Sunday, 23 July 2017

மாற்றுத்தலைமை சாத்தியமா? (சமகாலப் பார்வை)

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர்.



தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த வெற்றிடம் நல்லாட்சி அரசாங்கம் உருவாகிய சில மாதங்களிலேயே தென்படத் தொடங்கிவிட்டது. ஆயினும், இப்போது அது, பளிச்சென பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது.

மிதவாத அரசியல் கட்சியாகிய தமிழரசுக் கட்சியும், ஆயுதமேந்திப் போராடி, பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பிய ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளும் இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. தமிழ்காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரண்டு மிதவாத கட்சிகளும் இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்புக்கு வெளியில் அந்தக் கட்சிகள் இரண்டும் செயற்பட்டு வருகின்றன.

எதிர்ப்பு அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இப்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் ஓர் அரசியல் அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியை முதன்மைக் கட்சியாகவும், தலைமைக் கட்சியாகவும் கொண்டிருக்கின்றது. ஆயினும், ஏனைய கட்சிகளுடன் அந்தக் கட்சி உள்ளக ஜனநாயக வழிமுறைகளில் நெருங்கிச் செயற்படுவதாகத் தெரியவில்லை. இதனால், அந்தத் தலைமையிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. கூட்டமைப்புக்குள் அந்தக் கட்சி சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்கின்றது.. ஏனைய கட்சிகளை அது சமமாக நடத்துவதில்லை என்பது போன்ற அதிருப்திகளும், குற்றச்சாட்டுக்களும் தமிழரசுக் கட்சி மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

அதிருப்தியான உணர்வுகளைக் கொண்டிருக்கின்ற போதிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஏனைய கட்சிகள் அதுபற்றி வெளிப்படையாக கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டங்களிலோ அல்லது கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டங்களிலோ கருத்துக்களை முன் வைப்பதில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி மாத்திரமே வெளிப்படையாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றது.
இதனால், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியே கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற கட்சி என்ற கண்டனத்திற்கும் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கின்றது. இந்தக் கட்சியின் கருத்துக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது, தமிழரசுக் கட்சி அந்தக் கோரிக்கையை உள்ளூர விரும்பியிருக்கவில்லை. எனவே, கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய அந்தக் கட்சி, பதிவு கோரிக்கையை பெரிதுபடுத்தாமல், அப்போதைக்கு அப்போது சில சாக்கு போக்குகளைக் கூறி வந்தது. காலம் கடந்து கொண்டிருந்த போதிலும், கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவிழந்து போகவில்லை. அது வேகம் பெறத் தொடங்கியதையடுத்து, இலைமறை காயைப் போல கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற தனது நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தது.

கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கட்சியாக உறுதியான கட்டமைப்புக்களுடன் கட்டியெழுப்பி, அதனை தேர்தல்கள் செயலகத்தில் தனியானதொரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும், அந்த கோரிக்கை, கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியினால் உரிய முறையில் கையாளப்படவில்லை. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மாற்றுத்தலைமைக்கான சிந்தனை

கூட்டமைப்பை தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உரிய முறையில் கவனிக்கப்படாததையடுத்து, கூட்டமைப்புக்கான மாற்றுத் தலைமை குறித்த சிந்தனை முன்னைய ஆட்சிக் காலத்திலேயே உருவாகியிருந்தது.

அது மட்டுமல்லாமல், தேர்தல் காலத்தில் ஆசனப் பங்கீடுகளில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைமை, கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்திய போக்கு, பொதுப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏனைய கட்சிகளுடன் உள்ளார்ந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளாத போக்கு என்பனவற்றினால் கூட்டமைப்புத் தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. அந்த அதிருப்தியே மாற்றுத்தலைமை குறித்த சிந்தனைக்கு வித்திட்டிருந்தது. ஆனாலும், மாற்றுத் தலைமையை உருவாக்குகின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணியில், கூட்டமைப்பின் தலைமை நிபந்தனையற்ற ஆதரவை வழங்க உத்தேசித்திருந்தது. ஆனாலும், ஏனைய கட்சிகள் அதனை முழுமையாக விரும்பியிராத நிலையிலேயே புதிய அரசாங்கத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவளிக்கப்பட்டிருக்கின்றது. புதிய அரசாங்கத்தை உருவாக்கிய சிற்பிகளாகிய ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அப்போதைய ஜனாதிபதி தேர்தலின் ஜனாதிபதி வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீது நம்பிக்கை இருக்கின்றது.

அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்காக அவர்கள் உறுதியாகச் செயற்படுவார்கள் என்று தலைவர் இரா.சம்பந்தன் அப்போது ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையையும் அவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அனைவரும் பொறுமையாகவும், ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.

ஆனால் அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்ததா இல்லையா என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவருடைய உறுதியான எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லையே என ஏனைய தமிழ்க் கட்சியினரும், தமிழ் மக்களும் ஏமாற்றத்தில் மூழ்கியிருந்தனர்.

தொடர்ந்து, தேவைக்கு அதிகமான அளவில் இராணுவத்தினர், தொடர்ந்து வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை, இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை, இதனால், இடம்பெயர்ந்த நிலையில் நீண்ட காலமாக சொந்த இடங்களில் மீள் குடியேற முடியாமல் இருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தவிக்க நேர்ந்துள்ளமை, உத்தரவாதம் அளித்தும்கூட, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கோரிக்கைகளுக்கு பொறுப்புக் கூறாமை போன்ற எரியும் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் நல்லாட்சி அரசாங்கத்தில் தீர்வு காணப்படாமையும் கூட்டமைப்பின் தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தியும் ஏமாற்றமும்

முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாமல், நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் அவலங்களையும், அவர்களின் மன ஓட்டங்களையும் புரிந்து கொண்டு அவர்களுடைய பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்த்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் முறையாக நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசாங்கத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திடமிருந்த காணிகளின் விடுவிப்பு, இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கால எல்லை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் களத்தில் வேட்பாளராக இருந்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்தில் காணப்பட்டிருந்த காணாமல் போயுள்ள சிறுமிகள் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால அளித்த வாக்குறுதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, காணாமல் போனவர்களின் உறவினர்கள், வீதியில் இறங்கி நடத்தி வருகின்ற போராட்டம், கேப்பாப்புலவில் இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக, படை முகாம் எதிரில் இடம்பெயர்ந்த மக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் என்பவற்றுக்கு உரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துவிட்டது. போராட்டத்திற்கான தலைமையை வழங்காத போதிலும், அந்தப் பிரச்சினை குறித்து ஆக்கபூர்வமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்கு, அரசாங்கத்துடன் நல்லிணக்க முறையில் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தவறிவிட்டதே என்ற அந்த மக்கள் கொண்டிருக்கின்ற ஏமாற்றமும்கூட, மறைமுகமாக மாற்றுத்தலைமைக்கான சிந்தனையைத் தூண்டிவிட்டுள்ளது.

அதேவேளை, மதச்சார்பற்ற நிலையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறையை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வு என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனமாகும்.

ஆனால், இப்போது புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே மேன்மையான இடமளிக்கப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்க மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். இவ்வாறு பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர், அத்தகைய முதன்மை இடத்தை தலைவர் சம்பந்தன் எதிர்க்கமாட்டார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டிருக்கின்றார்.

ஒற்றையாட்சியும் பௌத்த மதத்திற்கு மேன்மையான இடமும் புதிய அரசியலமைப்பில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதிபட கூறியிருக்கின்றார்.

இதனால், தேர்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்த அரசியல் யதார்த்தத்தை அவர்களின் முன்னால் ஏற்றுக்கொள்வதற்குப் பின்னடித்து வருகின்றது. புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள், அது தொடர்பான பேச்சுக்கள் – கலந்துரையாடல்கள் முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதான தோற்றத்தையே கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தியிருந்தது.

