Thursday 21 December 2017

ஈழத் தனிநாடு தமிழரின் உரிமை!

வடக்கு - கிழக்கு இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது இலங்கையின் இனவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.


ஜே.வி.பியை போன்ற நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார், இடதுசாரி கட்சி என்று காண்பிக்கும் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது.
வடக்கு - கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ராஜபக்சவும், சிங்கள பெளத்த பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்?
எந்த உரிமையும் இன்றி, வடக்கு - கிழக்கை தெற்குடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று வலிந்து நிற்பது தமக்குள் அடக்கி ஒடுக்கி ஆளும் பேரினவாதப் போக்கல்லவா?
ஒரு நாட்டில் புதிய கிராமங்கள் உருவாகுவது எவ்வளவு இயல்பானதோ, அதேபோல உலகில் புதிய நாடுகள் உருவாகுவதும் இயல்பானதே. அதிலும் கலானிய ஆதிக்கத்தில் கலைக்கப்பட்ட நாடுகள் பலவும் நவீன உலகில் மீட்சி பெற்றிருக்கின்றன.
அண்மைய காலத்தில் குர்திஸ்தான், கட்டலோனியா மாகாண மக்களின் தனிநாட்டு முடிவுகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒன்றாக இணைக்கப்பட்ட நாடுகள் பெரும்பாலும் அதிகாரத்தை உரிய வகையினில் பகிராமை காரணமாகவே பிரிந்து செல்லும் தீர்மானத்தை எடுக்கின்றன.
பாரபட்சம், அடக்கி ஒடுக்கும் போக்கு, இன அழித்தல் செயற்பாடு போன்றவையே பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட சூழலே இலங்கையின் நிலவரமும் ஆகும்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் முன்னர் தமிழர்கள் தமக்கான தனி இராட்சியங்களைக் கொண்டிருந்தனர். வடக்கு - கிழக்கு தமிழர்களின் பூர்வீக தயாகம். இன்று வடக்கு கிழக்கில் உள்ளடக்கப்படாத சில பகுதிகளும் தமிழ் இராட்சியமாகவே இருந்துள்ளன.
புத்தளம் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி. யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம்வரை விரிந்த இராட்சியமாக காணப்பட்டுள்ளது. புத்தளத்தில் இன்று அங்கு தமிழ் மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முன்னேஸ்வரம் என்ற சிவாலயம் தமிழர்களின் வரலாற்றுக்கு முக்கியமான சான்று. பிரித்தானியர்கள் இலங்கையில் காணப்பட்ட பல்வேறு அரசுகளை ஒன்றினைத்து சிலோன் என்ற நாட்டை உருவாக்கினர்.
இதன்போது வடக்கு கிழக்கில் தனித்துவமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தங்கள் ஆட்சி அதிகாரங்களை இழந்து சிறுபான்மை மக்களாகவும் உரிமையற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர்.
இதன் விளைவாகவே தமிழ் மக்கள் பிந்தைய காலத்தில் இன ஒடுக்குமுறைகளையும் இன அழிப்புச் செயல்களையும் சந்திக்க நேரிட்டது.
வடக்கு கிழக்கில் தமிம் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமையை மறுத்து, அவர்களின் தாயகத்தை அபகரித்து வரும் நிலையிலேயே தமிழர்கள் தம்மை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. அண்மைய காலத்தில் தமிழர்களின் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் தாயக வாழ்வையும் உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது.
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக காய்களை நகர்த்தவே வடக்கு கிழக்கில் வலிந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷ போன்ற இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து நின்று தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைப் புனிதப்படுத்திய பெரும்பான்மையின மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு இணைப்பை தாம் எதிர்க்கின்றனராம்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று அரச அமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகின்றார். தமிழ் மக்கள் தங்கள் தாயகத்திற்காக எவ்வளவு இரத்தத்தை சிந்திவிட்டனர்? இவரது கருத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதரர்களின் கருத்தல்ல.
எனினும் தமிழ் மக்கள் இந்து அரசை அமைக்கப் போராடவில்லை. தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்ககவுமே ஈழ மக்கள் போராடினர். இன்றும் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர் ஒருவரே முதலமைச்சராக இருக்கிறார்.
தமிழ் பேசும் மக்களிடையே விட்டுக்கொடுப்பும் பரஸ்பரமும் அவசியமானவை. இலங்கை இஸ்லாமியர்கள் தமிழ் தாய் வழி உருவான தமிழ்ச் சமூகமே. தமிழ் தேசம் என்பது அவர்களுடைய தாயகமும்தான்.
சிங்களப் பேரினவாதிகள் அனைவரையும்தான் ஒடுக்கி ஆள்கிறார்கள். இந்த சூழலில் அனைவரும் இணைந்தே அரசியல் உரிமையை வெல்ல வேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் சிங்களவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் சிங்கள மக்களிடம் காணப்படுகின்றதாம்.
கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த மண்ணின் பூர்வீக மக்களின் எதிர்பார்ப்பையும் அபிலாசையையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவது எந்த அவகையில் நியாயமானது?
இன்னொரு விடயம் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருக்க அஞ்சுகிறார்களாம். அப்படியெனில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக இருக்க எவ்வளவு அஞ்சவேண்டும்? மாபெரும் இனப்படுகொலைகள், இன ஒடுக்குமுறைகளை சந்தித்த ஈழத் தமிழ் மக்கள் எவ்வளவுக்கு அஞ்ச வேண்டும்?
அப்படிப் பார்த்தால் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழ் மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்கள் காரணமாக தமிழீழத் தனிநாடு கோரி முன்னெடுத்த போராட்டம் மிகவும் நியாயமானது என்பதை இத்தகைய கருத்துக்களை சொல்பவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா?
தவிரவும் வடக்கு - கிழக்கு இணைப்பை தென்னிலங்கை சிங்கள மக்களோ, சிங்கள இனவாதிகளோ, சிங்கள இனவாத அரசோ தீர்மானிக்க முடியாது. அது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் பூர்வீக மக்களால் தீர்மானிக்கப்படவேன்டும்.
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் வாழ வேன்டும் என்பதற்காகவே பல்வேறு தியாகங்கள் இந்த மண்னில் நிகழ்த்தப்பட்டது. பல லட்சம் மக்கள் தமது உயிரைக் கொடுத்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக ஒரு நாட்டுக்குள் தனித் தேசமாக தமிழ் மக்கள் வாழ்வதையும் உறுதிப்படுத்துவதும் வடக்கு கிழக்கிற்குள் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளுடன் வாழ்வதையும் சட்ட ஆவண ரீதியாக உறுதிப்படுத்துவதுமே இதற்கு உகந்த வழி.
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மெய்யான அக்கறையின்பால் எடுக்கப்படுவதில்லை. சில அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்கவே அரசியல் தீர்வு காண்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றன.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது இதனாலேயே. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.
இவ்வளவு கசப்பான நிகழ்வுகள் நடந்தேறிய பின்னரும் இப்பிரச்சினையை தீர்க்காமல் பெரும்பான்மையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சுக்களும், நிகழ்வுகளுமே இலங்கைத் தீவில் நடக்கின்றன.
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்தியவர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ஷ ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய சிறிலங்கா பாலி மொழி மற்றும் பெளத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்,
“தமிழ் மக்களுக்கென தனிநாடொன்று இல்லாததே சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்றும், இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டைக் கோரும்படியும்” கூறியுள்ளார்.
ஒரு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக செயற்படுபவரின் மனமும் போக்கும் இப்படி உள்ளது என்றால் இலங்கையில் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வது? இவர் ஒரு கல்வியாளராகவின்றி பெளத்த சிங்கள கடும்போக்குவாதியாகவே உள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதியான விமல் வீரவன்சவையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.
இவர் விக்கினேஸ்வரனை கடலில் தள்ளவேண்டும் என்று கூறுகிறார். விக்கினேஸ்வரனை தென்னிலங்கையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை.
இந்த நாடு முழுவதும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று கூறவில்லை. விமல் வீரவன்ச அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்றார்.
தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும், தமிழர்கள் தமது மண்ணில் உரிமையுடன் அமைதியாக வாழவேண்டும் என்றும் கூறும் விக்கினேஸ்வரனையும் சிங்கள பாராளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்று கூறும் விமல் வீரவன்சவையும் ஒப்பிடும் ஆளும் கட்சி உறுப்பினரது கருத்து மிக மிக பொறுப்பற்ற செயலாகும்.
அண்மையில் வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிந்து குடியேற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மையின மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கும் நிகழ்வை மைத்திரிபால சிறிசேனவும் வெற்றிகரமாக முன்னெடுப்பத்துடன் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையையும் பலரது கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
எந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அந்த ஆக்கிரமிப்பை சட்டமாக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொண்டபோதும் கூட சுயாட்சிக்கும் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் பேரினவாதிகள் எதிர்க்கின்றனர் என்பது இலங்கையின் யதார்த்த நிலமை உணர்த்தும் செய்திகள் ஏராளம்.
அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன் ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூறியிருந்தார்.
இந்த நாட்டில் ஒரு பிரிவினருக்கு முழு நாடும் சிங்கள பெளத்தம் மட்டுமே என கூற உரிமை இருக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கை இணைக்கைக் கோரும் உரிமை இருக்கிறது.
ஒரு சாராருக்கு ஒற்றையாட்சி என்று கூற உரிமை இருந்தால், அவர்களுக்கு சமஷ்டி எனக்கூறும் உரிமை இருக்கிறது. பெளத்த மதத்துக்கு மட்டுமே பிரதம இடம் வேண்டும் என இங்கே கூறும்போது, அங்கே அவர்களுக்கு மதச்சார்பற்ற நாட்டைக் கோரும் உரிமை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
ஆனாலும் இங்கே யாரும் நாட்டைப் பிரித்து தனி ஒரு நாட்டை அமைக்கக் கோர முடியாது. அல்லது தனது அரசியல் இலக்கை அடைய ஆயுதம் தூக்க முடியாது. அத்தகைய கருத்துகளை வடக்கிலும் சரி தெற்கிலும் சரி எவரும் கூற முடியாது என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.
தனிநாடு குறித்த கோரிக்கை ஏன் எழுந்தது என்றும் வடக்கு கிழக்கு மக்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பது குறித்தும் அமைச்சர் தெற்கிற்கு எடுத்துரைப்பதும் அவசியமானது. ஒருபுறம் புதிய அரசியலமைப்பை சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றனர்.
மறுபுறம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கும் சுயாட்சியை வழங்குவதற்கும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். புதிய அரசியலமைப்பில் இவை உள்ளக்கப்படவில்லை என்று இன்றைய ஆட்சியாளர்கள் சத்தியம் செய்த பின்னரும் எதிர்க்கின்றனர்.
ஆக எதனையுமே தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கம். மைத்திரிபால சிறிசேன அரசால் கொண்டு வரப்படும் இந்த யாப்பை அவரது அணியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் சில தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இனவாதிகளால் அவை கிழித்தெறியப்பட்டது போன்றே தற்போதைய முயற்சிகள் அமையுமா? என்றும் சந்தேகம் ஏற்படுகின்றது.
இதைவிட இன்னொரு சந்தேகம் உள்ளது. அதாவது தமிழர்களின் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்குமா என்பதே அது. புதிய அரசியலமைப்பில் கூறப்பட்ட ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றை ஆட்சியே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஏக்கிய இராச்சிய என்ற பெயரில் ஒற்ற ஆட்சியை இலங்கை அரசு பலப்படுத்தப் பார்க்கின்றது. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்போ போதிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்குத் தரும் என்றும் அதனையே தாம் கோருவதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார்.
அரசு தம்மால் வழங்கக்கூடியதைக் கூறுவதாகவும் தாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கான காரணங்களுக்குரிய தீர்வைத் தரவேண்டும்.
அதற்குமேல் தரமுடியாது. இதற்கு கீழ் தரமுடியாது என்றால் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் உரிமை அங்கீகரிக்கப்படுவதையும் அப்புதிய அரசியலமைப்பை எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதையும் எதிர்ப்பவர்கள் இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்ல வருகின்றனர்.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடிப்படையானதாகும். இதுவே தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அரணாக அமையும்.
தமிழ் மக்கள் இதுவரை சந்தித்த கசப்பான இன வெறுப்பு மற்றும் ஒடுக்குமுறை அனுபவங்களை இனியும் சந்திக்காமல் இருக்க வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுயாட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த குறைந்தபட்சத் தீர்வைக்கூட இலங்கை அரசு மறுத்தால் இந்தத் தீவில் சிறுபான்மை இனமாக தொடர்ந்து ஒடுக்குமுறைகளை சந்திக்க முடியாத தமிழ் மக்கள் தமிழீழத் தனிநாடு கோரிய போராட்டத்தை கையில் எடுக்க இலங்கை அரசே நிர்ப்பந்திக்கிறது என்பதையே இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனக் கூறும்வரையில் இத்தீவில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்கள் தம்மை தாமே தமது தாயகத்தில் ஆட்சி செய்த வரலாற்று நீண்ட நெடிய பாரம்பரியம் கொன்ட ஈழம் முழுவதும் பல்வேறு தொல்லியல் சான்றாதாரங்களை கொண்ட ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோருவது ஈழ மக்களின் உரிமை மாத்திரமல்ல தவிர்க்க முடியாத வழியும் இத்தீவின் பிரச்சினைக்கும் தீர்வுமாகும்.
-தீபச்செல்வன்...

