Sunday 28 February 2016

சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையின் சிக்கலான புள்ளி: அல் கொய்தாவிற்கான வாஷிங்டனின் ஆதரவு

செனட் வெளியுறவுத்துறை கமிட்டியின் முன்னால் செவ்வாயன்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி விளக்கமளிக்கையில், சிரியாவில் "விரோதங்களை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது" மீது, இவ்வாரயிறுதியில் நடைமுறைக்கு வர இருப்பதாக கூறப்படும் மாஸ்கோ உடன் எட்டப்பட்ட உடன்படிக்கையை அவர் நியாயப்படுத்திய அதேவேளையில், அவர் கடுமையான எதிர் கேள்விகளையும் முகங்கொடுத்தார்.

இந்த உடன்பாடு "எதிரி சிக்கி இருப்பதாக காட்டும் தந்திரம்" (rope-a-dope) என்பதை விட சற்று அதிகமானது என்று கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சி செனட்டர் பர்பாரா பாக்சர் தெரிவித்தார், அதேவேளையில் அக்கமிட்டியின் குடியரசு கட்சி தலைவரான டென்னஸ் செனட்டர் பாப் கார்கர் கூறுகையில், "நமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாக இருப்பவர்களை" ரஷ்யா "தொடர்ந்து கொல்லக்கூடும்,” என்று எச்சரித்தார்.

இந்த தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையால் வாஷிங்டனின் அடுத்தடுத்த நோக்கங்கள் தோல்வியடைந்தால், அங்கே "மாற்றுத் திட்டம் (Plan B) குறித்து", அதாவது சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டைப் பெரியளவில் தீவிரப்படுத்துவது மற்றும் ரஷ்யா உடன் ஒரு சாத்தியமான ஆயுதமேந்திய மோதல் குறித்து, முக்கிய விவாதம் இப்போது நடந்து வருவதாக" வலியுறுத்தி கெர்ரி விடையிறுத்தார்.

"நமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாக இருப்பவர்கள்" என்று செனட்டர் கார்கர் யாரைக் குறிப்பிட்டாரோ அவர்களது நிலை தான், துல்லியமாக, அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கையில் சிக்கலான முக்கிய புள்ளி. ஒபாமா நிர்வாகம், பெண்டகன், சிஐஏ, ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகம் இவற்றைப் போலவே, அவரும் மிகக் கவனமாக இத்தகைய "நபர்களை" எந்தவிதத்திலும் சரியாக அடையாளப்படுத்துவதைத் தவிர்த்திருந்தார்.

அவர்கள் அனைவரும் அவர்களால் ஆனமட்டும் சிறப்பாக மூடிமறைக்க முயற்சிக்கும் இந்த அருவருப்பான இரகசியம் என்னவென்றால், அண்மித்து கடந்த ஐந்தாண்டுகளாக சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை அது தொடங்கியதிலிருந்து அதில் வாஷிங்டனின் மிக முக்கிய "நண்பராக" “கூட்டாளியாக" இருந்திருப்பது அல் கொய்தா ஆகும். இந்த குற்றகரமான உறவு தான், முடிவற்ற பிரிவினைவாத போரை நிறுத்துவதற்கான எந்தவித பேரம்பேசலை தரகு செய்வதிலும் சிக்கல்களின் இதயதானத்தில் வருகிறது. வாஷிங்டனின் இந்த ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஒரு கால் மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், 11 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வீடற்ற அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

சனியன்று தொடங்க இருப்பதாக கூறப்படும் விரோதங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதென்ற உடன்பாடு, அல் கொய்தாவிலிருந்து உடைந்து வந்த ISIS (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமியவாத அரசு) மற்றும் அல் கொய்தாவின் சிரியாவிற்காக நியமிக்கப்பட்ட துணை அமைப்பான அல்-நுஸ்ரா முன்னணி இரண்டையும் குறிப்பாக தவிர்த்துள்ளது. .நா. தலைமையில் பேரம்பேசும் நோக்கத்திற்காக சவூதி முடியாட்சியால் ஒன்றுதிரட்டப்பட்ட சிரியா "கிளர்ச்சியாளர்" முன்னணி (Syrian “rebel” front) என்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை கமிட்டி, அல்-நுஸ்ராவைப் பாதுகாக்க தவறுகிற எந்தவொரு போர்நிறுத்தத்தையும் நிராகரிக்கிறது.

வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட "மிதவாத" பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுபவர்களும் மற்றும் அல்-நுஸ்ராவும், "ஒன்றோடொன்று கலந்துள்ளதாக" அமெரிக்க உளவுத்துறை பகுப்பாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான போரில் பங்குபற்றிய "கூட்டணிக்கு" ஒபாமா நிர்வாகத்தின் தூதர் Brett McGurk வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் கூறுகையில், மிதவாதிகள் என்று கூறப்படுபவர்களும் மற்றும் அல் கொய்தா குழுவும் "ஒன்றுபோல இருப்பதாக" தெரிவித்தார்.

அத்தகைய சிக்கலான சூத்திரமயமாக்கலுக்குப் பின்னால், யதார்த்தம் என்னவென்றால், அல் கொய்தா மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்களும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்க்கும் மூர்க்கமான போரில், நீண்டகாலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளால் பயன்படுத்தப்பட்ட பிரதான பினாமி தரைப்படைகளாக உள்ளன. அவை ஒரு கூலிப்படை இராணுவமாக சேவையாற்றி இருப்பதுடன், அமெரிக்கா மற்றும் அதன் பிரதான பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி மற்றும் கடாரிடம் இருந்து இவற்றிற்கு பாரியளவில் நிதியுதவியும், மலையென ஆயுதங்களையும் வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டு போர் என்று பொதுவாக கூறப்படுவது, ஒரு மிகப் பெரிய சிஐஏ ஆட்சி-மாற்ற நடவடிக்கை அல்லாமல் வேறொன்றுமில்லை.

சிரியாவில் இந்த இரத்தந்தோய்ந்த தலையீடு, ஒட்டுமொத்தபயங்கரவாதத்திற்கு எதிரான போரையும்" ஒரு மோசடியாக அம்பலப்படுத்துகிறது, அண்மித்து 15 ஆண்டுகளாக, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினாலும் அது வெளிநாட்டில் போர் நடத்துவதற்கு அச்சாணியாகவும் மற்றும் உள்நாட்டில் அரசு ஒடுக்குமுறையைக் கட்டமைப்பதற்கும் சேவையாற்றி உள்ளது. பொதுவாக கூறுவதானால் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், குறிப்பிட்டு கூறுவதானால் அல் கொய்தாவிற்கு எதிராகவும் அமெரிக்கா ஏதோவிதத்தில் உயிர் பிழைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக அது மத்தியக் கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில், அல் கொய்தா கொலைகாரர்களை அதன் அருவருக்கத்தக்க வேலைக்காக பயன்படுத்தி வருகிறது.

ISIS க்கு எதிரான நடவடிக்கை, போராட்டமென்று கூறப்படும் இதன் சமீபத்திய அவதாரம், ஐந்து மாதங்களுக்கும் குறைந்த இடைவெளியில், ஒரு போலித்தனமான போராக அம்பலப்பட்டுள்ளது. பெண்டகன் நிறுத்தி வைத்திருப்பதை விட எவ்வளவோ குறைந்த இராணுவ தளவாடங்களுடன் ரஷ்யாவின் தலையீடு, சிரியாவில் போர் அலையைத் தலைகீழாக திருப்பியுள்ளது. ISIS ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தும் வழிகளைத் தடுத்து, துருக்கி உடனான அதன் எண்ணெய் வியாபார ஆதாயங்களை அழித்துள்ளது. வாஷிங்டனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் செய்ய முடியவில்லை ஏனென்றால் அசாத்தைத் தூக்கியெறியும் போரில் அமெரிக்க கொள்கையின் ஒரு கருவியாக ISIS சேவையாற்றியதுடன், அவ்விதத்தில் நடைமுறையளவில் அதை பாதுகாத்தது.

புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு விரிவான அறிக்கை ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளது கருத்துக்களை மேற்கோளிட்டது, அவர்கள் சிரியாவில் ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் போக்கில் பெண்டகன், சிஐஏ மற்றும் வெளியுறவுத்துறைக்கு இடையே அதிகரித்துவரும் "கருத்து வேறுபாடுகளைச்" சுட்டிக்காட்டி இருந்தனர். ஜேர்னல் குறிப்பிட்டது, சிஐஏ "சீற்றமுற்று" இருக்கிறது ஏனென்றால் டாங்கி-எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட இராணுவ தளவாடங்களைக் கொண்டு அது ஆதரித்திருந்த "ஒப்பீட்டளவில் மிதவாத கிளர்ச்சியாளர்களை [அதாவது அல்-நுஸ்ரா முன்னணி மற்றும் அதன் கூட்டாளிகளை]” ரஷ்ய விமானத் தாக்குதல்கள் ஆக்ரோஷமாக "இலக்கில் வைத்துள்ளது.”

