கொல்லப்பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

“Wag the dog” திரைப்படம்:

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அப்போதைய அதிபரே மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியில் களமிறங்குகிறார். அவருக்கும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
“பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை
பாதியிலேயே நிறுத்தவேண்டாமே!
தொடர்ந்து ஓடவைப்போமே!
தற்போதைய அதிபருக்கவே வாக்களியுங்கள்”
என்பன போன்ற விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன.

wagதேர்தலுக்கு இரண்டே வாரங்கள் இருக்கையில், தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியாகின்றன. அப்பெண் ஆதாரங்களோடு அதிபர் மீதான குற்றச்சாட்டை பொதுவில் நிரூபிக்கிறார். இதனைப் பயன்படுத்திக்கொள்கிற எதிர்க்கட்சிகள், அதிபர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து எல்லா ஊடகங்களிலும் பேசுகின்றனர். இப்படியே போனால், தேர்தலில் தோற்பது உறுதி என்பதையறிந்து அதிபர், ஒரு திட்டம் தீட்டுகிறார். ஒருவரின் மதிப்பை ஊடகங்கள் வழியாக உயர்த்தவோ தாழ்த்தவோ மறைவுக ஏஜெண்டுகள் அமெரிக்காவில் நிறைய இருக்கின்றனர். திடீரென யாரோ ஒருவர் அதிகளவிலான புகழ்பெற்று பல பதவிகளை பெறுவார். அப்படியான நிகழ்வுகள் தற்செயலாக நடப்பவைபோன்று தோன்றினால், உண்மை அதுவல்ல. இதுபோன்ற மறைமுக பிரச்சார ஏஜென்டுகள் மூலமாகத்தான் சாத்தியமாகிறது. மக்கள் மத்தியில் சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய மதிப்பை உயர்த்துவதற்கு ஒரு மறைமுக பிரச்சார ஏஜென்டைத் தொடர்பு கொள்கிறார் அதிபர்.

அதிபர் குறித்தே எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மக்களும் பேசிக்கொண்டேயிருப்பதை, எப்படியாவது திசைதிருப்பவேண்டும். அப்படிச்செய்வதை யாரும் கண்டுபிடித்துவிடவும் கூடாது என்பதில் கவனமாகத் திட்டமிடுகிறார் பிரேன்.

