முற்று முழுதான அதிகாரத்தைக்
கொண்ட ஆட்சியாளராக துருக்கியில் எர்டோகானின் எழுச்சி ஜனநாயக
நாடுகள் இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிக்கு செம்மையான ஒரு உதாரணம்
துருக்கியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வஜன
வாக்கெடுப்பில் தனது அரசியலமைப்புத் திருத்த திட்டங்களுக்கு
வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு
ஜனாதிபதி றிசேப் தஜீப் எர்டோனால் இயலுமாக இருந்ததால் நாட்டின்
அரசியல் ஒழுங்கு முறை கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகும்.
எர்டோகானின் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான
கட்சியின் (ஏ.கே.கட்சி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது)
ஆதிக்கத்தில் உள்ள துருக்கிய பாராளுமன்றம் அரசியலமைப்புத் திருத்த
யோசனைகளுக்கு ஏற்கனவே அங்கீகாரத்தை அளித்துவிட்டது. இந்த
யோசனைகள் பாராளுமன்ற ஆட்சிமுறையை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
ஆட்சி முறையாக மாற்றுவதற்கான நோக்கம் கொண்டவை.
ஜனாதிபதி எர்டோகானே அரசாங்கத்தினதும் அரசினதும் ஆளும்
கட்சியினதும் தலைவராக இருப்பார். பாராளுமன்றத்தின் அங்கீகாரம்
இன்றி அமைச்சரவை உறுப்பினர்களையும் சிரேஷ்ட அதிகாரிகளையும்
நியமனம் செய்வதற்கான அதிகாரங்களை அவர் கொண்டிருப்பார். தற்போது
கோட்பாட்டளவில் மிகவும் கூடுதல் சக்திவாய்ந்த அரசாங்கப் பதவியாக
இருக்கும் பிரதமர் பதவி ஒழிக்கப்படும். நாட்டின் அதியுயர்
நீதிமன்றத்துக்கு அரைவாசிக்கும் அதிகமான நீதிபதிகளை
நியமிப்பதற்கும் பாராளுமன்றத்தை (தேசிய சட்டசபை என்று
அழைக்கப்படுகிறது) கலைப்பதற்கும் அவசரகால நிலையைப் பிரகடனம்
செய்வதற்குமான அதிகாரங்கள் அவருக்கு இருக்கும்.
அரசியலமைப்புத் திருத்தங்கள் எர்டோகானுக்கு இரு 5 வருட பதவிக்
காலங்களை உத்தரவாதப்படுத்துவதாகவும் அமையும். எதிர்வரும் 2019
ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்த மாற்றங்கள்
நடைமுறைக்கு வருகின்ற பட்சத்தில் அவர் துருக்கியை 2029 ஆம் ஆண்டு வரை
ஆட்சி செய்யக்கூடியதாக இருக்கும். சுல்தான் இராச்சியத்தின் கீழ்
துருக்கி இருந்த காலகட்டத்துக்குப் பிறகு கமால் அட்டடுர்க்கைத் தவிர
(முதலாவது உலக மகாயுத்த காலகட்டத்தில் இராணுவ ஜெனரலாக இருந்து
பின்னர் துருக்கிய குடியரசை ஸ்தாபித்து முதலாவது ஜனாதிபதியாக 1923
முதல் 1938 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர்) அந்த நாட்டில் வேறு எந்த
தலைவரும் அனுபவித்திராத பெருமளவு அதிகாரங்களைக் கொண்டவராக
எர்டோகன் விளங்குவார்.
அதிகாரத்தை வலுப்படுத்தல்
முதலில் பதவிக்கு வந்து பிறகு மக்களின் ஆதரவுடன் முற்று முழுதாக
அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியாளராக எர்டோகானின் எழுச்சி 21 ஆம்
நூற்றாண்டில் தேர்தல் ஜனநாயகங்கள் எதிர்நோக்குகின்ற
நெருக்கடிக்கான ஒரு பாடநூல் உதாரணமாக விளங்குகிறது.
வரலாற்று ரீதியாக இராணுவத்தினதும் பாரம்பரிய அரசியல்
கட்சிகளினதும் ஆதிக்கத்தின் கீழ் இருந்த துருக்கியின்
கொந்தளிப்பான அரசியலில் எர்டோகானின் ஏ.கே.கட்சி ஒப்பீட்டளவில்
புதியதொரு தோற்றப்பாடாகும். தாராள பொருளாதார நோக்குடைய ஒரு
பழமைவாத அரசியல் சக்தியாக தன்னைக் காட்டிக்கொள்கின்ற இக்கட்சி
நாட்டுக்கு உறுதிப்பாட்டையும் அபிவிருத்தியையும்
கொண்டுவருவதாக ஆட்சியதிகார வர்க்கத்தின் மீது பெருமளவில்
வெறுப்படைய ஆரம்பித்திருக்கும் மக்களுக்கு உறுதியளித்தது. ஏ.கே.
கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு
பாராளுமன்றத் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை பலத்துடன்
அதிகாரத்துக்கு வந்தது. சட்டரீதியாக இருந்த தடையொன்றை
வெற்றிகொண்ட பிறகு 2003 ஆம் ஆண்டில் எர்டோகான் பிரதமராக வந்தார்.
அதற்குப் பிறகு துருக்கி மீதான தனது அதிகாரப்பிடி தளர்வதற்கு அவர் இடம்
கொடுக்கவில்லை.
எர்டோகான் அடிப்படையில் ஒரு இஸ்லாமியவாதி. துருக்கியின்
இஸ்லாமிய கடந்த காலத்தை அடிக்கடி பெருமையுடன் நினைவு மீட்டுகின்ற
அவர் அந்த நாட்டின் நவீன மதசார்பற்ற விழுமியங்களை வெறுப்பவராக
இருக்கிறார். தொடக்கத்தில் அவர் துருக்கியின் பொருளாதார
வளர்ச்சியைத் துரிதப்படுத்திய திறந்த சந்தை சீர்திருத்தங்களில்
கவனத்தைச் செலுத்தினார். அதே சந்தைப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
புதிய மத்திய தர வர்க்கமொன்றையும் உருவாக்கின.
அந்த வர்க்கம் நகர்ப்புறங்களில் ஏ.கே.கட்சியின் விசுவாசமான
ஆதரவுச் சக்தியாக மாறியது. இக் கட்சி அதன் இஸ்லாமிய
பேச்சுக்களினால் கிராமப்புற மக்களுடனும் நெருக்கமான உறவை
வளர்த்துக் கொண்டது. இராணுவத்தாலும் அரசியல் உயர்வர்க்கத்தவராலும்
வலியுறுத்தி நடைமுறைப்படுத்தப்பட்ட மத சார்பற்ற வாதத்தைக் கொண்ட
ஒரு நாட்டில் ஏ.கே. கட்சியின் நிலைப்பாடுகள் ஆட்சியதிகார
வர்க்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்தியது. துருக்கிய
மதசார்பற்ற வாதத்தின் காவலர்கள் என்று சொல்லப்படக்கூடிய பழைய கமால்
கால ஒழுங்கு முறைக்கும் ஏ.கே.கட்சியின் நல இஸ்லாமிய வாதத்துக்கும்
இடையிலான பதற்றம் எர்டோகானின் ஆட்சிக்காலத்தில் எப்போதும்
காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலான சர்வாதிகாரிகளைப் போலன்றி
அவர் ஒழுங்குமுறையை உடனடியாக தீவிர மாற்றங்களுக்குள்ளாக்கும்
நடவடிக்கையில் இறங்கவில்லை. பதிலாக பெரும்பாலும் அவர் தனது
அரசியலமைப்பு வரையறைகளுக்குள்ளேயே செயற்பட்டார். அந்த
வரையறைகளை விஸ்தரிக்க அடிக்கடி அவர் முயற்சிகளை மேற்கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கிய அரசியல் சமுதாயத்தை மாற்றியமைக்கும் தனது மூலமுதல்
இலக்கை அவர் கைவிடவில்லை. ஆனால் படிப்படியான தலையீடுகளின் ஊடாக
அரசியல் கருத்தாடல்களின் மீது அடிக்கடி செல்வாக்குச் செலுத்திய
வண்ணம் பொறுமையுடன் காத்திருக்க தயாராயிருந்தார். அடுத்தடுத்து
வந்த தேர்தல் வெற்றிகள் துருக்கி அரசியலில் ஏ.கே.கட்சியின் நிலையை
வலுப்படுத்தின. தன்னை விமர்சிப்பவர்களை இராணுவத்திற்குள் இருந்து
களையெடுப்பதற்கு அந்த வலுவான நிலை வசதி செய்துகொடுத்தது.
பாராளுமன்றத்தில் ஏ.கே. கட்சியின் உறுப்பினராக மூன்று
பதவிக்காலங்களை நிறைவு செய்த நிலையில் எர்டோகான் 2014 ஆம் ஆண்டில்
தன்னைத் தானே ஜனாதிபதியாக்கிக் கொண்டார்.
(ஏ.கே. கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் பாராளுமன்றத்தில் மூன்று
பதவிக் காலங்களுக்கு மாத்திரமே அங்கம் வகிக்க முடியுமென்று
கட்டுப்பாட்டை நீண்டகாலமாகவே அவர் நியாயப்படுத்தி வந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது) இப்போது அவர் தன்னை நிறைவேற்று அதிகார
ஜனாதிபதியாக்குவதற்கு முன்னெடுத்திருக்கும் முயற்சிகள் இறுதிக்
கட்டத்தில் பிரவேசித்திருக்கிறது.