ரஷ்ய போர் விமானங்களைச் சுட்டுவீழ்த்தக் கூடிய அதிநவீன இடம்பெயர்த்தவல்ல விமான-எதிர்ப்பு ஆயுதங்களான Manpad களை அதே "கிளர்ச்சியாளர்களுக்கு" வழங்கலாமா என்பதன் மீது, அங்கே அமெரிக்க அரசு எந்திரங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக அக்கட்டுரை குறிப்பிடுகிறது. இது அமெரிக்காவை ரஷ்யாவிற்கு எதிராக சண்டைக்கு இழுத்து ஒரு பரந்த போரைத் தூண்டிவிடக் கூடிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சவூதி அரேபியா அல்லது துருக்கி "வாஷிங்டனின் அணியிலிருந்து விலக முடிவெடுத்து, ரஷ்ய குண்டுவீசிகளைத் தகர்க்க பெரும் எண்ணிக்கையிலான Manpad களை வடக்கு சிரியாவிற்குள் அனுப்பக்கூடும்" என்று சிஐஏ எச்சரித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாஷிங்டனால் பின்பற்றப்பட்ட நம்ப முடியாதளவிலான பொறுப்பற்ற கொள்கை, அணுஆயுத பிரயோகத்தில் போய் முடியக்கூடிய ஒரு மோதலைக் கட்டவிழ்த்து விடக்கூடும்.

அல் கொய்தா மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்கள், ஏகாதிபத்திய தலையீடு மற்றும் எதிர்புரட்சியின் ஒரு கருவியாக வாஷிங்டனால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விதமான பிரங்கன்ஸ்ரைன் அசுரனை ஒத்திருக்கின்றன. நன்கு அறியப்பட்ட வகையில், அல் கொய்தாவே கூட, 1980 களில் சோவியத் ஆதரவிலான ஆப்கானிஸ்தானிய அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட போரின் போது, சவூதி மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சேர்ந்து சிஐஏ இன் ஒரு உருவாக்கமாக பிறந்ததாகும். அப்போது அது, சிரியாவில் செய்ததைப் போலவே, பணம், ஆயுதங்களை அனுப்புவதற்கான ஒரு முகமையாகவும் மற்றும் வாஷிங்டனின் பினாமி போர்களை நடத்த வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகள் குழுக்களாகவும் சேவையாற்றியது.

பிற்போக்குத்தனமான ஜிஹாதிஸ்ட் போக்குகளை வாஷிங்டன் ஊக்குவிப்பதென்பது, இன்னும் முன்னதாக, 1950 கள் வரையில் கூட செல்கிறதுஅப்போது அமெரிக்கா மத்தியக் கிழக்கில் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக இருந்த அரபு தேசியவாதம் மற்றும் சோசலிசத்தின் செல்வாக்கு இரண்டையும் எதிர்கொள்ளவதற்கான ஒரு வழிவகையாக இத்தகைய சக்திகளைப் பயன்படுத்த முனைந்திருந்தது.

அப்போதிருந்து, அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கும், அல் கொய்தா மற்றும் அதுபோன்ற ஜிஹாதிஸ்ட் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக உள்ளன. இதுதான், 9/11 இல் தொடங்கி பாஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி குண்டுவெடிப்பு மற்றும் அதற்கு அங்காலும், தோற்றப்பட்டாளவில் ஒவ்வொரு பயங்கரவாத சம்பவத்திலும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அமெரிக்க முகமைகள் ஏன் நன்கறிந்திருந்தன என்பதையும் மற்றும் அவர்கள் கேள்வியின்றி அந்நாட்டிலிருந்து சுதந்திரமாக உள்ளேயும் வெளியேயும் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் விளக்குகிறது.

