Sunday 17 September 2017

“நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…

“நீதி உயர்ந்த மதி கல்வி” என்று பாடியவனின் இறுதி யாத்திரையில் பத்து பேர் கூட கலந்து கொள்ளாத அளவு பக்குவம் பெற்ற பெருமைமிகு தமிழினம் இல்லையா நாம்? நமக்கு வாய்க்கும் கல்விக் கொள்கைகளின் லட்சணமும் அதற்குத் தகுந்தாற் போல் தான் இருக்கும். இதன் சமீபத்திய உதாரணம் தான் “நீட்” சம்பந்தப்பட்ட குளறுபடிகளும் அதைத் தொடர்ந்து நேர்ந்த மாணவியின் மரணமும்.




1176 மதிப்பெண்கள் என்பது அசாத்திய உழைப்பின் மூலம் மட்டுமே சாத்தியப்படுகின்ற ஒன்று. அதிலும் ஒரு வறுமையுற்ற குடும்பத்திலிருந்து ஒரு பெண் அதை சாதிக்கிறார் என்றால் அது வணக்கத்திற்குரியது. அத்தகைய உரம் படைத்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார் என்ற செய்தி மிகுந்த துயரம் அளிப்பது. சமூக பிரக்ஞை உள்ள எவரின் தூக்கத்தையும் தொலைக்கும் வலிமையுள்ளது. அவரின் பிரிவினால் வாடும் குடும்பத்தினருக்கு எந்தவித ஆறுதல் அளித்தாலும் மீட்க முடியா இழப்பு அது. ஆனால்…

பற்றியெரிந்த ஒரு தளிரின் நுனி மட்டுமே இது. ஒரு “காட்டை”யே கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் சத்தமின்றி எரித்து முடித்திருக்கிறோம் நாம் என்று நமக்குத் தெரியுமா? அக்காட்டில் பலவகை “சாதி” மலர்கள் மொக்கிலேயே கருகியது தெரியுமா? கருகுதல் பல வகை. வேண்டிய கல்வி மறுக்கப்படுவது அதிலொரு வகை…சமூகநீதியாம் சமூக நீதி…இது அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்பாட்டில் கொண‌ர்ந்த சொல். மேடை பேச்சாலும் அலங்கார வார்த்தைகளாலும் அழிந்த மாநிலம் நமது தமிழ்நாடு. மக்களைச் சுற்றி ஒரு மாபெரும் சதிவலை பின்னப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நாம் உணர வேண்டும். அனைத்து விதமான சுரண்டல்களையும் அள்ளிக் கொள்ள ஏதுவாக பின்னப்பட்ட சதிவலையில் கல்வியை வியாபாரம் ஆக்கும் வலையும் ஒன்று. இதற்கு தனிமனிதன் துவங்கி இம்மாநிலத்தின், இச்சமூகத்தின் ஒவ்வொரு ஒவ்வொரு அங்கமும் பொறுப்பு ஏற்க வேண்டும். கல்வி என்பதை அவரவர் லாபத்திற்கேற்ற கடைச்சரக்காக்கி விற்க முயன்ற அவலத்தின் அடுத்த கட்டமே இது. எத்தனை வீரியம் மிக்க விஷம் பாய்ந்த வேர் இது?

மாணவர்கள் எந்த தேர்வு எழுத வேண்டும், தேர்ச்சியின் விதிமுறைகள், அளவீடுகள் என்ன என்று அனைத்தையும் அரசியல்வாதிகள் முடிவு செய்வது என்பது சமூகத்திற்கு கிடைத்த சாபம். “எந்தத் தேர்வை எப்படி வைத்தாலும் எதிர்கொள்வேன் நான்” என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் கல்விக்குரிய அடிப்படை கட்டுமானங்களை செய்து தராத அரசுகளின் கையாலாகாதனத்தின் விளைவு தான் இது. கட்டமைப்பு பற்றிய கவலையின்றி, சிந்தனையின்றி, திட்டமின்றி, திடமின்றி கூச்சல் போட்டென்ன பயன்? உணர்ச்சிவசப்பட்டு உரக்கப் பேசும் தலைவர்கள் நமக்குத் தேவையில்லை. நம் கல்வி கற்பழிக்கப்பட்டு வெகுநாளாகி விட்டது. அந்தத் கொடூரத்தில் நம் பங்கும் உண்டு.

முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். எல்கேஜிக்கு எதற்கு இத்தனை ஆயிரம் என்று கேள்வி கேட்டதுண்டா நாம்? விலை அதிகமென்றால் “விஷயமும்” நிறைய இருக்கும் என்ற முட்டாள்தனத்திற்கு விலைபோன நாம் எப்போது திருந்தப் போகிறோம்? “மாரல் சயின்ஸ்” என்றொரு வகுப்பு இருந்ததே…யாரைக் கேட்டு அது காணாமல் போனது? கண்டு கொண்டோமா நாம்? மதிகெட்டு திரியும் சமூகத்திற்கு மாரல் எதற்கு என்று விட்டு விட்டோமா? ஆறாம் வகுப்பிலேயே ஐஐடிக்கு கோச்சிங், ஒன்பதாம் வகுப்பு துவங்கி பன்னிரண்டுக்கான பயமுறுத்தல், பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பறிபோய்விடும் வாழ்வு என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மந்திரிக்கப்பட்ட கோழிகள் போல் நம் பிள்ளைகளை திரியவிட்டு அதைப்பார்த்து பெருமையும் மகிழ்வும் பொங்கி வழியும் பெற்றோர் ஒரு வகை. மாதத் தேர்வுக்கு கூட மகன் மகளுடன் தானும் லீவு போட்டு சீனி வெடியை சீனா போர் கணக்காய் பில்டப் கொடுக்கும் பெற்றோர்கள் இன்னோர் வகை. பணம் தான் செலவு செய்கிறோமே, நன்றாகத் தான் வருவார்கள் என்று தானுண்டு தன் “வேலை”யுண்டு என்றிருக்கும் பெற்றோர் மற்றோர் வகை. இவற்றில் எல்லாம் தப்பித்தாலும், பொறியியல் அல்லது மருத்துவம் இல்லையென்றால் இவ்வாழ்க்கையே வீண் என்ற பொறியில் வீழும் பெற்றோர் மீதமுள்ள வகை. வறுமையில் உழலும் குடும்பமோ, வசதியான குடும்பமோ…சிறார்கள் பற்றிய சீரிய சிந்தனை ஏதுமின்றி பால்யத்தை சூறையாடும் அரக்கர்கள் ஆகி விட்டோம் நாம்.