Wednesday 20 December 2017

நாடு என்பது என்ன?

நாடு அல்லது தேசம் என்பது சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டதாக (Subject) இருப்பது மட்டுமின்றி சர்வதேசச் சட்டத்தை உருவாக்கும் நபராகவும் (Creator) இருக்கின்றது. நடைமுறையில் ஒரு நாடு (Country) என்பது அதன் மக்களைக் குறிப்பதல்ல. மாறாக அம்மக்களையும் உள்ளடக்கிய நாட்டை நிர்வகிக்கும் அரசையே அது குறிக்கிறது. எனவே “state” எனும் ஆங்கிலச் சொல் அதன் நேர்ப்பொருளின் அரசைக் குறிப்பதாக இருந்தாலும், சர்வதேசச் சட்டத்தில் அந்த அரசு பிரதிநிதித்துவப் படுத்தும் நாட்டையே அது குறிக்கிறது. எனவே இங்கு "state" என்பது "நாடு" என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.




சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் அதனை உருவாக்குபவராகவும் இருக்கும் நாட்டின் இலக்கணம், நவீன கால தேசிய இன அரசுகள் உருவான வரலாறு போன்றவைகளை அறிந்து கொள்வது அரசியல் பயில்வோருக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையாகும். அத்துடன், நாட்டின் அங்கீகாரம் (Recognition), நாட்டின் இறங்குரிமை (Succession), நாட்டின் ஆள்நில எல்லை (Territory), நாட்டின் இறையாண்மை (Sovereignty), நாட்டின் சர்வதேசப் பொறுப்பு நிலை (Responsibility) ஆகியவை பற்றியும் அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாகக் காண்போம்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.  (குறள்737)

என்பார் வள்ளுவர்.

மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக, அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது என பரிமேலழகர் உரை எழுதுகிறார்.
மான்டவிடோ மாநாடு, 1933 (The Monte video Convention of 1933) ஷரத்து 1-இன் படி சர்வதேசச் சட்டத்தில் நபர் என்ற முறையில் ஒரு நாடு என்பது பின்வரும் தகுதிகளைப் பெற்றதாக இருக்க வேண்டும்: அவை

நிரந்தரமான மக்கள் தொகை (A Permanent population)
வரையறுக்கப்பட்டதொரு நிலப்பகுதி (A defined Territory)
ஓர் அரசாங்கம் (A Government) மற்றும்
மற்ற நாடுகளுடன் உறவுகளில் ஈடுபடும் தகுதி (Capacity)

இவற்றில் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி என்பதால் நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. அண்டை நாட்டுடன் எல்லைத் தகராறு இருந்து இருநாட்டின் எல்லைகளும் வரையறுக்கப்படாமல் இருந்தாலும் அவ்விரு நாடுகளுமே நாட்டிற்குரிய தகுதியைப் பெற்றவையே ஆகும்.

நாடுகளின் வகைகள் (Kinds of State)

நாடுகள் அவற்றின் உள்கட்டமைப்பு அல்லது அரசமைப்பின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம். மேலும் நாட்டு அரசின் தன்மைகளின் அடிப்படையிலும் அவை வகைப்படுத்தப்படலாம்.

1. இணையாட்சி நாடு (Condominium State)

ஒரு நிலப்பரப்பு அல்லது எல்லைக்குட்பட்ட பகுதியின் மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் கூட்டாக, சமமான ஆட்சியுரிமை கொண்டிருந்தால் அப்பகுதி இணையாட்சி நாடு எனப்படும். உதாரணமாக, நியூ ஹீப்ரைட்ஸ் (New Hebrides) நாட்டின் மீது இங்கிலாந்தும் பிரான்சும் 1914-க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலத்தில் இணையான கட்டுப்பாட்டையும் உரிமையையும் செலுத்தின. அக்காலகட்ட நியூ ஹீப்ரைட்ஸ் நாடு இணையாட்சி நாடாகும். அதுபோல 1898 முதல் 1955 ஆண்டு வரையிலான காலங்களில் இங்கிலாந்தும் எகிப்தும் சூடான் மீது இணையாட்சியுரிமை கொண்டிருந்ததையும் உதாரணமாகக் கூறலாம். இன்றும் பல நாடுகள் தங்களுக்கு இடையிலான நதிகள், வளைகுடாக்கள் அல்லது விரிகுடாக்கள் மீது கொண்டிருக்கும் இணையுரிமைகளையும் இணையாட்சி உரிமைகளாகக் கூறலாம்.

2. அடிமை நாடு (Vassal State)

ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்டு (Under Suzerainty) இருக்கும் போது அடிமை நாடு எனப்படும். உதாரணமாக காலனி நாடுகளைக் கூறலாம். அடிமை நாட்டின் சுதந்திரம் மேலாதிக்க நாட்டிற்கு முற்றிலும் கட்டுப்பட்டதாகும். சர்வதேசச் சட்டத்தில் நாடு என்று தனித்தியங்கும் சட்டத் தகுதி அடிமை நாட்டிற்குக் கிடையாது. ஸ்டார்க், அடிமை நாடு என்பது மற்றொரு நாட்டின் அதிகாரத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டிருக்கும் நாடாகும் என்கிறார். சர்வதேசச் சட்டத்தில் அடிமை நாடு ஒரு நாடாக அங்கீகரிக்கப்படுவதில்லை. வெளி விவகாரங்களில் (Foreign Affairs) அடிமை நாட்டிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதன் அனைத்து வெளியுறவுக் கொள்கைகளும் அதன் மீது அதிகாரம் செலுத்தும் நாட்டினாலேயே தீர்மானிக்கப்படும்.

3. பாதுகாப்பிலிருக்கும் நாடு (Protectorate State)

ஒரு நாடு தன்னைவிட வலிமையான மற்றொரு நாட்டுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கையின் மூலம் அவ்வலிமையான நாட்டின் பாதுகாப்பிலிருக்கும் நாடாக தன்னை ஆக்கிக் கொள்ளலாம். அவ்வாறு ஆக்கிக் கொள்ளும் நாடே பாதுகாப்பிலிருக்கும் நாடு எனப்படும். உதாரணமாக 1975 ஆம் ஆண்டு வரை சிக்கிம் இந்தியாவின் பாதுகாப்பிலிருக்கும் முழுமையாக இணைந்து இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கமாக ஆனது.

பாதுகாப்பில் இருக்கும் நாடு முழுமையான சுதந்திரம் உடைய நாடாக இல்லாவிட்டாலும் அது மற்றொரு நாட்டின் எல்லைக்குள் இறையாண்மைக்குரிய விலக்களிப்புகள் (Immunity) அனைத்தையும் பெற்றதாகவே இருக்கும் என்று Duff Development Co-Vs-Kelanthan Government (1924) A.C.729] என்ற வழக்கில் பின்லே பிரபு கூறியுள்ளார். எனவே சர்வதேசச் சட்டத்தில் ஓர் நாடு என்ற சட்டத் தகுநிலைiயைப் பெற்றதாகவே பாதுகாப்பிலிருக்கும் நாடு இருக்கும் என்கிறார் ஸ்டார்க்.

லோனியன் கப்பல் (Lonian Ship case (1855) 2 Spinks 2) – வழக்கில் 1815-ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் லோனியன் தீவுக் கூட்டம் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பிலிருக்கும் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு இங்சிலாந்திற்குத் இரஷ்யாவுக்கும் இடையே ஜெர்மானிய யுத்தம் மூண்டது. அப்போரின் போது லோனியன் நாட்டுக் கப்பல்கள் ரஷ்யாவுடன் வாணிகத்தில் ஈடுபட்டிருந்த போது இங்கிலாந்து கப்பற்படையால் பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பிலிருக்கும் நாடாகிய லோனியன் நாட்டுக் கப்பல்கள் இங்கிலாந்தின் எதிரி நாடாகிய இரஷ்யாவுடன் வாணிகம் மேற்கொள்வது சட்ட விரோதம் என்றும் லோனியன் நாட்டுக் குடிமக்கள் இங்கிலாந்தின் குடிமக்களே என்பதால், இங்கிலாந்தின் எதிரி நாடு எதுவும் லோனியன் நாட்டு குடிமக்களுக்கும் எதிரி நாடே என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் இவ்வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், லோனியன் நாடு இங்கிலாந்தின் பாதுகாப்பில் இருக்கும் நாடாகவே இருந்தாலும் அது சுதந்திரமான தனி நாடாகும். எனவே, லோனியன் நாட்டுக் கப்பலை இங்கிலாந்தின் கப்பல் என்றோ, லோனியன் நாட்டுக் குடிமக்களை இங்கிலாந்தின் குடிமக்கள் என்றோ கூற முடியாது. அதனால் ரஷ்யாவுடன் வாணிகம் செய்வதற்கும் லோனியன் நாட்டுக் கப்பல்களுக்கு முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தது.

4. கூட்டாட்சி நாடு

கூட்டரசு அல்லது கூட்டாட்சி நாடு என்பது, ஒரு அரசாக தனித்து இயங்கவல்ல நாடுகள் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை உறுப்பு அரசுகளாகக் கொண்டு உருவாக்கப்படும் கூட்டாட்சி அரசு ஆகும். கூட்டாட்சிக்குள் உள்ள ஒவ்வொரு அரசு ஆகும். கூட்டாட்சிக்குள் உள்ள ஒவ்வொரு அரசும் தனக்கென தனியான நாடாளுமன்றத்தையும் பிற துணை நிறுவனங்களையும் கொண்டிருக்கும். ஆனால் உறுப்பு அரசுகளுக்கு சர்வதேச அரங்கில் தனி நாடாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது. விதிவிலக்காக முன்னால் சோவியத் யூனியன் கூட்டாட்சி நாட்டில் மட்டும் உக்ரைன், பைலோ ரஷ்யா போன்ற அதன் உறுப்பு அரசுகள் சர்வதேச அரங்கில் தனி நாடு என்ற தகுதியுடன் தனித்து இயங்கும் சர்வதேசச் சட்டத் தகுநிலை சோவியத் யூனியனின் அரசமைப்பில் வழங்கப்பட்டிருந்தது. தற்போதிருக்கும் நாடுகளில் கூட்டாட்சி நாடுகளுக்கு உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கூறலாம்.

5. நாடுகளின் கூட்டமைப்பு (Confederation State)

நாடுகளின் கூட்டமைப்பு என்பது சுதந்திரமான தனித்தனி நாடுகள் ஒர் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு உடன்படிக்கையின் மூலம் கூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆகும். அணிசேரா நாடுகள் (NAM), பிரிக்ஸ் (BRICS) நாடுகள், ஆசியன் (ASIAN) நாடுகள் போன்றவை நாடுகளின் கூட்டமைப்பிற்கு சில உதாரணங்களாகும்.

நாடுகளின் கூட்டமைப்பு என்பது கூட்டாட்சி நாடுகளில் இருந்து வேறுபட்டதாகும். கூட்டாட்சி நாடு என்பது தனித்தனி அரசுகளின் நிரந்தரமான இணைப்பாடும். நாடுகளின் கூட்டமைப்பு என்பது தற்காலகமான இணைப்பாகும். நாடுகளின் இணைந்த பின்னர் உறுப்பு நாடுகள் ஒரு நாடு எனும் சர்வதேசத் தகுநிலையை இழந்துவிடும் (விதிவிலக்கு சோவியத் யூனியன்). மாறாக நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்த பின்னரும் உறுப்பு நாடுகள் சர்வதேசத் தகுதியில் தனித்தனி நாடுகளாகவே தொடர்ந்து இருந்து வரும்.

6. நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு (Common Wealth of Nations)

இங்கிலாந்தின் காலனி நாடுகள் அனைத்தும் பிரிட்டிஷ் சமவுரிமைக் கூட்டமைப்பு (British Common Wealth of Nations)என்ற பெயரில் ஒரே கூட்டமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இங்கிலாந்திடம் காலனிகளாக இருந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை பெற்று சுதந்திர நாடுகளாகின. ஆனால் அவற்றுடன் இங்கிலாந்து நாட்டுக்கு இருந்த வணிக பொருளாதாரத் தொடர்புகள் முற்றும் அறுபடாமல் ஒரளவிற்கு தொடர்ந்து இருந்து வந்தன. எனவே புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகளின் பொருளாதார அரசியல் நலனுக்குப் பொதுவாகவும் இங்கிலாந்தின் பொருளாதார அரசியல் நலனுக்கு குறிப்பாகவும், இங்கிலாந்தையும் உள்ளடக்கிய நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு தொடர்வது அவசியம் என்று கருதப்பட்டது. எனவே 1948 ஆம் ஆண்டில் இதன் பெயரில் இருந்த பிரிட்டிஷ் என்ற சொல் நீக்கப்பட்டது. அது நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு என்று அழைக்கப்பட்டது. இந்தியாவும் அதன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு என்பது உறுப்பு நாடுகளிடையே சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் பரஸ்பரம் அங்கீகரித்துக் கொள்கிறது. உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் சுதந்திரமான சுயேச்சையான இறையாண்மை பெற்ற நாடுகளாகும். உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் இக்கூட்டமைப்பு தலையிடாது.

நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பின் சர்வதேசச் சட்டத் தகுநிலையைப் பொறுத்த வரை, அதற்கு நாடு என்ற சர்வதேசத் தகுதி கிடையாது. தனி நபரைப் போல் உடன்படிக்கை செய்து கொள்ளும் அதிகாரமும் கிடையாது. அது இங்கிலாந்தின் முன்னாள் காலனி நாடுகளின் விருப்பத்தின் பேரில் அமைக்கப்பட்டதொரு கூட்டமைப்பு மட்டுமேயாகும். நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தங்களுக்கு இடையிலான தூதரக உறவுகளை உயர் ஆணையர் (High Commissioner) மூலம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதாவது மற்ற நாடுகளின் அயல் நாட்டுத் தூதர் (Foreign Diplomat) என்ற பெயரில் நியமிக்கப்படும் தூதரக அதிகாரி இக்கூட்டமைப்பு நாடுகளில் உயர் ஆணையர் என்ற பெயரில் நியமிக்கப்படுவார்.

நடுநிலையாக்கப்பட்ட நாடுகள் (Neutralised State)

ஸ்டார்க்- இன் கருத்ததுப்படி நடுநிலையாக்கப்பட்ட நாடு என்பது, தற்காப்பிற்காக அல்லாமல் மற்றொரு நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தவோ, நடுநிலைத் தன்மையை மாற்றக் கூடிய அல்லது போரை உண்டாக்கக் கூடிய இராணுவக் கூட்டு உடன்படிக்கை எதிலும் ஈடுபடவோ மாட்டோம் என்று ஒரு நாடு ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், பெரும் வல்லரசு நாடுகள் கூட்டாக அந்நாட்டின் சுதந்திரத்தையும் அரசியல் மற்றும் ஆள்நில ஒருமைப்பாட்டையும் நிரந்தரமாகப் பாதுகாப்பதாக உறுதியளித்திருக்கும் நாடு ஆகும். நவீன உலகில் ஸ்விட்சர்லாந்து ஆஸ்திரியாவும் அவ்வாறு நடுநிலையாக்கப்பட்ட நாடுகளாக இருக்கின்றன. ஸ்விட்சர்லாந்தில் 1985 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஐ.நா.சபையிலும் உறுப்பினராகச் சேரக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் ஸ்விட்சர்லாந்தே உண்மையான அர்த்தத்தில் நடுநிலையாக்கப்பட்ட நாடாக இருக்கிறது.

நோக்கம் (Object)

ஒரு நாடு நடுநிலையாக்கப்படுவது பின்வரும் நோக்கங்களைக் கொண்டதாகும்.

1. மிகச்சிறிய, பலவீனமான நாடுகளை அதன் அருகில் இருக்கும் வலிமையான நாடுகளிடமிருந்து பாதுகாப்பதும் அதன் மூலம் நாடுகளிடையே அதிகாரச் சமநிலையை ஏற்படுத்துவதும்.

2. பெரும் வல்லரசுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் நாடுகளின் சுதந்திரதைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆகும்.

நடுநிலையாக்கப்படுதலின் தன்மைகள் (Characteristics)

a. நடுநிலையாக்கப்படுதல் என்பது ஒரு கூட்டு நடவடிக்கையாகும்.
b. நடுநிலையாக்கப்படும் நாடு அதன் நிபந்தனைகளுக்கு தனது சம்மதத்தைத் தெரிவித்திருக்க வேண்டும்.
c. ஒரு நாடு நடுநிலையாக்கப்படுதல் என்பது நிரந்தரமான தகுநிலை ஆகும்.


நடுநிலையாக்கப்படுதலும் நடுநிலையும் (Neutralization and Neutrality)

நடுநிலையாக்கப்பட்ட நாட்டையும், நடுநிலை நாட்டையும் ஒன்றாக எண்ணிக் குழப்பிக் கொள்ளக் கூடாது. நடுநிலை என்பது நாடுகளுக்கு இடையே நிலவும் பகை அல்லது போரில் தான் நடுநிலை வகிப்பதாக ஒரு நாடு தன்னிச்சையாக அறிவித்துக் கொள்வதாகும். அத்தகைய நடுநிலை தற்காலிகமான ஒன்றாகும். நடுநிலை வகிப்பதாக அறிவித்துக் கொண்ட நாடு எப்போது வேண்டுமானாலும் அதன் நடுநிலைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஏதேனுமொரு தரப்பின பக்கம் சாய்ந்து விடலாம். மாறாக நடுநிலையாக்கப்படுதல் என்பது மற்ற நாடுகள் கூட்டாகச் சேர்ந்து ஒரு நாட்டிற்கு வழங்கும் தகுநிலையாகும். அது நிரந்தரமான ஒன்றாகும்.

நடுநிலையாக்கப்பட்ட நாட்டின் கடமைகள் (Obligations of Neutralized State)

1. தன்மைத் தற்காத்துக் கொள்வதற்காக அன்றி வேறு எந்த நாட்டுடனுடம் போரில் ஈடுபடக் கூடாது.
2. நாடுகளுக்கு இடையே பகை உண்டாகும் அபாயம் இருக்கக் கூடிய உடன்படிக்கைகளின் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஆனால் அரசியல் சாராத பிற உன்படிக்கைகளில் ஈடுபடலாம்.
3. மற்ற நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது நடுநிலைக்கான விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.
4. தன்னைத் தற்காத்துக் கொள்ள தனக்கு எதிரான தாக்குதலில் தன்னிடமுள்ள முழு பலத்தையும் பயன்படுத்தலாம்.

நடுநிலையாக்குதலுக்கான உறுதியை வழங்கும் நாடுகளின் கடமைகள் (Obligations of state Guaranteeing Neutralized State)

ஒரு நாட்டை நடுநிலையாக்கி அதற்கான உறுதியை அளிக்கும் நாட்டின் கடமைகள் பின்வறுமாறு:

1. நடுநிலையாக்கப்பட்ட நாட்டின் மீது எவ்விதத் தாக்குதலும் தொடுக்காமல் இருப்பது.
2. நடுநிலையாக்கப்பட்ட நாட்டின் ஆள்நில எல்லை மற்றொரு நாட்டால் மீறப்படும் போது தனது இராணுவ பலத்தின் மூலம் தலையிட்டு நடுநிலையாக்கப்பட்ட நாட்டைப் பாதுகாப்பது.

திபெத் - இன் சர்வதேசத் தகுநிலை (International Status of Tibet)

திபெத் இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலத்தால் சூழப்பட்ட ஒர் மலைநாடு ஆகும். 1720-ஆம் ஆண்டு வரை திபெத் சுதந்திர நாடாக இருந்தது.  அதன் பின்னர் சீனப் பேரரசின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. மஞ்சுப் பேரரசின் முடிவிற்குப் பின்னர் திபெத் மீண்டும் சுதந்திர நாடானது. 1906 ஆம் ஆண்டில் திபெத், சீனா மற்றும் பிரிட்டனின் இணைப்பாதுகாப்பிலிருக்கும் நாடாக ஆனது. அதன் பிறகு சிறிது காலத்தில் சுதந்திர நாடாக ஆனது. இருப்பினும் அதன் வெளியுறவு விவகாரங்களை சீனாவே நிர்வகித்தது. பின்னர் 1914 ல் எட்டப்பட்ட சிம்லா உடன்படிக்கையின் படி திபெத் சீனாவின் பாதுகாப்பிலிருக்கும் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1951 ஆம் ஆண்டு திபெத்திற்கும் சீனாவிற்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் மூலம் திபெத் சீனாவின் பாதுகாப்பிலிருக்கும் நாடு (Protectorate state) என்ற தகுநிலையைப் பெற்றது.

திபெத்தின் சமயத் தலைவராக தலாய் லாமாவை சீனா ஏற்றுக் கொண்டது. உள்நாட்டு விவகாரங்களில் திபெத் சுதந்திரம் பெற்ற நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் வெளி விவகாரங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் சோசலிச நாடாக இருந்த சீனாவிற்கு எதிராக திபெத்தில் சதி வேலைகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து திபெத்திற்கும் 1959 இல் போர் மூண்டது. சீனாவின் மக்கள் இராணுவம் திபெத்தைக் கைப்பற்றியது. அதன் மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவிற்கு தப்பினார். திபெத் சீனாவின் ஒரு பகுதியாக ஆனது. வேறொரு புத்த துறவி தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சீனாவால் அங்கீகரிக்கப்பட்டார். தப்பி வந்த பழைய தலாய்லாமாவிற்கு அரசியல் புகலிடம் அளித்த இந்தியா அவரையே திபெத்தின் தலைவராக அங்கீகரித்தது. திபெத், சீனாவின் பாதுகாப்பிலிருக்கும் நாடு என்று இந்தியா அறிவித்தது. ஆனால் சீனாவோ திபெத் சீனாவின் ஒரு பகுதி என்றது. இதுவே திபெத்தின் சர்வதேசத் தகுநிலையாக இன்றுவரை தொடர்கிறது.

நாடுகளின் உரிமைகளும் கடமைகளும் (Rights and Duties of State)

சர்வதேசச் சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் நாடுகளுக்கு சில அடிப்படை உரிமைகளும் கடமைகளும் உள்ளன என்பது இயற்கைச் சட்டவியலாளர்களின் வாதமாகும். ஆனால் நாடுகளுக்கு உள்ளார்ந்த அடிப்படை உரிமைகள் என்றோ கடமைகள் என்றோ எதுவும் கிடையாது. சர்வதேச வழக்காறுகள் மூலமாகவும் சர்வதேச உடன்படிக்கைகள் மூலமாக மட்டுமே நாடுகளுக்கு உரிமைகளும் கடமைகளும் வந்தடைகின்றன என்பது நிகழ்நிலைச் சட்டவியலாளர்களின் வாதமாகும்.

1947 இல் சர்வதேசச் சட்ட ஆணையம், நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய வரைவுப் பிரகடனம் ஒன்றை உருவாக்கியது. இந்த வரைவுப் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அனைத்து உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கும் அனுப்பி வைத்து. இந்த வரைவுப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில உரிமைகளும் கடமைகளும் பின்வருமாறு:


நாடுகளின் உரிமைகள்

1. நாடுகளின் சுதந்திரம் (Independence of states): ஒவ்வொரு நாட்டிற்கும் சுதந்திரமான நாடாக தனித்தியங்குவதற்கு உரிமை உண்டு.

2. ஆள்நில எல்லை அதிகாரவரம்பு (Territorial Jurisdiction): ஒவ்வொரு நாட்டிற்கும் அதனதன் ஆள்நில எல்லைக்குள் தனது அதிகாரவரம்பை செலுத்துவதற்கு முழு உரிமை உண்டு.

3. சமத்துவம் (Equality): ஒவ்வொரு நாடும் சர்வதேச அரங்கில் சமத்துவத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.

