Monday 11 September 2017

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

பிரேசில் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் ஜகத் ஜயசூரிய தமக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்குக் கூடத் தெரியாமல் திடுதிப்பென்று இலங்கைக்குத் திரும்பியிருந்தார்.



அவரது அந்தத் தகவலைக் கேட்டு நாடே குழப்பமுற்றது. இன்றைய கூட்டு அரசைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்கும் அளவுக்கு குறிப்பிட்ட அந்தச் செய்தி பாரதூரமான ஒன்றாக அமைந்தது.

‘உலகையே வென்று விட்டதாகக் கூறப்பட்டது. பன்னாட்டுச் சமூகம் தற்போது இலங்கையை நேசிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் போர் வீரர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த ஆயத்தமாகியுள்ளனர்.
அந்த வகையில் போர் வீரர்களைப் பாதுகாக்க இயலாத இந்த அரசு துரோக அரசு’’ ஜகத் ஜயசூரியாவின் கதையைப் பற்றிப் பிடித்த மகிந்த தரப்பினர்கள் இவ்வாறு விமர்ச்சிக்கத் தலைப்பட்டனர்.

போர்க்குற்றம் தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெயனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளது நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்படவிருப்பதாகவும் அந்த வழக்குகளில் முன்னிலையாக தாமும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்சவும் அழைக்கப்பட இடமுண்டு எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அந்த வகையில் நாட்டைக் காக்கும் சிப்பாய்களுக்கு இன்றைய கூட்டு அரசு துரோகத்தனம் இழைக்கிறது. நாட்டின் முப்படையினரை யும் காட்டிக் கொடுக்கும் தரப்பு இன்றைய அரசைப் போன்று வேறு எதுவும் கிடையாது. மேற்கண்ட கருத்துக்களைக் கேட்கும் போது பொங்கி வரும் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாதுள்ளது.

மகிந்தவைத் தோற்கடிக்க சிப்பாய்களும் முன்னின்றனர்

இன்றைய கூட்டு அரசு உருவாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரச ஊழியர்கள் மத்தியில் முன்னிலை வகித்தவர்கள் முப்படைகளைச் சேர்ந்தவர்களே.

முற்று முழுதாக படைத்தரப் பினர்கள் மகிந்தவைத் தோற்கடித்து மைத்திரிபாலவை வெற்றி பெற வைக்க ஒன்றிணைந்தமை தபால் மூலம் வாக்களிப்பு முடிவுகள் வெளியான போது உறுதியாகியிருந்தது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த தீரமிக்க இராணுவத் தரப்பை காய்கறிகள் பயிரிட்டு விற்பனை செய்யவும் குப்பை கூளங்களைக் கூட்டிச் சேர்க்கவும் புல்லு வெட்டவும் பயன்படுத்தியது இன்றைய கூட்டு அரசல்ல.
கார்ப்பந்தயத்தில் ஈடுபடுவதற்காக அதற்குப் பொருத்தமான வீதிகளை உருவாக்க மண் பரவித் தயார் செய்வதற்கு இராணுவத்தினரைப் பயன்படுத்தியது இன்றைய கூட்டு அரசல்ல. பல ஆண்டுகள் காலமாக சம்பள ஏற்றங்கள் எதனையும் வழங்காது இராணுவத்தினர் சிரமமான வாழ்க்கை வாழ வைத்தது இன்றைய கூட்டு அரசல்ல.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவை அழைத்து வந்து அமைச்சுப் பதவி வழங்கி வைத்தது இன்றைய கூட்டு அரசல்ல. அந்தக் கருணா செய்த குற்றங்களுக்காக அவருக்கு எதிரான விசாரணைகள் எங்கு நடத்தப்பட்டன என்பதை எவருமறியார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் கருணாவை சுதந்திரக் கட்சியின் உப தலைவராக்கி வைத்தது இன்றைய கூட்டு அரசோ அல்லது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவோ அல்ல.

சுதந்திரக் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களை மூத்த அமைச்சர்கள் என்ற பிரிவுக்குள் அடக்கி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்க வைத்தவர் மைத்திரிபால சிறிசேன அல்லர்.


அவ்விதம் செயற்பட்ட அதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கியவர்கள் மகிந்த தரப்பினரேயன்றி மைத்திரிபால சிறிசேன அல்லர்.