இன்றோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்பினும் அதிகமாக இத்தகைய சக்திகள் மீது முதலீடு செய்துள்ளது, அதுவும் மத்தியக் கிழக்கில் மட்டுமல்ல, அங்கே லிபியாவில் மௌம்மர் கடாபி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க மற்றும் சிரியாவில் அசாத்தை அதேபோல செய்யும் முயற்சியில் அவை பயன்படுத்தப்பட்டன.

சிரியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டு போராளிகளில், மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்று ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிரதேசத்திலிருந்த செச்சென்கள் மற்றும் ஏனைய இஸ்லாமியவாதிகளைக் கொண்டதாகும். சீனாவின் மேற்கு பகுதி ஜின்ஜியாங் பிரதேசத்தில் உள்ள அதன் உகுர் (Uighur) முஸ்லீம் சிறுபான்மையினரில் கணிசமானவர்கள் அங்கே ISIS இல் சேர சென்றுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவை மண்டியிடச் செய்து உருக்குலைக்கும் நோக்கில், மிக மிக அபாயகரமான ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் அவர்களைப் பயன்படுத்துவதற்கான தயாரிப்பிற்காக சிரியா இரத்தக்களரியில் இந்த சக்திகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

அத்தகைய அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கி, நிதியுதவி வழங்கி ஒழுங்கமைத்த அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரம் அவற்றிற்கு ஆதரவளிப்பதற்கான பல சூளுரைகளைச் செய்துள்ளன, பகுப்பாய்வின் இறுதியில், ரஷ்யாவின் தலையீட்டால் வாஷிங்டன் மீது திணிக்கப்பட்டுள்ள தற்காலிக சிரியா சமாதான உடன்படிக்கையால் இப்போது அவை கேள்விக்கு உள்ளாகி உள்ளன. இது தான், உத்தியோகப்பூர்வ அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் அல் கொய்தா செல்வாக்கு மிக்க சிரியா கிளர்ச்சியாளர் முன்னணிகளுக்குள், கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை செர்ஜி லாவ்ரொவ் ஆல் எட்டப்பட்ட உடன்படிக்கை மீது வெடிப்பார்ந்த கோபத்தைக் கொண்டு வருகிறது.

இஸ்லாமிய அமைப்புகள், எதையொரு காட்டிக்கொடுப்பாக பார்க்கின்றனவோ அதற்காக, அவற்றின் ஏகாதிபத்திய புரவலர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை உட்பட அவற்றின் சொந்த "மாற்றுத் திட்டத்தை" (Plan B) திட்டமிடக்கூடிய ஒரு வெளிப்படையான அபாயமும் உள்ளது. இதுவும் பரிச்சயமான வடிவம் தான், ஒசாமா பின் லேடனைச் சுற்றி பரிணமித்ததில் இதை காணலாம், அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் துருப்புகள் திரும்ப பெறப்பட்டதும் உதறிவிடப்பட்டார். அதன் இறுதியான விளைவு, செப்டம்பர் 11, 2001 இல் அண்மித்து 3,000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவிலும் ஏனைய இடங்களிலும் வாஷிங்டன் நடத்திவரும் குற்றகரமான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகள், சிஐஏ ஆயுதம் வழங்கி ஆதரித்த "மிதவாத" பயங்கரவாதிகளால் முன்பினும் அதிக மரணகதியிலான பழிவாங்கும் நடவடிக்கை வளர்ந்து வருவதற்கான உடனடியாக அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது.

 Bill Van Auken
25 February 2016

Sunday 7 February 2016

ஆழ ஊடுருவும் அணியின் மறைக்கப்படும் இரகசியங்கள்!

இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதியிடம் மூன்று விடயங்கள் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார் வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர.

இவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதியமைச்சராக இருந்தவர். கடற்படையில் பணியாற்றிய இவர் சிவில் பாதுகாப்பு படையின் தளபதியாக இருந்தவர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையான இனவாதத்தைக் கக்கி பிரசாரம் செய்த இவர் தோல்வி அடைந்திருந்தார். இவர் எழுப்பிய முதலாவது கேள்வி பிரகீத் எக்னெலிகொட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகள் பற்றியது.

இரண்டாவது கேள்வி இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகள் மற்றும் போரின் போதான அவற்றின் நடவடிக்கைகள் பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரியுள்ள விபரங்கள் பற்றியது.

மூன்றாவது கேள்வி அரசியலமைப்பு மாற்றத்தில் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றியது.

