Saturday 30 March 2019

திராவிட கலாச்சாரம் விடை பெறுகிறதா? பிரசாரத்தில் ‘மிஸ்’ ஆன நட்சத்திரங்கள்

தமிழக தேர்தல் பிரசாரக் களத்தில் சினிமா நட்சத்திரங்கள் இதுவரை தென்படவில்லை. இதனால் திராவிடக் கலாச்சாரம் விடை பெறுகிறதா? என்கிற கேள்வி எழுகிறது.


சினிமாவை வைத்து அரசியல் பயணம் நடத்துவது, வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிகம்தான்! திராவிட மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்ப சினிமாவை பயன்படுத்திய திராவிடம், அப்படியே அந்தப் பணியை அரசியலுக்கும் எடுத்துச் சென்றது. இதன் விளைவாக திரையுலக தொடர்புடையவர்களே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.
முதல் முறையாக அதிமுக.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என சினிமா தொடர்பு இல்லாதவர்களின் தலைமை வந்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், டெலிவிஷன் தொடரில் நடித்தவர் என்றாலும், சினிமா அவரது அடையாளம் அல்ல. ஆனால் அடுத்த வாரிசாக வரும் உதயநிதி, சினிமா மூலமாகவே அறிமுகமாகி அரசியலுக்குள் வருகிறார்.
முக்கியமான இந்த இரு கட்சிகளுமே இந்த முறை இதுவரை தேர்தல் பிரசாரங்களில் நடிகர், நடிகைகளை ஈடுபடுத்துவது குறித்து திட்டமிடவில்லை. மறைந்த ஜெயலலிதா தனது பிரசாரத்திற்கு முன்பாக சினிமா நட்சத்திரங்களை ஊர் ஊராக பிரசாரத்திற்கு அனுப்பி விடுவார்.
கடந்த தேர்தலில்கூட அதிமுக நட்சத்திரப் பேச்சாளராக நடிகை விந்தியா வலம் வந்தார். நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், தியாகு, செந்தில், குண்டு கல்யாணம், நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்டவர்கள் அதிமுக.வுக்கு பிரசாரம் செய்தனர்.
அதேபோல திமுக.வுக்கு நடிகர் வாகை சந்திரசேகர் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்திருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி திமுக.வின் பிரசார பேச்சாளராக வலம் வந்தார். திமுக சார்பில் மத்திய அமைச்சராகவும் இருந்த நடிகர் நெப்போலியன், இப்போது அரசியல் பக்கமே இல்லை. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூவும் இந்த அணிக்கு பிரசாரம் செய்வார்.
ஆனால் இந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக அவரது மகனும், நடிகருமான உதயநிதி மட்டுமே மாநிலம் தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். திமுக சார்பில் திரை பிரபலங்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்டத் தலைவர்களும் பிரசாரம் செல்லவில்லை.
அதிமுக தரப்பிலும் இபிஎஸ், ஓபிஎஸ் பிரசார ரவுண்ட் வர ஆரம்பித்துவிட்ட நிலையில், நடிகர்- நடிகைகள் யாரும் இல்லை. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆளுமைக்காக சினிமா நட்சத்திரங்கள் படையெடுத்து வந்ததுபோல இப்போது புதிய நட்சத்திரங்கள் வரத் தயாராக இல்லை என்பதும் இந்த நட்சத்திரப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்!
முக்கிய கட்சியின் நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில், ‘நட்சத்திரங்கள் யாரும் இலவசமாக பிரசாரம் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை அல்லது கூட்டத்திற்கு இவ்வளவு தொகை என கொடுத்தாக வேண்டும். இன்று களத்திலேயே தேர்தல் செலவு அதிகமாகிவிட்ட நிலையில் சினிமா நட்சத்திரங்களுக்கு செலவு செய்கிற நிலையில் வேட்பாளர்கள் இல்லை. இதுவும் சினிமா நட்சத்திரங்களை அழைக்காததற்கு காரணம்’ என்றார்.
திராவிட அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமான சினிமா நட்சத்திர பிரசாரம், விடை பெறும் தருணமாக தோன்றுகிறது.