வளர்ச்சியை நோக்கிய மாற்றம்

புதிய அரசியலமைப்புக்கு பௌத்த மகாநாயக்கர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்திற்கான முதலிடம் என்பன குறித்து, அரச தலைவர்கள் பௌத்த சிங்கள தீவிரவாதிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இதுவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதுடன், மாற்றுத் தலைமைக்கான சிந்தனைக்கு உரமேற்றியிருக்கின்றது.

இவ்வாறு பல கோணங்களிலும் பல விடயங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தி மேலோங்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருந்த போதிலும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையே, மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கான செயற்பாட்டை முதன்முறையாக வீதிக்கு இழுத்து வந்திருந்தது.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தீவிரமாக முன்னெடுக்கப்படுமேயானால், தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று பங்காளிக்கட்சிகளும் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க நேரிடும் என்று அந்த மூன்று கட்சிகளும் பகிரங்கமாக எச்சரிக்கை செய்வதற்கு மாற்றுத் தலைமை குறித்த சிந்தனை போக்கே அடிப்படையாக அமைந்திருந்தது என்றே கூற வேண்டும்.

அதேநேரம், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை, வடமாகாண சபை உறுப்பினர்களான தமிழரசுக் கட்சியினர், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆளுநரிடம் கையளித்ததையடுத்து, இளைஞர் சமூகம் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு ஆதரவாகவும் கிளர்ந்தெழுந்து பேரணி நடத்தியிருந்தது. பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கையை ஏற்று யாழ்நகரம் முழுமையாகக் கடையடைப்பு செய்து நாளாந்த நடவடிக்கைகளைப் புறக்கணித்திருந்தது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்கு எதிரான உணர்வைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையே தூண்டுகோலாக அமைந்திருந்தது என்று கருதுவதற்கும் இடமுண்டு. மாற்றுத்தலைமைக்கான சிந்தனை என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயல் அரசியல் ரீதியான வலு குறைந்த போக்கின் காரணமாகவே எழுந்துள்ளது. போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றத்தைக் காணவில்லை. மாறாக பிரச்சினைகள் அதிகரிக்கின்ற ஒரு போக்கே தோற்றம் பெற்றிருக்கின்றது.

வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பற்றி தேர்தலின்போது கொள்கை விளக்கப் பிரகடனம் செய்துள்ள போதிலும், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்தவில்லை.

நெடுங்கேணி, வவுனியா, செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் அல்லது சிங்களக் கிராமங்களின் உள்ளடக்கமானது, இந்தப் பிரதேச சபைகளில் சிங்களப் பிரதிநிதித்துவத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது பிரதேச சபைகளில் சிங்களப் பிரதிநித்துவத்தை உட்புகுத்துவதற்கான முயற்சியாகும்.

வவுனியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதேச செலயகப் பிரிவுகளில் சிங்களக் கிராமங்களை உள்ளடக்குவதன் ஊடாக, வன்னி தேர்தல் தொகுதியில் அல்லது, வவுனியா தேர்தல் தொகுதியில் வரும் பொதுத் தேர்தல்களில், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

இந்த மாவட்டத்தில் ஏற்கனவே சிங்கள மக்களுக்கென தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவு இருக்கின்றது. அது முழுக்க முழுக்க சிங்கள மக்களுக்கே உரியதாகும். அந்தப் பிரதேச சபையில் சிங்கள பிரதிநிதிகளே அங்கம் வகிக்கின்றார்கள். அவ்வாறு இருக்கத்தக்கதாக இந்த மாவட்டத்தின் ஏனைய மூன்று தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காகவே, சிங்கள மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் செயற்படுகின்ற அதேவேளை, அரசாங்கத்துடன் நல்லிணக்க அடிப்படையில் இணைந்து செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, தமிழர் பிரதேசங்களில் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகளை அமைப்பதன் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மத ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் என்பவற்றில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர்.