கல்வி என்பது பணம் ஈட்டும் கருவி என்பதையன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே…இது பெற்றோர்களுக்கும் பொருந்தும், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். “இடையில்” இருப்போர்களுக்கும் பொருந்தும். எனவே தான் எத்தனை “கிடைக்கும்” என்பதை பொறுத்து எத்தனை “கொடுக்க” வேண்டும் என்ற சமன்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை அறியாமலோ அல்லது அறிந்தும் தட்டிக்கேட்கின்ற முதுகெலும்பு அற்ற சமுதாயமாகவோ மாறி விட்டோம் நாம். எனவே தான், கடிவாளம் போட்ட குதிரையாய் இன்ஜினியரிங், மருத்துவம் நோக்கி படையெடுப்பு நிகழ்கிறது. சரி இத்தனை கொடூரங்களுக்குப் பின்னும் இவற்றை படித்து வெளிவரும் கூட்டம் எத்தகையது? தான் நினைத்ததை ஆணித்தரமாக கோர்வையாக ஒரு நிமிடத்திற்கு கூட சுயசிந்தனையுடன் பேசத்தெரியாத பெரும்பான்மை கூட்டம் தான் இன்று “இன்ஜினியரிங் படிச்சும் வேலையில்லை” என்று நம்பிக்கை இழந்து கூவிக் கொண்டிருக்கிறது. இது யார் தவறு? மாளிகை போன்று கல்லூரி கட்டப்பட்டிருந்தால் போதுமா? உள்ளிருக்கும் ஆசிரியரின் தரம் யாதென்று ஊரறியுமே… போன வருட சீனியர் இந்த வருட ஆசிரியர். 
விளங்குமோ படிப்பும் சமூகமும்? “இந்த வார எலிமினேஷன் யார்” என்பதையே சமூகத்தின் முன் நிற்கும் முக்கிய விவாதப் பொருள் போல் ஆக்கி  வாழ்க்கையை ஓட்டும் விவேகமற்ற மாநிலத்தில் கல்வி என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் மூலம் விவேகானந்தர்களா உருவாவார்கள்?


ஜல்லிக் கட்டு போல் இதற்கும் போராட்டம் நடக்குமோ என்று எதிர்பார்க்கிறார்கள் பலர். நம் போன்ற முதிர்வற்ற சமூகத்தில் அது சாத்தியமல்ல. நம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு “catharsis”. அதாவது “சுமை நீக்கி”. ஊழல்களினாலும் சமூக அவலங்களினாலும் உள்ளேயே கொதித்துக் கொண்டிருந்த பலருக்கு ஒரு வடிகாலாக கிடைத்தது அப்போராட்டம்.

“இறக்கி” வைத்து “தீர்த்துக்” கொண்டார்கள். எனவே தான் அப்போராட்டம் ஏதோ உலகையே திருப்பிப் போட்டது போன்ற உவகையையும் பெருமிதத்தையும் பலருக்குத் தந்தது. அவ்வளவு தான்…. பழைய குருடி கதவைத் திறடி கதையாக நம் “வசதியான வளை”க்குள் திரும்பி வந்தாயிற்று. இனி மீண்டும் உதிரத்தில் உப்பு ஊறுவதற்கு பல மாமாங்கம் ஆகலாம் அதற்குள் பல சேதாரம் நேரலாம்…எதையும் கண்டுகொள்ள மாட்டோம் அதுவரையில் நாம். “எதுவும் கடந்து போகும்” என்பது நம் தாரக மந்திரமில்லையா?

1176 போன்ற‌ மதிப்பெண் பெற்ற ஒருவர் எத்தகைய சாதியென்றாலும் அவர் வேண்டிய கல்வி கிடைக்க வழி செய்வதே சமூக நீதி என்று எப்போது நாம் அனைவரும் உணர்கிறோமோ, அனைத்து வகை கல்விக்கூடங்களுக்கும் ஒரே தரம், ஒரே கட்டணம்  என்ற நிலையை எப்போது நாம் அடைகிறோமோ அதற்கான செயல் வழித் திட்டங்களை எப்போது நாம் அமைக்கிறோமோ அப்போது தான் நமக்கு விடிவு காலம்.