“செயற்கையாக ஒரு போர்ப்பதற்றத்தை உருவாக்கினால், பயத்தில் அமெரிக்க மக்கள் உண்மையான பிரச்சனையை மறந்துவிடுவார்கள். இது போன்று திசை திருப்புவது நமக்கு ஒன்றும் புதிதில்லை. ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, லெபனானில் நம்முடைய இராணுவ படையினர் தங்கியிருந்த வீடுகள் தாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க மக்களிடைய செல்வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, அடுத்த இரண்டே நாளில் கிரானடா என்கிற நாட்டுடன் அமெரிக்கா தேவையேயில்லாமல் போருக்கு சென்றது. ஊடகங்கள் அனைத்தும் அந்த செய்திக்கு தாவியது. அதேபோலத்தான் இதுவும்”
என்கிறார் பிரேன்.
“தேவையே இல்லாமல் எதற்கு இப்போது ஒரு போர்? போரெல்லாம் நமக்கு இப்போது கட்டுப்படியாகாது”
என்கிறார் அதிபரின் உதவியாளர்.
“போருக்கெல்லாம் நாம் போகப்போவதில்லை. போர் வருவதைப்போன்ற தோற்றத்தைத்தான் உருவாக்கப்போகிறோம்”
என்கிறார் பிரேன்.
பிரேனும் அதிபரின் உதவியாளரான அமெசும் லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்று, ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஸ்டான்லி மோட்ஸை சந்திக்கின்றனர்.
அல்பேனியா என்கிற நாட்டில் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்வதாகவும் அவர்கள் மீது போர்தொடுத்து அமெரிக்காதான் அம்மக்களை காப்பாற்றவேண்டும் என்று அமெரிக்க மக்களை நம்பவைக்கும்படி ஒரு வீடியோ தயாரித்துத் தரச்சொல்கிறார் பிரேன்.
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “ஏன் குறிப்பாக அல்பேனியா?”
பிரேன்: “ஏன் அல்பேனியாவாக இருக்கக்கூடாது?”
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “ஒரு நாட்டின் மீது குற்றம் சொல்கிறோமென்றால் ஏதாவது காரணம் இருக்கனுமில்லையா? கேள்வி கேட்கமாட்டார்களா?”
பிரேன்: “பொதுமக்கள்.”
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “பொதுமக்களா? அவங்களுக்கு தெரியவாப் போகுது? நம்முடைய முன்னாள் அதிபர் ஜான்.எஃப்.கென்னடியை யார் கொன்றார்கள்? யாரோ குடிகார ஓட்டுனரால் கொல்லப்பட்டார்னு அடுத்தநாளே சொல்லப்பட்டது. இறுதியில் என்னாச்சு? யாரோ ஒருத்தரை கைதுசெய்தார்கள். அவனையே இன்னொருத்தன் கொலை செய்திட்டான். கடைசிவரையும் கென்னடியைக் கொன்றவன் யாருன்னே நமக்கு தெரியாது.”
அல்பேனியா தயாரிப்பாளர் மோட்சை சம்மதிக்கவைக்கிறார். தயாரிப்பாளர் உடனே திரைக்கதை குறித்து பல யோசனைகள் தெரிவிக்கிறார். அல்பேனிய தீவிரவாதிகள் கனடா வழியாக சூட்கேஸ் வெடிகுண்டுகளை அமெரிக்காவிற்கு கொண்டுவந்து வெடிக்கவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கற்பனையை விரித்துத் திரைக்கதையமைக்கிறார். அல்பேனிய தோற்றம் கொண்ட ஒரு துணைநடிகையை அழைத்துவந்து ப்ளூ மேட்டின் முன்னே கையில் எதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு ஓடிவரும்படி சொல்கிறார் தயாரிப்பாளர். அக்காட்சியினை படம்பிடித்து, அப்பெண் தன்னுடைய கையில் ஒரு பூனையை எடுத்துக்கொண்டு ஓடிவருவதாக கிராபிக்சில் மாற்றியமைக்கின்றனர். அப்பெண்ணின் பின்னனியில், அல்பேனியாவின் குடிசை இருப்பது போலவும், அது எரிந்துகொண்டிருப்பது போலவும், தீவிரவாதிகள் குண்டுவீசியதாலேயே அவள் தப்பித்து ஓடுவதாகவும், பின்னனியில் குண்டுவெடுப்பு சத்தம் மற்றும் அப்பெண்ணின் அழுகுரல் என எல்லாமுமாக இணைத்து, ஒரு வீடியோவை தயாரித்துமுடிக்கின்றனர்.