கூட்டமைப்பின் தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அதன் விளைவாக எழுந்துள்ள மாற்றுத் தலைமை குறித்த சிந்தனையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கான ஆதங்கத்தின் வெளிப்பாடே அல்லாமல், கூட்டமைப்பை இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் தலைமையையும் இல்லாமல் செய்வதை எவரும் இலக்காகக் கொள்ளவில்லை. கூட்டமைப்பும் கூட்டமைப்பின் தலைமயும் இறுக்கமான ஒரு கட்டமைப்பாக வினைத்திறன் மிக்க வகையில் செயலாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தையே இ ்த திருப்தி உணர்வுகளும், மாற்றுத் தலைமைக்கான சிந்தனையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

எனவேதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன என்ற கேள்வியும், அதனையொட்டிய சிந்தனையும் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.


செல்வரட்னம் சிறிதரன்

Saturday, 15 July 2017

தமிழீழத் தனியரசா? உழுத்துப் போன சமஸ்டியா?

2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களுக்குச் சமஸ்டித் தீர்வு கிட்டிவிடும் என்று 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசி, பின்னர் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டித் தீர்வைத் தேடுவதாகக் கதையளந்து ஸ்கொட்லாந்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு, இப்பொழுது சமஸ்டி என்ற பெயரைக் கொண்டிருக்காத சமஸ்டித் தீர்வு பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக தமிழர்களுக்கு கிட்டப் போகின்றது என்று புதிய புழுகு மூட்டையை சம்பந்தரின் பட்டத்து இளவரசர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவிழ்த்து விட்டுள்ளார்.





மறுபுறத்தில், பௌத்த பீடாதிபதிகளின் ஒப்புதல் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட மாட்டாது என்றும், தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் வழங்கப்பட்டுள்ள மேலாதிக்க உரிமை எந்தச் சந்தர்ப்பத்திலும் மீளப்பெறப்பட மாட்டாது என்றும் மைத்திரிபால சிறீசேன சூளுரைத்துள்ளார்.

இந்த இருவரின் பேச்சுக்களைப் பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகின்றது. தன்னைத் தேர்ந்தெடுத்த சிங்கள மக்களுக்கு விசுவாசமாக மைத்திரியும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திய மக்களுக்கு இரண்டகம் விளைவிப்பவராக சுமந்திரனும் இருக்கின்றார்கள் என்பதுதான் அது.

சரி, இவையெல்லாம் எதிர்பார்த்தவை தான். யதார்த்தம் அப்படியிருக்கும் பொழுது, தமிழரின் தாகம் சமஸ்டித் தாயகம் என்ற பாணியில் எம்மவர்களில் பலர் இப்பொழுதும் உணர்ச்சிவசப்பட்டு நிற்பது வேடிக்கையானது. இவ்விடத்தில் ‘பெடரல் (சமஸ்டி), பெடரல் என்று தந்தை செல்வாவின் காலத்திலிருந்து நாங்கள் இடறல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’ என்று 2005ஆம் ஆண்டு இலண்டன் அலெக்சாண்ட்ரா மாளிகையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் உரையாற்றும் பொழுது எதுகை மோனையில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறியது தான் நினைவுக்கு வருகின்றது.

கடந்த அறுபத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்தீவைக் கொதிநிலையில் வைத்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஸ்டி ஆட்சிமுறையை ஒரேயொரு தடவை மட்டும்தான் சிங்கள ஆட்சியாளர்களும், மேற்குலகத் இராசதந்திரிகளும் முன்வைத்திருக்கின்றார்கள். அது நடந்தது 2002ஆம் ஆண்டில். யாழ் குடாநாட்டின் தென்புலம், வன்னிப்பெருநிலம், மூதூர் கிழக்கு, வாகரை, படுவான்கரை ஆகிய மக்கள் செறிந்து வாழும் நிலப்பகுதிகளையும், காட்டுப்புறங்களை அண்டிய இதர பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்து, அங்கு நடைமுறை அரசை நிர்வகித்து வந்த பொழுதுதான் சமஸ்டி பற்றி சிங்களத் தலைவர்களும், மேற்குலக இராசதந்திரிகளும் பேசினார்கள்.