மறைந்து போகும் மிதவாதம்
பதவியில் இருந்த ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு மிதவாதி என்ற அவரின்
முகமூடி அகன்று போனது. 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தக் கிளர்ச்சிகளுக்குப்
பிறகு முஸ்லிம் சகோதரத்துவப் பாணியிலான இஸ்லாமிய வாதத்தை
எர்டோகான் வெளிப்படையாகவே ஆதரிக்கத் தொடங்கினார். மேற்காசியாவில்
புதியதொரு இஸ்லாமிய ஒழுங்கு முறையாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்
விரிவடையும் என்று எர்டோகானும் பல சகோதரத்துவ சிந்தனைவாதிகளும்
எதிர்பார்த்தார்கள். அந்த இயக்கத்துடன் துருக்கியை அணிசேர்த்துக்
கொள்வதற்காக தனது வெளியுறவுக் கொள்கையிலும் அவர் மாற்றம் செய்தார்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோன்று புதிய இஸ்லாமிய ஒழுங்குமுறை
ஒருபோதும் சாத்தியமாகவில்லை. உள்நாட்டில் எர்டோகானின் நிர்வாகம்
பெருமளவுக்கு அடக்குமுறைத் தன்மை கொண்டதாக மாறியது. கூடுதல்
அதிகாரங்களைத் தன்வசப்படுத்துவதில் அவருக்கிருந்த
பெருவிருப்பம் இரகசியமானதாக இருக்கவில்லை.
புதியதொரு துருக்கியைக் கட்டியெழுப்புவதற்கான தங்களது
திட்டங்களுக்கு பெரிய தடையாக நடைமுறைச் சட்டங்கள் இருப்பதை தெரிந்து
கொண்ட எர்டோகானும் அவரது ஆதரவாளர்களும் அரசியலமைப்பை
மாற்றியமைப்பது குறித்த விவாதத்தை 2011 ஆம் ஆண்டில்
ஆரம்பித்தார்கள். ஆனால் துருக்கியின் ஜனநாயகத்துக்கு எதிராக முழு
அளவிலான போரைத் தொடுப்பதற்கு காரணமொன்று அவருக்குத்
தேவைப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட
ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சி அந்தக் காரணத்தை அவருக்கு
கொடுத்துதவியது.
சந்தர்ப்பத்தை இறுகப் பிடித்துக் கொண்ட எர்டோகான் "எனக்கு எதிராக
அவர்கள்" என்ற பிரசாரத்தை முன்னெடுத்து துருக்கியின் அண்மைய வரலாறு
கண்டிராத களையெடுப்பை கட்டவிழ்த்து விட்டார். பாதுகாப்பு
அதிகாரிகள், நீதிபதிகள் உட்பட ஒரு இலட்சத்து முப்பது
ஆயிரத்துக்கும் அதிகமான அரசாங்க அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி
முயற்சியில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது
செய்யப்பட்டார்கள். இடைநிறுத்தப்பட்டார்கள். அல்லது பதவி
நீக்கப்பட்டார்கள். பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்தின்
நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
நூற்றுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இராணுவம் நிலை குலைந்து போனது. எதிரணி சின்னாபின்னமானது. இத்தகையதொரு
பின்புலத்திலேயே இம் மாதம் சர்வஜன வாக்கெடுப்பில் துருக்கிப் பிரஜைகள்
வாக்களிக்கப் போகிறார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவருவற்கான எர்டோகானின்
திட்டங்கள் 'சிம்மாசனம் இல்லாத சுல்தான் இராச்சியம்' ஒன்றுக்கான சாதனமாகப்
போகிறது என்று தேசியவாத இயக்கக் கட்சியின் தலைவரான டெவ்லெற் பாஹ் செலி ஒரு
தடவை எச்சரிக்கை செய்திருந்தார். அதே சுல்தான் இராச்சியத்தை
உருவாக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்களை இப்போது அதே பாஹ் செலி கூட
ஆதரிக்கின்றார் என்பதுதான் இங்கு விசித்திரம்.
இந்த ‘சுல்தான் இராச்சியம்’ துருக்கியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கப் போவது
மாத்திரமல்ல. ஒரு அரசியல் ஒழுங்கு முறையை அதற்குள் இருந்து கொண்டே எவ்வாறு
கவிழ்ப்பது என்ற உதாரணத்தை உலகின் வேறு பகுதிகளில் வளர்ந்து
கொண்டிருக்கின்ற (மற்றவர்களின் கருத்துகளை மதிக்காத) தேசியவாத
இயக்கங்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் போகின்றது.
ஸ்ரான்லி ஜொனி
Best eCOGRA Sportsbook Review & Welcome Bonus 2021 - CA
ReplyDeleteLooking for an eCOGRA bsjeon.net Sportsbook Bonus? At septcasino this eCOGRA Sportsbook review, we're 토토사이트 talking deccasino about a variety of ECCOGRA sportsbook wooricasinos.info promotions.