அல்பேனிய தீவிரவாதம் குறித்து போலியாகத் தயாரிக்கப்பட்ட வீடியோவினை அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் கிடைக்கும்படி செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து அதிபரின் பாலியல் குற்றத்தைலிருந்து தாவி, ஒட்டுமொத்த ஊடகங்களும் அல்பேனியத் தீவிரவாதம் குறித்தே பேச ஆரம்பித்தன. அல்பேனியர்களின் பேட்டிகள், விவாத நிகழ்ச்சிகள், அதிபரின் அனுதாபப் பேச்சு என்று அல்பேனியா தான் முக்கிய பேசுபொருளாக ஆனது. எல்லாம் திட்டமிட்டபடி செல்வதாக நினைத்துக்கொண்டிருந்த பிரேனுக்கு, சிஐஏ மூலமாக பிரச்சனை வந்தது. அல்பேனியாவில் போரே இல்லை என்று சிஐஏ வுக்கு தெரியாமலா இருக்கும். அவர்கள் பிரேனை மடக்கி இதுகுறித்து கேட்கின்றனர்.
“போரே இல்லையென்றால் என்ன? 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் வியட்னாமிலும் மத்தியகிழக்கிலும் போரை நடத்தவில்லையா? அது உங்கள் வேலை, இது என்னுடைய வேலை”
என்கிறார் பிரேன். சிஐஏவோ, லாபியிஸ்டுகளோ, பிரச்சார ஏஜென்டுகளோ எல்லோரும் ஒரே நோக்கத்திற்காகத்தானே வேலை செய்கிறார்கள். அதனால் இதனை பெரிய பிரச்சனையாக்காமல் பிரேனை விட்டுவிடுகிறது சிஐஏ. இதுவரை செய்த பிரச்சாரம் குறித்தெல்லாம் விசாரணை நடத்தப்படமாட்டாது என்றாலும், அல்பேனியப் போர் குறித்த் பிரச்சாரத்தை இத்தோடுமுடித்துவிட சிஐஏ தீர்மானித்தது. அதனால், அல்பேனியப் போரை சிஐஏ தலையிட்டு முடித்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது.
அல்பேனியத் தீவிரவாதம், போர் குறித்து விவாதிப்பதை ஊடகங்கள் நிறுத்திக்கொண்டன. மீண்டும் அதிபரின் பாலியல் குற்றத்தைக் கையிலெடுத்தன. அதிபர் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அதிபரின் செல்வாக்கை மீட்டெடுப்பது எப்படி என்று குழம்பிக்கொண்டிருந்தார் பிரேன். ஹாலிவுட் தயாரிப்பாளர் மொட்சுக்கோ இது கௌரவப் பிரச்சனையாக மாறியது.
“நான் உருவாக்கிய போரை முடித்துவைக்க சிஐஏ வுக்கு என்ன அதிகாரம் இருக்கு? நான் தான் இந்த போரின் தயாரிப்பாளர். அதனால் இதனை இப்படியே முடியவிடமாட்டேன். முதலில் போரை உருவாக்கினோம். இப்போது அதற்கான நாயகனை உருவாக்குவோம். நாயகன் இல்லாத போரா?”
என்கிறார் தயாரிப்பாளர் மோட்ஸ்.
அல்பேனியத் தீவிரவாதிகள் கனடா வழியாக சூட்கேஸ் பாமை அமெரிக்காவிற்குள் கொண்டுவந்து வெடிக்கவிருப்பதாக முன்னர் கதை உருவாக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க படையினர் சில கனடா சென்று தீவிரவாதிகளுடன் சண்டையிட்டதாகவும், அவர்களில் ஒரு அமெரிக்க வீரரை தீவிரவாதிகள் பிடித்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட நாயகனை மக்கள் மறந்துவிட்டார்களே என்று சொல்லி மக்களின் உணர்வைத் தூண்டினால், எல்லாம் மாறும் என்று கருதினார் மோட்ஸ்.
“பழைய ஷூவை தூக்கி எறிவதைப்போல தேசத்தை ஹீரோவை மக்கள் மறந்துவிட்டார்களே”
என்று ஒரு பாடலையும் இசையமைத்து குறுந்தகடாகவும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுகின்றனன். அது மிகப்பெரியளவிற்கு மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது. பாடலில் இடம்பெறும் “ஷூ” என்கிற வார்த்தை முக்கியமான இடத்தை மக்கள் மனதில் பிடிக்கிறது. அதனால் ஷூ என்று தொடங்கும் பெயரையுடைய பழைய இராணுவ வீரர் யாராவது கிடைப்பார்களா என்று பென்டகனிடம் விசாரிக்கிறார் பிரேன். “வில்லியம் ஷூமன்” என்கிற பெயரைத் தருகின்றது பென்டகன். பலத்த காயங்களோடு இருக்கும் ஷூமனின் புகைப்படமும் ஊடகங்களுக்கு தரப்படுகிறது. நாடே ஷூமனை ஹீராவாக ஏற்றுக்கொள்ளத்துவங்கிவிட்டது. எங்கு திரும்பினாலும், “ஷூமன்” “ஷூமன்” என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