அதற்கு முதல் சமஸ்டி பற்றிச் சிங்களத் தலைவர்களும் சரி, மேற்குலக இராசதந்திரிகளும் சரி பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. தமிழரசுக் கட்சி என்று தமிழில் பெயர்சூட்டியவாறு, ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி என்ற பெயரில் இயங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் சமஸ்டிக் கட்சிதான், இலங்கையின் ஆட்சியதிகாரத்தை சிங்களவர்களிடம் ஆங்கிலேயர்கள் கையளித்த பின்னரான காலப்பகுதியில் சமஸ்டி பற்றிக் கதைத்தது. அன்றைய சிங்களத் தலைவர்களும் சரி, இலங்கையின் அரசுத் தலைவர் ஆசனத்தை அலங்கரித்த பிரித்தானிய முடியாட்சி பீடத்தின் பிரதிநிதிகளும் சரி, சமஸ்டி பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. சமஸ்டித் தீர்வுக்கான ஒப்பந்தம் என்று தமிழரசுக் கட்சியால் பரப்புரை செய்யப்பட்டு, இறுதியில் சொலமன் பண்டாரநாயக்காவால் கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம் கூட ஒரு மாவட்ட சபைக்குக் குறைவான அதிகாரங்களைக் கொண்ட கட்டமைப்பிற்கான ஒப்பந்தம்தான். அதில் சமஸ்டி என்று கூறும் அளவிற்கு அதிகாரங்கள் இருந்ததில்லை.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பொழுது கூட சமஸ்டி பற்றி அன்றைய சிங்கள அதிபர் ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனாவும் சரி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் சரி மூச்சு விடவில்லை. ஏன், 1989ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ரணசிங்க பிரேமதாசாவின் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கூட சமஸ்டி பற்றி பேசப்படவில்லை.

1992ஆம் ஆண்டின் இறுதியிலும், 1993ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணத்திற்கு சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியையும், கிறிஸ்துவ ஆயர்களையும் தூது அனுப்பிய பொழுது மட்டும், ஆயுதங்களைக் கீழே போடுவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கினால் சமஸ்டி பற்றி சிந்திக்கலாம் என்று பிரேமதாசா குசுகுசுத்தார்.

அவ்வளவுதான். ஏன் டிங்கிரி பண்டா விஜேதுங்கவின் அரசாங்கத்திற்கு ஆப்பு வைத்து விட்டு, சமாதானப் புறாவாக 1994ஆம் ஆண்டு ஆவணி மாதம் சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டில் ஏறிய சந்திரிகா அம்மையார் கூட சமஸ்டி பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அன்றைய கள யதார்த்தத்தின் அடிப்படையில், தமிழர் தேசத்தின் தன்னாட்சியுரிமையையும், வடக்குக் கிழக்கு மாநிலங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளும் தீர்வைப் பரிசீலனை செய்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறிய பொழுது கூட, சமஸ்டி பற்றிப் பார்க்கலாம், ஆனால் அதிகாரப் பரவலாக்கம் தான் சிறந்த தீர்வு என்று கூறியவர் சந்திரிகா அம்மையார்.

அதன் பிறகு சமஸ்டி பற்றி எந்தச் சந்தர்ப்பத்தில் அம்மையார் பேசியதில்லை. படைவலுச் சமநிலையின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பொழுது, சமஸ்டி முறையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இரு தரப்பினருக்கும் அன்றைய அமெரிக்கத் தூதுவர் அஸ்லி வில்ஸ் அவர்களை அறிவுரை கூறினார்.

வோசிங்டனில் இருந்து வரும் அறிவுரையே தெய்வ வாக்கு என்று அன்று பிரதம மந்திரி பதவியில் ஊசலாடிக் கொண்டிருந்த ரணிலும், சமஸ்டி முறையின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு இணங்கினார். சமஸ்டிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளை முடக்கி விட்டால், ஆயுதப் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தை மேடையில் வைத்தே முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று அன்று அமெரிக்கா நம்பியது. மறுபுறத்தில் எந்தக் காலத்திலும் சமஸ்டிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சமஸ்டியில் தான் ஆர்வமாக இருப்பது போன்று ரணில் நாடகமாடினார். எது எப்படியோ, இரண்டு தரப்பையும் எப்படியாவது சமஸ்டிக்குள் முடக்கி விட்டால், ஒரு நீண்ட, நெடிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு கண்ட பெருமை தம்மை வந்து சேரும் என்று அன்று நோர்வே ஆணித்தரமாக நம்பியது.
   