4. தற்பாதுகாப்பு (Self-Defense): தனித்தோ மற்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்தோ தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு.

நாடுகளின் கடமைகள்:

1. தலையிடாதிருத்தல் (Non-Intervention): மற்ற நாடுகளின் உள்விவாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு.

2. எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் ஆள்நில எல்லைக்குள் உள்நாட்டுப் போராட்டங்களையோ வேலை நிறுத்தங்களையோ தூண்டி விடக் கூடாது.

3. சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தன்நாட்டு எல்லைக்குள் செய்வதற்கு அனுமதிக்காமல் இருக்க வேண்டிய கடமை.

4. மற்றொரு நாட்டின் ஆள்நில எல்லை ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக எந்ததொரு நாடும் போர் தொடுத்தல் அல்லது இராணுவ பலத்தை பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் கூடாது.

5. சர்வதேசப் பிரச்சனைகளை அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டிய கடமை.

6. தனது ஆள்நில எல்லைக்குள்ளும் அதிகாரவரம்பிற்குள்ளும், இனம், பாலினம், மொழி அல்லது மத வேறுபாடு இன்றி மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் குடிமக்களுக்கு உறுதி செய்வதும் பாதுகாப்பதும் ஒவ்வொரு நாட்டின் கடமையாகும்.

ஐ.நா.வின் இந்த வரைவுப் பிரகடனம் உலக நாடுகளால் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனை ஏற்றுக் கொண்டு ஐ.நா.சபையின் பொதுச்சபையில் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா.பொதுச்சபைக்கு சர்வதேசச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது என்பதால் நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய வரைவுப் பிரகடனம் இன்று வரை செயலுக்கு வரவில்லை. இருப்பினும் சர்வதேச வழக்காறுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புகளில் நாடுகளின் இந்த உரிமைகளும் கடமைகளும் வலியுறுத்தப்பட்டே வருகின்றன.

Corfu Channel Case (1949): இவ்வழக்கில் அல்பேனியாவின் எல்லையோர நீர்நிலையாக இருக்கும் கர்ஃபூ கால்வாயில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிந்திருந்தும் அவ்வழியே வரும் மற்ற நாட்டுக் கப்பல்களுக்கு அல்பேனியா உரிய எச்சரிக்கை வழங்கவில்லை. இதன் காரணமாக அக்கால்வாயைக் கடந்து சென்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போர்க் கப்பல் கண்ணி வெடியில் சிக்கி பலத்த உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களையும் சந்தித்தது. அதற்கான இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச நீதிமன்றம், தனது ஆள்நில எல்லை மற்ற நாடுகளின் உரிமைகளைப் பாதிக்கும் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை தெரிந்தே அனுமதிக்காமல் இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு. இக்கடமையில் இருந்து தவறிய அல்பேனியா, இங்கிலாந்தின் போர்க்கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.














Wednesday 6 December 2017

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும் பகைமையின் பின்னணி

சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்?
சௌதி அரேபியா மற்றும் இரான் நாடுகள் ஏன் ஒத்துப்போவதில்லை?



இந்த இரண்டுமே சக்திவாய்ந்த அண்டை நாடுகள் - பிராந்திய ஆதிக்கத்திற்காக இவையிரண்டும் கடுமையாக முட்டி மோதுகின்றன.
பல ஆண்டுகளாக இந்த நாடுகளுக்கிடையே உள்ள முரண்பாடுகள், மத வேறுபாடுகளால் அதிகரித்து வருகிறது. அவை இரண்டும் இஸ்லாமின் இரண்டு முக்கிய பிரிவுகளில் ஒன்றை பின்பற்றுகின்றன - இரான் பெரும்பாலும் ஷியா முஸ்லிம் நாடு, சௌதி அரேபியா சுன்னி முஸ்லிம் சக்தியாகத் தன்னைக் கருதுகிறது.
அவர்களுக்குள்ளான இந்த மத வேறுபாடு மத்திய கிழக்கு நாடுகளின் அதிகார வரைபடத்தில் பிரதிபலிக்கிறது. சில நாடுகளில் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், வேறு சில நாடுகளில் ஷியா முஸ்லிம்களின் பெரும்பான்மையாகவும் உள்ளனர். தங்கள் நாடுகளின் மத அடையாளத்துக்கு ஏற்ப அவை இரானிடம் இருந்தோ, சௌதி அரேபியாவிடம் இருந்தோ ஆதரவையும் வழிகாட்டுதலையும் நாடுகின்றன.

வரலாற்று ரீதியாக, இஸ்லாமின் பிறப்பிடமான சௌதி அரேபியா தன்னை இஸ்லாம் உலகின் தலைவராக கருதியது.
இதற்கு சவால் விடும் விதமாக 1979 ஆம் ஆண்டு இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி இப்பிராந்தியத்தில் ஒரு புதிய வகை அரசை உருவாக்கியது. இந்த மத சாம்ராஜ்ஜியம் இந்த மாதிரியை தனது எல்லைகளைக் கடந்தும் பரப்புவதை இலக்காகக் கொண்டிருந்தது.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில், சௌதி அரேபியாவிற்கும் இரானுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஒரு சில தொடர் நிகழ்வுகளால் கூர்மையடைந்த வண்ணம் உள்ளன.


2003ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படை இராக் மீது நடத்திய போரில் சுன்னி முஸ்லிம் மதப்பிரிவை பின்பற்றிய அராபியரான சதாம் உசேன் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இவர் இரானின் மிக முக்கிய எதிரியாக இருந்துவந்தார். இராக்கை சமன்செய்துவந்த முக்கியமான ராணுவ பலமான சதாம் வீழ்ந்தது முதல் இராக்கில் இரானின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.
2011 ஆம் ஆண்டு அரபுலகில் நிகழ்ந்த எழுச்சி அப்பகுதி முழுவதிலும் அரசியல் உறுதியற்றத் தன்மையை உருவாக்கியது. இந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு குறிப்பாக சிரியா, பஹ்ரைன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்ள இரானும் சௌதி அரேபியாவும் மேற்கொண்ட நடவடிக்கைகள், பரஸ்பரம் சந்தேகங்களை அதிகப்படுத்தியது.

தமது அதிகாரத்தை நேரடியாகவோ, ஆதரவு நாடுகள் மூலமோ இப்பகுதி முழுவதும் நிறுவி இரான் முதல் மத்தியத்தரைக்கடல் வரையிலான நிலப்பகுதியைக் கட்டுப்படுத்த இரான் விரும்புவதாக அந்நாட்டின் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எப்படி திடீரென சில விஷயங்கள் மோசமானது?
பிராந்திய போராட்டங்களில் பல வழிகளை கையாண்டு இரான் வெற்றி பெறுவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான பகை அதிகரித்து வருகிறது.
சிரியாவில், அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு இரான் (மற்றும் ரஷ்யா) அளித்துவரும் ஆதரவு சௌதி அரேபிய ஆதரவு கிளர்ச்சியாளர் குழுவை பெருமளவில் முடக்கிவிட்டது.
உயர்ந்து வரும் இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த சௌதி அரேபியா முயற்சிப்பதும், அந்நாட்டு இளவரசர் மொஹமத் பின் சல்மானின் ராணுவ சாகசவாதமும், அங்குள்ள பதற்றத்தை மேலும் மோசமாக்குகிறது.
தமது அண்டை நாடான ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரை மொகம்மது பின் சல்மான் நடத்திவருகிறார். அங்கு பெருகிவருவதாகக் கருதப்படும் இரானின் செல்வாக்கை மட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை சௌதி எடுத்தது. ஆனால் மூன்றாண்டு முயற்சிகளுக்குப் பிறகு இது அதிக விலை தரவேண்டிய சூதாட்டம் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே இரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா என்ற ஷியா தீவிரவாதக் குழு அரசியல் ரீதியாக, ராணுவரீதியாக செல்வாக்கு பெற்றுள்ள லெபனான் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதற்காக அந்நாட்டுப் பிரதமரை பதவி விலகச் செய்ய சௌதி அழுத்தங்கள் தருகிறது.

இதில் வெளிநாட்டு சக்திகளின் பங்கும் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவால் சௌதி அரேபியா துணிச்சல் பெற்றுள்ளது. மறுபுறம், இரான் நாட்டை ஆபத்தான அச்சுறுத்தலாக பார்க்கும் இஸ்ரேல், இரானை கட்டுப்படுத்த சௌதி அரேபியா எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறது. சிரியாவில் தமது நாட்டு எல்லைக்கு அருகாமையில் இரான் ஆதரவு பெற்ற போராளிகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து யூத நாடான இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது.
இரான் அணு குண்டு தயாரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு அதற்கு சில சலுகைகளை அளித்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் இரானோடு 2015ல் செய்துகொண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக எதிர்த்த நாடுகள் இஸ்ரேலும், சௌதி அரேபியாவும்.
அவர்களின் பிராந்திய கூட்டாளிகள் யார்?
மத்திய கிழக்கின் இந்த வரைபடம் ஷியா- சுன்னி முஸ்லிம்களின் பிளவை நமக்கு விளக்குகிறது.

ஐக்கிய அரபு நாடுகள், குவைத், பஹ்ரைன், எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் சௌதிக்கு ஆதரவளிக்கும் சுன்னி முஸ்லிம்கள் அதிகமுள்ள பெரிய நாடுகள்.

இந்நிலையில், இரானால் வலுவாக ஆதரிக்கப்பட்டுள்ள சிரிய அரசாங்கம் இரான் முகாமில் உள்ளது. மேலும், அதனுடன் சேர்ந்து இரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஷியா போராட்டக் குழுக்கள், ஆகியவை சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சௌதி - இரானுக்கிடையிலான போட்டி எவ்வாறு நடத்தப்படுகிறது?
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'பனிப்போர்' என்று அழைக்கப்படும் அதிகாரப் போட்டியை ஒத்த, பிராந்திய வடிவமாக இந்த இரான்-சௌதி போர் திகழ்கிறது.
இரானும், சௌதி அரேபியாவும் நேரடியாக சண்டையிடவில்லை. ஆனால், அவை அப்பகுதி முழுவதும் பல ஆதரவாளர்களைக் கொண்டு மோதிவருகின்றன.

இதற்கு சிரியா வெளிப்படையான உதாரணம். ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபியா மீது ஏவிய பேலிஸ்டிக் ஏவுகணை இரானால் வழங்கப்பட்டது என்று சௌதி குற்றம்சாட்டிவருகிறது. இந்த சம்பவத்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் தீவிரமடைந்துள்ளது. சிரியாவில் வீழ்ச்சியையும், ஏமனில் பின்னடைவையும் சந்தித்த சௌதி அரேபியா லெபனான் நாட்டை ஆதரவாளர்களைக் கொண்டு நடத்தும் 'பதிலாள் போர்களமாக' (Proxy battlefield) ஆக்க சௌதி அரேபியா முயற்சிப்பது போல் தெரிகிறது.
சௌதியும் இரானும் நேரடிப்போருக்கு தயாராகின்றனவா?
இதுவரை ஆதரவாளர்கள் அல்லது பதிலாள்கள் மூலமாக மட்டுமே இவ்விரு நாடுகளும் மோதிக் கொண்டன. உண்மையாக நேரடி போருக்கு அவர்கள் தயாராகவில்லை, ஆனால் ஏமனில் இருந்து சீறிப்பாயும் ராக்கெட் ஒன்று சௌதி தலைநகர் ரியாத் விழுமென்றால் இந்த சமநிலை மாறிவிடும்.
இரண்டு நாடுகளும் சந்திக்கும் கடல் எல்லையான வளைகுடா பகுதி, அவர்கள் நேரடியாக மோதிக் கொள்ளும் இடமாக அமையலாம். ஆனால் இங்கு சண்டை மூளுமானால், அது இன்னும் பெரும் போராக மாறும் ஆபத்தும் உள்ளது. அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வளைகுடாவில் பயணம் செய்வது அடிப்படைத் தேவை. சர்வதேச கப்பற் போக்குவரத்துக்கும் எண்ணையை கொண்டு செல்வதற்கும் இன்றியமையாத இந்தக் கடல் வழியில் தடங்கலை ஏற்படுத்தும் ஒரு சண்டை உடனடியாக அமெரிக்க கடல் மற்றும் வான்படைகள் இங்கு வருவதற்கு வழி வகுக்கலாம்.