இதில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சையிட ராட் அல் ஹூசைன் கோரியிருந்த இராணுவ நடவடிக்கை தொடர்பான விபரங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி அவ்வாறான எந்தத் தகவல்களும் வழங்கப்படாது என்று உறுதியளித்திருந்தார்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் மூன்றாவது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கிரித்தல முகாமில் உள்ள ஆவணங்களை நீதிமன்ற விசாரணைகளுக்கு ஒப்படைக்க மறுக்கும் இராணுவத்துக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ’கோரியுள்ள விபரங்களை ஒப்படைக்க மாட்டேன் என்று மறுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாக கூறமுடியாது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தகவல்களை வெளியிட மறுப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அவ்வாறு ஆவணங்கள், தகவல்களை  வெளியிட்டால் போர் தொடர்பாக இன்னும் வெளிவராத பல இரகசியங்கள் வெளிப்பட்டு விடும் என்பது தான் அந்தக் காரணம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரயிருந்த விபரங்களில் முக்கியமானது போரின் போது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் செயற்பாடுகள் குறித்த விடயம் தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் திருப்பங்களை ஏற்படுத்ஹதி படைத்தரப்பை வெற்றியை நோக்கிக் கொண்டு சென்றதில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி முக்கிய பங்கை வகித்திருந்தது.

LRRP அல்லது LRP என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த ஆழ ஊடுருவும் அணி மூன்றாம் கட்ட ஈழப் போரின் பிற்காலத்ஹதில் - 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. முதலில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாகாணத்தில் தொடங்கிய இதன் நடவடிக்கைகள் பின்னர் வவுனியாவுக்கு வடக்கே விரிவாக்கப்பட்டது. வான் புலிகள் படைப்பிரிவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கேர்ணல் சங்கர் புதுக்குடியிருப்புக்கு அருகே 2001 செப்டம்பர் 26ம் திகதி இந்தப் படைப்பிரிவின் தாக்குதலில் தான் கொல்லப்பட்டார்.

அதற்குப் பின்னர் தான் இந்தப் படைப்பிரிவு பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கின.

நான்காவது கட்ட ஈழப் போர்ஹ வெடிப்பதற்கு முன்னரே இரண்டு தரப்பும் நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தன. அப்போது வன்னியில் புலிகளின் பிரதேசத்திற்குள் முழங்காவிலையும் தாண்டடிச் சென்று தாக்குதல் நடத்தும் அளவுக்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் வலுவுடன் இருந்தன.

புலிகளின் பல முக்கிய தளபதிகள் இந்த அணியில் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அவர்களில் கடற்புலிகளின் தளபதி லெப்.கேர்ணல் கங்கை அமரன், வட போர்முனைத் தளபதிகளில் ஒருவராக இருந்த லெப்.கேர்ணல் மகேந்தி, இராணுவ புலனாய்வுத்துறை தளபதி கேர்ணல் சார்ள்ஸ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இந்த அணியின் தாக்குதல்களில் இருந்து தப்பியவர்களில் பிரிகேடியர்கள் தமிழ்ச் செல்வன், சொர்ணம், பால்ராஜ், ஜெயம் போன்றவர்களும் அடங்கியிருந்தனர்.

நான்காவது கட்ட ஈழுப்போரில் ஆழ ஊடுருவும் படையணி புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி தகவல்களையும் சேகரித்தது. அதேவேளை தாக்குதல்களையும் நடத்தியது. இதனால் முன்னரங்கப் பாதுகாப்பில் புலிகளால் முழுக் கவனத்தையும் செலுத்த முடியாமல் உள்ளகப் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தவும் அதற்காக கூடுதல் வளங்களை ஒதுக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது புலிகளுக்குத் தலைமை மற்றும் தளபதிகளின் பாதுகாப்பின் மீது அதீத அக்கறை செலுத்த வேண்டி இருந்தது. அதைவிட தமது பிரதேசத்திற்குள் போருக்கான தயார்படுத்தல்களை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலையும் புலிகளுக்கு ஏற்பட்டது.
பின்தளம் மற்றும் கட்டளைத் தலைமை பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி புலிகளின் கவனத்தை முன்னரங்கின் மீது ஒன்று குவிய விடாமல் செய்ததில் ஆழ ஊடுருவும் அணியின் பங்கு அபரிமிதமானது.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் தளபதிகள் பிரமுகர்கள் மட்டும் சிக்கினர் என்று கூற முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் போன்றவர்களும், பாடசாலை மாணவர்களும் கூட இத்தகைய கிளைமோர் தாக்குதல்களில் சிக்கியிருந்தனர்.