“ஷூமன்” என்கிற வார்த்தைக்கு காப்புரிமை எல்லாம் வாங்கி, பெரும்தொகைக்கு பல பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஷூமனுக்கு ஆதரவாகவும் அல்பேனியாவுக்கு எதிராகவும் வாசகங்களுடன் டீ-சர்ட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்குவந்துவிட்டன. பழைய ஷூக்களை பொது இடங்களில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொங்கவிடும் பழக்கத்தையும் துவங்கிவிட்டனர். எந்த மரத்தைப்பார்த்தாலும் ஒன்றிரண்டு ஷூக்களாவது தொங்கிக்கொண்டிருந்தன. தங்களது தேசப்பற்றை பல்வேறு விதங்களில் அமெரிக்க மக்கள் வெளிக்காட்டத்துவங்கினர்.

ஷூமனை மீட்டுவரவேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை எழ ஆரம்பித்துவிட்டது. பென்டகனுடன் பேசி, ஷூமனை தயார் செய்து ஒரு மறைமுகமான இடத்திற்கு அழைத்துவரச் சொல்கிறார் பிரேன். அங்கிருந்து தனிவிமானத்தில் ஷூமனை வாஷிங்க்டனுக்கு கொண்டுவந்து மக்கள் மத்தியில் நிறுத்தினால், அது பெரியளவில் வரவேற்பைப் பெறும் என்பது பிரேனின் கணிப்பு. அதன்படி, பென்டகனிடமிருந்து ஷூமனைப் பெறுகிறார்கள் பிரேமனும், மோட்சும், அமெசும். ஆனால், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஷூமன் என்பவர் ஒரு முன்னாள் இராணுவவீரரெல்லாம் இல்லை. ஒரு கிருத்துவ கன்னியாஸ்திரியை பாலியல் வன்புணர்வு செய்ததால் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் ஒரு சிறைக்கைதிதான் ஷூமன். ஒரு குற்றவாளியை தேசிய நாயகனாக்கிவிட்டோம் என்பது அப்போதுதான் பிரேனுக்கு தெரிந்தது. இருப்பினும் வாஷிங்க்டன் நோக்கி தனிவிமானம் புறப்பட்டது.

விமானம் வரும்வழியில் விபத்துக்குள்ளாகி ஒரு தொலைதூர கிராமத்தில் விழகிறது. ஷூமன் உள்ளிட்ட அனைவரும் உயிர்பிழைக்கின்றனர். தப்பித்து வரும்வழியில் அக்கிராமத்தின் ஒரு விவசாயியின் மகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறான் ஷூமன். அதனைத் தடுக்க அப்பெண்ணின் தந்தை, ஷூமனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார். ஷூமனை இழந்துவிட்டோமே, இனி என்ன செய்வது என்று பிரேனும் அமெசும் கவலைகொள்கின்றனர். ஆனால், ஹாலிவுட் தயாரிப்பாளர் மோட்சோ தன்னுடைய திரைக்கதையை கொஞ்சம் மாற்றம் செய்கிறார். அல்பேனிய தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் ஷூமன் இறந்துவிட்டதாகச் சொன்னால், மக்களின் தேசபக்தி உச்சிக்குப்போகும் என்கிறார். வெற்றியுடன் திரும்பிவரும் வரும் போர்வீரனைவிட, உயிர்த்தியாகத்தை செய்பவனைத்தான் மக்கள் அதிகமாகக் கொண்டாடுவார்கள்.