நீண்ட காலமாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், இரானை மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் ஒரு சக்தியாகவே பார்த்து வருகின்றன. சௌதியின் தலைமையும் இரானை தம்முடைய இருப்புக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இரானின் உயரும் செல்வாக்கை எதிர்க்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேவையானது என தாம் நினைக்கும் இடத்தில் எடுக்க அந்நாட்டு இளவரசர் தயாராக இருப்பதாக தெரிகிறது.
இதில் ஆபத்து என்னவெனில், சௌதியின் புதிய செயலூக்கம் இப்பிராந்தியத்தின் உறுதியற்ற தன்மைக்கான இன்னொரு காரணமாக வேகமாக ஆகிவருகிறது.

Sunday 26 November 2017

பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! சரத் பொன்­சேகா ..

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று.  இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது, வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னையும் தொட்டுச் சென்­றி­ருந்தார். அவ­ரது உரையின் முக்­கி­ய­மான பகுதி அது. 


“பிர­பா­க­ர­னிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிர­பா­கரன் உரு­வா­கி­யதால் தான், பீல்ட் மார்ஷல் ஒரு­வரும் உரு­வானார்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.
2011ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, நோர்­வேயின், இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும், அமெ­ரிக்­காவின் முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்­மி­ரேஜூம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை ஒரு சிறந்த போரியல் வல்­லுனர் – இரா­ணுவ மேதை என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
ஆனாலும், பிர­பா­க­ரனின் அர­சியல், இரா­ஜ­தந்­திர ஆளு­மையை அவர்கள் அந்­த­ள­வுக்கு சிறப்­பாக மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.  எனினும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின், போரியல் ஆளுமை என்­பது, எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாத ஒன்­றா­கவே இருந்­தது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒன்றும் பிர­பா­க­ர­னுக்கு புக­ழாரம் சூட்­டு­வ­தற்­காக, பாரா­ளு­மன்­றத்தில் அந்தக் கருத்தைக் கூறி­யி­ருக்­க­வில்லை. அது பிர­பா­க­ரனின் போரியல் ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும், அங்­கீ­க­ரிக்கும் கருத்து என்­பதில் சந்­தே­க­மில்லை.
இன்று இலங்­கையின் முப்­ப­டை­களும் அதி­ந­வீன ஆயு­தங்கள், போர்த்­த­ள­வா­டங்­க­ளுடன் இருக்­கின்­றன என்றால், மூன்று இலட்சம் படை­யி­னரைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது என்றால், அதற்கு ஒரே காரணம் பிர­பா­கரன் தான்.
அதனால் தான், பிர­பா­க­ர­னிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.
போர் தொடங்­கிய போது, வெறும் 10 ஆயிரம் படை­யி­னரே இலங்­கையில் இருந்­தனர். அப்­போது எந்த நவீன போர்த் தள­வா­டங்­களும் படை­யி­ன­ரிடம் கிடை­யாது. போருக்­கான ஆயத்­த­நி­லையும் இல்லை.
இருந்­தாலும், மர­புசார் பயிற்­சி­களைப் பெற்ற ஓர் இரா­ணுவம் இருந்­தது. அதனை எதிர்­கொண்டு தான் பிர­பா­கரன் தனது போர் ஆற்­றலை வளர்த்துக் கொண்டார்.
பிர­பா­கரன் எங்கும் போர்க்­க­லையைக் கற்­க­வில்லை. எந்த நாட்­டி­டமும் பயிற்­சி­களைப் பெற­வில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவே, பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அள­வுக்கு அவ­ரது போர் ஆளுமை அமைந்­தி­ருந்­தது.
இலங்கை இரா­ணுவம் இப்­போது, உலகில் கவ­னிக்­கத்­தக்க ஓர் இரா­ணு­வ­மாக இருக்­கி­றது என்றால்,  இலங்கை இரா­ணு­வத்­திடம் போர் அனு­ப­வங்­க­ளையும் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள பல நாடுகள் முற்­ப­டு­கின்­றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிர­பா­க­ரனின் போர் ஆளுமை மட்டும் தான்.
அந்த ஆளு­மையைத் தோற்­க­டித்த ஒரே கார­ணத்­தினால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்­தது. வெளி­யு­லக ஆத­ரவு இல்­லாமல் ஒரு படைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்கி, சர்­வ­தே­சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அள­வுக்கு அதனைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார் பிர­பா­கரன். பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படை­யினர் தான் இருந்­தனர். இப்­போ­துள்ள 3 இலட்சம் படை­யினர் இருந்­தி­ருந்தால், இரண்டு ஆண்­டு­களில் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்போம் என்று கூறி­யி­ருக்­கிறார்.
இலங்கை இரா­ணு­வத்­துடன் போரைத் தொடங்­கிய போது, விடு­தலைப் புலி­களும் ஒன்றும் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையோ, மிகப்­பெ­ரிய ஆயுத தள­வா­டங்­க­ளையோ, நவீன போர்க்­க­ரு­வி­க­ளையோ, சண்­டைப்­ப­ட­குகள், விமா­னங்­க­ளையோ கொண்­டி­ருக்­க­வில்லை.
ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர் புலி­களால் தொடங்­கப்­பட்­டது. குறைந்­த­ளவு போரா­ளி­களே இருந்­தாலும், இரா­ணு­வத்தின் செறிவு குறை­வாக இருந்­தமை, புலி­க­ளுக்குச் சாத­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.
அதனால் தான், இப்­போ­துள்ள படை­ப் பலம் இருந்­தி­ருந்தால் இரண்டு ஆண்­டு­களில் போரை முடித்­தி­ருக்­கலாம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.
எனினும், படை­பலம் மாத்­தி­ரமே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்­றி­கொள்­வ­தற்கு சாத­க­மான அம்­ச­மாக இருந்­தது என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. மூன்­றா­வது கட்ட ஈழப்­போரில் கூட, இரண்டு இலட்சம் படை­யி­ன­ருடன் தான் அர­சாங்கம் இருந்­தது.
ஆனாலும் புலி­களை அப்­போது தோற்­க­டிப்­ப­தற்­கான சூழலும், உத்­தி­களும் வாய்க்­க­வில்லை.
பிர­பா­க­ர­னிடம் இருந்து போரிடும் முறை­களை மாத்­திரம் இரா­ணுவம் கற்றுக் கொள்­ள­வில்லை. பல ஆயு­தங்­களின் அறி­மு­கமும்  கூட இரா­ணு­வத்­துக்கு புலி­களால் தான் கிடைத்­தி­ருந்­தது.
1985ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி, அச்­சு­வே­லியில் புலி­களின் முகாம் ஒன்றை இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்­தனர். அது ஓர் ஆயுதக் களஞ்­சி­ய­மா­கவும் விளங்­கி­யது. அங்­கி­ருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்­மு­த­லாக இரா­ணு­வத்தின் கையில் கிடைத்­தது.
அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெரு­ம­ளவில் இரா­ணுவம் வாங்கிக் குவித்­தது. அது­போல பல ஆயுத தள­வா­டங்­களை விடு­தலைப் புலிகள் போரில் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னரே, இரா­ணு­வத்­தினர் அதனை வாங்க முயன்­றனர்.
சாம் எனப்­படும் விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் தான் விமா­னப்­படை வாங்­கி­யது. பல்­குழல் பீரங்­கி­க­ளையும் விடு­தலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்­கையில் பயன்­ப­டுத்தத் தொடங்­கினர்.

Wednesday 22 November 2017

மாவீரர்களே! உங்கள் தியாகம் வீண்போகாது

மாவீரர்களே! நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற  பிள்ளைகள். 

தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரே இலட்சியத்தைத் தவிர உங்கள் உயிர்த் தியாகத் தில் வேறு எந்தக் கலப்பும் கிடையாது.




உங்களின் இனப்பற்று - மொழிப்பற்று தமிழுக்காக நீங்கள் செய்த உயிர்த் தியாகம் ஒப்பற்ற வரலாறு.
எனினும் எங்கள் ஊழ்வினைப் பயன் எங் களுக்குள் புல்லுருவிகள், மற்றவர்களின் மரணத்தில் காட்டிக்கொடுப்புக்காக விலை பேசும் கயமைத்தனங்கள்.

இந்த இருண்ட பகுதி எம் இனத்தைச் சூழ் ந்து கொண்டுள்ளது. அதனால் உங்கள் தியா கம் அர்த்தமற்றுப் போய்விட்டதோ என்று பலர் நினைக்கலாம்.

ஆனால் உண்மை அதுவன்று. இந்தப் பிரபஞ்சம், யுகம் கடந்தது சூரிய சந்திரர் இருக் கும்வரை இயங்கவல்லது.

ஆகையால் நேற்று, இன்று, நாளை என்பது மிகச் சொற்ப காலம் கொண்டது. இது இந்த மண்ணில் வாழ்கின்ற எங்களின் காலக் கணிப்பேயன்றி அது இறைவனுக்கோ இயற் கைக்கோ பொருத்துடையதல்ல.

எம் குறுங்கால வாழ்வில் எங்களுக்கு உரிமை கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் எங்கள் பிள்ளைகள் செய்த தியாகத்துக்கு ஏதும் கைகூடவில்லையே என்ற கவலையும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களிடம் இருக் கவே செய்கிறது.

இவை வாழுங்காலத்தில் நம்மிடம் ஏற்படக் கூடிய தற்காலிக கவலையேயன்றி இது நிரந் தரமானதல்ல.



மாவீரர்களே! இன்று நீங்கள் துயிலும் இல் லங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். உங்களை நினைவேந்துவதற்குத் தடை விதித்திருக்கலாம். நீங்கள் மகிழ்வோடு உறங்கும் சந்தனப் பேழை களே... என்ற கீர்த்தனை ஒலியிழந்து கிடக்கலாம்.

ஆனால் இவையயல்லாம் என்றோ ஒரு காலம் இரட்டிப்பாகப் பிரவாகிக்கும். இதுவே உண்மையும் கடவுள் செயலுமாகும்.

ஆம், அந்நியர் ஆட்சியில் எங்கள் மண் ணில் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. உடைக்கப் பட்டன. ஏன் வாழை இலையில் உண்பதுகூட சமயச்சடங்காகக் கருதித் தண்டனை வழங்கப் பட்டது. அப்படியயாரு காலம் இருந்ததல்லவா! அன்று வாழ்ந்த மக்கள் எத்துணை கவலை கொண்டனர்.

ஆனால் இன்று இலண்டனில், அமெரிக் காவில், ஏன் உலக நாடுகள் முழுவதிலும் சைவக் கோயில்கள் எழுந்து நிற்கின்றன.

அந்த வீதிகளில் தேர் ஓடுகிறது. ஏன் வெள்ளையர்கள் கூட அன்னதானத்தில் குந்தி யிருந்து வாழையிலையில் சோறு உண்கின் றனர். இவை நடப்பதற்கு எத்தனை ஆண்டு கள் ஆயின.

அதுபோலவே உங்கள் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. என்றோ ஒருகாலத்தில் உங் களுக்கான நினைவாலயம் எழுந்து நிற்கும். அது அன்றைய உலக அதிசயங்களில் ஒன் றாக விளங்கும்.

அப்போது சிங்கள மக்களும் அதில் நின்று உங்கள் தியாகத்துக்கு வந்தனம் செய்வர். இது சத்தியம். 



courtesy: valampurii

Sunday 19 November 2017

ரஸ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சி

உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் புரட்சிகள் இடம் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையானது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும். 




அவற்றுள் வரலாற்றில் தடம் பதித்த முக்கியமான புரட்சிகளுள் ஒன்றாக ரஷ்யாவில் ஏற்பட்ட 'சோசலிசப் புரட்சி' விளங்குகிறது.  ஜரோப்பிய வரலாற்றில் மிகவும் விசாலமான பரந்த நிலப்பரப்பினைக் கொண்ட தேசமாக விளங்குவது ரஸ்யாவாகும்.  ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் திகதி, 'போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்டபுரட்சிதான் 'சோசலிசப் புரட்சி' என அழைக்கப் படுகிறது.

          ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தார்கள். அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன தலை விரித்தாடின. இந் நிலைமை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ணியது. அதனால் ஜார் மன்னர்களின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடனும்,  பாட்டாளி வர்க்கத்தினர் தமது சுய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் திகதி லெனினுடைய தலைமையில் ரஷ்யாவில் வெடித்த புரட்சிதான் சோசலிசப் புரட்சியாகும். 


ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக தொழிலாளி வர்க்கத்தினரின் அடக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததும், உலகியல் வரலாற்றில் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டியதும் சோசலிசப் புரட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சி பற்றி ஆராய்வதே இக் கைநூலின் பிரதான நோக்கமாகும்.

            இப்புரட்சியானது ரஷ்யாவில் பொருளாதாரம், சமூகம், தொழில் முறைகள் போன்ற துறைகள் உயர்ந்தோங்குவதற்கு உறுதுணையாக அமைந்தது. அத்துடன் ஜனநாயகம், முதலாளித்துவம் போன்ற கோட்பாடுகளிற்கு எதிராக சோசலிசம், சமவுடைமைப் பொருளாதாரம் ஆகிய கோட்பாடுகளைக் கொண்ட புதிய சிந்தனை மரபுகள் ரஷ்யாவில் தோற்றம் பெற்று ரஷ்யா வல்லரசாக உருவெடுக்க பலமான அத்திவாரமிட்டுக் கொடுத்தது.  சோசலிசப் புரட்சிதான் என்பதை எவரும் மறுத்து விட முடியாது.  சோசலிசப் புரட்சி ரஷ்யாவில் ஏற்படுவதற்கு மூல காரணமாக விளங்கியவர் 'நவயுக ரஷ்யாவின் தந்தை' என்று சிறப்பிக்கப் படுகின்ற லெனின் என்பவராகும்.
            
           சோசலிசப் புரட்சி பற்றி நாம் ஆராய்கின்ற போது புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள், புரட்சியினுடைய போக்கு, புரட்சியினால் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட விளைவுகள் போன்ற கட்டமைப்புக்களுடாக நோக்குவதனுடாக புரட்சியின் சிறப்பம்சங்களைப் பற்றி தெளிந்து கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.

சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள்.


             முதலில் ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள் பற்றி ஆராய்வோம். சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது ரஷ்ய மக்களிடையே காணப்பட்ட உணவுப் பற்றாக்குறை எனலாம். உணவு வாங்குவதற்காக மக்கள் ரொட்டிக்கடைகளின் முன்பாக நீண்ட வரிசையில் கால் கடுக்கக் காத்துக் கிடந்தனர். அப்படியும் பலருக்கு ரொட்டி கிடக்கவில்லை. இவ்வாறு மக்கள் வரிசையாகக் காத்துக் கிடந்தமை தொழில் நிறுத்தங்களுக்கும், குழப்பங்களுக்கும் மூலகாரணமாக அமைந்தது. இவ்வாறு சாதாரண குடிகளிடத்து மட்டுமின்றி இராணுவத்தினருக்கும் போதிய உணவோ, ஊதியமோ வழங்கப்படவில்லை. இதனால் இராணுவத்தினர் அரசின் மீது கொண்டிருந்த அபிமானம் வலுவிழந்து போயிற்று.

              1917ஆம் ஆண்டு, மார்ச் 08ஆம் திகதி சார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராகவும், தமது உணவுப் பஞ்சத்தை நீக்குமாறும் கோரிக்கைகளை விடுத்து 'பெற்ரோக்கிராட்' என்ற இடத்தில் நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தினார்கள். 'எங்களுக்கு உணவு கொடு' 'உழப்புக்கேற்ற ஊதியம் கொடு' என்று கோசங்களை எழுப்பிக் கொண்டு பெண்கள் ஊர்வலம் சென்றார்கள். மறுநாள் ஏனைய தொழிலாளர்களும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டார்கள். அவர்கள் 'போர் ஒழிக' 'தனியாட்சி ஒழிக' என்ற பெரும் கூக்குரல்களுடன் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள். அதனால் தொழிற்சாலைகளில் வேலை நடைபெறவில்லை. எங்கும் குழப்பம், அமைதியற்ற சூழ்நிலை என்பன ஊடுருவிக் கொண்டன. மூன்றாவது நாள் இந்தத் திடீர்க் கிளர்ச்சி ஒரு பொதுத் தொழில் நிறுத்தமாக மாறி பரட்சி ஏற்படுவதற்கான அத்திவாரத்தை இட்டுக் கொடுத்தது. நசுக்கப்பட்ட ஏழை மக்கள் முன்வந்து வெளிப்படையாகத் தமது உரிமைகளை கேட்பதற்குரிய சூழ்நிலையினை இவ் ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியது.
          


ஆர்ப்பாட்டக் காரர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தினரையும், காவல்துறையினரையும் ஏவிவிட்டது. ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த இராணுவத்தினர் கிளர்ச்சிக் காரர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கலவரத்தை அடக்க காவல் துறையினர் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதனால் ஆவேசம் கொண்ட பொதுமக்கள் காவல் துறயினரை கற்களாலும், தடிகளாலும் திருப்பித் தாக்கினார்கள். மார்ச் 08ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் எங்கு பார்த்தாலும் கலவரங்கள் நிறைந்திருந்தன. இவ்வாறு ரஷ்யாவில் சாதாரண தொழிலாளர்களால் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது சோசலிசப் புரட்சியாக விசுவரூபம் எடுத்தது.

             சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது பிரபுக்களினதும். மதகுருமார்களினதும் ஆடம்பர வாழ்க்கை எனலாம். ஆன்மிக நெறியினைப் பின்பற்ற வேண்டிய மதகுருமார்களும், பிரபுக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழத்தலைப்பட்டனர். 'பிறப்பு' அடிப்படையில் அவர்கள் சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவித்து வந்தனர். இவர்களின் சுகபோக வாழ்க்கைச் செலவுகளுக்கு வரியாக விவசாயிகள் நிதி செலுத்த வேண்டியிருந்தது. காரணங்கள் எவையுமின்றி தங்கள் உழைப்பின் பெரும் பகுதியை வரியாகச் செலுத்துவது குறித்து விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் பாரிய கருத்து முரண்பாடுகள் தோன்றின.

              தொழிலாளர்;கள் வாழ்ந்த ஓரளவு அமைதியான வாழ்க்கை கூட விவசாயிகளுக்குக் கிடக்கவில்லை. ரஷ்யாவில் காணப்பட்ட அதிகமான நிலப்பகுதிகள் திருச்சபைக்குச் சொந்தமாகக் காணப்பட்டன. அதனால் அதிருப்தியடைந்த தொழிலாழர்களும், விவசாயிகளும் தங்களது வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர விரும்பினார்கள். இச் செயற்பாடானது புரட்சி ஏற்பட வழியமைத்துக் கொடுத்தது.

             நிலமானிய முறையில் சாதாரண குடியினர் அடிமைகளாக நடத்தப்பட்டமை சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் வாழ்ந்த 45 கோடி மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்த மக்களுக்கு இடம்பெயரும் உரிமை கூட இருக்கவில்லை. பிரான்சியப் புரட்சிக்கு முன்னர் எவ்வாறு அந்த நாட்டின் விவசாயிகளும், தொழிலாளர்களும் கொடிய துன்பங்களை அனுபவித்தனரோ அதனைவிட கொடுமைகளையும், துன்பங்களையும் தொழிலாழர்கள் அனுபவித்தனர். இந்தத் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு தொழிலாளர்கள் தக்கதருணம் பார்த்துக் காத்திருந்தனர். இதனால் லெனின் தலைமையில் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டமை புரட்சி ஏற்பட மூல காரணமாக அமைந்தது.
          
          சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது முதலாம் உலகமகாயுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் எனலாம். 1914 தொடக்கம் 1918 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட முதலாம் உலகமகாயுத்தத்தில் ரஷ்யா பிரதான இடத்தினை வகித்தது. இவ் யுத்தத்தில் ஈடுபட்ட ஏனைய நாடுகளை விட ரஷ்யாவிற்கே அதிகளவிலான இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஈட்டிகளினாலும், இயந்திரத் துப்பாக்கிகளினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், காயமுற்றும் இருந்தனர். விசவாயுக்களின் பாவனையால் அதிக எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு முதலாம் உலகமகாயுத்தத்தின் போது ரஷ்யா ஆயிரக்கணக்கான உயிர்களையும், அளவிட முடியாத  சொத்துக்களையும் இழக்க நேரிட்டது.


           மேற்கத்திய நாடுகள் படை உபகரணங்களில் ரஷ்யாவிற்கு இருந்த குறைபாடுகளை சீர்படுத்த உதவிய போதிலும், பிரதான வீதிகளைப் புனரமைக்க முற்படவில்லை. இக்குறைபாட்டினால் போர்க்களத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் படைவீரர்கள், மற்றும் போர்த் தளபாடங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை விரைவாக எடுத்துச் செல்லமுடியாமற் போனது. ஆள்பலத்திலும், இயற்கை வளத்திலும் ரஷ்யா எதிரி நாட்டைவிட சிறந்து விளங்கிய போதிலும் பொருளாதாரத்தில் ரஷ்யா பெற்றிருந்த பின்னடைவு காரணமாக உலகமகாயுத்தத்தில் பாரிய இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் மேலும் தாழ்ந்த மட்டத்தை அடைந்தது.


         இவ்வாறு பொருளாதாரப் பின்னடைவினால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் யுத்தம் தீவிரமடைந்த இறுதிக்காலத்தில் புரட்சியினை முன்னெடுத்தார்கள். காரணம் எதுவுமின்றி ரஷ்யா முதலாம் உலகமகாயுத்தத்தில் ஈடுபட்டு தோல்வியையும், அவமானத்தையும் அடையாளமாகப் பெற்றுக் கொண்டது. இந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லெனின் பாட்டாளி வர்க்கத்தினரின் துணையுடன் சார்மன்னரை வெற்றிகொண்டார்.


         இவ்வாறு முதலாம் உலகமகாயுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட  இழப்புக்களை ஈடுசெய்வதற்காக அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமைகள் சோசலிசப்புரட்சி ஏற்பட மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.

         ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது காணிப்பிரச்சனை எனலாம். கி.பி 18ஆம் நூற்றாண்டில் நிலக்கிழார்கள் தங்களுடைய படை சம்பந்தமான கடமைகளில் இருந்து விடுதலை பெற்றபோது நிலத்தை உழுது வந்த உழவர்களும் நிலவுடைமையாளர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாகக் கூறினார்கள். அதனால் நிலவுடைமையாளர்கள் விவசாயிகள் மீது வரிப்பளுவைச் சுமத்தினார்கள். இச்செயற்பாடு இவ் இரு குழுவினருக்குமிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக அமைந்தது. அதனால் விவசாயிகள் நிலவுடைமையாளர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

         குடியானவர்களிடம் முன்னர் இருந்ததை விட குறைந்தளவு நிலமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமது அவல நிலைக்கு தமக்கு வழங்கப்பட்ட சிறியளவான விளைநிலங்களே காரணம் என குடியானவர்கள் கருத்து வெளியிட்டனர். சிறிய நிலங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த முறையில் பயிர்களை மேற்கொண்டு அதிக விளைச்சலைப் பெறக் கூடிய மூலதனமும், தொழில்நுட்ப அறிவும் அக் குடியானவர்களிடம் காணப்படவில்லை.

        இவ்வாறு முழுமையாக இருந்த விளைநிலங்கள் துண்டாடப்பட்டதன் காரணத்தாலும், அனைத்துச் சொத்துக்களும் சம்பந்தப்பட்ட பிரதிநதிகளுக்கே உரிமையுடையவை எனக் கூறப்பட்டதாலும் குடியானவர்களின் தனிப்பட்ட முயற்சி கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இதனால் அவர்கள் தங்களுடைய அவல நிலைக்கு குறைந்தளவு நிலம் வழங்கப் பட்டிருந்தமையே அடிப்படைக் காரணம் என்று கருதியதுடன், அவர்கள் தங்களுக்குப் போதுமான நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் சோசலிசப்புரட்சி ஏற்படுவதற்கான காரணங்களாக அமைந்தன.

        சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது ரஷ்யாவில் நிலவிய பொருளாதார வீழ்ச்சி எனலாம். 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் விரக்தி, மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ரஷ்யாவில் சிறிதளவேனும் செல்வாக்குச் செலுத்தியிருக்கவில்லை. பின்னடைவான தொழில் முறைகளே ரஷ்யாவில் காணப்பட்டன. பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. நவீனத்துவமான முறையில் பொருளாதாரத்தை முன்னெடுக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவம் ரஷ்யாவில் இருக்கவில்லை. இதற்கு மாறாக ஆட்சியிலிருந்த ஜார் மன்னர்கள் வருமானம் எதுவுமின்றி செலவு செய்தனர். என்று கூறினாலும் வியப்பிற்குரியதல்ல. அவர்கள் நீண்ட யுத்தங்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தனர். வருமானத்தை ஈட்டக் கூடிய மாற்றங்கள் பற்றி சற்றேனும் ஜார் மன்னர்கள் சிந்திக்கவில்லை. இத்தகைய செயற்பாடுகளால் ரஷ்யாவில் பொருளாதாரம் சிதறடிக்கப்பட்டு கிழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிகழ்வுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி புரட்சிக்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.

        ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது வரி விதிப்பு எனலாம். ரஷ்யாவில் 1861 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஊழியர்களுக்கு ஓரளவு சுதந்திரத்தைக் கொடுத்திருந்தது. இருந்த போதிலும் வரி விதிப்பிலிருந்து அவர்கள் விலக்கழிக்கப் பட்டிருக்கவில்லை. அதனால் விவசாயிகள் கொடிய துன்பங்களை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. அம்மக்கள் கொடிய துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்குரிய வழிவகைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் லெனின், கார்ல் மாக்கஸ் போன்றவர்களாவர். இவர்களின் கருத்துக்கள், கொள்கைகளினால் கவரப்பட்ட மக்கள் அவர்களை தலைவர்களாக ஏற்று அணி திரண்டார்கள். பழைமையான கொடிய ஆட்சியினை ஒழித்து புதிய தொழிலாளர் ஆட்சியினை உருவாக்குவதற்காக புரட்சியில் ஈடுபட்டார்கள்.

        சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது பாட்டாளி மக்களின் பிரச்சனைகள் எனலாம். 'நகரத் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சி மனப்பான்மை வேரூன்றுவதற்கான பிரதான காரணம் பாட்டாளி வர்க்கத்தினுடைய தோற்றமும், தொழிற்சாலைத் தொழிலமைப்பின் தன்மையுமேயாம்' என்று ஒரு ரஷ்ய எழுத்தாளன் கூறுகிறான். தொழிலாளி வகுப்பினர்கள் உழவுத் தொழிலிலிருந்து தூக்கப்பட்டு தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். ரஷ்யத் தொழிலாளர்கள் உழவுத் தொழிலிலிருந்து திடீரெனப் பிரிக்கப்பட்டமை புரட்சியில் அவர்கள் முழு வீச்சுடன் செயற்படக் காரணமாயிற்று. ரஷ்யாவில் நீண்ட காலமாக இடம் பெற்ற யுத்தத்தினால் அந்நாடு சகல ரீதியிலும் பின்னடைவைப் பெற்றிருந்தது.

       புரட்சிக்கு முன்பாக அங்கு மக்களிடையே நிலவிய கல்வி அறிவின்மை, பிற்போக்குத் தன்மை ஒழுங்கமைப்புப் பழக்கமின்மை, தொழில் பற்றிய முறைமையின்மை, கலாசார, தொழில்நுட்பக் கல்வியின்மை ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவுகளை ஈடு செய்ய முடியாமல் போனது. இவ்வாறு நீண்ட காலப் போரினால் ரஷ்யாவின் அரசியல், பொருளாதாரம் என்பன நலிவடைந்து போயின. போரில் சலிப்புற்ற படைவீரர்கள் அடிமைத்தளையில் இருந்த பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர் குடியானவர்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியும், சார் மன்னர்கள், நிலக்கிழார்கள் ஆகியோரது ஆதிக்கம் ஒழிய வேண்டும் ஆகிய அடிப்படைக் கருவூலங்களை முன்வைத்து புரட்சியில் ஈடுபட்டார்கள்.

        ரஷ்யாவில் நிலவி வந்த சமூக ஏற்றத்தாழ்வும் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணமாகக் கொள்ளப்படுகிறது. அங்கு 'பிறப்பு' அடிப்படையில் சமூக அந்தஸ்த்து தீர்மானிக்கப் பட்டமையே சமூக ஏற்றததாழ்வுக்கு அடிப்படைக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. உயர் குடிகள் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். சாதாரண குடியினர் நடுத்தரமான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் சில அடிமைகளின் நிலைதான் மிகப் பரிதாபகரமாகக் காணப்பட்டது. இவர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் மிகவும் கீழ்த்தரமானதாக அமைந்திருந்தது. இவ்வாறு பரிதாபகரமான நிலையில் கட்டுண்டு கிடந்த ரஷ்ய மக்களை ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் விழிப்படையச் செய்தன.

         ரஷ்ய மக்கள் மத்தியில் காணப்பட்ட வறுமை, இடப்பெயர்வு, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கை, உழைப்பின் பெரும்பகுதியை காரணங்கள் எதுவுமின்றி வரியாகச் செலுத்தியமை, முதலாளி, தொழிலாளி என்ற பேதம் என்பன அவர்கள் புரட்சியில் ஈடுபடக் காரணமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.
        
நீண்ட காலமாக ரஷ்யாவில் ஏற்பட்ட யுத்தங்களும்; சோசலிசப்புரட்சி ஏற்படக் காரணமானது. ஜார் மன்னர்கள் பலன்கள் எவையுமின்றி வீணாக யுத்தங்களில் ஈடுபட்டார்கள். அதனால் பெரும் செலவு ஏற்பட்டது. இவ்வாறு பொருளாதாரத்தை விணடித்தனரே தவிர வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் பற்றிச் சிந்திக்கவில்லை. மன்னன் முதலாம் நிக்கலஸின் ஆட்சிக் காலத்தில் கிராமியப் போரில் ரஷ்யா தோல்வியைத் தழுவிக் கொண்டது. இது போல 02ஆம் நிக்கலஸின் ஆட்சிக் காலத்தில் ஜப்பானுடன் ஏற்பட்ட போரிலும் ரஷ்யா தோல்வியடைந்தது. இவ்வாறு ஜார் மன்னர்கள் தேவையற்ற யுத்தங்களில் ஈடுபட்டு பெரும் செலவையும், அவமானத்தையும் ரஷ்யாவுக்கு ஏற்படுத்தினார்கள். தங்களின் கீழ்த்தரமான வாழ்விற்கு ஜார் மன்னர்களின் நடவடிக்கைகளே பிரதான காரணம் என்று உணர்ந்து கொண்ட பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சியை தகுந்த கருவியாக்கி மாற்றத்தை ஏற்படுத்தத் துணிந்தனர்.

 சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணத்தினை நோக்கினால் ஜார் மன்னர்களிடம் சிறந்த அரசியல் தலைமைத்துவம் காணப்படாமை எனலாம். ஜார் மன்னர்கள் மக்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி வந்தார்கள். சான்றாக 02 ஆம் நிக்கலஸ் மன்னன் தனது ஆட்சியின் போது அவனது மனைவி சொன்ன படியெல்லாம் ஆடி வந்தான். அத்துடன் ஜார் மன்னர்கள் 'புனித ரஷ்யா' வை சிருஷ்டிக்கப் போவதாகக் கூறினார்கள். அம்மன்னர்கள் சமூக பொருளாதார நலன்கள் தொடர்பில் அக்கரை காட்டவில்லை. மாறாக சமய சம்பந்தமான செயற்பாடுகளில் அதிக நாட்டம் செலுத்தினார்கள். இதனால் சமூகம், பொருளாதாரம் போன்ற துறைகள் தாழ்ந்த மட்டத்தினை அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜார் மன்னர்களுக்கு எதிராக ஒன்று திரண்டமை புரட்சி ஏற்பட வழியமைத்துக் கொடுத்தது.
லெனின்

           ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்களில் மிகவும் பிரதானமாக அமைவது 'நவயுக ரஷ்யாவின் தந்தை எனப் போற்றப் படுகின்ற லெனினுடைய தலைமைத்துவமும், அவரது இராஜதந்திர நடவடிக்கைகளுமாகும்' என்பது மறுத்தற்கரிது. 'நெருங்கிக் கொண்டிருந்த புயலின் அறிகுறிகள் யாவும் அடிவானத்தை இருளச் செய்தன' என்பது போல புரட்சியில் ஈடுபடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் லெனினுடைய வருகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

         பள்ளிகளை மேற்பார்வையிடும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகனாக 1890 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதியன்று லெனின் பிறந்தார். லெனினுக்கு 16 வயதாகும் போது அவரது தந்தை இறந்து விட்டார். சட்டப் பட்டதாரியான லெனின் அரசியலில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். கார்ல் மாக்ஸ் எழுதிய பொருளாதாரத் தத்துவங்கள் இவரைக் கவர்ந்தன. தொழிலாளர்களையும், குடியானவர்களையும் ஒன்றுதிரட்டி லெனின் மேற்கொண்ட சோசலிசப்புரட்சி ரஷ்யா வல்லரசாக உருவெடுப்பதற்கு மூல காரணமாக அமைந்தது.

லெனினுடைய மூத்த சகோதரனான அலெக்சாண்டர் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டதற்காக தூக்கிலிடப்பட்டார். இச்செயற்பாடு லெனின் புரட்சியில்; முழு வீச்சுடன் செயற்பட அடிப்படைக் காரணமானது. சமகாலத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னன் 02 ஆம் நிக்கோலஸ் ஆட்சி செலுத்தி வந்தான். ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து லெனின் சதி செய்வதாக அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்தது. அதனால் 02 ஆம் நிக்கோலஸ், லெனினை சைபீரியாவுக்கு நாடு கடத்தினான். அங்கு லெனின் சைபீரிய நாட்டுப் பெண்ணான குரபஸ்கயா என்பவளைத் திருமணம் செய்து கொண்டான்.

           ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன விரிசலடைந்து காணப்பட்டன. இவை மட்டுமின்றி ஜார் மன்னர்கள் தொர்ச்சியான யுத்தங்களில் ஈடு பட்டார்கள். இதனால் சாதாரண குடியினரும், தொழிலாளர்களும் அரசின் மீது அதிருப்தியடைந்தார்கள். இதனால் பெற்ரோக்கிராட் நகரில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த லெனின் ஜார் மன்னரின் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார். அதற்காக அயராது உழைத்தார். லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று, மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணங்களை அவர்களுக்கு விளக்கினார். உங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டுமெனில் புரட்சி ஒன்றுதான் காரணம் என பகிரங்கமாக அறிவித்தார். அதனால் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்றனர்.
    இருந்த போதிலும் முதல் ரஷ்யப் புரட்சி தோல்வியிலே முடிவடைந்தது. ஆனால் லெனின் மனம் தளரவில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப் படுத்தினார்.  ' தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே' என முழங்கினார். லெனின் ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு பேசத் தொடங்கினார். 'தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்தி விட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடைய வில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாழிகளும், பண்ணையாளர்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு தொடர்ந்து முன்னேறுங்கள். என்று அறை கூவல் விடுத்தார்.

  லெனினுடைய புரட்சிக் கருத்துக்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. அதனால் 1917 ஆம், ஆண்டு, நவம்பர் 07ஆம் திகதி சோவியத் காங்கிரஸ் மாநாடு                                          கூட்டப்பட்டது. அதில் னெனினுடைய தலைமையில் பாட்டாளி வர்க்கத்தினர் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு மக்களது நலனுக்காகப் பாடுபட்ட லெனினுடைய தலைமைதுவம் புரட்சிக்கான மிகவும் பிரதான காரணமாக அமைந்தது. என்பதை எவரும் மறுத்து விட முடியாது. இவ்வாறு ரஷ்யாவின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்ட லெனின் 1924ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்தாலும் அவரின் புகழ் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
    
சோசலிசப் புரட்சியின் போக்கு

 சோசலிசப் புரட்சியின் போக்குப் பற்றி நாம் ஆராய்கின்ற போது ரஷ்யாவில் மட்டுமின்றி உலகியல் வரலாற்றிலே தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டிய பரட்சி இதுவெனலாம். அதாவது 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 07 ஆம் திகதி லெனினுடைய தலைமையில் பாட்டாளி வர்க்கத்தினரால் ரஷ்யாவில் நடத்தப்பட்ட புரட்சிதான் உலக வரலாற்றில் 'சோசலிசப் புரட்சி' எனச் சிறப்பிக்கப்படுகிறது.

           இனிப் புரட்சியின் போக்குப் பற்றி ஆராய்வோம். ரஷ்யாவில் ஜார் மன்னன் 02 ஆம் நிக்கோலஸ் மக்களின் நலன்களைக் கவனத்திற் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி வந்தான். அத்துடன் யுத்தத்தின் காரணமாக ரஷ்யாவில் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. கொடுங்கோலாட்சி நாடெங்கும் தாண்டவமாடியது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கத்தினர் உணவு, காணி, சமாதானம் போன்றவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஒன்று திரட்டிக் கொண்டு லெனினுடைய தலைமையில் 1917 ஆம் ஆண்டு நவம்பர், 07 இல் புரட்சியினை நடத்தினார்கள்.