Thursday 21 March 2019

சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும்

இனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற ஆபத்து தொடர்கின்றமையானது, சமூக மற்றும் இனத்துவ வன்முறைகளையும், உறுதியற்ற நிலையையும் தூண்டுகிறது.

இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதும், கடந்தகால குற்றங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதும், பாதிக்கப்பட்ட எல்லா சமூகத்தினரதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது.
குறிப்பிட்ட காலவரம்புக்குள்,  சிறிலங்கா அரசாங்கம், விரிவான நிலைமாறுகால நீதி செயல்முறைகளுக்கான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
சுதந்திரமான, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டம், முக்கியமான அடுத்த கட்டமாக இருக்கக் கூடும்.
சிறிலங்கா அரசின் உயர் மட்டத் தலைமையின், தூரநோக்கின்மையால், போர்க்கால அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறும்,  தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா தவறி விட்டது.
ஐ.நாவுடன் கொழும்பு ஒத்துழைத்த போதும்,2010 பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை மிக மெதுவாகத் தான் நடைமுறைப்படுத்துகிறது.
2015இல் ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் புதிய அரசாங்கம், போர்க்குற்றவாளிகளை விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும், அனைத்துலக – ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிப் பொறிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது.
ஆனால், இரண்டு தரப்பிலும் பத்தாயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டதற்கு நீதியை உறுதிப்படுத்தவதற்கான எந்த பொறிமுறையையும் கொழும்பு இன்னமும் உருவாக்கவில்லை.
30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுதல் இன்னும் சீரான, விரிவான முறையில் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை கடுமையாக மீறியவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டிருப்பது, கவலையளிக்கும் ஒரு நிலைமையாகும்.
மனித உரிமைகள் விடயத்தில் கேள்விக்குரிய படை அதிகாரிகளை நீக்குவதற்கு, ஆய்வுச் செயல்முறைகளை உள்ளடக்கிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். 43 ஆண்டுகளுக்குப் பின்னர், மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அதிபரின்  அறிவிப்பு கவலை அளிக்கிறது.
அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும்  தைரியமான முடிவு மற்றும்  தலைமைத்துவத்தின் மூலம், கடந்தகால வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

Friday 15 March 2019

தன்னிலை இழந்து தடுமாறும் தலைவன் இருந்த கிளிநொச்சி!

கிளிநொச்சி என்றால் கடந்த பத்தாண்டுக்கு முன் நினைவுக்கு வருவது அழகான தமிழ்பெயர்களுடன் கூடிய வாணிபங்கள்.தெருக்களில் காலைமாலையும் பல்வேறு சீருடைகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு கட்டமைப்புக்களின் பணியாற்றும் பணியாளர்கள்.மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் திட்டமிட்டு நடத்தப்படும் தெருவெளி அரங்குகள் புத்தகவெளியீடுகள் போர்எழுச்சிக்கூட்டங்கள் மகளிர் சந்திப்புக்கள் முத்தமிழ் கலை அரங்குகள் சமகால அரசியல் அரங்குகள்.மாவீரர்களின் பேரோடு இலங்கும் தெருக்கள் குறுக்குகள்.தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் மையப்பணிமனைகள் ஊடக நிறுவனங்கள் நீதிபரிபாலன கட்டமைப்புக்கள் பொருண்மிய கட்டமைப்புக்கள் இப்படி ஒரு தமிழீழ அரசாங்கத்துக்குரிய ஒரு அடையாளத்தை கிளிநொச்சி இந்த உலகுக்கு பறைசாற்றியிருந்தது.அதற்கு மக்களும் போராளிகளும் இணைந்து நீண்ட காலமாக பாடுபட்;டிருந்தனர்.அத்தகைய ஒரு அடையாளக்கட்டமைப்பு உருவாக ஆயிரக்கணக்கில் மாவீரர்கள் தம்மை ஈகம் செய்திருந்தார்கள்.இத்தனைக்கும் பின்னணியில் சர்வதேசம் அறிந்த ஒரு தமிழீழ அரசாங்கத்தின் மையமாக மரியாதைக்கு உரியதாக இருந்தது. கிளிநொச்சி தீர்மானங்களுக்காக இந்த உலகம் காத்திருந்தது.




இன்னுமொருபடி மேலே சொல்லப்போனால் தமிழர்களின் பெருந்தலைவர் பிரபாகரனின் காலடித்தடத்தை தாங்கியதாக கிளிநொச்சி மண் நிமிர்ந்து இருந்தது 2009ற்கு பின் அந்த அழகான கிளிநொச்சி எவ்வாறு தன்னிலை இழந்து இழந்து வந்து இன்று அது தமிழர்களின் அசிங்கங்களை உலக்குக்கு அறிவிக்கும் நிலமாக மாற்றப்பட்டுள்ளது.2009க்கு பின்னும் போராட்ட உணர்வு கொண்ட மக்கள் கூட்டத்தின் ஜனநாயக வழிப்போராட்டங்கள் முறிகண்டியில் தொடங்கியதில் இருந்து அது போராட்ட குணமுள்ள மக்களால் முள்ளிவாய்க்காலில் தங்கள் உறவுகளின் உயிர்களை கொடுத்த மக்களால் மாவீரர்களின் குடும்பங்களால் போராட்ட உணர்வுள்ள பல உணர்வாளர்களால் அச்சுறுத்தல் நெருக்குவாரங்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னைய ஒரு கிளிநொச்சியை உணர்வுடன் கட்டிக்காக்கும் முனைப்பு இருந்தது.

ஆயினும் அது மெள்ள மெள்ள தன்னிலை இழந்து இழிகர நிலைக்கு சென்றிருப்பதற்கு சுட்டிக்காட்டக்கூடிய நேரடிக்காரணம் விடுதலைக்கான அரசியல் அற்ற பதவி நோக்கிய அரசியலே காரணம். இந்த பதவி நோக்கிய அரசியலில் சூத்திரதாரிகள் இருவர் ஒருவர் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றையவர் தமிழ் தேசிய போர்வையுடன் அரசியல் அரங்கில் நுழைந்த இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.இங்கே சந்திரகுமார் முதலில் வெளிப்படையாக ஈபிடிபியில் இருந்துகொண்டு மகிந்தராஜபக்சவின் அரசாங்கத்தில் கிளிநொச்சி பிரதிநிதியாக அபிவிருத்தி அரசியலில் ஈடுபட்டவர். சந்திரகுமார் அபிவிருத்தி அரசியலில் ஈடுபட சிறீதரன் இனப்பிரச்சனைக்கு அபிவிருத்தி அரசியல் எதிரானது எனக்கூறி சந்திரகுமாரின் அரசியலை விமர்ச்சித்தபடி தன்னுடைய தமிழ்த் தேசிய போர்வையிலான அரசியலை வளர்த்து வந்தார். பின் இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்திரகுமார்  பேசிய அபிவிருத்தி வேண்டாம், இனப்பிரச்சனைக்கான தீர்வே முக்கியம் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை முக்கியம் சிறைக்கைதிகளின் விடுதலை முக்கியம் என்பதற்காக மக்கள் கண்ணை மூடிக்கொண்டு சிறீதரனுக்கு சுமார் 72ஆயிரம் வாக்குகளை வழங்கி அதிகூடிய வாக்குகளை பெற்றவராக்கி சிறீதரனின் கண்கணை மறைத்தனர்.அபிவிருத்தி அரசியல்பேசிய சந்திரகுமார் தோற்றுப்போனார். தோற்றுப்போனபின் ஈபிடிபியில் தான் விலகுதாக அறிவித்து கிளிநொச்சியில் ஒரு புதிய கட்சியை உருவாக்கி கிளிநொச்சியில் ஒரு அலுவலகத்தையும் அமைத்து செயற்படத் தொடங்கினார்.