 குமரன்

Saturday 16 September 2017

3 முறை வடி கட்டிய சயனைட் குப்பி: பகலவனிடம் தயாரிக்குமாறு சொன்ன பிரபாகரன்

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் இடம்பெற முன்னர், ஆனந்தபுரம் சமர் நடந்துகொண்டு இருந்தவேளை. அங்கிருந்து ஒரு பஜீரோ வாகனத்தில் தலைவரின் மனைவி மதிவதனி அக்கா, மற்றும் துவாரகாவை ஏற்றிக்கொண்டு முள்ளிவாய்க்கால் பக்கமாக சென்றவர் தான் "நிலவன் தம்பி". இவரை பலருக்கு தெரிந்திருக்காது. "நிலவன் தம்பியே" மதிவதனி அக்கா மற்றும் மகள் துவாரகாவின் பாதுகாப்பை நெறிப்படுத்தும் தளபதியாக இருந்தவர். ஆனந்த புரத்தில் கடும் சண்டை மூண்டவேளை 3 காயப்பட்ட போராளிகள் சகிதம் இவர், மதிவதனி அக்கா மற்றும் துவாரகா ஆகியோரோடு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவரை முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் பார்த்ததே இல்லை என்று அப்போது தொடர்பில் இருந்த குட்டி என்னும் மூத்த உறுப்பினர் எனக்கு தெரிவித்திருந்தார்.









இதேவேளை தலைவரின் பாதுகாப்பின் ஒரு பிரிவை கவனித்து வந்த ரட்ணம் மாஸ்டர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், அவ்விடத்தில் முழு பொறுப்பில் "பகலவன்" இருந்து வந்தார். முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னர் பகலவனிடம் 3 சயனைட் குப்பிகளை தருமாறு தலைவர் கோரி இருந்தார். அவை சாதாரண சயனைட் குப்பிகள் அல்ல. 3 முறை வடி கட்டிய சயனைட் குப்பிகள். சாதாரண சயனைட் குப்பி ஒன்றை கடித்தாலே உடனே உயிர் போய்விடும். 3 முறை வடிகட்டியது என்றால் அது எவ்வளவு கடுமையான சயனைட் குப்பியாக இருக்கும் என்பதனை நாம் நினைத்துக் கூட பார்க முடியாது. தலைவரின் பாதுகாப்பை கவனித்த அதே பகலவன் தான், பாலச்சந்திரன் பாதுகாப்பையும் உறுதிசெய்து வந்துள்ளார்.

இன் நிலையில் தான் லண்டனில் இருக்கும் தன்னுடைய நண்பி ஒருவரோடு சாட்டலைட் டெலிபோன் மூலம் தொடர்புகொண்டு குகா அக்கா(கேணல் ஷங்கர் அண்ணாவின் மனைவி) நாம் திடமாக உள்ளோம் என்று கூறியதோடு மேற்கண்ட சயனைட் விடையத்தையும் கூறியுள்ளார். முடிந்தால் உடைத்துக்கொண்டு செல்வோம். இல்லையென்றால் அனைவரும் மாண்டு போவோம். எந்த ஒரு கால கட்டத்திலும் சரணடைவு என்பதற்கு இடமே இல்லை என திட்டவட்டமாக தலைவர் அறிவித்துவிட்டார். புலிகளின் அரசியல் துறையினர், மற்றும் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளிகள் மட்டும் சரணடைய விரும்பினால் சரணடையலாம் என்பது தலைவரது கருத்தாக இருக்கிறது. எந்த ஒரு மன சஞ்சலமோ, கலக்கமோ இல்லை. அவர் தெளிவாக தெரிவித்த வார்தைகள் இவை என கண்ணிர் மல்க அவர் தெரிவித்துள்ளார். அன்று அவர் மதிவதனி அக்கா பற்றி பேசவில்லை.

30,000 ஆயிரம் ராணுவம் சூழ்ந்திருக்க, ரஷ்ய விமானங்கள் குண்டு போட உதவிசெய்ய , 30க்கும் மேற்பட்ட இந்திய கடல்படை கப்பல்கள் சூழ நிற்க்க, அதுபோக ஹிந்தி ராணுவம் களத்தில் நின்று திட்டங்கள் வகுத்து கொடுக்க... உலகமே ஒன்றினைந்து புலிகளை அழிக்க களத்தில் நின்றாலும், வீரத் தழிழனாய், மறவர் குலத்தவனாக மார் தட்டி நின்றவர் தலைவர் பிரபாகரன். இதனை கோட்டபாய அல்ல எவராலும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது ! மாவீரனுக்கு ஏதுடா சாவு  !

ஆனால் பாலச்சந்திரன் பாதுகாப்பை இறுதியகா கையில் எடுத்த பகலவன் எங்கே ? அவர் இறக்கவில்லை என்றும் காணமல் போயுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில் பல சந்தேகங்கள் உள்ளது. பகலவனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் பல கேள்விகளுக்கு விடை உடனே கிடைத்துவிடும்.... அங்கே என்ன துரோகங்கள் நடந்தது ? தேடல்கள் தொடரும் இறுதிவிடை காணும் வரை  ..

Monday 11 September 2017

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

பிரேசில் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் ஜகத் ஜயசூரிய தமக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்குக் கூடத் தெரியாமல் திடுதிப்பென்று இலங்கைக்குத் திரும்பியிருந்தார்.



அவரது அந்தத் தகவலைக் கேட்டு நாடே குழப்பமுற்றது. இன்றைய கூட்டு அரசைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்கும் அளவுக்கு குறிப்பிட்ட அந்தச் செய்தி பாரதூரமான ஒன்றாக அமைந்தது.

‘உலகையே வென்று விட்டதாகக் கூறப்பட்டது. பன்னாட்டுச் சமூகம் தற்போது இலங்கையை நேசிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் போர் வீரர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த ஆயத்தமாகியுள்ளனர்.
அந்த வகையில் போர் வீரர்களைப் பாதுகாக்க இயலாத இந்த அரசு துரோக அரசு’’ ஜகத் ஜயசூரியாவின் கதையைப் பற்றிப் பிடித்த மகிந்த தரப்பினர்கள் இவ்வாறு விமர்ச்சிக்கத் தலைப்பட்டனர்.

போர்க்குற்றம் தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெயனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளது நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்படவிருப்பதாகவும் அந்த வழக்குகளில் முன்னிலையாக தாமும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்சவும் அழைக்கப்பட இடமுண்டு எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அந்த வகையில் நாட்டைக் காக்கும் சிப்பாய்களுக்கு இன்றைய கூட்டு அரசு துரோகத்தனம் இழைக்கிறது. நாட்டின் முப்படையினரை யும் காட்டிக் கொடுக்கும் தரப்பு இன்றைய அரசைப் போன்று வேறு எதுவும் கிடையாது. மேற்கண்ட கருத்துக்களைக் கேட்கும் போது பொங்கி வரும் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாதுள்ளது.

மகிந்தவைத் தோற்கடிக்க சிப்பாய்களும் முன்னின்றனர்

இன்றைய கூட்டு அரசு உருவாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரச ஊழியர்கள் மத்தியில் முன்னிலை வகித்தவர்கள் முப்படைகளைச் சேர்ந்தவர்களே.

முற்று முழுதாக படைத்தரப் பினர்கள் மகிந்தவைத் தோற்கடித்து மைத்திரிபாலவை வெற்றி பெற வைக்க ஒன்றிணைந்தமை தபால் மூலம் வாக்களிப்பு முடிவுகள் வெளியான போது உறுதியாகியிருந்தது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த தீரமிக்க இராணுவத் தரப்பை காய்கறிகள் பயிரிட்டு விற்பனை செய்யவும் குப்பை கூளங்களைக் கூட்டிச் சேர்க்கவும் புல்லு வெட்டவும் பயன்படுத்தியது இன்றைய கூட்டு அரசல்ல.
கார்ப்பந்தயத்தில் ஈடுபடுவதற்காக அதற்குப் பொருத்தமான வீதிகளை உருவாக்க மண் பரவித் தயார் செய்வதற்கு இராணுவத்தினரைப் பயன்படுத்தியது இன்றைய கூட்டு அரசல்ல. பல ஆண்டுகள் காலமாக சம்பள ஏற்றங்கள் எதனையும் வழங்காது இராணுவத்தினர் சிரமமான வாழ்க்கை வாழ வைத்தது இன்றைய கூட்டு அரசல்ல.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவை அழைத்து வந்து அமைச்சுப் பதவி வழங்கி வைத்தது இன்றைய கூட்டு அரசல்ல. அந்தக் கருணா செய்த குற்றங்களுக்காக அவருக்கு எதிரான விசாரணைகள் எங்கு நடத்தப்பட்டன என்பதை எவருமறியார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் கருணாவை சுதந்திரக் கட்சியின் உப தலைவராக்கி வைத்தது இன்றைய கூட்டு அரசோ அல்லது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவோ அல்ல.

சுதந்திரக் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களை மூத்த அமைச்சர்கள் என்ற பிரிவுக்குள் அடக்கி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்க வைத்தவர் மைத்திரிபால சிறிசேன அல்லர்.


அவ்விதம் செயற்பட்ட அதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கியவர்கள் மகிந்த தரப்பினரேயன்றி மைத்திரிபால சிறிசேன அல்லர்.

தலையில் தூக்கி வைத்த சரத் பொன்சேகா துரோகி ஆக்கப்பட்டார்

போர் முடிவுக்கு வந்து மகிந்த தரப்பினர் போர் வெற்றியைக் கொண்டாடிய வேளை முதலாவது கேக் துண்டு வழங்கப்பட்டது அவ்வேளைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கே.

ஆனால் அதே வேகத்தில் அவர்கள் நடத்திய போர் வெற்றிக் கண்காட்சியின் போது எந்தவொரு இடத்திலும் சரத் பொன்சேகாவின் புகைப்பட ‘கட்அவுட்’ டைக் காண முடியவில்லை. கண்காட்சிக்கு கருணா அம்மானும் சென்றிருந்தார்.

சரத் பொன்சேகாவால் செல்ல இயலாது போயிற்று மகிந்தவுக்கு எதிராக அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டமையே சரத் பொன்சேகா தமது பதவியை இழக்கக் காரணமாயிற்று. அந்த வகையில் போரை வென்றெடுத்துக் கொடுத்த சரத் பொன்சேகா சிறை வாசம் அனுபவிக்க அரச பிரதானிகள் வெற்றிவிழாக் கொண்டாடினர்.

இது இந்த நாடு நன்கறிந்த விடயம், தமக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளத்தக்க எந்தவொரு விடயத்தையும் தமக்குச் சாதகமான விதத்தில் ஆக்கிக் கொள்வதில் மகிந்த தரப்பினர்கள் பலே கில்லாடிகள்.

ஆனால் தற்போது ஜகத் ஜயசூரிய தொடர்பான பிரச்சினை வேறொரு ரூபம் எடுத்துள்ளது. இராணுவச் சீருடை அணிந்தவர்கள் இராணுவத்தில் சேவை ஆற்றியவர்கள் என்பதற்காக தவறு செய்பவரைத் தண்டனை பெறுவதிலிருந்து காப்பாற்றுவது நியாயமானதல்ல. சகல அரசியல்வாதிகளும் சகல அரச தலைவர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

முன்னைய காலகட்டத்தில் பாலியல் வன்முறை கொலை என்பவற்றை மேற்கொண்ட இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டனர். முன்னைய அரச தலைவர்கள் பொது மக்கள் தரப்பாக நின்று தவறிழைத்தோருக்குத் தண்டனை வழங்கினர்.