           நவம்பர் புரட்சிக்கு அடித்தளம் இட்டுக் கொடுக்கும் வகையில் முதற் கட்டமாக 1917 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் 'பெற்றோக்கிராட்' என்னுமிடத்தில் அமைந்திருந்த நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் 'உணவு வேண்டும்' என்னும் கோரிக்கையுடன் தொழில் நிறுத்தம் செய்ய ஆரம்பித்தனர். மறுநாள் ஏனைய தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். 'போர் ஒழிக' , 'தனியாட்சி ஒழிக' என்ற கோசங்களை எழுப்பிக் கொண்டு தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டார்கள். மூன்றாவது நாள் இத் திடீர்க்கிளர்ச்சி ஒரு பொதுத் தொழில் நிறுத்தமாக மாறி புரட்சிக்கான தன்மையினை வெளிப்படுத்துவதாயிற்று.

          புரட்சிக்காரர்களை அடக்குவதற்காக அரசாங்கம் இராணுவத்தினரை ஏவி விட்டது. ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த இராணுவ வீரர்கள் கிளர்ச்சிக் காரர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். கலவரத்தை அடக்க பொலிசார் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதனால் ஆவேசம் கொண்ட மக்கள் கற்களாலும், தடிகளாலும் பொலிசாரைத் திருப்பித் தாக்கினார்கள். மார்ச் 08 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் எங்கு பார்த்தாலும் கலவரங்கள் நிறைந்திருந்தன.

          உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முடியாத சூழ் நிலையில் ரஷ்யாவில் 'டூமா' பாராளுமன்றம் கூடியது. முதற் கட்டமாக ஜார் மன்னன் முடி துறக்க வேண்டும் என்றும், சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் தீர்மானத்தை இராணுவத் தளபதிகளும் ஆமோதித்தனர். வேறு வழியின்றி 1917 ஆம் ஆண்டு, மார்ச் 16 ஆம் திகதி ஜார் மன்னன் பதவியை விட்டு விலகினார். தனது தம்பியான மைக்கேல் என்பவனுக்கு முடி சூட்டினான். ஆனால் அவனால் ஒரு நாள் கூட பதவியில் நீடித்திருக்க முடியவில்லை. அன்றே மக்கள் அவனைத் தூக்கி எறிந்தார்கள்.

           அரசாங்க நிருவாகத்தைக் கவனிக்க தற்காலிக அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்த லெனின் 1917 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ரஷ்யா திரும்பினார். அவரது நண்பனான டிரான்ஸ்கியும் அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்தார். ரஷ்யாவிலுள்ள நிலைமையினை ஆராய்ந்து புரட்சிக்குக் காரணமான தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் லெனினுடைய திட்டமாகும்.

          இந்த நிலையில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் இணந்த கூட்டணி அரசாங்கத்திற்கு கெரன்ஸ்கி என்பவர் தலைவராக நியமிக்கப் பட்டிருந்தார். இவர் லெனினுடைய போல்சுவிக் கட்சி வளர்வதை விரும்பவில்லை. அதன் விளைவாக லெனின், ஸ்டாலின், டிராட்ஸ்கி ஆகிய மூவரையும் கைது செய்யுமாறு கெரன்ஸ்கி உத்தரவிட்டார். அதனால் அவர்கள் மூவரும் தலைமறைவாயினர்.

         லெனின் தப்பிவிட்டதால் ஆத்திரமடைந்த கெரன்ஸ்கி லெனினுடைய கட்சியினை ஒடுக்குமாறு உத்தரவிட்டார். இதனால் நாட்டில் அடக்குமுறை தாண்டவமாடியது. முக்கள் தற்காலிக அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்தனர். இதனால் மக்களின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என லெனின் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது. அதுதான் ரஷ்ய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக நிலைபெற்றது.
      

       1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் திகதி சோவியத் காங்கிரஸ் மாநாட்டை, பெட்ரோக்கிராட்டில் கூட்டுவதற்கு ஸ்டாலின் இரகசியமாக ஏற்பாடு செய்தார். மாநாடு கூட்டப்பட்டது. மொத்தமாக 650 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அதில் 390 பேர் லெனினுடைய கட்சியினைச் சேர்ந்தவர்களாகும். அது வரைத் தலைமறைவாக இருந்த லெனின் திடீரென்று மாநாட்டிற்கு வந்தார். அரசாங்க நிருவாகம் ரஷ்ய மக்களின் கைகளிற்கு வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என பகிரங்கமாக அறிவித்தார். ஏற்கனவே லெனினுடைய திட்டப்படி போல்சுவிக் வீரர்கள் தபால் நிலையங்களையும், டெலிபோன் நிலையங்களையும், அரச அலுவலகங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

         அதுவரை பிரதமராக இருந்து கொண்டு அட்டூழியங்களை நிகழ்த்திய கெரன்ஸ்கி இனி ரஷ்யாவில் இருப்பது தனக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்டு பெண் வேடத்தில் தப்பிச் சென்றார். லெனின் தலைமையில் பெற்ரோக்கிராட் நகரில் சோவியத் காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருந்த போதே இவ்வளவு நிகழ்ச்சிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்றன.
         மாநாட்டிலே '. சகல அதிகாரங்களும் மக்களுக்கே' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லெனின் தலைமையில் புதிய மந்திரி சபை அமைக்கப்பட்டது. 1917 இல் நவம்பர் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த லெனின் 1924 வரை சோவியத் குடியரசின் தலைவராக இருந்து சோவியத் ரஷ்யா ஒரு வல்லரசாக மாறுவதற்கு மூலகாரணமாக அமைந்தார். அதனால் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறார். இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சியின் போக்கு அமைந்திருந்தது.
      
         சோசலிசப் புரட்சியின் விளைவுகள்

       சோவியத் ரஷயாவில் புரட்சியின் பின்னரான நிலைமை பற்றி மகாகவி பாரதியார் பின்வரும் கவிதையூடாக தெளிவு படுத்தியுள்ளார்.

        'குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
             மேன்மையுறக் குடிமை நீதி
        குடியொன்றில் எழுந்தது பார், குடியரசென்று
              ஊலகறியக் கூறிவிட்டார்
        அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
              அடிமையில்லை. அறிக' என்றார்

         சோசலிசப் புரட்சியினுடைய மிகவும் பிரதான அம்சமாக விளங்குவது புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளாகும். ரஷ;யாவில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்கெதிராக இடம் பெற்ற இப்புரட்சியானது, பல ஆண்டுகளாக துன்பங்களின் பிடியில் சிக்கித் தவித்த ரஷ;யக் குடி மக்களின் அடிமைத் தளையினை நீக்கியது. இதனை விரிவாக ஆராய்வோம். லெனினுடைய தலைமையில் 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் திகதி நடைபெற்ற இப்புரட்சியின் விளைவுகள் பல கோணங்களில் அமைந்திருந்தன.

         சோசலிசப் புரட்சியின் மிகப் பிரதான விளைவுகளில் ஒன்றாக அமைவது இடைக்கால அரசை நீக்கி லெனின் தலைமையில் சோவியத் குடியரசை உருவாக்கியமை எனலாம். லெனின் தலைமையில் 15 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் 'கமிசார்' என்று அழக்கப்பட்டனர். லெனின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. லெனின்-- அமைச்சரவைத் தலைவர்.
2. ரிக்கால்-- உள்நாட்டு அமைச்சர்.
3. மில்யூதின்-- விவசாய அமைச்சர்.
4. ஷல்யாப் நிக்கோவ்--தொழிலாளர் அமைச்சர்.
5. மூவர் கொண்ட ஒரு குழுவிடம் இராணுவமும், கடற்படையும் ஒப்படைக்கப் பட்டடது.
6. நோகின்-- அதாழில் அமைச்சர்.
7. லூர்னார்ஸ்கி—கல்வி அமைச்சர்.
8. ஸ்தெப்பனாஸ்-- நிதி அமைச்சர்.
9. தீராஸ்கீப்-- வெளி விவகார அமைச்சர்.
10. லோமாவ்-- சட்ட அமைச்சர்.
11. தியோடாவிச்-- உணவு அமைச்சர்.
12. அவிலோல்--தொலைத் தொடர்பு அமைச்சர்.
13. ஸ்டாலின்--தேசிய இனங்களின் அமைச்சர்.

            நீண்ட காலமாக கொடுமைகளை அனுபவித்த உழவர்கள் புரட்சியின் விளைவாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். ரஷ;யாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய வளங்களாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையாளர்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டன. உழவர்களின் வறுமைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. உழைப்பாளி மக்கள் அரச அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். 'சோவியத்துக்கள்' என்ற 'உழைக்கும் மக்கள் மன்றம்' அரச நிருவாகத்தை நடத்தியது. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டினார்கள். அதனை அமுல்படுத்த ஒரு நிருவாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவை மட்டுமின்றி நீதி மன்றங்களாக செயற்படும் அதிகாரம் கூட தொழிலாளர்கள் கைவசமே இருந்தது. மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமுல்படுத்தி, அவர்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறையாகும். இதுதான் உண்மையான ஜனநாயகமாகும். 
    
             தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றவர்களின் ஆட்சி மலர்ந்தது. உலகின் முதன் முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். அந்தத் தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. ரஷ;ய தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டுமே அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. எல்லா வளங்களும் அனைவருக்கும் பொதுவானவை என்னும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. வயது வந்த அனைவருக்கும் திறமைக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. சமூகத்தின் மத்தியில் சமத்துவம் மேலோங்கியது. இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடைபெற்றன.

               சோசலிசப் புரட்சியின் பிரதானமான விளைவுகளில் ஒன்றாக அமைவது ரஷயாவில் அதிகார வர்க்கத்தினரின் சுரண்டலுக்கு முடிவு கட்டப்பட்டது எனலாம். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றார்கள். உலகியல் வரலாற்றில் முதன் முதலாக பாட்டாளி வர்க்கத்தினரின் ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டமையும் இப் புரட்சியின் விளைவே. அத்துடன் ரஷ;யாவில் மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டு ஆட்சியதிகாரமானது தொழிலாளர்களின் கைகளிற்கு சென்றடைந்தது.

             ரஷ;யப்புரட்சியின் விளைவாக அரசுக்குச் சொந்தமான பல உடைமைகள் பாட்டாளி வர்க்கத்தினரால் கைப்பற்றப்பட்டன. சான்றாக அரச அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள். வானொலி நிலையம் முதலியவை பாட்டாளி வர்க்கத்தினரின் கைவசமாகின. அரசின் தலைநகரமான 'கிரெம்ளின்' மாளிகை இறுதியாகக் கைப்பற்றப்பட்டது. முதலாளி வர்க்கத்தினர் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினார்கள். ரஷ;யாவில் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டு ரஷ;யா சோசலிச நாடு எனப் பிரகடனப் படுத்தப்பட்டது. அதனுடைய தலைவராக லெனின் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக அறிவித்தார். அதனால் போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதியடைந்தனர்.
            
     மக்கள் சர்வ அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்கள். தொழிற்சாலைகளின் நிருவாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. புரட்சியின் முன்னர் தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் புரட்சியின் பின்னர் மக்களுக்குத் தேவையான அளவிற்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.  ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊழியமும் வழங்கப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் நொடியில் மறைந்தது.


                  புரட்சியின் விளைவாக 'நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில்' என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளிள் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாடக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அறிவு மற்றும் திறமைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 


       புரட்சியின் பின்னர் உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரஷ்யா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழு விடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக நாடுகளால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளில் உள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. மாறாக லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமுல்படுத்த வேண்டும் என்னு விரும்பினார்கள். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'சோவியத் யூனியன்' என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார். புரட்சியின் விளைவாக ரஷ்யாவில் தொழிற்சாலை உற்பத்தியும், விவசாய உற்பத்தியும் பெருகின. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது.


       மேற் கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து நோக்கினால் ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சிக்கான காரணங்கள், புரட்சியினுடைய போக்கு, புரட்சியினுடைய விளைவுகள் போன்ற பிரதான விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சியானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அங்கு காலூன்றுவதற்கு உறுதுணையாக அமைந்தது.