இதன் பிறகு சிறீதரன் தான் பெற்ற 72ஆயிரம் வாக்குகளும் தனக்கு கிடைத்ததே தவிர அது எதற்காக தனக்கு வழங்கப்பட்டது என்பதை அவர் கடந்த வந்தபாதையில் சென்று படிப்பதற்கு நினைக்கவில்லை. சிறீதரன் வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கத்தொடங்கின சிறீதரனின் தேசியத்துள் அடங்கியிருந்த போலித்தனமும் கலைய ஆரம்பித்தது. குறிப்பாக அரசாங்கத்தோடு கூட்டுச்சேர்ந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிகளை பெற்றுக்கொண்டார். தன்னிடம் வந்து தன்னை புகழ்ந்து பாடியவனுக்கெல்லாம் ஜேபி வாங்கிக்கொடுத்து அசத்தினார். கண்ணை மூடிக்கொண்டு மலையசமுகத்தை வடக்கத்தையான் என்றார் பின் தான் அதை சொல்லவில்லை என்றார். இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தவிர்த்து ஒரு உள்ளக விசாரணைக்கு உடன்படுமாறு ஒரு தீர்மானத்தை சர்வதேசமும் அரசாங்கமும் திணித்தபோது கண்ணைமூடிக்கொண்டு அதை ஏந்திய கூட்டமைப்பை சேர்ந்தவர்களில் சிறீதரனும் ஒருவராக இருந்தார்.இந்த தருணத்தில் சந்திரகுமாரையும் சிறீதரனையும் ஒப்பிட்ட கிளிநொச்சி மக்கள் பிரதேச சபை தேர்தலில் சந்திரகுமாருக்கு வாக்குகளை அள்ளிவழங்க கிளிநொச்சியில் தனது இருப்பு கேள்விக்குறியாகும் நிலையை அடுத்து சிறீதரன் கிளிநொச்சியில் கரைச்சி பளை ஆகிய பிரதேச சபைகளை கைப்பற்ற சிறீலங்கா சுதந்திரகட்சியோடும் ஐக்கிய தேசிய கட்சியோடும் கூட்டுச்சேர்ந்தார். இப்பொழுது கிளிநொச்சியில் கொள்கை அடிப்படையில் சிறீதரனும் சந்திரகுமாரும்  இன்னும் சொல்லப்போனால் ரணிலின் பூரண ஆசீர்வாதத்தை கிளிநொச்சி மண்ணிலேயே முதுகு தடவி பெற்ற சிறிதரனும் சந்திரகுமாரும் ஒருவரே எனும் நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்தனர். கிளிநொச்சியில் இரண்டு பெரும் அணிகள் சிறீதரன் அடியாட்கள்.சந்திரகுமாரின் குழு உருவாகியுள்ளது.

அடுத்து வடக்கு முதலமைச்சராக இருந்து விக்னேஸ்வரனை பதவி இறக்குவதிலே மிகுந்த வெறியுடன் சிறீதரன் செயற்பட்டார்.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கிளிநொச்சியில் கட்சிக்காரியாலயங்களோ கூட்டங்களோ தன்னை அறியாமல் நடக்கக்கூடாது என்பதில் சிறீதரன் குறியாக இருந்தார். அவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிளிநொச்சியில் அனுசரணை வழங்குகின்ற மக்கள் துரோகிகளாக சிறீதரன் ஆதரவு ஊடகங்களால் வசைபாடப்பட்டனர். ஒரு புறத்தில் கிளிநொச்சியில் சந்திரகுமார் தலைஎடுக்கக்கூடாது என்றும் இன்னொரு புறத்தில் எட்டாத கனியான சம்மந்தன் கதிரைக்காக விக்னேஸ்வரனோடும் விக்னேஸ்வரன் கதிரைக்காக அடிக்கடி சம்மந்தனோடும் உரசல்களை வளர்த்த சிறீதரன் தமிழ் தேசியம் என்ற கொள்கையை கோட்டை விட்டதுடன் இறுதியில் சம்மந்தன் காலடியில் நெளியும் புளுவாகி கிளிநொச்சியை ஒரு பிரதேச வாதம் கொண்ட சாதிய பாகுபாடு கொண்ட கட்சிப்பாகுகொண்ட ஒரு முரண்பாண்டு மையமாக வளர முழு முதற்காரணமானவர்.