சரத் பொன்சேகாவும் அதனைத்தான் கூறினார். அவர் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராகச் காட்சியமளிக்க பன்னாட்டு நீதிமன்றுக்குச் செல்வாரானால் அது அவரது வைராக்கிய செயற்பாடே.

ஜகத் ஆனாலென்ன வேறு எந்த அதிகாரியானாலென்ன தவறிழைத்ததாக உறுதியாகத் தெரியுமானால் அதனை வெளிப்படுத்துவது எந்தவகையில் தவறாகும்?

புலம்பெயர் அமைப்புக்களை நலிவு படுத்திய கூட்டு அரசு

இலங்கைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களது பலத்தை நலிவுபடுத்தியது இன்றைய அரசே. முன்னெல்லாம் பௌத்த பிக்குமாரால் வட பகுதிக்குச் சுதந்திரமாகச் செல்ல முடிந்ததில்லை.

ஒரு சமயம் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போது அங்கு வைத்து அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மகிந்தவால் எந்தவொரு வெளிநாட்டுக்கும் செல்ல இயலாத நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

உலக நாடுகள் பலவற்றிலும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு சில வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பது குறித்தும் பரிசீலித்திருந்தன. மொத்தத்தில் உலக நாடுகளால் இலங்கை புறமொதுக்கப்படும் சூழல் உருவாக்கப்பட் டிருந்தது.

இலங்கையில் நடத்தப்பட்ட சோகம் பன்னாட்டு ரீதியிலான மாநாட்டுக்கு வந்த வெளிநாடுகளின் அரச தலைவர்கள் இலங்கையின் அரசியல் போக்குக் குறித்து வெளிப்படையாக விமர்சித்து விட்டுச் சென்றனர்.


பிரிட்டன் தலைமை அமைச்சர் கமரூன் இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்துச் சென்றிருந்தார். இந்தியத் தலைமை அமைச்சர் தமது இலங்கைக்கான பயணத்தின் போது இலங்கைக்கு இந்தியா உதவத் தயாராகவுள்ளதாகக் கூறிய போது மகிந்த தரப்பினர் அதனைத் திரித்துக் கூறி இந்தியா இலங்கையைத் தனது கொலனியாக மாற்ற முனைவதாக விமர்சித்திருந்தனர்.

சுதந்திரக் கட்சி தனது வருடாந்த சம்மேளன விழாவைக் கொண்டாடத் தயாரான வேளையிலேயே ஜகத் ஜயசூரிய விடயமும் அரங்குக்கு வந்துள்ளது. என்னை பன்னாட்டு நீதிமன்றில் நிறுத்தத் தயாராகி வருகின்றனர். இது அரசின் தவறாலேயே ஏற்பட்டது எனக் கூறிக் கொண்டு ஜகத் ஜயசூரிய இலங்கையில் கால் பதித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து முழு நாடுமே குழப் பத்தில் அமிழ்ந்து போயிற்று.
கடவுளே! இந்த அரசு கவிழப் போகிறதே என ஒரு தரப்பினர் அச்சத்தில் ஆழ்ந்தனர். உருவாக்கியவர்கள் கூட ஓரளவு குழப்பமுற்றனர். ஆனால் நினைத்த அளவுக்குப் பூதம் கறுப்பாக இல்லை.

இதற்கான பதில் சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரச தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய மீதோ இந்த நாட்டின் வேறெந்த படைத் தரப்பினர் மீதோ கைவைக்க நான் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த எவரொருவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.
சில அரசசார்பற்ற நிறுவனங்களது விருப்புக்கு ஏற்றவாறு நடனமாட நான் தயாரில்லை. என அவர் ஆக்ரோசமாகத் தெரிவித்துள்ளார். இந்த அரசின் நிலைப்பாடு அது.

அதற்கு மேலதிகமாக கேள்வி கேட்க எதுவுமில்லை. அதனை உறுதி செய்யும் விதத்தில் நாட்டின் தற்போதைய இராணுவத்தளபதியும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கமைய செயற்படுதல் நியாயமல்ல

முன்பொரு சமயம் நான் அடித்து விரட்டப்பட்ட வேளையில் கூட நான் இராணுவத்தினருக்கு எதிராக எதுவித கருத்தும் வெளியிட்டதில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்த வேண்டாமென நான் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.

பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக ஜெனரல் ஜெயசூரிய கடமையாற்றித் தனது சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த வேளையில் போர்க் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அத்தகைய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டதில்லை.

எனவே தனிப்பட்ட நபர்களது பிரச் சினைகளுடன் மதிப்பு மிக்க இராணுவத்தைத் தொடர்புபடுத்த வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். ஜகத் ஜயசூரிய இராணுவத்தளபதியாக இருந்த வேளையில் எனக்குச் செய்த தீங்குகளுக்காக நான் அவரைக் குறை கூறியதில்லை.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இராணுவத்தளபதி என்ற ரீதியில் கண்டனம் தெரிவிக்கிறேன். பயங்கரவாதிகளுடன் மேற்கொண்ட போரில் 28 ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு இருமடங்கான தொகையினர் காயமுற்றும் ஊனமுற்றுமுள்ளனர். இவ்விதம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளவா இராணுவத்தினர் இந்த அளவுக்கு உயிர்த்தியாகம் செய்தனர்? இராணுவத்தினர் எவரும் தமது கடமையின் போது மனித உரிமைகளை மீறியதில்லை என அவர் கருத்து வெளியிட் டிருந்தார்.

ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தாரா இல்லையா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை. நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினர் எவரையும் சிறைக்கு அனுப்ப எவர் முயன்றாலும் அரச தலைவர் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர் சிறுவர்களை நேசித்தவர், மிருகங்களை நேசித்தவர், புகைத்தல் பழக்கமற்றவர், புலால் உண்ணாதவர் ஆனாலும் அவர் குற்றமிழைத்தவர்.

யூத இனத்தவர்களை அழித்தொழிக்கக் கனவு கண்டவர். ஆதலால் தவறிழைத்த மனிதரொருவர் ஆயிரம் ஒளிவிளக்குகளை ஏற்றி ஆண்டவனைத் தொழுதாலும் தண்டனை பெற்றால் மட்டுமே விடுதலை அடைய இயலும்.

அந்த வகையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தரப்பினர் குற்ற மிழைக்காதவர்களாக இருக்கட்டும் என்று விரும்புவோம்.

Thursday 7 September 2017

தமிழர்களுக்கு சலித்துப்போன இந்தியாவின் உறுதிமொழிகள்!

இலங்கைத் தமிழர்களை ஒருபோதுமே கைவிடப் போவதில்லை என்றும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் இந்தியா இன்னமும் கூட கூறிக் கொண்டேயிருக்கின்றது.






இந்தியாவின் இந்த உறுதிமொழி புதியதொன்றல்ல... இலங்கையில் தோற்றம் பெற்ற இனமுரண்பாடானது 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்புக் கலவரமாக உருவெடுத்த நாளில் இருந்து, இங்குள்ள தமிழர்களின் விவகாரம் தொடர்பாக இந்தியா இவ்வாறு தான் கூறிக்கொண்டிருக்கின்றது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அதிகாரத்திலிருந்த காலப் பகுதியிலிருந்தே இலங்கை மீதான இந்திய கரிசனையும் தலையீடுகளும் தொடங்கி விட்டன. அதன் பின்னர் இந்திய மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் மாறிமாறிக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை தீவிரமடைந்த 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து இன்று வரையான கடந்த 34 வருட காலப் பகுதியில் இந்தியாவில் பல்வேறு ஆளும் கட்சிகளையும், பிரதமர்களையும் பார்த்தாகி விட்டது.

இலங்கையில் உள்நாட்டு இன நெருக்கடியும், போரும், தமிழர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும் 1983ற்குப் பின்னர் தீவிரமடைந்து சென்று கொண்டிருந்ததே தவிர அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகள் இன்னுமே எட்டப்படவில்லை.

மதிப்பிடமுடியாத உயிரிழப்புகளும் உடைமை அழிவுகளும் ஏற்பட்டு தமிழினம் நிர்க்கதியாகி நிற்கின்ற இன்றைய வேளையிலும் கூட இலங்கைத் தமிழர்களைக் கைவிடப் போவதில்லையென்று இந்தியா கூறிக்கொண்டே இருக்கின்றது.

இந்திரா காந்தியில் ஆரம்பமாகி கடந்த 34 வருட காலத்தில் பதவியிலிருந்த அத்தனை பிரதமர்களும் இதனையே கூறினார்கள்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பின்னர் பதவியிலிருந்த அரசாங்கங்களில் கூடுதல் அறுதிப் பெரும்பான்மைப் பலமுள்ள அரசாக விளங்குகின்ற இன்றைய அரசாங்கத்தின் ஆளுமை மிகுந்த பிரதமரான நரேந்திர மோடியும், இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாக இவ்வாறான கருத்தையே அவ்வப்போது கூறி வருகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜ் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்த வேளையில், இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடப் போவதில்லையெனவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா பாடுபடுமென்றும் கூறியிருக்கின்றார்.

சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்த கூற்று அவரது தனிப்பட்ட கருத்தென்று கொள்ள முடியாது. இந்திய அரசின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்திருந்த அவர் தெரிவித்த கருத்தானது மத்திய அரசின் இன்றைய செய்தியாகும்.

அக்கூற்றை பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியாகவும் கொள்ள முடியும்.
இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்து தொடர்பாக வடக்கு, கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து இன்னுமே அசட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழர் அரசியலில் ஊறித் திளைத்த மூத்த அரசியல்வாதியுமான வீ. ஆனந்தசங்கரியோ ஒருவேளை நம்பிக்கையும் புளகாங்கிதமும் அடையக் கூடும்.

ஏனெனில் தமிழர்களின் அரசியலானது கடந்த சுமார் அரை நூற்றாண்டுகளாக இவ்வாறு தான் கனவுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வீணான கற்பனாவாதங்களும் போலியான நம்பிக்கைகளும் கொண்ட பாதையிலேதான் தமிழர்களின் பிரதிநிதிகள் தங்களது அரசியலை இன்னமும் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஊடாக இந்தியா இப்போது இறுதியாக வழங்கியிருக்கும் உறுதிமொழி வார்த்தையைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது பிரசாரத்துக்காக வடக்கு, கிழக்கு தமிழர் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக் கூடும்.

ஆனாலும் அரசியல்வாதிகளைப் பார்க்கிலும் தமிழ் மக்கள் இப்போதெல்லாம் மிகவும் அறிவுக்கூர்மை அடைந்திருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்குத் தமிழ் இனம் தனது ஏகோபித்த ஒற்றுமையை உலகுக்குக் காண்பிக்க வேண்டுமெனவும், அதன் வாயிலாக இனப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வொன்றுக்கு அடித்தளமிட முடியுமெனவுமே கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்தார்களே தவிர, இந்தியா தமக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையினால் அல்ல!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டுமென்ற தேவையெல்லாம் இந்தியாவுக்குக் கிடையாதென்ற யதார்த்தத்தை தமிழ் மக்கள் புரிந்து கொண்டதைப் போன்று தமிழ் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்வது முதலில் அவசியம்.

இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. அவ்வாறு இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவதற்காக தமிழர் விவகாரம் இந்தியாவுக்குத் தேவையாகவுள்ளது.

இல்லையேல், தமிழக அரசியலில் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொள்ள வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உண்டு. 

ஆனால் பலமுள்ளதாக விளங்குகின்ற நரேந்திர மோடியின் அரசு தமிழகத்தைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியத்தில் இன்றில்லை.
எனவே இலங்கைத் தமிழர் மீதான அக்கறை என்பதெல்லாம் இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களாகும்.

இவ்வாறிருக்கையில், இந்தியா இப்போதும் கூறுகின்ற உறுதிமொழிகள் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சலித்துப் போன வார்த்தைகள்!

Sunday 3 September 2017

தாயில்லாத அனிதா கொலையா, தற்கொலையா? பின்னணியில் யார்?

இந்திய மாணவர்களுக்கு தரமான உலக கல்வியை தருகிறோம் என நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயிலும் உரிமையை கண்கூடாக பறித்துள்ளது.

 

 

மத்திய, மாநில அரசாங்கங்களின் சுயநலமான அரசியலுக்கு மருத்துவக் கனவை 12 ஆண்டுகளாக சுமந்து வந்த அனிதா பலியாகியுள்ளார்.


ஒரு குடிமகன் இதைத்தான் சாப்பிட வேண்டும். ஒரு மாணவன் இந்த கல்வியைத் தான் படிக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தால் அது எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்?


அரசாங்கம் வரையறை செய்த கல்வியை படித்து 1176 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு மருத்துவத் துறையில் இடம் இல்லை. கட் ஆஃபில் 196.5 மதிப்பெண்கள் பெற்றதற்கும் மதிப்பில்லை என்றால் வேறு யார் தான் தமிழகத்தில் மருத்துவத் துறையில் படிக்க வேண்டும்?

 

தாயார் இல்லாமல், கூலித் தொழிலாளியான தந்தையை கவனித்துக் கொண்டு கடுமையாக படித்த அனிதாவின் கனவு பொய்த்து உயிரை மாய்த்துக் கொண்டார் எனில் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எந்த அரசு மீது நம்பிக்கை எழும்?

 

அனிதாவை தற்கொலைக்கு தூண்டி அவரது மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் மீது தமிழகம் மட்டுமின்றி உலகத் தமிழர்களும் இன்று கடுமையான வெறுப்பில் உள்ளனர்.

 

மத்திய, மாநில அரசுகள் தான் குற்றவாளிகள் என்றால் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளும் குற்றவாளிகள் தான்.

Friday 1 September 2017

மியன்மார் நடக்கும் இனப்படுகொலையின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் - மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெறுகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.



முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.

இரும்புத் திரை நாடு – மியன்மார் ( மறுபிரசுரம் 2015 )

பௌத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக்கப்படுகின்றது.
பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ம் ஆண்டு மியான்மார் (அல்லது Union of Myanmar) என்று மாற்றியமைக்கப்பட்டது.
சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன. 

பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் அழைக்கப்படுகின்றது.
சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்த பாடுபட்டார்.

இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயல்பாடுகளை விபரிக்கும் விதமாகவே “இரும்புத் திரை நாடு” என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் அரசு

15ம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் வாழ்ந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தர்மத்தை ஆட்சி மதமாக வைத்துள்ள மியன்மார் மேற்கொள்ளும் தாக்குதல்கள் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகும்.

மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெரும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும்.
உண்ண உணவின்றி, குடிப்பதற்கு நீராகாரமின்றி, தங்க இடமின்றி கடந்த பல வருடங்களாகவே மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவிதமான அவதிக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.

2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுத் தலைவர் தெய்ன் செய்ன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட “முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் திட்டம்” காரணமாக அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் வீரியமடையத் தொடங்கின.

அரசுத் தலைவர் அறிவித்த சர்ச்சைக்குரிய திட்டத்தினை ஆதரித்து மியன்மாரின் சர்ச்சைக்குரிய 969 இயக்கத்தின் தலைவரும், பௌத்த மத குருவுமான அசின் விராது தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 43 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

அசின் விராதுவின் 969

969 இயக்கம் (969 Movement) என்பது பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில் இஸ்லாமிய பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அமைப்பாகும்.

மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு அசின் விராது தேரர் இதன் தலைவராக இருந்து செயற்படுகிறார்.

இவ்வியக்கம் சர்வதேச மட்டத்தில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. பன்னாட்டு ஊடகங்கள் இதன் தலைவர் அசின் விராது தொடர்பில் பலத்த விமர்சனைத்தை முன்வைத்தன.

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்று இவரை விமர்சனம் செய்திருந்தது.

மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாக இருப்பது இவரும், இவருடைய 969 இயக்கமும் தான். மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார்.

இவருடைய தூண்டுதலில் ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பை வழிநடத்தும் அஸின் விராது தேரரை “பர்மாவின் பின்லேடன்” என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

இன்றைய நிலையில், உலகில் பௌத்த தீவிரவாதத்தின் ஆணிவேராக கணிக்கப்படுபவரே அஸின் விராது தேரர். அகிம்சையையும், தர்மத்தையும் போதிப்பதாக கூறப்படும் பௌத்த மதத்தில் இத்தகையதொரு கடும் போக்குவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுவது ஏவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும்?

யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்.

மியன்மார் அரசு மற்றும் அசின் விராது தலைமையிலான 969 இயக்கத்தினால் தினமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் வரலாறு தெளிவானது.

15 ம் நூற்றாண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

பௌத்த பேரினவாத கடும் போக்காளர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்நாட்டில் வாழ முடியாத நிலையினை எட்டியுள்ள இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விடடும் வெளியேற முடிவெடுத்து கடல் வழி பயணத்தில் வேறு நாடுகளை அடைய முற்பட்ட வேலை ஆயிரக் கணக்கானவர்கள் கடலில் வீழ்ந்து மரணித்து விட்டார்கள்.

மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

உயிர் பிழைப்பதற்காக உயிர்ப் பிச்சைக் கேட்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அண்டை நாடுகளான பங்களா தேசம், இந்தோனேஷியா, மலேசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கூட அடைக்கலம் கொடுக்கத் தயங்குகின்றன.

சிலருக்காக கதவைத் திறந்தால் பலருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தின் காரணமாக இந்நாடுகள் மௌனம் காத்து வருகின்றன.

தாய்லாந்தைப் பொறுத்த வரையில் அதுவும் பௌத்தத்தை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதனால் மியன்மாரை பகைத்துக் கொள்ள தாய்லாந்து விரும்பவில்லை என்பதே நிதர்சனமாகும்.

மலேசியா முஸ்லிம் நாடு. அதுவும் செல்வந்த நாடாக இருப்பது தான் அவர்களுக்குரிய பெரும் பிரச்சினையாகும்.

ரோஹிங்யா அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதித்தால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கு சிக்கலாகி விடும் என்ற காரணத்தினால் மலேசியாவுக்குள் ரோஹிங்யா அகதிகள் உள்வாங்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் அனைத்து மக்களையும் ஏற்றத் தாழ்வின்றி பார்க்கும் இஸ்லாத்தை மதமாக கொண்ட மலேசியா முஸ்லிம்கள். ரோஹிங்யா முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டவர்களாக நினைப்பதும் இன்னொரு காரணமாக சொல்லப்படுகின்றது.

ஸக்காத், ஸதகா போன்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை தொடர்பாக வலியுறுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மலேசிய மக்களின் இது போன்ற செயல்பாடுகள் இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும்.

பங்களாதேச அரசும் ரோஹிங்யா முஸ்லிம்களை தமது நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. நாட்டின் சனத்தொகை பெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேசத்தில் இடமளித்தால் பாரிய பிரச்சினைகள் தோன்றலாம் என்று கருதி அவர்களை ஏற்றுக் கொள்வதை பங்களாதேச அரசும் தவிர்த்து வருகின்றது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தாலும் “ஆசியான்” இது தொடர்பில் மௌனமாகவே இருந்து வருகின்றது.
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளைக் காப்பாற்றுவதை விட மியன்மாருடனான உறவைப் பேணுவதே “ஆசியான்” அமைப்பின் முக்கிய பணியாக அது நினைக்கின்றது.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம்

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின் பிரகாரம் கடலில் நிர்க்கதியான நிலையில் இருப்போரை மீண்டும் கடலுக்குள் துரத்தியடிப்பது என்பது சட்டவிரோதமான செயலாகும்.

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின்படி ரோஹிங்யா அகதிகளை காப்பாற்றுவது ஒருபுறமிருக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே பல காலங்கள் ஆகலாம் என்பதே உண்மையாகும்.

எது எப்படிப் போனாலும் சமுத்திரவியல் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் “ஆசியான்” அமைப்பின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.
சர்வதேச சமுத்திரவியல் சட்டம், அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என அனைத்தையும் ஆராய்ந்து “ஆசியான்” போன்ற அமைப்புகள் முடிவெடுப்பதற்குள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலை என்னாகும்?

இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தற்போது உயிருக்குப் போராடி வரும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்பார்களா?

மியன்மார் முஸ்லிம்களின் வரலாறு

15 ம் நூற்றாண்டு - மியன்மாரில் இஸ்லாமிய எழுத்தோலைகள், நாணயங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1799 - மியன்மார் – பர்மா தொடர்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ரோஹிங்யா எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1871 - மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 58000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1911 - மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 179000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977 - மியன்மார் – பர்மாவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சுமார் இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் சுமார் 12000 பேர் பட்டினியால் பங்களாதேசத்தில் உயிரிழந்தனர். பின்னர் இவர்களில் மீதமிருந்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு திரும்பி ராகின் மாநிலத்தில் குடியேறினார்கள்.

1982 - ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மா குடியுரிமையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

1989 - பர்மா என்றிருந்த நாட்டின் பெயர் மியன்மார் என்று மாற்றப் பட்டது.

1991 - கலவரம் காரணமாக 250000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தார்கள்.

1992 – 1993 - இடம் பெயர்ந்தவர்களில் 50 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவந்தமாக மீண்டும் மியன்மாருக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

2012 ஜனவரி மாதம் - பதிவு செய்யப்பட்ட 29000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் 1991ல் பங்களாதேசத்தில் குடியேறியவர்கள். எனினும் பதிவு செய்யப்படாத இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தனர்.

2012 - எட்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரில் வாழ்வதாக தரவுகள் கூறுகின்றன.

2014 - கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.