Monday 29 July 2019

கிரேக்க வரலாற்று அனுபவம்: துண்டுபட்டதால் தோல்வியும் ஒன்றுபட்டதால் வெற்றியும்

முள்ளிவாய்க்கால் பேரழிவினதும் பெரும் துயரத்தினதும் பின்னான கடந்த 10 ஆண்டுகளாய்     தமிழ் மக்களின் விடிவுக்குப் பொருத்தமான ஒரு புதிய பாதையை,  ஒரு புதிய மாற்றுத் தலைமையை உருவாக்க இயலாமலும்  அதற்னா ஆளுமையையோ,  வல்லமையையோ இதுவரை நிரூபிக்கவும் முடியாதிருக்கும் மாற்று அரசியல் தலைமை பற்றிப் பேசும்   தலைவர்களும் தொடரும் தோல்விகளுக்கும் சீரழிவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள்  ஆவர்.  



பண்டைய உலகில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு சிறிய காலம். ஆனால் நவீன உலகில் ,  அதுவும் இருபத்தோராம் நூற்றாண்டில் ஒரு பத்தாண்டு என்பது ஒரு சிறிய காலமல்ல.

தோல்வியிலிருந்து வெற்றிக்கு , வீழ்ச்சியிலிருந்து   எழுச்சிக்கு, அழிவிலிருந்து ஆக்கத்திற்குப் போவதற்கான  பாதையையும் தலைமையையும் உருவாக்க மிகப் பெரும் சிந்தனை ஆற்றல் , மிகப் பெரும் ஆளுமைத்திறன், மிகப்  பெரும் ஆக்கத்திறன் , மிகப் பரந்த அரவணைக்கும் இயல்பு, சீரிய பண்பாட்டு முன்னெடுப்க்கள்  என்பனவற்றுடன் கூடிய    சமூக முன்னோடிகள் வேண்டும். இத்தகைய வல்லமை கொண்டவர்கள் ஒரு சமூகத்தில் இருந்து எழவில்லை என்றால் அந்தச் சமூகத்திடம்   அதற்கான வல்லமை பஞ்சப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

பாரசீகப் பேரரசின் மிகப் பெரும் படையெடுப்பிலிருந்தும்  மிகப் பெரும்  இராணுவத் தோல்வியிலிருந்தும் மீண்டெழுந்து ,  வெற்றி வாகை சூடி, விடுதலை அடைந்ததற்கு மிகச் சிறந்த பண்டைய வரலாற்று உதாரணம் கிரேக்கம்.   20ஆம் நூற்றாண்டின் மத்தியில் வரலாறு காணாத பாரிய  இனப் படுகொலைக்கும் பேரழிவுக்கும் உள்ளாகி,  அதிலிருந்து  மீண்டெழுந்து  விடுதலை பெற்றமைக்கு  சிறந்த நவீன வரலாற்று உதாரணம் யூதர்களின் இஸ்ரேலிய அரசு அமைக்கப்பட்டமை.  இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு பாரிய இன அழிப்பில் இருந்து மீண்டெழுந்து விடுதலை அடைய முடியாமல் போனதற்கு உதாரணமாக பியஃப்பிரா போராட்டம் அமைந்துள்ளது.  21 ஆம்  நூற்றாண்டின் முற்பகுதியில் பெரும் தோல்வியிலும் பேரழிவிலுமிருந்து மீண்டெழ முடியாது தோல்வியை உறுதிப்படுத்தி , மேலும் இன அழிப்பை நோக்கிய அரசியற் பயணத்தை அரைவழிக்கு மேல்  கடந்துள்ள  போராட்டத்திற்கு உதாரணமாய் ஈழத் தமிழர் போராட்டம்  காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஈழப் போராட்டம் இறுதிக் கட்டத்தில் , அதுவும் இறுதி வாய்ப்பை மட்டும் கொண்டு காணப்படுகிறது. அதனையும் பயன்படுத்தத் தவறினால்  விடுதலை தாயின் புதைகுழியில்  இறுதிப் பிடிமண் போட்டவர்களாய்  இன்றைய தலைவர்களும் ,  இன்றைய அறிஞர்களும்,  இன்றைய  தலைமுறையினரும் ஆளாக  வேண்டிய துர்ப்பாக்கியம்   நேரும். 

வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வோம். அடிமைப்பட்ட  கிரேக்கம் எப்படித் தன்னைத் திறமையாக வடிவமைத்து  விடுதலையைச்  சாத்தியமாக்கியது என்பதைப்  பார்ப்போம்.

பாரசீகப்  பேரரசன்  ஸெர்ஸீஸ் (Xerxes)   கிமு 480 ஆம் ஆண்டு 2 லட்சம் படையினருடன் கிரேக்கம் நோக்கி மாபெரும் படையெடுப்பை  மேற்கொண்டார். அது  வரையான  உலக வரலாற்றில் இதுவே மிகப் பெரும் முதலாவது   பெரிய  படையெடுப்பாகும்.

கிமு  5 ஆம்  நூற்றாண்டில்  1000 வரையிலான சிறிய சிறிய கிரேக்க நகர அரசுகள் காணப்பட்டன.  இவற்றில் 10 வரையிலான நகர அரசுகளே மொத்தம்  6000  முதல் 7000  வரையிலான படையினருடன்  பாரசீகப் பெரும் படையை  எதிர்த்துப் போராடத்  தயாராகின.  ஏனைய அரசுகள் தங்களுக்குள் முரண்பட்டும் குழம்பியும் பின்வாங்கிக் கொண்டன.

    ""சிங்கத்தின்  மைந்தன்"" என்று அழைக்கப்பட்ட   ஸ்பார்ட்டா  மன்னன் லியோனிடாஸ்  (Leonidas)  குறி சொல்லும் பெண்ணை அணுகினான்.   அவனோ அல்லது   யாரோ ஒரு கிரேக்க மன்னன் அந்த யுத்தத்தில் கொல்லப்படுவான் என்று   அவள் ஆருடம் சொன்னாள். மிகப் பெரிய பாரசீகப் படையை எதிர்த்துப் போரிட த்  தம்பக்கம் ஒரு சிறிய படையே இருக்கின்ற போதிலும் அப்பெரும் படையை முறியடிக்க ஒரே  ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு   ஆருடத்தையும்  மீறி  அவன் போரிடத் தயாரானான்.

கிரேக்கத்திற்குள் நுழைவதற்குக்  கடக்க வேண்டிய    தேர்மோபிலி (Thermopylae) என்ற இடத்தில் அமைந்துள்ள 15 மீட்டர் அகலமான கணவாயில்  பாரசீகப் பேரரசப்  பெரும் படையை   மறித்துப் போடுவதெனத் தீர்மானித்தான்.



அந்தக் கணவாயில் பாரசீகப்  படையை திணறடித்தால் அவர்கள் அச்சம் கொண்டு பின்வாங்கிச் செல்லக் கூடும் . அல்லது  அந்த  இடத்தில் தாம் மாண்டு மடிந்தால்  ஆயிரம் நகர அரசுகடளும்   வீறுகொண்டெழுந்து  ஒன்று திரண்டு பாரசீகப் பெரும்  படைக்கு  எதிரான போரை தீரத்துடன் முன்னெடுக்கக் கூடும்   என்ற கணிப்புடன் போர்க் களம் புகுந்தான்.

பத்துக்கு    உட்பட்ட அரசுகளின் 7000 க்கு   உட்பட்ட    படையினரைப் பின்னணியாகக் கொண்டு 300 வீரர்களை தேர்ந்தெடுத்து   மேற்படி கணவாயில் வியூகம் அமைத்துப் போராட புறப்பட்டான். 

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு மன்னன் லியோனிடாசை சரணடையுமாறு பாரசீகப் பேரரசன்  ஸெர்ஸீஸ்  தூதனுப்பினான்.   "" [அவற்றை]  வந்தெடு"" --"" Molon labe"" -  Come and take [ them].  என்று லியோனி டாஸ் மிகக் காட்டமாக பதில் அனுப்பினான்.

பாரசீகர்கள் ஆயுத தொழில்நுட்பத்தில்  நன்கு  வளர்ச்சி அடைந்திருந்த காலம் அது.  தொலைவில் நின்று  யுத்தம் புரியவல்ல  அம்பு - வில்லு , ஈட்டி   என்பனவற்றை  தயாரிப்பதில் அவர்கள் பெரிதும் மேலோங்கி இருந்தனர்.   நேருக்கு நேர் முன்னால்  நின்று முகத்துக்கு முகம் போர் புரியும் ஆயுதங்களை உடைய வாள், தலைக்கவசம் , முகக் கவசம் ,மார்புக் கவசம், கேடயம்  என்பவற்றுடன் கூடிய   ஆயுத தொழில்நுட்பத்தில் கிரேக்கர்கள் சிறந்து விளங்கினர். 

