Sunday 15 April 2018

அமெரிக்க தாக்குதல் பற்றி உளவு சொன்ன ரஷியா – உஷாரான சிரியா பெரும் சேதத்தை தவிர்த்தது

சிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் எச்சரித்து இருந்ததால் சிரியா தற்காப்பு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.


உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து கிடக்கும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்து வெளியேறி விட்டனர்.
கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது. இதேபோல், ரஷியா கொண்டுவந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.
சிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் இந்த கூட்டத்தின்போது எச்சரித்தார்.
இதற்கிடையில், சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் எச்சரித்தார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டார்.
சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவால் விட்டார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ’சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது.
புதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்றன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமனப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.
தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், சிரியா மீது இன்று வீசப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம்.
அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் சிரியாவின் மீது  சுமார் 30 ஏவுகணைகளை வீசின. அவற்றில் மூன்றில் ஒருபங்கு ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டன என அரசுப் படைகளுக்கு ஆதரவான மூத்த ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment