Tuesday, 15 August 2017

70 ஆண்டுகளில் இந்திய சமூகம்! வளர்ந்ததும்... இழந்ததும்..!

’70 வயது சுதந்திர இந்தியாவும் அதன் சமூகமும்'...என்றவுடன் ஒரு இந்தியச் சாமானியனுக்கு எழும் கேள்வி, சுதந்திரம் என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? என்பதுதான். 




ஒரு பக்கம் மொபைல் போனை ஆராய்ந்து கொண்டும், அதே மொபைலில் உத்தரப்பிரதேசத்தில் இறந்த 63 குழந்தைகளுக்கு நொடிப்பொழுதில் முகநூலில் அஞ்சலி செய்துவிட்டும் கடக்கும் அவசர சமூகத்துக்கு இது போன்ற கேள்விகளும் விளக்கங்களும் உண்மையிலேயே தேவைப்படுமா?. . கார்ப்பரேட் என்னும் தனி உலகத்திற்கு இது தேவையற்ற ஒன்றுதான்.  ஆனால் 70 ஆண்டுகள் கடந்தும் முழுவதும் கட்டமைக்கப்படாத அதே சமயம் ஏதோ ஒன்றுக்காக இன்னும் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கும் காஷ்மீர் முதல் கதிராமங்கலம் வரை  நாட்டில் விரவிக்கிடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக களத்தில் நிற்கும் அனைத்து உயிர்களுக்கும் இது முக்கியத் தேவையாக இருக்கிறது.

சமூகம் என்னும் கட்டமைப்பு ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என மூன்று பாலினமும் ஒரு சேரக் கட்டமைக்கப்படுவது. இந்த கட்டமைப்பில் ஒன்றன் இயங்குதலும் சார்ந்திருத்தலும் மற்றொன்றை பாதிக்காத வகையில் அமையும் சுய வளர்ச்சி நிலைதான் சுதந்திரம் என்பது. ’சிஸ்டம்’ சரி இல்லை என்று ரஜினி தொடங்கி சாமானியன் வரை புலம்புவதன் அடிப்படை இந்த சமூகக் கட்டமைப்பில் உள்ள விரிசல்தான். 

 பெண்களுக்கான பெருவெளி

“பாரத் மாதா கீ ஜே!” என மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரிக்கச் சொல்லும் நாட்டில் பெண்களுக்கு இந்த சமூகம் கடந்த காலங்களில் எப்படியாக இருந்துள்ளது?.. கல்வி, வேலைவாய்ப்பு என்று ஒருபக்கம் பெண்களின் வளர்ச்சி நிலை மெச்சப்பட்டாலும் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பாலியல் வன்கொடுமை ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.  டெக்னாலஜி யுகத்திலும் 'சைபர் புல்லிங்' ரூபத்தில் வந்து சேருகிறது. அரசியலில் இருக்கும் தனிநபராக இருந்தாலும் சரி, நிறுவனப் பெரும்புள்ளியாக இருந்தாலும். 

களப்போராளியாக இருந்தாலும் ‘பெண்’ பாலியல் அடையாளமாகவே பார்க்கப்படுவதும் அதையே அவர்களது பலவீனமான பிம்பமாக்கி ஒடுக்குவதும் சாபம்தான். பெண்களைப் பொறுத்தவரை இந்த பாலியல் சார்ந்த அடையாளப்படுத்துதல்தான் விரிசலுக்கான அடிப்படைக் காரணமே. பாலியல் அடையாளம் கடந்த சுதந்திரம் நிச்சயம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அம்பேத்கர் சொன்னது போல  முன்னேற்றமடைந்த சமுதாயம் என்பது அதன் பெண்களின் வளர்ச்சிநிலை பொருத்துதான் இருக்கிறது.    

ஆண்களின் தேவையும்...செய்ய வேண்டியதும்...

குடும்பமா...வீட்டின் தலைவர்! நிறுவனமா..அதன் தலைவர்! கட்சியா.. அந்தக் கட்சியின் தலைவர்  என சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி பெரும்பாலும் தலைமை பொறுப்புகளுக்கு ஆண்களே முன்னிறுத்தப்பட்ட சூழலில் தற்போது சமூகத்தின் விரிசல்களை ஒட்டவைப்பதன் பெரும்பங்கு அவர்களுடையதாகிறது. 

எனக்குத் தெரிந்த ஒரு குடும்ப நண்பர் வங்கி ஊழியராக பணியாற்றிவந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். திருமணம் ஆனதும் மற்ற எல்லாப் பெண்களையும் போல அந்தப் பெண்ணும் வேலையை விட வேண்டிய சூழல். ஹோம் மேக்கராக வலம் வந்தவர் தற்போது இரண்டு பிள்ளைகளுக்குத் தாய். குழந்தைகள் வளர்ந்து சற்று பெரியபிள்ளைகளாகிவிட்ட சூழலில் தற்போது அந்தப் பெண் வேலைக்குச் செல்ல விருப்பப்படுகிறார், ஆனால் அந்த நண்பரோ, ‘மனைவியை வேலைக்கு அனுப்ப விருப்பம்தான் ஆனால் குழந்தைகளை வேறு ஒருவரிடம் விட்டு வளர்க்க வேண்டுமே அதற்கு மனது ஒப்பவில்லை’ என்கிறார். 

குடும்பத்தின் தலைவர் அங்கே நண்பர்தான் என்கிற அடிப்படையில் இந்தச் சூழலை சரிசெய்ய வேண்டியது அவரது கடமையாகிறது. ஒன்று தன் மனைவி வேலைக்குச் செல்கிறாரோ இல்லையோ ஆனால் சுதந்திர வெளியை உறுதி செய்வது. மற்றொன்று, பொருளாதாரம் சார்ந்து இயங்கும் இந்தியக் குடும்பக் கட்டமைப்புகளில் ஒருவருடைய வருமானம் என்பது பற்றாக்குறை வாழ்க்கை என்பதை உணர்வது.