இதுவே சமஸ்டி முறைகளை ஆராய்ந்து பார்க்கும் முடிவை ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் எடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தள்ளியது. ஒஸ்லோ பேச்சுக்களின் பொழுது சமஸ்டி முறையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரு தரப்பும் இணங்குவதாக அறிவிக்கும் வாசகங்களைக் கொண்ட அறிக்கைக்கான வரைபே முதலில் தேசத்தின் குரல் பாலா அண்ணையிடம் நோர்வே அனுசரணையாளர்களால் கையளிக்கப்பட்டது. எனினும் அவ்வரைபை நிராகரித்த பாலா அண்ணை, சமஸ்டி முறைத் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கு மட்டும் இரு தரப்பும் இணங்குவதாக அறிவிக்கும் வாசங்களை உள்ளடக்கிய திருத்தம் செய்யப்பட்ட வரைபை நோர்வே அனுசரணையாளர்களிடம் கையளித்தார்.

அதன் பின்னர் கொழும்பில் இருந்து வெளிவரும் த சண்டே லீடர் பத்திரிகைக்கு செவ்வி வழங்கிய பாலா அண்ணை, இனப்பிரச்சினைக்கு எப்படியான சமஸ்டித் தீர்வை எவர் முன்வைத்தாலும், தமிழர்களின் தாயகம், தேசியம், பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய தன்னாட்சியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில், மத்தியுடன் தொடர்புடைய, அதே நேரத்தில் தனித்துவமான சட்டங்களையும், நீதித்துறையையும், காவல்துறையையும், ஆட்சிக் கட்டமைப்பையும், பாதுகாப்புப் படைக் கட்டமைப்பையும் கொண்ட சமஸ்டித் தீர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையும் என்று கூறினார்.

அப்பொழுது ரணில் எந்தப் பிரதிபலிப்புக்களையும் வெளியிடவில்லை. அஸ்லி வில்ஸ் தொடக்கம் ரிச்சார்ட் ஆமிட்ரேஜ் வரையான அமெரிக்கா இராசதந்திரிகளும் மௌனம் சம்மதம் என்ற கதையாக அமைதி காத்தார்கள். அன்று அவர்களின் குறி எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்திற்கான நிரந்தர முற்றுப்புள்ளியைப் பேச்சுவார்த்தை மேடையில் வைப்பது மட்டும்தான்.

இது பற்றி 16.03.2003 அன்று த சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு தேசத்தின் குரல் பாலா அண்ணை குறிப்பிட்டார்:

‘எந்தவொரு சமஸ்டித் தீர்வுக்கும் தொடர்ந்தேட்சியான (வடக்குக் கிழக்கு ஒன்றிணைந்த) தமிழர் தாயக நில அமைப்பு அடிப்படையானது. இதனை சிங்களவர்கள் ஏற்க மறுத்தால், சமஸ்டித் தீர்வு ஏற்படாது. அப்படி என்றால் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது. தமது தாயகத்தைத் தாமே ஆளும் அதிகபட்ச சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்குக் கிட்ட வேண்டும், அல்லது பிரிந்து சென்று சுதந்திரத் தமிழ் அரசை அமைப்பதற்கான புறச்சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எனது அவா. எனவே இவ்விடயத்தில் தாம் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை சிங்களவர்களே தீர்மானிக்க வேண்டும். அதேநேரத்தில் நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கின்றோம் என்பதை உலகிற்குக் காண்பிப்பதற்காக அமைதிப் பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்குபற்றுவதில் உறுதியாக உள்ளோம்.’

அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவிற்குத் தலைமை தாங்கிய பாலா அண்ணையிடம் ஒரு தெளிவான புரிதல் இருந்தது. சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கு அன்றைய காலகட்டத்தில் ரணில் இணங்கியிருந்தாலும், இறுதியில் சமஸ்டித் தீர்வுக்கு மட்டுமன்றி எந்த விதமான அரசியல் தீர்வுக்கும் ரணிலும் சரி, ஏனைய சிங்களத் தலைவர்களும் சரி இணங்கப் போவதில்லை என்பதுதான் அது.

அதுவும் கூட தமிழர்களுக்கு அனுகூலமாகவே அமையும் என்பது அவரது பார்வையாக இருந்தது. ஏனென்றால், சமஸ்டித் தீர்வில் ஆர்வமாக இருப்பதாக அக்காலகட்டத்தில் நாடகமாடிக் கொண்டிருந்த ரணில் அரசாங்கத்தின் சுயரூபம் வெளிப்படும் பொழுது, சமஸ்டி என்ற மாயையில் இருந்து உலகம் வெளியில் வருவதோடு, பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என்று நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கப்படும் என்பதே அவரது கணிப்பாக இருந்தது. ஆனாலும் அப்படியான சூழல் கனியும் பொழுது, அதனை சாத்தியப்படுத்துவதற்கு தமிழர் தரப்பு ஆயுத பலத்துடன் இருக்க வேண்டும் என்பதிலும் பாலா அண்ணை தெளிவாக இருந்தார். அதன் காரணமாகவே ஆயுதக் களைவு பற்றிப் பேச்சு எழுந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவற்றை பாலா அண்ணை அடியோடு நிராகரித்தார். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அடித்துக் கூறினார்: அப்படியான நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட்டாலும், அவ் அரசியல் தீர்வு நிலைத்து நிற்பதற்குத் தமிழர்களுக்குத் தனியான பாதுகாப்புப் படைக் கட்டமைப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.

அன்று சமஸ்டி நாடகமாடிய ரணிலின் சுயரூபம் இன்று வெளிப்பட்டு விட்டது. ரணில் மட்டுமன்றி, ரணிலுக்குப் பின்னரான எந்தச் சிங்களத் தலைவர்களும் இப்பொழுது சமஸ்டி பற்றிப் பேசுவதில்லை. இன்னொரு விதத்தில் கூறுவதானால், பிரிவினையைக் கோரும் தெரிவை மட்டுமே இப்பொழுது தமிழர்களுக்கு சிங்கள தேசம் விட்டு வைத்துள்ளது. அதாவது சமஸ்டியை சிங்களவர்கள் ஏற்க மறுத்தால் தமிழர்கள் பிரிந்து செல்வதற்கான புறச்சூழல் தோன்றும் என்று அன்று பாலா அண்ணை கூறியது நிதர்சனமாகி விட்டது. அதாவது சமஸ்டி பற்றி நாம் பேசிய காலம் கடந்து விட்டது. அதுவும் முள்ளிவாய்க்காவில் ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை சிங்களம் காவு கொண்ட பொழுதே சமஸ்டிக்கான சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது. யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்;’ என்று போராடிய நாம், இன்று ‘தமிழரின் தாகம் சமஸ்டித் தாயகம்’ என்று பேசுவது, மடிந்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் புரியும் மிகப் பெரும் துரோகமாகும்.

இப்பொழுது இருப்பது ஒரேயொரு குறைதான். கடந்த எட்டு ஆண்டுகளாகக் கனிந்திருக்கும் பிரிவினைக்கான புறச்சூழலைப் பயன்படுத்திப் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான ஆயுதப் பலம் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் அந்தக் குறை. அதற்காகப் பிரிவினைக்கான புறச்சூழலை உதாசீனம் செய்து விட்டு, சமஸ்டிக் கனவில் நாம் மூழ்கியிருக்க முடியாது.

