Sunday 18 March 2018

மூதேவி யார்?

இது என்ன கேள்வி மூதேவி என்பது ஒரு  தீயூழ் (Bad luck  ) அல்லது ஒரு வசைச்சொல் என்பதே பலரின் கருத்தாகவிருக்கும், ஆனால் உண்மையில் மூத்த தேவியே மருவி மூதேவியாக மாறியது என்பதும் இந்த மூத்த தேவியே ஒரு காலத்தில் தமிழர்களினதும் மற்றைய பழங்குடியினரதும் முக்கிய தெய்வம் என்பதுமே உண்மை.  மனிதர்கள் ஆதிகாலத்தில் தாய்வழிச் சமுதாயமாகவிருந்தபோது பெண் தெய்வ வழிபாடே முக்கியம் பெற்றிருந்தது. அந்தவகையில் தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக கொற்றவை எனும் பெண் தெய்வம் (சான்று- தொல்காப்பியம்) வழிபடப்பட்டுவந்தது.  “ முன்னோர் வழிபாடு”  மரபிற்கமைய கொற்றவை என்பது தனி ஒரு பெண்ணைக் குறிக்காமல் ஒவ்வொரு குலம் அல்லது இனக்குழுக்களிற்கும் வெவ்வேறான பெண் மூத்தோர்களையே குறிக்கும். இந்த வகையில் உருவான ஒரு பெண் தெய்வ வழிபாடே மூத்ததேவி (தவ்வை எனவும் அழைப்பர்) வழிபாடாகும்.

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி, தவ்வை, காக்கைக் கொடியோள் , பழையோள் உட்படப்  பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.  பெண்களின் கருவளத்தை அடிப்படையாகக்கொண்டு மழை வளத்தைப் பெறுவதற்கும் இத்தெய்வத்தை பழங்குடியினர் வணங்கிவந்தனர். பின்னர் ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும், பிறகு சாக்தத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.