பொதுத் துறையில் தனியாரிலும் எண்ணிக்கை அடிப்படையில் ஊழியர்களில் ஆண்களே அதிகம். வேலைவாய்ப்பு கேட்டு காத்திருப்பவர்கள் எண்ணிக்கையிலும் அதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி 2017ன் இறுதியில் மட்டும் 17.8 மில்லியன் பேர் வேலைவாய்ப்பற்று இருப்பார்கள் என்று கணக்கிடப்படுகிறது. இவர்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் ஆண்கள். வேலைவாய்ப்பற்ற சூழல்தான் இங்கே பெரும்பாலான குற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது. இதற்கு ஒருபுறம் அதே ‘சிஸ்டம்’ காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் 1200க்கு 800க்கு மேல் மார்க் வாங்கிவிட்டாலே அந்த நபர் பொறியியல்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதும் காரணமாகிறது. இங்கேதான் கல்விச் சுதந்திரமும் அதன் வழி தனிநபர் வேலைவாய்ப்பை உறுதி செய்வதும் அவசியமாகிறது. சுதந்திர இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களுக்கு பொருளாதாரச் சிக்கல் தீர்ந்தாலே பாதிச் சிக்கல் தீர்ந்தது என்பதே நிதர்சனம்.  


எதிர்கால சந்ததிகளின் எதிர்காலத்தை எப்படிக் கட்டமைக்கப் போகிறோம்?

உத்தரப்பிரதேசத்தில் 63 குழந்தைகளின் பரிதாப இறப்புடன்தான் 70 ம் ஆண்டு சுதந்திரத்தை, சமூகச் சூழலை நாடு கடந்திருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு இங்கே அந்த நிலையில்தான் இருக்கிறது. மற்றொரு பக்கம் பாலியல் அடையாளங்கள் சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பரிதாபமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.தேசிய ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014ல் மட்டும் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக இங்கே  6816 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உண்மையில் இந்தியாவின் எதிர்காலங்களின் கழுத்தை நெறிக்கின்றோமா நாம்?. .  பாடத்திட்ட குளறுபடிகளாலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் கல்வி உரிமையும் குழந்தைகளுக்கு சரியாகச் சென்று சேர்வதில்லை. இதனால் இந்த சமூகக் கட்டமைப்பின் எதிர்கால முன்னேற்றம் என்பதும் ஒருவகையில் கேள்விக் குறியாகின்றது. கல்விச் சுதந்திரத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கான ’இரும்புச் சங்கிலி’ கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான அதே சமயம் பாதுகாப்புத் தன்மையுடைய ஒரு வளர்ப்புச் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. 

377ம் சட்டமே சுதந்திரத்தைப் பறிப்பதும்.. 

ஆண், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து விவாதிக்கும் அதே சமயம் இங்கே மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் குறித்தும் பேசவேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377, இயற்கைக்கு எதிராக நிகழும்  எந்த வித உடல்சார்ந்த இணக்கமும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என்று விவரிக்கிறது. அரசாங்கமே தண்டனைச் சட்டம் ஒன்றை உருவாக்கியிருப்பதுதான் சுதந்திரம் உண்மையிலேயே கிடைத்துவிட்டதா என்பதை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது.  பாலினங்களின் உரிமைகள் மற்றும் உடைமைகள் மீதான திணிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், தன்னுடைய  பாலினத்தையே தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இந்த தண்டனைச் சட்டத்தால் பாதிப்படைகிறது. 

அண்மையில் சென்னை மின்சார ரயிலில் எதிர்கொண்ட உண்மைச் சம்பவம். திருநங்கை கௌதமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். முதல் வகுப்பு கம்பார்ட்மென்டில் இருந்து இதைப் பார்த்த ஒரு போலீஸ்காரர், பிச்சை எடுக்கக் கூடாது என்று அவரைக் கூப்பிட்டு கண்டித்தார். அதற்கு அந்த திருநங்கை,“நாட்டுல கொலை, கொள்ளை கற்பழிப்புன்னு குத்தம் செய்யறவங்களை எல்லாம் விட்டுறுங்க. எங்க பொழப்பு இந்த பிச்சை எடுக்கறதுதான்னு எழுதி வைச்சிருக்கு. எங்கள போய் மிரட்டுறீங்க” என்று புலம்பியபடியே கண்ணீர் சிந்தினார். ரயிலில் பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றம் என்றாலும் அவர் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு சமூகக் கட்டமைப்பும் ஒரு வகையில் காரணம்தான். அவரின் அந்த நொடி நிமிடப் பேச்சு யோசிக்கச் செய்வதாய் இருந்தது. தன் பாலின அடையாளத்தால் பாதிப்படையாமல் இந்த சமூகத்தில் ஒரு பாதுகாப்பான சூழலில் அவர்கள் வாழ்ந்து வளர்ச்சியடைய என்று உறுதியேற்கப் போகிறது இந்த நாடு? 

ஆக, இங்கே முதலில் மதிக்கப்பட வேண்டியதும் உணரப்பட வேண்டியதும் தனிமனிதச் சுதந்திரம்தான். அதன் மீதான  தடைகளைக் கடந்துதான் ஆண்- பெண் - திருநங்கைகள் உள்ளடக்கிய பாலின சமத்துவம் பேசப்பட வேண்டும். அந்த சமத்துவத்திற்கு மேலும் இடையூறாக இருக்கும்  சாதிய அடையாளங்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும். அதன் பிறகு கொண்டாடப்படும் சுதந்திர தினமே நாட்டின் முதல் சுதந்திர தினமாகவும் இருக்க முடியும்

பூகோள புலனாய்வு அமைப்புகளின் விளையாட்டுக் களமாகும் சிறிலங்கா

இந்திய மாக்கடலில் சீனா தனது கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் ஆபிரிக்காவுடனான வளர்ந்து வரும் தனது வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் தடங்கலுமற்ற பெற்றோலிய வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் தேவைப்படுகிறது.