பிரிந்து சென்று தனியரசு அமைப்பது ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. அதனை மறுதலித்துக் குற்றச்செயலாக்கும் ஒரு அரசு சனநாயக அரசாகக் கருதப்பட முடியாதது. அந்த வகையில் ஆறாம் திருத்தச் சட்டம் என்ற இரும்புக் கரம் கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை மறுதலித்து, அதனைக் குற்றச்செயலாக்கும் சிங்கள அரசு, உலகின் ஏனைய சனநாயக அரசுகளுடன் சரியாசனம் அமர்வதற்குத் தகுதியற்றது.

எனவே, உழுத்துப் போன சமஸ்டியைக் கிடப்பில் போட்டு விட்டு, தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதே இன்று நாம் செய்யக்கூடிய அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான செயற்பாடாகும்.


நன்றி
ஈழமுரசு

Sunday, 9 July 2017

நான் சகாதேவனாக இருந்தால் தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற...

மகாபாரதப் போரை  நிறுத்துவதற்கு ஏதும் வழியுண்டோ என்ற கேள்வி எழுகிறது. விடை தெரியாமல் பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

போர் மூண்டால் அழிவுதான் மிச்சம் என்பதை தர்மத்தின்பால் நிற்போர் உணர்கின்றனர்.

எனினும் அதர்மத்தவர்கள் போர்தான் வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது தெரிகிறது.

போரைத் தடுப்பதற்கான எத்தனையோ உபாயங்கள் கையாளப்பட்டன. தூது முயற்சிகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள்,  விட்டுக் கொடுப்புக்கள் என எதுவும் செல்லுபடியற்றதாக குரு சேத்திரப் போரைத் தவிர வேறு வழியில்லை என்றாயிற்று.

இந்நிலையில் சகாதேவன் மட்டும் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளான். பாண்டவர்களில் அவன்தான் சோதிடன்.

போரை நிறுத்த ஓர் உபாயம் கூறலாம் என்கிறான். என்ன உபாயம்? கண்ண பரமாத் மாவை கட்டிப் போட்டால் பாரதப் போரை நிறுத் தலாம் என்கிறான் அவன்.

பாராளக் கன்னன் இகல் பார்த்தனை 
முன் கொன்று அணங்கின் 
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி 
நேராகக் கைபிடித்து நின்னையும் நான்  
கட்டுவேனால் வாராமல் காக்கலாம் மாபாரதம் என்பது சகாதேவனின் அறிவுரை.

பாரதப் போரை நடத்தி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதுதான் கண்ண பரமாத்மாவின் கடமை. அதைச் செய்யாமல் விடுவது எங்ஙனம்? ஆகையால் போர் மூழ்கிறது.

அட, இதை இவ்விடத்தில்  ஏன் சொல்கிறீர்கள்  என்று நீங்கள் கேட்கலாம். அவ்வாறான கேள்விக்குப் பதில் உண்டு.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை  ஆளுநரிடம் கையளித்ததன் மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான மக்கள் செல்வாக்கு எக்காலத்திலும் இல்லாதவாறு வீழ்ச்சி கண்டுள்ளது.

தமிழர்களின் பழமையான அரசியல் கட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அனைவருக்கும் கவலை தரக் கூடியதுதான்.
ஆனால் என்ன செய்வது! அந்தக் கட்சியின் எதிர்காலம் பற்றி இம்மியும் சிந்திக்காமல் தங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்பவர்கள் அந்தக் கட்சியில் இருந்து மேலாதிக்கம் செய்யும் போது யார்தான் என்ன செய்ய முடியும்?

தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துப் பற்றி மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் நன்கு உணர்ந்துள்ளனர்.

கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கடும் முயற்சி செய்யும் ஒவ்வொரு கணமும் அவர்களின் முயற்சியை சாண் ஏற முழம் சறுக்குவது போல வடக்கு மாகாண சபையில் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை அமைகிறது.

இஃது தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பை மேன்மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி வீழ்ச்சியடைவது விதியாயிற்றோ என்று எண்ணினாலும் அந்தக் கட்சியைக் காப்பாற்ற ஒரு வழியுண்டு. 

அது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படுவதாக மட்டுமே இருக்க முடியும்.
 
 
courtesy:valampuri