தலையில் தூக்கி வைத்த சரத் பொன்சேகா துரோகி ஆக்கப்பட்டார்

போர் முடிவுக்கு வந்து மகிந்த தரப்பினர் போர் வெற்றியைக் கொண்டாடிய வேளை முதலாவது கேக் துண்டு வழங்கப்பட்டது அவ்வேளைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கே.

ஆனால் அதே வேகத்தில் அவர்கள் நடத்திய போர் வெற்றிக் கண்காட்சியின் போது எந்தவொரு இடத்திலும் சரத் பொன்சேகாவின் புகைப்பட ‘கட்அவுட்’ டைக் காண முடியவில்லை. கண்காட்சிக்கு கருணா அம்மானும் சென்றிருந்தார்.

சரத் பொன்சேகாவால் செல்ல இயலாது போயிற்று மகிந்தவுக்கு எதிராக அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டமையே சரத் பொன்சேகா தமது பதவியை இழக்கக் காரணமாயிற்று. அந்த வகையில் போரை வென்றெடுத்துக் கொடுத்த சரத் பொன்சேகா சிறை வாசம் அனுபவிக்க அரச பிரதானிகள் வெற்றிவிழாக் கொண்டாடினர்.

இது இந்த நாடு நன்கறிந்த விடயம், தமக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளத்தக்க எந்தவொரு விடயத்தையும் தமக்குச் சாதகமான விதத்தில் ஆக்கிக் கொள்வதில் மகிந்த தரப்பினர்கள் பலே கில்லாடிகள்.

ஆனால் தற்போது ஜகத் ஜயசூரிய தொடர்பான பிரச்சினை வேறொரு ரூபம் எடுத்துள்ளது. இராணுவச் சீருடை அணிந்தவர்கள் இராணுவத்தில் சேவை ஆற்றியவர்கள் என்பதற்காக தவறு செய்பவரைத் தண்டனை பெறுவதிலிருந்து காப்பாற்றுவது நியாயமானதல்ல. சகல அரசியல்வாதிகளும் சகல அரச தலைவர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

முன்னைய காலகட்டத்தில் பாலியல் வன்முறை கொலை என்பவற்றை மேற்கொண்ட இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டனர். முன்னைய அரச தலைவர்கள் பொது மக்கள் தரப்பாக நின்று தவறிழைத்தோருக்குத் தண்டனை வழங்கினர்.

சரத் பொன்சேகாவும் அதனைத்தான் கூறினார். அவர் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராகச் காட்சியமளிக்க பன்னாட்டு நீதிமன்றுக்குச் செல்வாரானால் அது அவரது வைராக்கிய செயற்பாடே.

ஜகத் ஆனாலென்ன வேறு எந்த அதிகாரியானாலென்ன தவறிழைத்ததாக உறுதியாகத் தெரியுமானால் அதனை வெளிப்படுத்துவது எந்தவகையில் தவறாகும்?

புலம்பெயர் அமைப்புக்களை நலிவு படுத்திய கூட்டு அரசு

இலங்கைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களது பலத்தை நலிவுபடுத்தியது இன்றைய அரசே. முன்னெல்லாம் பௌத்த பிக்குமாரால் வட பகுதிக்குச் சுதந்திரமாகச் செல்ல முடிந்ததில்லை.

ஒரு சமயம் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போது அங்கு வைத்து அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மகிந்தவால் எந்தவொரு வெளிநாட்டுக்கும் செல்ல இயலாத நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

உலக நாடுகள் பலவற்றிலும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு சில வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பது குறித்தும் பரிசீலித்திருந்தன. மொத்தத்தில் உலக நாடுகளால் இலங்கை புறமொதுக்கப்படும் சூழல் உருவாக்கப்பட் டிருந்தது.

இலங்கையில் நடத்தப்பட்ட சோகம் பன்னாட்டு ரீதியிலான மாநாட்டுக்கு வந்த வெளிநாடுகளின் அரச தலைவர்கள் இலங்கையின் அரசியல் போக்குக் குறித்து வெளிப்படையாக விமர்சித்து விட்டுச் சென்றனர்.


பிரிட்டன் தலைமை அமைச்சர் கமரூன் இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்துச் சென்றிருந்தார். இந்தியத் தலைமை அமைச்சர் தமது இலங்கைக்கான பயணத்தின் போது இலங்கைக்கு இந்தியா உதவத் தயாராகவுள்ளதாகக் கூறிய போது மகிந்த தரப்பினர் அதனைத் திரித்துக் கூறி இந்தியா இலங்கையைத் தனது கொலனியாக மாற்ற முனைவதாக விமர்சித்திருந்தனர்.