எனினும் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இது அடுத்து வரும் தலைமுறையினர் வரை தொடரக்கூடிய பேரழிவாக உள்ளது.

சிறிலங்கா போன்ற நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற நாடொன்றில் அரசியல்வாதிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் அதிகாரத்துவ ஊழலிலும் ஈடுபடுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டமானது பல பில்லியன் டொலர் கடனில் மேற்கொள்ளப்பட்டதுடன் இது அவசியமற்றதொரு திட்டமாகவும் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமாகவும் காணப்படுகிறது.

1979 டிசம்பர் மாதம், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகள் மத்திய கிழக்குடன் யுத்தம் புரிவதில் தீவிரம் காண்பித்தன. ஆபிரிக்க நாடுகளுடன் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டதன் மூலமும் சீனா தனது உற்பத்திகளை விற்பதற்கான சந்தை வாய்ப்புக்களைத் தேடிக் கொண்டதற்கும் அப்பால் ஆபிரிக்காவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் சீனாவானது ஆபிரிக்க நாடுகளுக்குள் நுழைய ஆரம்பித்த அதேவேளையில் பெரியதொரு இஸ்ரேலை உருவாக்குவதே இந்த யுத்ததின் நோக்காக இருந்தது.

இதன் விளைவாக, ஆபிரிக்காவுடனான இஸ்ரேலின் வர்த்தகம் 2002ல் பத்து பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்ததுடன் 2006ல் இந்தத் தொகை 200 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. சீனாவின் நான்கு ரில்லியன் டொலர் வர்த்தகப் பொருட்கள் மற்றும் நாளாந்தம் ஏழு மில்லியன் பரல்கள் பெற்றோலியமும் இந்திய மாக்கடலின் ஊடாகவே கொண்டுசெல்லப்பட்டது. இதனால் இந்திய மாக்கடலானது சீனாவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

எனினும், மலாக்கா நீரிணையை விரோத சக்திகள் தடைசெய்து விடுவார்களோ என்கின்ற அச்சம் சீனாவிற்கு உள்ளது. இதனால் சீனாவானது தனது நீண்ட கால விசுவாசத்திற்குரிய நட்பு நாடான பாகிஸ்தானுடனான உறவை மேலும் பலப்படுத்தியுள்ளதுடன் இந்திய மாக்கடலின் ஊடாக மாற்று வர்த்தகப் பாதையையும் உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைத் திட்டத்தின் கீழ் 46 பில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

இத்திட்டமானது சீனா மற்றும் பாகிஸ்தானை விரைவான கடல் பாதையின் ஊடாகத் தொடர்புபடுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் சீனாவானது தெற்குப் பட்டுப்பாதை, மத்திய ஆசியப் பட்டுப்பாதை, 21ம் நூற்றாண்டிற்கான கடலோரப் பட்டுப்பாதை மற்றும் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை போன்ற திட்டங்களை ஒன்றிணைத்து வலைப்பின்னல் நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இது சீனாவின் ஒரு அணை, ஒரு பாதை எண்ணக்கருவிற்கு முக்கியமானதாகவும் ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 60 நாடுகளை இணைக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது.

இதில் சில திட்டங்கள் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக பேர்சியன் வளைகுடாவில் பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தை பாரிய நெடுஞ்சாலை மற்றும் தொடருந்துப் பாதைகளின் வலைப்பின்னலின் ஊடாகத் தொடர்புபடுத்தும் மூலோபாய முக்கியத்துவத்தை சீனா கொண்டுள்ளது. இதன் மூலம் துறைமுகங்கள், கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதுடன் பெற்றோலிய மற்றும் எரிவாயுக் குழாய்களை ஏற்றுமதி செய்வதும் சீனாவின் நோக்கமாகும்.

இது ஒரு தரைத் தொடர்புப் பாதையாகும். இதன் மூலம் விரைவான போக்குவரத்தையும் மேற்கொள்ள முடியும். குறிப்பாக 10,000 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வளைகுடாச் சந்தைக்கான போக்குவரத்து சீனாவிற்கு இலகுவாக்கப்படுவதுடன் இப்பிராந்தியத்தின் பூகோள – அரசியலிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

சோவியத் யூனியன் ஏன் தனது படையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது என்பதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை எவரும் மறந்துவிட முடியாது. அதாவது பேர்சியன் வளைகுடாவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதே சோவியத் யூனியனின் நோக்காக இருந்தது. இதேபோன்றே சீனாவும் தனது சொந்த மூலோபாயத்தை நிலைநிறுத்துவதற்காகவே இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வருகிறது.

இதற்காக இந்திய மாக்கடலில் அமைந்துள்ள பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் போன்ற தனது நட்பு நாடுகளின் துறைமுக அபிவிருத்தியில் சீனா பங்கெடுத்துள்ளது. இதற்காகவே சீனா, சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தனது அதிகாரத்தைச் செலுத்த முற்படுகிறது. இதற்காக இலங்கையர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

தாய்லாந்தின் க்ராவிலுள்ள இஸ்த்மஸ்ஸிற்குக் குறுக்காக கால்வாய் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை சீனா கொண்டுள்ளது. இதன்மூலம் இந்திய மக்கடலுடன் சீனாவின் பசுபிக் கரையோரத்தை இணைத்து பனாமா கால்வாயுடன் இணைப்பை ஏற்படுத்த முடியும் என சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆசியா மீதான தனது இருப்பை சமப்படுத்திக் கொள்ள முடியும் என சீனா கருதுகிறது.