கிளிநொச்சியில் நடக்கக்கூடிய காணாமல் ஆக்கப்பட்ட போராட்டங்கள் தொடக்கம் மாவீரர் துயிலும் இல்லம் வரை தன்னுடைய கட்டளைக்கு ஆடுவதாக அமையவேண்டுமென சிறீதரன் விரும்பினார். இதன் காரணமாக புனிதமான மாவீரர்துயிலுமில்லமும் ஒரு முரண்பாட்டு மையமாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டது. அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட போராட்டங்களிலும் தன்னுடைய தன்னோடு நிற்கின்ற கூட்டங்களின் அரசியல் தலையீட்டை நுழைத்து அவற்றையும் கூறுபோட்டு முரண்பாடுகளை ஏற்படுத்தினார்;. இப்பொழுது சிறீதரனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குள் இரண்டு அணி. சந்தைக்குள் இரண்டு அணி இரணைமடுகுளத்துள் இரண்டு அணி. கல்வி நிர்வாகத்துக்குள் இரண்டு அணி. மலையக மக்களுக்குள் இரண்டு அணி. விளையாட்டு மைதானங்களுக்குள் இரண்டு அணி. விவசாயிகளுக்குள் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சிக்குள்ளும் இரண்டு அணி அதாவது சிறிதரனின் வீட்டுக்குள்ளேயே இரண்டு அணி. அநேகமாக நீங்கள் கிளிநொச்சியில் எந்தத்துறைக்குள் நுழைந்தாலும் இரண்டு முரண்பட்ட அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன அதன் மூலகர்த்தா சிறீதரன்.சிறீதரனோடு தற்பொழுது இருக்கின்ற வரலாற்றின் உயிர்வலி அறியாத கூட்டங்கள்.


இந்த முரண்பாட்டின் சர்வாதிகார போக்கின் உச்சம்தான் மிகவும் உணர்வுபூர்வமான உயிர்களோடு சம்மந்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் சிறீதரன் ரவுடிகள் நடத்திய அராஜகம் அசிங்கம் அருவருப்பு எல்லாம். அநேகமாக சமுக வலைத்தளங்களில் உலவிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி போராட்டத்தில் நடந்த முரண்பாடுகளுக்கு காரணமாக காணொளிகளில் தோன்றுகின்றவர்கள் அனைவரும் சிறீதரனின் அலுவலகத்தில் நெருக்கமான தரப்பு. இன்னும் சொல்லப்போனால் சிறீதரனின் அலுவலகத்தில் நாள்முழுதும் தூங்கும் தரப்பு. தான் தப்பிக்கொள்ள சிறீதரன் வழமையாக போடும் ஆதாரத்தை காட்டு பதிவி விலகுவேன் விளையாட்டு ரணில் எழுத்து மூலம் தந்தால்தான் ஆதரவு வழங்குவேன் விளையாட்டு இனி செல்லாது என்பதை கிளிநொச்சியில் ஊடவியலாளர்களுக்கு சிறீதரனின் ரவுடிகளால் விடுக்கபட்ட எச்சரிக்கையின் பின்னான விளைவுகள் புரியவைத்திருக்கும்.


குறிப்பாக காணாமல் போனவர்களோடு முழுமையாக சம்மந்தப்பட்ட தங்கள் பிள்ளைகள் தொடர்பில் தீர்மானத்தை எடுக்கவேண்டிய பாதிக்கபட்டவர்களோடு சம்மந்தப்பட்ட ஓஎம்பி அலுவலத்தை வேண்டும் என தெருவில் போகும் ஒரு பொறுக்கிப்பயல் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்பதுதான் இன்று கிளிநொச்சியில் இழிகரநிலைமை.சர்வதேச விசாரணை வேண்டுமா வேண்டாமா காணாமல் போனவர்களுக்கான ஓஎம்பி அலுவலகம் சிறீலங்காவில் வேண்டுமா வேண்டாமா என்பதை முழுமையாக தீர்மானிக்கும் தகுதியும் பொறுப்பும் தார்மீகமும் அந்த தாய்மார்களுக்கும் மனைவிமாருக்கும் பிள்கைளுக்குமே உரியதே தவிர ஒரு அரசியல்வாதியின் பின்னே வேட்டியை பிடித்துத்திரிகின்ற ஒரு கோணங்கி தீர்மானிக்கலாமா.இல்லை கிளிநொச்சியை தன்னுடைய கோணங்கிகள் தான் தீர்மானிக்கவேண்டும் என்கிறது கிளிநொச்சியில் சிறீதரனின் தீர்மானம்.இதுதான் கடந்த 25த் திகதி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் நுழைந்து சில ரவுடிகள் நடந்துகொண்டு விதத்திற்கும் காரணமும்.