ஷூமனின் உடல் வாஷிங்க்டன் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அரச மரியாதை கொடுக்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகளில் அதிபருக்கு ஆதரவான நிலை ஏற்படுகிறது. 89% சதவிகித மக்கள் தற்போதைய அதிபருக்கே வாக்களிப்போம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கின்றனர். “அதிபரின் செல்வாக்கு உயர்ந்ததற்கு எது காரணம்?” என்று தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு விவாதத்தில், பல அரசியல் வல்லுனர்களும், “தொலைக்காட்சிகளில் வந்த அதிபரின் விளம்பரங்கள்தான் அவரின் செல்வாக்கு உயர்ந்ததற்குக் காரணம்” என்கின்றனர். தொலைக்காட்சி விவாதத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மோட்சுக்கு கடுமையாகக் கோபம் வருகிறது.

“நான் எவ்வளவு முயற்சி செய்து இவ்வளவையும் செய்து அதிபரின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறேன். ஆனால் ஒன்றுக்கும் உதவாத ‘பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை பாதியிலேயே மாற்றாதீர்கள்’ என்ற விளம்பரத்திற்கு அந்த பெருமையெல்லாம் போகிறதே. இதை நான்விடமாட்டேன்.”
என்கிறார் மோட்ஸ்.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான அதற்கு நேயர்களும் தொலைபேசியில் அழைக்கலாம் என்று சொல்லி ஒரு எண்ணை தெரிவிக்கிறார்கள் தொலைக்காட்சியில். அந்த எண்ணுக்கு அழைத்து, தன்னுடைய உழைப்பினால்தான் அதிபருக்கு மக்களின் செல்வாக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்போவதாகச் சொல்கிறார் மோட்ஸ்.
“ஒட்டுமொத்த மக்களும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை நான்தான் உருவாக்கினேன் என்பதில் எனக்கு பெருமை இருக்காதா? அதற்கு நான் உரிமை கோரக்கூடாதா?”
என்று கேட்கிறார் மோட்ஸ்.
ஆனால் அப்படிச் செய்ய மோட்சுக்கு உரிமையில்லை என்றும், இந்த ஒட்டுமொத்த திட்டமும் காலங்காலமாக மறைமுகமாகவே வைக்கப்படவேண்டும் என்கிறார். இதனை மீறி எதையாவது செய்யமுற்பட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மோட்சை எச்சரிக்கிறார்.
பிரேன் சொல்வதைக் கேட்காமல், ஷூமனின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைநோக்கி வேகமாக நடக்கிறார் மோட்ஸ். அவரை பாதியிலேயே மடக்கி ஒரு காரில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர் காவல்துறையினர்.
தேசியநாயகனாக மாற்றப்பட்ட ஷூமனின் இறுதி ஊர்வலம், அமெரிக்க மக்களின் கண்ணீரோடு நடக்கிறது.
மறுநாள் தொலைக்காட்சிகளில் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றன:
ஒன்று: “பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஸ்டான்லி மோட்ஸ், கடற்கரையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 62.”
இரண்டு: “ஷூமனின் கொலைக்கும் அல்பேனியாவில் நடக்கும் தீவிரவாதச் செயலுக்கும் அல்பேனியாவிலிருந்து இயங்கும் ‘அல்பேனிய ஒற்றுமை’ என்கிற தீவிரவாத அமைப்பு பொருப்பேற்றிருக்கிறது. அமெரிக்காவின் படைகள் விரைவில் அல்பேனியாவுக்கு செல்லும் என்று அமெரிக்காவின் அயல்துறை செயலாளர் அறிவித்திருக்கிறார்”
“Wag the dog” என்கிற இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த ஒரே மாதத்தில் அதிபர் பில் கிளிண்டன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வெளியானது. அதனை திசைதிருப்பும்விதமாகத்தான் சூடானின் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை குண்டு வைத்து தகர்த்தது அமெரிக்கா. பொய்ப்பிரச்சாரங்களால் தான் அமெரிக்காவின் அரசியலே ஓடிக்கொண்டிருக்கிறத என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்தமுறை  அமெரிக்க அரசோ, சிஐஏவோ, பென்டகனோ, அமெரிக்க ஊடகங்களோ தீவிரவாதம் குறித்து எதைச்சொன்னாலும் உலகின் குடிமக்களாகிய நாம் கவனமாக இருக்கவேண்டும்.