அத்துடன் சீனா தனது கடற்படையின் நடவடிக்கையை இந்திய மாக்கடலில் விரிவுபடுத்துவதுடன் கிழக்கு ஆபிரிக்கா தொடக்கம் யப்பான் மற்றும் கொரியக் குடாநாடு வரை தனது வர்த்தக நகர்வுகளையும் விரிவுபடுத்த முடியும் எனக் கருதுகிறது. இதேபோன்று இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் பல்வேறு உதவிகளை வழங்குவதுடன் பல்வேறு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதுவும் சீனா தனது மூலோபாய இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகும்.

இந்திய மாக்கடல் மீதான இந்தியக் கடற்படையின் செல்வாக்கிற்கு இணையாகத் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக சீனா பல மாற்றுப் பாதைகளை அமைத்து வருகிறது. இந்தியாவானது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய மூன்றாவது நாடாக வளர்ந்து வரும் இந்தியா, இந்திய மாக்கடல் மீதான சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

இதனால் இந்தியக் கடற்படையின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக சீனா பல மாற்றுப் போக்குவரத்துப் பாதைகளை அமைத்து வருகிறது.

பாகிஸ்தானின் ஒரேயொரு கரையோரப் பாதையானது இந்திய மாக்கடலில் அமைந்துள்ளது. இந்தப் பாதை வர்த்தக மற்றும் சக்தி வழங்கல்களுக்கு முக்கியமாக உள்ளது. பாகிஸ்தானிற்கு அருகிலுள்ள பிரதேசங்களில் இந்தியாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டிய தேவையும் பாகிஸ்தானுக்கு உள்ளது. ஈரான் தொடக்கம் தாய்லாந்து வரை கடல் மற்றும் தரைவழிகளின் ஊடாகா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதே இந்தியாவின் நோக்காகும்.
இந்நிலையில் சீன-பாகிஸ்தானிய பொருளாதாரத் திட்டத்தை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆப்கானிஸ்தான் தொடக்கம் தாய்லாந்து வரையான கரையோரத்தில் இந்தியா தனக்கென சொந்தமான இலக்கைக் கொண்டுள்ளதாக பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்திருந்தனர்.

இந்தியா மற்றும் சீனா ஆகியன பாரிய கடல் சார் மற்றும் பொருளாதார சக்திகளாக வளர்ந்து வருவதால் இவ்விரு நாடுகளையும் இந்திய மாக்கடலில் எதிர்கொள்வதென்பது அமெரிக்காவிற்கு மிகப் பாரிய சவாலாக உள்ளது. தென்சீனக் கடல் மற்றும் கிழக்குச் சீனக் கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதைத் தடுப்பதற்காக சீனாவிடமிருந்து அதன் நட்புநாடுகளை விலகச் செய்ய வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு உண்டு.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தை தனியொரு நாடு அதிகாரம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. ஏனெனில் இது தனது நீண்ட கால பொருளாதார நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் அதிகாரச் சமநிலையைப் பேணுவதிலும் குழப்பத்தை விளைவிக்கும் எனவும் அமெரிக்கா கருதுகிறது. இதனால் அமெரிக்கா தனது பொருளாதார மையத்தை மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாற்றி வருகிறது.
இந்திய மாக்கடலை எந்தவொரு ஆசிய நாடும் தனது தனித்துவமான அதிகாரத்திற்குள் வைத்திருந்தால் ஆசியாவுடனான வர்த்தகச் சமநிலையைப் பேணுவதில் குழப்பத்தை விளைவிக்கும் என்பது அமெரிக்காவின் எண்ணமாகும். குறிப்பாக மலாக்கா நீரிணை, ஹோர்மஸ் நீரிணை மற்றும் மண்டேப் நீரிணை ஆகியன உட்பட இந்திய மாக்கடலின் மீதான செல்வாக்கு தனியொரு நாட்டிற்குச் சொந்தமானதாக இருக்கக்கூடாது என அமெரிக்கா கருதுகிறது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் பஹ்ரெய்ன், டிஜிபோட்டி, டியாகோ கார்சியா போன்றவற்றிலும் அமெரிக்கக் கடற்படையின் பிரசன்னம் காணப்படுகிறது. அமெரிக்காவானது இந்திய மாக்கடல் கரையோரத்தின் வழியாக ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடன் கடல்சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுகிறது.

டெல்அவிவ், புதுடில்லி அரசாங்கங்களுடன் அமெரிக்காவின் உறவுநிலை தற்போது வளர்ச்சியடைந்து வரும்நிலையில், இந்திய மாக்கடலில் இந்தியா தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என உந்துசக்தி வழங்குகிறது. இதை சீனா மற்றும் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் தமக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தி வருகின்றன.

குவடாரில் மையப்படுத்தப்பட்டுள்ள சீன-பாகிஸ்தானிய மூலோபாய கடல்சார் கூட்டு நடவடிக்கையானது இந்திய மாக்கடலில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்கின்ற இந்திய-அமெரிக்காவின் குறிக்கோளுக்கு ஊறுவிளைவிக்கும்.