சுதந்திரக் கட்சி தனது வருடாந்த சம்மேளன விழாவைக் கொண்டாடத் தயாரான வேளையிலேயே ஜகத் ஜயசூரிய விடயமும் அரங்குக்கு வந்துள்ளது. என்னை பன்னாட்டு நீதிமன்றில் நிறுத்தத் தயாராகி வருகின்றனர். இது அரசின் தவறாலேயே ஏற்பட்டது எனக் கூறிக் கொண்டு ஜகத் ஜயசூரிய இலங்கையில் கால் பதித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து முழு நாடுமே குழப் பத்தில் அமிழ்ந்து போயிற்று.
கடவுளே! இந்த அரசு கவிழப் போகிறதே என ஒரு தரப்பினர் அச்சத்தில் ஆழ்ந்தனர். உருவாக்கியவர்கள் கூட ஓரளவு குழப்பமுற்றனர். ஆனால் நினைத்த அளவுக்குப் பூதம் கறுப்பாக இல்லை.

இதற்கான பதில் சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரச தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய மீதோ இந்த நாட்டின் வேறெந்த படைத் தரப்பினர் மீதோ கைவைக்க நான் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த எவரொருவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.
சில அரசசார்பற்ற நிறுவனங்களது விருப்புக்கு ஏற்றவாறு நடனமாட நான் தயாரில்லை. என அவர் ஆக்ரோசமாகத் தெரிவித்துள்ளார். இந்த அரசின் நிலைப்பாடு அது.

அதற்கு மேலதிகமாக கேள்வி கேட்க எதுவுமில்லை. அதனை உறுதி செய்யும் விதத்தில் நாட்டின் தற்போதைய இராணுவத்தளபதியும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கமைய செயற்படுதல் நியாயமல்ல

முன்பொரு சமயம் நான் அடித்து விரட்டப்பட்ட வேளையில் கூட நான் இராணுவத்தினருக்கு எதிராக எதுவித கருத்தும் வெளியிட்டதில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்த வேண்டாமென நான் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.

பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக ஜெனரல் ஜெயசூரிய கடமையாற்றித் தனது சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த வேளையில் போர்க் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அத்தகைய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டதில்லை.

எனவே தனிப்பட்ட நபர்களது பிரச் சினைகளுடன் மதிப்பு மிக்க இராணுவத்தைத் தொடர்புபடுத்த வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். ஜகத் ஜயசூரிய இராணுவத்தளபதியாக இருந்த வேளையில் எனக்குச் செய்த தீங்குகளுக்காக நான் அவரைக் குறை கூறியதில்லை.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இராணுவத்தளபதி என்ற ரீதியில் கண்டனம் தெரிவிக்கிறேன். பயங்கரவாதிகளுடன் மேற்கொண்ட போரில் 28 ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு இருமடங்கான தொகையினர் காயமுற்றும் ஊனமுற்றுமுள்ளனர். இவ்விதம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளவா இராணுவத்தினர் இந்த அளவுக்கு உயிர்த்தியாகம் செய்தனர்? இராணுவத்தினர் எவரும் தமது கடமையின் போது மனித உரிமைகளை மீறியதில்லை என அவர் கருத்து வெளியிட் டிருந்தார்.

ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தாரா இல்லையா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை. நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினர் எவரையும் சிறைக்கு அனுப்ப எவர் முயன்றாலும் அரச தலைவர் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர் சிறுவர்களை நேசித்தவர், மிருகங்களை நேசித்தவர், புகைத்தல் பழக்கமற்றவர், புலால் உண்ணாதவர் ஆனாலும் அவர் குற்றமிழைத்தவர்.

யூத இனத்தவர்களை அழித்தொழிக்கக் கனவு கண்டவர். ஆதலால் தவறிழைத்த மனிதரொருவர் ஆயிரம் ஒளிவிளக்குகளை ஏற்றி ஆண்டவனைத் தொழுதாலும் தண்டனை பெற்றால் மட்டுமே விடுதலை அடைய இயலும்.

அந்த வகையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தரப்பினர் குற்ற மிழைக்காதவர்களாக இருக்கட்டும் என்று விரும்புவோம்.

No comments:

Post a Comment