-இ.பா.சிந்தன்

வீதிகளில் திரண்ட தீப்பொறிகள் – அழகன் ஆறுமுகம்

குஜராத் மாநிலத்தில், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்களை இரும்பு பைப், இரும்புக் கம்பிகள் கொண்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார்கள் சாதிவெறியர்கள். அதைக்கண்டு அங்கு, ஒட்டுமொத்த தலித் சமூகமும் வீதிக்கு வந்து கொந்தளித்தது.

மும்பையில் மிகமுக்கிய வரலாற்றுச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் பவன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்ட அக்கிரமம் அரங்கேறியது. அதைக்கண்டித்து நடைபெற்ற பேரணியில் லட்சம் பேர் ஆவேசத்துடன் திரண்டார்கள்.

பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் வீதிகளில் திரண்டு தங்களின் கோபாவேசத்தை வெளிப்படுத்தியதைக் கண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அச்சத்தில் ஆடிப்போயிருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் உனா என்ற இடத்தில்தான், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக, கடந்த ஜூலை 11-ம் தேதி தலித் இளைஞர்கள் நான்கு பேரை பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பொது இடத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய கொடூரத்தை பசு பாதுகாப்பு கமிட்டி என்ற போர்வையில் சாதிவெறியர்கள் அரங்கேற்றினார்கள். தலித் இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி கார் ஒன்றில் கட்டி வைத்துத் தாக்கியதுடன், அதை செல்போனில் படம் பிடித்து, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் கதி என்று எச்சரிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாகப் பரவிய அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டுத்தான் தலித் மக்கள் வெகுண்டு எழுந்தனர். உடனடியாக, தலித் அமைப்புகள் பந்த் போராட்டத்தை அறிவித்தன. அந்தப் பகுதி முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தலித் மக்கள் வீதிகளில் இறங்கி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. கூட்டத்தினரை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். சௌராஷ்டிரா பிராந்தியமே போர்க்கலம் போல காட்சியளித்தது.

பாதிக்கப்பட்ட இளைஞர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாகச் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் வாயைத் திறக்கவில்லை என்று பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தனர். இந்த குஜராத் கொடூரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொடூரமாகக் கொன்றுகுவித்த மோடி அரசு, தன் கோரப்பற்களின் மீதான ரத்தக்கரையைக் ‘குஜராத் மாடல்’ என்ற ஜிகினாவின் மூலம் மறைக்க முயன்றது. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று கார்ப்பரேட் ஊடகங்களால் மோடி முன்னிறுத்தப்பட்டார். மோடியின் ஆட்சியில் குஜராத்தின் முன்னேற்றத்தைப் பாருங்கள் என சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவர்கள் சொன்னது எந்தளவுக்கு ஹம்பக் என்பது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் தலித் மக்கள் எந்தளவுக்கு இழிநிலையில் வாழ்கிறார்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.

குஜராத்தில் தலித் மக்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், நவ்சர்ஜன் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், குஜராத்தில் தலித் உரிமைகளுக்காக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருபவருமான மார்டின் மக்வான்.

“இப்போது நடந்திருப்பது முதல் சம்பவம் அல்ல. குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், தீண்டாமைக் கொடுமைகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை. தங்கத் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 தலித்துகள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. தலித் மக்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது வெறும் 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு அது தற்போது 28-29 சதவிகிதம் என்ற அளவுக்கு வந்திருக்கிறது. 1569 கிராமங்களில் கள ஆய்வு நடத்தினோம். கோவிலுக்குள் நுழையத்தடை, மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை உட்பட 98 வகையான தீண்டாமை அங்கு நிலவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் 90 சதவிகித கோவில்களில் தலித் மக்கள் நுழைய அனுமதி கிடையாது. எல்லா இடங்களிலும் தலித்களுக்குத் தனிச்சுடுகாடுதான். 54 சதவிகிதப் பள்ளிகளில் தலித் குழந்தைகள் தனியாகவே அமரவைக்கப்படுகிறார்கள். 2010-ம் ஆண்டு, அகமதாபாத்தில் தலித் குழந்தைகள் 1500 பேர் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதுகுறித்து, ஓய்வுபெற்ற குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பொதுவிசாரணையில் தெரிவித்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் நிலவும் சாதிப்பாகுபாடுகளால் தலித் குழந்தைகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அரசுத் துறைகளில் தலித் மக்களுக்கான 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பபடாமலே உள்ளன. கல்வியும்,