Saturday 9 March 2019

இருபது ஆண்டுகளாக ஒரே அதிபர் - போராடும் மக்கள்; முரண்டு பிடிக்கும் அதிபர்

அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவுக்கு எதிராக போராடும் அல்ஜீரியர்கள் தலைநகர் அல்ஜீரஸ் மற்றும் பிற நகரங்களில் பெரியளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலையை போராட்டக்காரர்கள் சென்றடைவதை தடுக்கும் விதமாக கலவர தடுப்பு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.




பாதுகாப்பு படைப்பிரிவுகளால் சுமார் 200 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வரும் ஏப்ரல் மாதம் நடைபெற்றவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா எடுத்த முடிவுக்கு எதிராக இந்த போராட்டங்கள் கடந்த மாதம் தொடங்கின.
 
சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவை ஆண்டு வருகிறார். ஆனால், 2013ம் ஆண்டு பக்கவாதம் வந்த பின்னர் பொதுவெளியில் அவர் தோன்றவில்லை.
 
இந்த போராட்டங்கள் நாட்டை குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.


 
எனினும், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் தான் வெற்றிப்பெற்றால் முழு பதவி காலமும் பதவியில் இருக்கமாட்டேன் என்றும், புதிய தேர்தலை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அப்தலசீஸ் அறிவித்துள்ளார்.
 
அல்ஜீரியாவில் தற்போதைய அதிபராக இருக்கும் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவுக்கு வயது 82. வயது மூப்பின் காரணமாகவும், 2013-ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாகவும் அப்தலசீஸை பொது இடங்களில் பார்ப்பது என்பது மிகவும் அரிதாக உள்ளது.
 
ஏற்கனவே, நான்கு முறை அதிபராக பதவி வகித்துள்ள அப்தலசீஸ், வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றவுள்ள தேர்தலில் ஐந்தாவது முறையாக போட்டியிடக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
 
அதிபர் முன்வைக்கும் தீர்வும், மீண்டும் வெடித்த போராட்டமும்
 
அல்ஜீரியாவை புரட்டிப்போடும் அளவுக்கு நடைபெற்று வரும் தனக்கு எதிரான போராட்டங்களை கண்ட அப்தலசீஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று 10 நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
எனினும் தான் ஐந்தாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முழு பதவி காலமும் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என்றும், தான் போட்டியிடாத புதிய தேர்தலை நடத்துவதற்குரிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
 
இருந்தபோதிலும், அப்தலசீஸின் இந்த சமரச கருத்தை ஏற்க மறுத்த பல்லாயிரக்கணக்கான அல்ஜீரிய மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
 
அன்றைய தினமே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் அப்தலசீஸ் போட்டியிடுவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
 
சட்டப்படி அல்ஜீரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர் நேரடியாக வந்து மனுத்தாக்கல் செய்யவேண்டியது அவசியம். இதனால், தற்போது அப்தலசீஸ் சுவிட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் அவர் மனுத்தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தது.
 
எனினும், இதுதொடர்பாக விசாரணை நடத்திய அல்ஜீரியாவின் அரசமைப்பு குழு, அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் நேரடியாக வந்து மனுத்தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்தது.

இந்நிலையில், மக்களின் போராட்டத்தையும் மீறி அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவின் சார்பாக அவரது தேர்தல் பரப்புரை குழுவின் மேலாளர் இந்த மனுத்தாக்கலை செய்துள்ளார்.