மூத்ததேவி மூதேவியான கதை:::
  இவ்வாறு முக்கியமான ஒரு தெய்வமாகவிருந்த மூத்ததேவி வழிபாடு பார்ப்பனப்படையெடுப்புடன் நிலைகுலைந்து போனது.
பார்ப்பனர்கள் தமது வைதீக (இன்றைய இந்து) மதத்தைப் பரப்பும்போது தமது அக்கினி, இந்திரன், சோமன் போன்ற வேதகால கடவுள்களைப் பரப்ப முயன்று முதலில் தோல்வியுற்ற பின்பு பழங்குடிகளின் கடவுள்களை தமதாக்கினர் (எடுத்துக்காட்டு-முருகன்,  மாயன்).    தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியாத தெய்வங்களைப் புராண மூடநம்பிக்கைக் கதைகள் மூலம் இழிவுபடுத்திக் கேவலப்படுத்தினர்.   அந்தவகையில்  “மூதேவி” ஆக்கப்பட்ட பெண்தெய்வம்தான்  மூத்ததேவி.  இவ்வாறான பார்ப்பன புரட்டுகளிற்குப் பின்னரே   தேவி   போகூழ் (Bad luck ), வசைபாடல் என்பவற்றுடன் தொடர்புபட்டுப் போனாள்.    இத்தகைய புரட்டலிற்கு வழக்கம்போல உயர்சாதியினர் (?) இலகுவாகப்  பலியானபோதும், அடிமட்ட மக்கள் தமது தவ்வையினை (மூத்ததேவி) தொடர்ந்தும்  வழிபட்டேவந்தனர்.
    பல்லவர்களின் ஆட்சிகாலமான 8ம் நூற்றாண்டிலும் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார்.  பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச்  சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக்   குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார்.  பின்னர் பிற்காலச்  சோழர் காலத்தில் (பார்ப்பனர்களிற்கான பொற்காலத்தில்) தவ்வை வழிபாடு குறித்த ஒரு சாதியினரின்  (வண்ணார்களின்)  வழிபாடாக மட்டுமே சுருக்கப்பட்டது.   பொதுவாகவே தமிழரின் மரபுகளைச் சிதைக்கவேண்டுமாயின் அவற்றை குறித்த ஒரு சாதிக்கு மட்டுமென ஒதுக்கிவிடடுப்  பின்னர் குறித்த சாதியினருடன் சேர்த்து அந்த மரபுகளையும் இழிவுபடுத்திவிடுவது பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை (காட்டு- தமிழரின் தலையாய இசைக்கருவியான பறை).   இவ்வாறான பின்புலத்திலேயே வண்ணார்களின் தொழிலுடன் தொடர்புடைய கழுதையானது மூத்ததேவியின் வாகனமாக்கப்பட்டது.    இந்த வகையில் தவ்வை வழிபாடு குறித்த சாதியினரிடம்  தொடர்ந்து மாடன்- மாடத்தி வழிபாடாக (சுடலை மாடன், நல்ல மாடத்தி) நிலைத்திருக்கிறது.  அதேபோன்று பிற சாதியினர் மத்தியிலிருந்த மூத்ததேவி பார்வதிதேவியாகவும், ஐயனார் வழிபாட்டுடனும் உள்வாங்கப்பட்டது.
   பிற்காலச் சோழர் காலத்தில் பார்ப்பனியச் செல்வாக்குடன் சைவம் மூத்ததேவியினை வண்ணாரிற்கு மட்டுமே ஒதுக்கிவிட, வைணவமும் தன்பங்கிற்கு மூத்ததேவியினை சிதைக்கும் வேலையினைச் செய்தது.  திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில்  மூத்ததேவி செல்வம் தருபவளாகவே வழிபடப்பட்டாள்.  சமசுகிரதத்தில்  ஜேஷ்டா தேவி எனவும் அழைக்கப்பட்டாள்.  ஜேஷ்டா தேவி என்பதற்கு முதல்தேவி என்றொரு பொருளிருக்க அது இருட்டடிப்பச்செய்யப்பட்டு மற்றொரு பொருளான சேட்டை என்பது கற்பிக்கப்பட்டது.  சேட்டை /மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும்,  லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல பக்தர்களை  நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது.
    ஈழத்தினைப் பொறுத்தவரையில் இந்த மூத்ததேவி வழிபாடானது வீரபத்திரர் வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என உய்த்துணரமுடியும், ஏனெனில் வீரபத்திரர் தொடர்புடைய புராணக்கதையும் வண்ணார் சாதியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.   அதாவது வீரபத்திரர் சிவனை அவமதித்த  தட்சண் எனும் அசுரனைக் கொன்ற பாவத்திற்காக வீரபத்திரர் வழித்தோன்றல்கள் சிவபக்தர்களின் வண்ணம் தோய்த்தலை (வண்ணார் தொழில்) மேற்கொள்ளப் பணிக்கப்பட்டதாகச் செல்கிறது அந்தப் புராணக்கதை.
      இவளவு புனைவுகளிற்குப் பின்னர் கூட சில இடங்களில் மூத்ததேவி வழிபாடு தொடர்ந்து நடைபெற்றுவந்தது. (காட்டு-வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது, குளித்தலை கடம்பவனநாதர் கோயில்).  இந்த நிலையில் பார்ப்பனியம் தனது இறுதி ஆயுதமான கடவுள்களை குடும்பத்திற்குள் அடைக்கும் தந்திரோபாயத்தின்படி மூதேவி சனீசுவரனின் மனைவியாக்கப்பட்டாள்.  அதேவேளையில்  முதல்தேவியின் சமசுகிரத வடிவமான ஜேஷ்டா தேவி சில இடங்களில் வருணனின் மனைவியாகவும் கருதப்படுகிறாள். இவ்வாறு ஒருவரே வெவ்வேறு கடவுள்களிற்கு மனைவியாக்கப்படுவதற்குக்  காரணமுண்டு.   சங்க காலத்தில் மழைக்காக வழிபடப்பட்ட மூத்ததேவியினை இந்துமத மழைக்கடவுளான வர்ணதேவனுடன் இணைப்பதற்கு ஒரு கதையும், பின்னர் தாமே புனைந்த தீயூழிற்கு (Bad luck) பொருத்தமாக சனீசுவரனுடன் இணைத்து மற்றொரு கதையும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
கொடும்பாவியான பாவி (மூத்ததேவி):
இன்று அரசியலிலோ அல்லது பொது வாழ்விலோ ஒருவரிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு வடிவமாக கொடும்பாவி எரித்தல் காணப்படுகிறது.  இந்த கொடும்பாவி எரிப்பின் தோற்றுவாய் மேற்கூறிய மூத்ததேவியே.   பார்ப்பனப் புனைவிற்கு உட்பட்ட ஒரு மூடநம்பிக்கையாக மழை வேண்டி கொடும்பாவி எரிக்கும் வழக்கம் தோன்றியது. இன்னொரு நம்பிக்கையாக கழுதைக்கும்  கழுதைக்கும் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் காணப்படுகிறது ( இங்கு மூத்ததேவியின் வாகனமாக்கப்பட்ட கழுதையினை நினைவிற்கொள்க). மழை வேண்டி கொடும்பாவி எரிக்கப்படும்போது பாடப்படும் ஒரு பாடலைப் பார்ப்போம்.
“கோடை மழை பெய்யாதோ
கொடும்பாவி எரியாளோ”
என்று பாடப்படும் பாடலில் குறிப்பிடப்படும்  பெண்பாலும், அங்கு எரிக்கப்படும் கொடும்பாவி உருவமும் மூத்ததேவியே.   பார்ப்பனத்தின் கெட்டித்தனமும், தமிழரின் முட்டாள்தனமும் இங்குதான் உள்ளது. எந்த தமிழர்கள் மூத்ததேவியினை மழை வேண்டி வழிபட்டார்களோ, அதே தமிழர்களைளைக்கொண்டு  மழை வேண்டி அதே மூத்ததேவியின் உருவப்பொம்மையினை கொடும்பாவியாக எரிக்க வைத்துவிட்டார்களே !

வி.இ.குகநாதன்

No comments:

Post a Comment