cow
வேலைவாய்ப்பும் இல்லாததால் துப்புரவுப்பணி, இறந்த மனிதர்களின் மற்றும் விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துதல் போன்ற சாதி அடிப்படையான தொழில்களையே தலித் மக்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்தும் செத்த மாடுகளின் தோலை உரித்து உயிர்பிழைக்கும் நிலைதான் இருக்கிறது” என்று கவலையோடு சொல்கிறார் மார்டின் மக்வான். இதனால்தான், இவ்வளவு காலம் ஒடுக்கப்பட்டு வந்த தலித் சமூகம் ஒட்டுமொத்தமாக வீதியில் திரண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

மும்பை நகரின் சமீபகால வரலாற்றில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டது இப்போதுதான். மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதைக் கண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெகுண்டெழுந்தனர். 1940-களில் மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கரால் நிலம் வாங்கிக் கட்டப்பட்டதுதான் அம்பேத்கர் பவன். அந்த இடத்தில் இருந்துதான் அம்பேத்கர் நிறைய எழுதினார். அங்குதான், பாரத் பூஷன் என்ற அச்சகம் இயங்கியது. இந்து மதத்தை விமர்சித்து அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை அச்சிட பிற அச்சங்கள் மறுத்தபோது, இங்குதான் அந்தப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட 2 பத்திரிகைகள் இங்கிருந்துதான் அச்சடிக்கப்பட்டு வெளியாகின. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கட்டடத்தை அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை ஒன்று நிர்வகித்து வந்தது. அங்குதான், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி அலுவலகமும் செயல்பட்டு வந்தது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா வெறியர்களால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயாரும் சகோதரும் அம்பேத்கர் பவனில்தான் கடந்த ஏப்ரலில் புத்த மதத்தைத் தழுவினர்.

protests-ambedkar-demonstration-demolition-ambedkar-supporters-bhavan_eb1fd72a-41c4-11e6-b0f4-7520104944f672 ஆண்டுகள் பழமையான, தலித் மற்றும் முற்போக்கு செயற்பாட்டாளர்களின் களமாக விளங்கிய அம்பேத்கர் பவன், கடந்த ஜூன் மாதம் ஒரு நள்ளிரவில், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த சுயநலக்காரர்கள் சிலரின் சதியால் தரைமட்டமாக்கப்பட்டது. மும்பை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு 17 மாடியில் வர்த்தக நோக்கத்துடன் ஆடம்பரமான கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டனர். சர்ச்சைக்குரிய அந்த முடிவுக்கு ஆளும் பா.ஜ.க அரசும் துணைபோனது.

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கான கண்டனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளும், தலித் இயக்கங்களும் ஒரே குரலில் வெளிப்படுத்தின. இதுதான், ஆளும் மாநில பா.ஜ.க அரசை மட்டுமின்றி, மத்திய மோடி அரசுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூலை 19-ம் தேதி அன்று, 5 கி.மீ. தொலைவுக்கு கடல் போல மக்கள் திரண்டனர். அந்தக் கண்டனப் பேரணியில் அண்ணல் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் கன்னையாகுமார் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சமாட்டோம், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஓயமாட்டோம் என்ற செய்தியை குஜராத், மகாராஷ்டிரா போராட்டங்கள் உரக்கச் சொல்லி இருக்கின்றன.