அதற்கு ஆழ ஊடுருவும் அணி மீது புலிகள் குங்ஙம் சாட்டியிருந்தனர். எனினும் இராணுவத்தரப்பு அப்போது அதனை நிராகரித்திருந்தது.

போர் நடந்து கொண்டிருந்து போது மட்டுமன்றி போர் முடிந்த பின்னரும் கூட ஆழ ஊடுருவும் அணி என ஒன்று இலங்கை இராணுவத்தில் கிடையவே கிடையாது என்று இராணுவத் தரப்பு கூறி வந்தது.

அதற்கு முக்கியமான காரணம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடந்த தாக்குதல்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது தான். எனினும் 2012 முதன்முறையாக ஆழ ஊடுருவும் அணியின் கட்டளை அதிகாரியாக இருந்து கேர்ணல் லலித் ஜயசிங்கவுக்கு வீர விக்ரம விபூசண என்ற உயர் விருது வழங்கப்பட்ட போது இந்த இராணுவ அணியை அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டது.

லெப். கேர்ணல் லலித் ஜயசிங்கவும் கூட புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒட்டிசுட்டான் பகுதியில் ஊடுருவித் தாக்கிவிட்டுத் திரும்பிய போது தான் புலிகளின் தாக்குதலில் சிக்கிப் பலியாகியிருந்தார்.

எவ்வாறாயினும் இந்ஹத ஆழ ஊடுருவும் அணி பற்றிய பெருமளவு இரகசியங்களை இராணுவத் தரப்பு இன்னமும் மறைத்தே வைத்திருக்கிறது.

கடந்த வாரம் இந்த ஆழ ஊடுருவும் அணியை உருவாக்கியது பற்றிய சில தகவல்களை இராணுவத் தலைமையகம் வெளியிட்டிருக்கிறது.

மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க பற்றி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட செய்தியில் தான் இந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த மாதத் தொடக்கத்தில் இடம்பெற்ற இராணுவக் கட்டளை அமைப்பு மாற்றத்தின் போது யாழ். படைகளின் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கடந்த மாதம் 28ம் திகதியே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவுக்கும் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உள்ளது.

மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆரம்பத்தில் பொறியியல் படைப்பிரிவில் தான் இணைந்திருந்தார். எனினும் 1989ம் ஆண்டு இவர் தானாகவே முன்வந்து விசேட படைப்பிரிவில் இணைந்து கொண்டார்.

விசேட படைப்பிரிவின் முதலாவது பற்றாலியனில் ஒரு ஸ்குவாட்றன் தளபதியாக இருந்த இவர் பின்னர் ஆழ ஊடுருவும் அணியை உருவாக்கும் திட்டத்துடன் மூன்றாவது விசேட படைப்பிரிவு பற்றாலியன் உருவாக்கப்பட்ட போது அதன் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.

இந்த விபரங்களை இப்போது வெளியிட்டுள்ளது இராணுவத் தலைமையகம்.
அதாவது இராணுவத்தின் மூன்றாவது விசேட படைப்பிரிவு பற்றாலியன் ஆழ ஊடுருவும் படையணி கருத் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது என்பதை இராணுவத் தரப்பு இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் இந்த ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை ஐநா மனித உரிமை ஆணையாளரிடம் வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

அரசாங்கமும் இராணுவத் தரப்பும் கூறுவது போன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெளிப்படைத் தன்மையுடன் தான் நடத்தப்பட்டது. என்றால் சர்வதேசப் போர் நியமங்களுக்கு ஏற்ப மனித உரிமைகளை மதித்தே நடத்தப்பட்டது என்றால் எந்த இரகசியத்தையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கை இராணுவம் போரில் வெற்றியைப் பெற்று விட்டது. இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை. இப்படியான நிலையில் இரகசியங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் இராணுவத்தின் ஒரு கரந்தடிப்படைப் பரிவாக செயற்பட்ட படையணியின் இரகசியங்களை அரசாங்கம் மறைக்க முற்படுகிறது என்றால் அதன் அரத்தம் என்ன?

சுபத்ரா