அல்ஜீரியாவை பொறுத்தவரை மக்கள் பொதுவெளிக்கு வந்து ஒன்றாக போராடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று.

அல்ஜீரியாவின் அதிபராக அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா பதவி வகித்து வரும் 20 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய போராட்டம் இதுவே.

கடந்த 1999ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் பதவியை ஏற்ற அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, அந்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்க காரணமான உள்நாட்டு போரை முடிவு கொண்டுவந்தவராக அறியப்படுகிறார்.
 
நாட்டை நெடுங்காலமாக ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் 2010ஆம் ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகளில் நடந்த கிளர்ச்சியின் தாக்கம் அல்ஜீரியாவிலும் இருந்தது.
 
அல்ஜீரியாவை பொருத்தவரை உணவுப்பொருள் விலையுயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றான இரண்டு தசாப்தகாலமாக நடைமுறையில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை அப்தலசீஸ் முடிவுக்கு கொண்டுவந்தார்.
 
நோயின் தீவிரத்தன்மையின் காரணமாக அப்தலசீஸினால் சரிவர அரசு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Monday 4 March 2019

அமைதிக்கான நோபல் பரிசு : மோடிக்கா ? இம்ரான் கானுக்கா ?



புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா விமானிகள் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த 3 எஃப் - 16 ரக விமானங்கள் காஷ்மீரில் உள்ள ரஜோரி ராணுவ முகாமை தவிர்ப்பதற்காக இந்த விமானங்கள் எல்லைக்குள் வந்தன.





ஆனால் இந்திய விமானிகளின் சாதுர்யமான தாக்குதலில் பாகிஸ்தான் விமானிகள் திரும்பச் சென்று விட்டனர்.
 
இதனையடுத்து  நம் இந்திய விமானி அபிநந்தன் மைக் 21 ரக விமானத்தில் சென்று அதிலிருந்த ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் எஃப் - 16 ரக விமானத்தை சுட்டுவீழ்த்தினார்.
 
பதிலுக்கு  எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியதால் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டுக்குள் பாராசூட்டின் மூலம் தரையிரங்கினார். 
 
அதன் பின்னர் அவரை  பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. பின்னர் இந்தியாவுடன் பல்வேறு நாடுகள் அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவே அவரை இந்தியாவுக்கு அனுப்பினர்.
 
ஆனால் இதற்கு இம்ரான் கானின் செயல் முக்கிய காரணமாக அமைந்தது. ‘
 
பாகிஸ்தான் பாரளுமன்றத்தில் ‘அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப்படை விமானி விடுவிக்கப்படுவார் ’என்று இம்ரான் கூறியிருந்தார்.
 
இதனையடுத்து இந்தியா ,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் இம்ரான் கானுக்குப் பாராட்டுகள் குவிந்தன.
 
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இம்ரான் கானுக்கு அளிக்கப்பட  வேண்டுமென்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

 இதுகுறித்து இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நோபல் பரிசு பெறும் அளவு எனக்குத் தகுதி இல்லை. காஷ்மீர் மக்களின் அமைதி மற்றும் துணைக்கண்டத்தில் யார் அமைதியை நிலைநாட்டுகிறார்களோ அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


ஆனால் மோடிக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள் . சமீபத்தில் கூட மோடி சியோலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. 
 
இந்த விருதை இதற்கு முன்னர், ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மெர்கல் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
 
இந்த விருதை பெற்ற மோடி :காந்தியின் போதனைகளின் அடிப்படையிலேயே எங்களின் பணிகளை தொடர்கிறோம். இந்த விருதின் மூலம் கிடைத்த நிதியை தூய்மை கங்கை பணிக்காக பயன்படுத்த உள்ளோம் என்றார்.
எனவே ஆசியாவில் இந்த வருடத்துக்கான நோபல் பரிசு இம்ரான் கானுக்காக வேண்டி  பாகிஸ்தான் மக்களும், மோடிக்கு நோபல் பரிசு வேண்டும் என இந்திய மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.