இந்திய மாக்கடல் மீது ஐரோப்பாவும் மிகப் பலமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் காணப்படும் பெறுமதி மிக்க கடல்படுக்கைகளை அகழ்வதற்கான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான பணிகளில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடுகின்றன. மேலும் இந்திய மாக்கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் சில ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்திய மாக்கடல் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ வளங்கள், அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய-இஸ்ரேலிய யுத்தங்களால் சிதைவுறலாம் என அச்சமுறுகின்றன.  இவ்வாறான காரணங்களால் இந்திய மாக்கடலானது அரசியல், மூலோபாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியுள்ளதாக ஆய்வாளர் சல்மான் றபி செய்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மாக்கடல் மீதான அதிகாரத்துவ நாடுகளின் மரபுசார் மற்றும் அணுவாயுதக் கப்பல்களின் பிரசன்னமானது அதிகரித்து வருவதே இதற்கான காரணமாகும். இந்திய மாக்கடலில் தமது பொருளாதார நலன்களை நிலைப்படுத்துவதற்கும் பாரிய வர்த்தகப் பங்காளிகளைத் தக்கவைத்திருப்பதற்கும் சீனா மற்றும் இந்தியா ஆகியன பாரிய அதிகாரத்துவப் போட்டிக்குள் நுழைவதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தை தனியொரு நாடு அதிகாரம் செய்வதற்கு முடியாது எனவும் இதனால் இவ்விரு நாடுகளும் தமது இலக்குகளை அடைவதற்கு பல்வேறு நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதனால் இந்திய மாக்கடல் மீது செல்வாக்குச் செலுத்த விரும்பும் அதிகாரத்துவ நாடுகள் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமானநிலையத்தை சீனா தனது சொந்தச் சொத்தாகப் பயன்படுத்துவதுடன் அங்கு தனது பிரசன்னத்தை நிலைப்படுத்தியுள்ளதை ஆராய வேண்டிய தேவையுள்ளது.




வழிமூலம்       – sunday times
ஆங்கிலத்தில் – Latheef Farook
மொழியாக்கம்- நித்தியபாரதி

Sunday, 6 August 2017

பாகிஸ்தான் பிரதமர் பதவியைக் காலிசெய்த Calibri எழுத்துரு (Font)

கணினியில் பயன்படுத்தும் Font எனப்படும் ஓர் எழுத்துரு, பிரதமர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கும் அளவுக்கு வலிமையுடையது எனச்சொன்னால் நம்பமுடிகிறதா? ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையையே புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கொஞ்ச காலம் முன்புவரை யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் விஷயத்தில் இதுதான் தற்போது நடந்திருக்கிறது.



தொடரும் சாபம் :

இலங்கையைப் போல், பாகிஸ்தான் நாட்டிலும் பிரதமரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை, இதுவரை ஒருவர் கூட ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் நீடித்ததில்லை. பனாமா பேப்பர் ஊழல் விவகாரத்தில், சொத்துக்குவிப்பு செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை செய்யவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற நவாஸ் ஷெரிஃப், 4 ஆண்டுகள் 54 நாள்கள் பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார்.

பனாமா பேப்பர்ஸ் ஊழல்

மத்திய அமெரிக்க நாடான பனாமா என்றதும் பலருக்கும், அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் செயற்கையாக உருவாக்கப்பட்ட, 48 மைல் நீள 'பனாமா கால்வாய்' தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது 'பனாமா பேப்பர்ஸ்' என்றழைக்கப்படும் ஊழல் விவகாரம், அந்நாட்டைப்பற்றி சர்வதேச அரங்கில் பேச வைத்திருக்கிறது. பனாமாவைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல பிரபலங்களும், நிறுவனங்களும் வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்குவித்திருப்பதாகக் கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது. இதில், 360,000 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் தரவுத்தலத்தில் இருந்து, சுமார் 1.15 கோடி பக்கங்கள் ஆவணங்கள் வெளியே கசிந்தது. இதை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டபின், இந்தச் செய்தி உலகையே உலுக்கியது.

உலகின் மிகப்பெரிய தகவல் கசிவு என்று இது அழைக்கப்படுகிறது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வினோத் அதானி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இதில் அடிபட்டன. 90-களில் பிரதமராக இருந்தபோது, சட்டவிரோதமாக லண்டனில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சொத்துகளை அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் நிர்வகிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து ஷெரிஃப்பை பதவிநீக்கம் செய்து, அவருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் வாஜித் ஜியா தலைமையிலான கூட்டு விசாரணைக்குழுவை இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்பலமான ஊழல்

கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணையில், ஷெரீஃப் குடும்பத்தினரின் வருவாய் மற்றும் சொத்து குறித்த ஆவணங்களில் நிறைய குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், லண்டன் சொத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும்வகையில், நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் நவாஸ் இக்குழுவிடம் சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இந்த ஆவணங்கள்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக மாறியது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேதியிட்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் 'கலிப்ரி' (Calibri) என்ற எழுத்துருவில் தயாரிக்கப்பட்டிருந்தன. விண்டோஸ் 2007 இயங்கு தளத்தின் இயல்புநிலை எழுத்துருவாக (Default Font) இதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எழுத்துரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2007-ம் ஆண்டில் இருந்துதான் வர்த்தகரீதியாக வெளியிடப்பட்டது. லூகாஸ் டி க்ரூட் (Lucas De Groot) என்பவர்தான் இந்த எழுத்துருவை வடிவமைத்தவர். இந்த எழுத்துருவை வடிவமைக்கும் பணி 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2004-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின், 2006-ம் ஆண்டு மே மாதம்தான் முதல்முதலாக டெவலப்பர்களுக்கான பீட்டா வடிவமாக இது வெளியிடப்பட்டது. ஆனால், மரியம் நவாஸ் சமர்ப்பித்த ஆவணங்கள் பிப்ரவரி மாதம், 2006-ம் ஆண்டு தேதியிடப்பட்டிருந்தன. எனவே, இந்த ஆவணங்கள் போலியானவை என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வந்தது.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் அரசியல் தொடர்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாகத் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகியுள்ளார்.

'எவ்வளவு சாமர்த்தியமான குற்றவாளியும் ஒரு தடயத்தையாவது விட்டுச்செல்வான்' என்பதை கிரைம் திரில்லர் படங்களில் புலனாய்வுக் கதாபாத்திரங்கள் பேசிக்கேட்டிருப்போம். ஆனால், எழுத்துருவால் ஊழல் அம்பலமாகி, பிரதமர் பதவியிழந்த கதையை இப்போதுதான் கண்முன்னே பார்க்கிறோம்.

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது?

கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற்பிரயோகங்களோடு அமைந்திருக்கிறது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் உரையில் ஏதும் தளம்பல்கள் அல்லது சமாளிப்புக்கள் அல்லது பின்வாங்கல்கள் இருக்கக்கூடுமா என்று ஒரு பகுதியினர் நுணுக்கமாகத் தேடினார்கள். ஆனால் பலரும் உற்றுக் கவனிக்கத் தவறியது லக்ஸ்மனின் உரையாகும். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அந்த உரை முன்வைக்கிறது. நமது காலத்தில் அரசியல்வாதிகள் பலருடைய உரைகளிலும் காணப்படாத தெளிவு அந்த உரையில் உண்டு.

மேற்படி இருவருடைய உரைகளின் பிரகாரம் தமிழ் மக்கள் பேரவையானது தான் முன்வைத்த தீர்வுத்திட்ட முன்வரைவை மீள வலியுறுத்தி நிற்கிறது. அதன்படி ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு கூட்டாட்சி முறைமையைக் கொண்டதாக அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிட முடியாது. கூட்டாட்சிக் கோரிக்கையையும் கைவிட முடியாது. வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட முடியாது. இதுதான் தீர்வு பொறுத்து தமிழ் மக்கள் பேரவையின் ஆகப்பிந்திய நிலைப்பாடு. அதன் இணைத் தலைவர் என்ற வகையில் விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் அதுவே.

ஆனால் சம்பந்தர், சுமந்திரன் நிலைப்பாடும் அதுதானா?

யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவின் இடைக்கால இறுதியறிக்கை வரும் 8ம்திகதி சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது சமர்ப்பிக்கப்படுமா இல்லையா என்பதை இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் எப்படிப்பட்ட ஒரு தீர்வு இருக்கக்கூடும் என்று யாப்புருவாக்க உப குழுக்களின் தலைவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டேன். தனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்று கூறிய அவர், அமைச்சர் மனோ கணேசனிடம் அல்லது ஏனைய சிங்களத் தலைவர்களிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார்.

முதலில் இடைக்கால அறிக்கை 35 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இப்பொழுது அது 25 பக்கங்களைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. அதில் எந்த எந்தப் பகுதிகள் நீக்கப்பட்டு பக்கங்கள் குறைக்கப்பட்டன, ஏன் அப்பகுதிகள் நீக்கப்பட்டன போன்ற கேள்விகளுக்கு தமிழ்த்தரப்பிலிருந்து வெளிப்படையான பதில்களைப் பெற முடியவில்லை. சில சமயம் சர்ச்சைக்குரிய உபகுழு அறிக்கைகளும் உட்பட பொதுக்கருத்தை எட்ட முடியாதுள்ள விவகாரங்கள் பின்னிணைப்பாக சேர்க்கப்படலாம் என்ற ஓர் ஊகமும் உண்டு.

எதுவாயினும் ஓர் இடைக்கால அறிக்கை முன்வைக்கப்படுமாக இருந்தால் அதில் முன்மொழியப்படவிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது நிச்சயமாக விக்னேஸ்வரனும், தமிழ் மக்கள் பேரவையும் கோரிநிற்கும் ஒரு தீர்வாக அமையப்போவதில்லை. அண்மை மாதங்களாக சம்பந்தரும், சுமந்திரனும் தெரிவித்து வரும் கருத்துக்களின்படியும், சித்தார்த்தனைப் போன்ற உபகுழுத் தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களின் படியும், மனோ கணேசன் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும், நிமால் சிறீபால டி சில்வா, விமல் வீரவன்ச போன்றோர் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும் முன்மொழியப்படும் தீர்வானது சிங்கள பௌத்த இனவாதிகளை அச்சுறுத்தும் ஒன்றாக அமையப்போவதில்லை. சம்பந்தரின் வழிவரைபடத்தின்படியும் அப்படி அமைய முடியாது. ஏனெனில் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்தில் அப்படி ஒரு தீர்வை எதிர்பார்க்கவும் முடியாது.

ஆயின் அப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்மொழியப்படுமிடத்து விக்னேஸ்வரனும், மக்கள் பேரவையும் எப்படிப்பட்ட முடிவை எடுப்பர்? கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதைப் போல பேரவையின் தீர்வு முன்மொழிவை மக்கள் மயப்படுத்தும் ஒரு நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்கக்கூடும். அதன் மூலம் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைத் திரட்டி உத்தேச தீர்வுத்திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்களை தயார்படுத்தப் போகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அண்மை வாரங்களாக கஜேந்திரகுமார் அணியும் அதைத்தான் செய்து வருகிறது. இப்படியெல்லாம் மக்களைத் தயார்படுத்தினால் யாப்புருவாக்கத்திற்கான ஒரு மக்கள் வாக்கெடுப்பின் போது தமிழ் மக்களை அந்த யாப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்க வேண்டியிருக்கும். பேரவையும், விக்னேஸ்வரனும் அப்படியொரு முடிவை எடுப்பார்களா?

அவ்வாறு அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை நிராகரித்தால் அடுத்த கட்டம் என்ன? பேரவை முன்வைக்கும் ஒரு தீர்வுத்திட்டத்தை போராடிப் பெறுவதற்கான ஒரு மக்கள் மைய அரசியல் வேலைத் திட்டம் எதுவும் பேரவையிடம் உண்டா? விக்கினேஸ்வரனிடம் உண்டா?

இக்கேள்வியை இப்பொழுது மாற்று அணியை உருவாக்க விளையும் எல்லாத் தலைவர்களிடமும் கேட்கலாம். இக் கேள்விக்கான விடையைக் கண்டு பிடித்தால் ஒரு மாற்று அணிக்குரிய பிரயோகப் பொறிமுறை கிடைத்து விடும். அப்படியொரு பிரயோகப் பொறிமுறை கிடைத்து விட்டால் ஒரு மாற்று அணி எனப்படுவது வெறுமனே தேர்தல் கூட்டு அல்லவென்பது தெளிவாகி விடும். அது ஒரு தேர்தல் கூட்டு அல்ல என்பது தெளிவாகி விட்டால் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை உடைத்துக் கொண்டு வெளியே வர தயங்கும் ஒரு நிலைமை இருக்காது. ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட ஆளுமைகளை நோக்கி காத்திருக்கும் நிலைமைகளும் இருக்காது.

ஒரு மாற்று அணிக்குரிய இலக்கு எதுவென்பதில் தமிழ் மக்கள் பேரவையும் உட்பட அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிடமும் ஒரு தெளிவாக விளக்கம் இருக்கிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் அந்தக் கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்குரிய பொறிமுறை எது என்பதுதான். ஒரு மாற்றுச்சிந்தனை எது என்பதுதான்.

மாக்ஸியம் ஒரு கோட்பாடாகவே முதலில் கருக்கொண்டது. கார்ல் மாக்ஸின் முதலாவது அகிலம் எனப்படுவது அக் கோட்பாட்டை ஒரு செய்முறையாக வளர்த்தெடுக்கும் நோக்கிலானது. எனினும் மாக்ஸியத்தை ஒரு கட்சித் தத்துவமாகவும் பிரயோக அரசியல் தத்துவமாகவும் வளர்த்தெடுத்த பெருமை லெனினுக்கே சேரும் என்று கூறப்படுவது உண்டு. ஒரு சித்தாந்தத்தை அல்லது உன்னதமான ஓர் இலட்சியத்தை செய்முறை அரசியலாக மாற்றுவதற்கு பேராளுமை மிக்க தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அகிம்சைக் கோட்பாடானது அதன் தொடக்கத்தில் புத்த பகவானிடம் ஓர் ஆன்மீகச் செயல்வழியாகவே காணப்பட்டது. மகாத்மா காந்திதான் அதை ஒரு போராட்ட வழிமுறையாக மாற்றினார்.



அதை அவர் தென்னாபிரிக்காவிலேயே முதலில் பரிசோதித்தார். அப்பரிசோதனைகளின் போது அவருக்கும் ரஷ்ய எழுத்தாளரான ரோல்ஸ்ரோயிற்கும் இடையிலான இடையூடாட்டங்கள் முக்கியமானவை.
ரோல்ஸ்ரோய் ஒரு மங்கோலியப் பிக்குவிடமிருந்து அகிம்ஸா மார்க்கத்தை கற்றுக் கொண்டதாகத் தெரியவருகிறது. ரோல்ஸ்ரோயும் காந்தியைப் போல தனது வாழ்வின் பிற்பகுதியை ஒரு சுயசோதனையாக மாற்றிக் கொண்டவர். இப்பரிசோதனைகளில் கிறீஸ்தவத்தின் செல்வாக்கும் உண்டு.

பௌத்தத்தின் செல்வாக்கும் உண்டு. காந்தி தென்னாபிரிக்காவில் சிறுகளத்தில் சோதித்த அரசியல் செயல்வழியை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பெருங்களத்தில் பெருந்திரள் அரசியல் செயல்வழியாகப் பரிசோதித்தார்.

காந்தி 20ம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் பரிசோதித்தவற்றைத்தான் மண்டேலா தென்னாபிரிக்காவில் 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பரிசோதித்தார். காந்தியைப் போல மண்டேலா தொடக்கத்தில் ஓர் அறநெறிக் கோட்பாட்டாளனாக இருக்கவில்லை. அதிகபட்சம் அவர் ஓர் ஆயுதப் போராளியாகவே காணப்பட்டார். அவரிடம் தொடக்க காலங்களில் இடதுசாரிச் சாய்வே காணப்பட்டது. எனினும் கால்நூற்றாண்டுகால சிறைவாழ்வின் ஊடாக அவர் காந்தியத்தின் அடுத்த கட்ட உதாரணமாக மேலெழுந்ததாக ஓர் அவதானிப்பு உண்டு. ஆயுதப் போராட்டத்திலிருந்து அகிம்சா மார்க்கத்தை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டங்கள் மண்டேலாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய உண்டு. அதே சமயம் மண்டேலாவை அவருடைய காலத்தின் பூகோள அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக கெடுபிடிப் போரின் முடிவையடுத்து ஏற்பட்ட ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கிய மாற்றங்களின் விளைவாகவும் அவரை விளங்கிக் கொள்ள வேண்டும்.


 
மேற்கண்ட உதாரணங்களின் பின்னணியில் வைத்துப் பார்த்தால் ஈழத்தமிழர்களுக்கான ஒரு மாற்று அரசியல் செயல்வழி எனப்படுவது பிரதானமாக மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. முதலாவது நாடாளுமன்ற அரசியல் மற்றும் தேர்தல் அரசியலுக்கூடாக, இரண்டாவது மக்கள் மைய செயற்பாட்டு அரசியல், மூன்றாவது பிராந்திய மற்றும் பூகோள மட்டத்தில் செய்யப்பட வேண்டிய ராஜதந்திர அரசியல்.

இம்மூன்று தளங்களைக் குறித்தும் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட பேராளுமைகளால்தான் ஒரு மாற்று அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். மாற்று அரசியல் எனப்படுவது வெறுமனே ஒரு தேர்தல் கூட்டு அல்ல. எனினும் தேர்தல் மூலம் ஓர் அதிகார மூலத்தை (power source) ஸ்தாபிக்க முடியுமென்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.

ஜனநாயகப் பரப்பில் ஒரு மாற்று ஓட்டம் எனப்படுவது ஒரு மக்கள் சமூகத்தின் ஜனநாயக இதயத்தை மேலும் பலப்படுத்துகிறது. ஒரு பிரதான நீரோட்டத்திற்கு எதிரானதாகவோ அல்லது பிரதான நீரோட்டத்தின் போதாமைகள் காரணமாகவோ மாற்று ஓட்டம் உற்பத்தியாகிறது.

பெரும்பாலான ஜனநாயகப் பரப்புக்களில் பிரதான நீரோட்டம் எனப்படுவது பெருந்திரள் மக்களுக்குரியதாகவும் மாற்று ஓட்டம் எனப்படுவது சிறுதிரள் மக்களுக்குரியதாகவும் காணப்படுகிறது. இலட்சியவாதிகளும் கோட்பாட்டாளர்களும், நீதிமான்களும், தூய்மைவாதிகளும் பெரும்பாலும் மாற்று அணியைச் சேர்ந்தவர்களே. ஊரோடு ஒத்தோட மறுப்பவர்களும் மாற்று அணிக்குரியவர்களே. 'ஜனரஞ்சகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை' என்று நம்புவோரும் மாற்று ஓட்டத்திற்கு உரியவர்களே. கலை இலக்கிய சினிமாப் பரப்புக்களில் மாற்று ஓட்டம் எனப்படுவது பெரும்பாலும் சிற்றோட்டம்தான். அது ஜனரஞ்சகத்தோடு அதிகம் ஒத்துப்போவதில்லை. ஊடகப்பரப்பிலும் மாற்று ஊடகம் எனப்படுவது பிரதான நீரோட்டத்தோடு அதிகம் பொருந்தி வருவதில்லை. இப் பூமியிலே தோன்றிய பெரும்பாலான மகத்தான சிந்தனையாளர்களும், சிந்தனைகளும் படைப்பாளிகளும், புரட்சியாளர்களும் தொடக்கத்தில் மாற்று அணிக்குள்ளிருந்து வந்தவர்களே.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மிதவாத அரசியலிலும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. ஆயுதப் போராட்டத்தின் போதும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. இப்பொழுது ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னராக ஒரு மிதவாத காலகட்டம். இங்கு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் சிறு குழாத்தினரே. அவர்களுடைய சந்திப்புக்களும் சில நூறு பேர்களுக்குள் நடப்பவைதான். வரலாற்றில் எல்லா மாற்று அணிகளும் இப்படித்தான் தொடங்குகின்றன. எல்லாப் பெரு நதிகளும் ஒரு துளி நீரிலிருந்தே தொடங்குகின்றன. கலீல் ஜிப்ரான் தனது 'முறிந்த சிறகுகள்' என்ற நூலில் குறிப்பிடுவது போல 'இந்தப் பூமியிலுள்ள எந்த ஓரழகும் எந்த ஓர் உன்னதமும் மனிதர்களின் ஒரு யோசனை அல்லது ஓருணர்ச்சியிலிருந்து படைக்கப்பட்டவைதான்'

எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் மத்தியிலுள்ள பிரதான சவால் அந்த மாற்று அணி கனவுகளை நோக்கி யதார்த்தத்தை எப்படி வளைக்கப் போகிறது என்பதே. அதை எப்படி மக்கள் மயப்படுத்தப்போகிறது என்பதே. அதை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் எப்படி ஓர் அதிகார மூலமாக மேலெழப்போகிறது என்பதே. அப்படியொரு அதிகார மூலம் மேலெழும் போது மேற்சொன்ன மூன்று தளங்களைக் குறித்தும் முழுமையான ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட தலைமைகள் மேலெழுவார்கள்.

சம்பந்தர் நம்புகிறார். கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைத்தெடுப்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு என்று. பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்திற்கூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதென்றால் அப்படித்தான் சிந்திக்க வேண்டியிருக்கும். மாறாக நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மைய அரசியலைக் குறித்தும், ராஜதந்திரப் போரைக் குறித்தும் சரியான தரிசனங்கள் இருக்குமானால் வேறு விதமாகச் சிந்திக்க முடியும். எனினும் இப்பொழுது அதிகார மூலமாகக் காணப்படுவது சம்பந்தர், சுமந்திரன் அணிதான். மாற்று அணி ஒரு சிற்றோட்டமாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அதிகார மூலத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அதிருப்திகளையும், கோபத்தையும் ஒரு மக்கள் சக்தியாக திரட்டவல்ல பொறிமுறைகளை மாற்று அணியானது இனிமேல்தான் கண்டு பிடிக்கவேண்டியுள்ளது. ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் வரையிலும் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட நபர்களுக்காக காத்திருக்கும் வரையிலும் ஒரு மாற்று அணியானது அதன் சரியான பொருளில் மேலெழப் போவதில்லை. மாறாக சம்பந்தர், சுமந்திரன் அணிக்கு எதிராக அழுத்தக் குழுக்களாக அவை சுருங்கிவிடும் ஆபத்துக்களே உண்டு.

கடந்த எட்டாண்டு காலம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரத்தை இழந்து செல்லும் ஒரு காலகட்டமாக இருக்கலாம். அதே சமயம் போலிகளையும், பொய்த் தேசியவாதிகளையும் நடிப்புச் சுதேசிகளையும் தோலுரித்துக் காட்டிய ஒரு காலகட்டம் இதுவெனலாம். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஒரு காலகட்டம் எனப்படுவது மிகவும் கலங்கலான ஒரு காலகட்டமாகும். இனவாதம் மனித முகமூடியோடு தனது நிகழ்ச்சி நிரலை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு காலகட்டமாகும். ஒரு புறம் இலட்சியவாதிகள் சிறுதிரள் அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்க இன்னொரு புறம் காரியவாதிகள் பெருந்திரள் அரசியலில் அதிகார மூலங்களை ஸ்தாபித்துக் கொண்டே போகிறார்கள். ஒரு பலஸ்தீன விமர்சகர் தனது மக்களைப் பற்றிக் கூறியது இங்கு தமிழ் மக்களுக்கும் பொருந்தும். 'நாங்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்களோ (யூதர்கள்) அப்பத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்'.