கிமு 480 ஓகஸ்ட்  மாதம்   9 ஆம்  திகதி  யுத்தம் வெடித்தது.  வரலாற்றை எழுதும் அறிவியலில்தொன்மையானவரும்  முன்னோடியானவருமான  ஹெரடோட்டஸ்  (Herodotus) தனது வரலாற்று நூலில் பின்வருமாறு பதிந்துள்ளார். தொலைவில் நின்று பாரசிகர்கள் எய்த அம்புகளினாலும்   வீசிய ஈட்டிகளினாலும்   யுத்தகளத்தை நோக்கிய வானமும்   கணவாயும் இருண்டிருந்தன  என்று.  

""சிங்கத்தின் மைந்தன்"" என்று கூறப்படும் மன்னன் லியோனிடாஸின் தலைமையிலான 300 தீரம் மிகுந்த வீரர்களின்  முதல் இரு நாள்கள் களமாடல்களின் போதும் பாரசீகப் படை பெரும் சேதத்துக்கு   உள்ளாக்கித்  திணறிப் போனது.  கதிகலங்கி போய் நின்ற பேரரசன்  ஸெர்ஸீஸுக்கு   அதிர்ஷ்டம் கிடைத்தாற் போல் ஒரு  கிரேக்க காட்டிக்கொடுபாளனின்  தகவல்கள் கைகொடுத்தன. 

எபிஃயல்ரெஸ் ( Ephialtes) என்ற பெயரைக் கொண்ட  மந்தை  மேய்பரான ஒரு   கிரேக்கன் ,  மூன்றாம் நாள் பேரரசன் ஸெர்ஸீஸிடம்  மிகப் பயனுள்ள   தலையாய  இரு  தகவல்களை வழங்குகிறான்.  கணவாயை தவிர்த்து  யுத்த களத்தைப்   பின்னால்  சுற்றி வளைக்கவல்ல   வகையில் ஒரு  மாற்றுப் பாதை   இருப்பதைக் கூறினான்.  அடுத்து கிரேக்க  படையினரின் உண்மையான எண்ணிக்கையும்   அவர்களின்   நிலையெடுப்புகளையும் கூறினான். 

மூன்றாம் நாள்,   பெரும் நம்பிக்கையுடன்  செர்ஸீஸ்   பெரும் படை கொண்டு   மாற்று வழியால் பின்வளமாய் யுத்தகளத்தை சுற்றி வளைத்தான்.  அந்த வேளையில் எதிர்காலம் பற்றிய சரியான தீர்க்கதரிசனத்துடன்  7000  பேர் வரையிலான படையினரை பின்வாங்கி விலகிச் செல்லுமாறு லியோனிடாஸ் கட்டளையிட்டான்.

  கையில்   இருக்கும் படையை  முற்றிலும்  அழியவிட்டால்   ஏனைய நகர அரசுகள் எல்லாம்   அச்சமடைந்து  சரணாகதிக்கு போய்விடும் என்று எண்ணிய நிலையில், படையின் அடிப்படை   இருப்பைப்  பாதுகாத்து அவற்றை உறைமோர் போல பேணி  அவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலும் படைகளை கட்டி வளர்த்து பாரசீகர்களை தோற்கடிக்கலாம் என்று அவன் எண்ணினான்.

குறி சொல்பவள் ஆருடம் கூறியது போல  60 வயதினனான  லியோனிடாஸ் தன்னுடன்  கூடவே 299  மாவீரர்களுடன் மண்ணில் மடிந்தான்.  அவனது தலை  வெட்டப்பட்டுக் காட்சிக்கு  வைக்கப்பட்டது.

பாரசீகப் படை   தன்  முதல் வேலையாக கிரேக்கப் பெண்களை வேட்டையாடுவதிலும்  வளங்களைச்  சூறையாடுவதிலும்  ஆங்காங்கே  தீ வைப்பதிலும் ஈடுபட்டது.

லியோனிடாஸின்  மகன்  ப்ளீஸ்ரார்ஸெஸ் ( Pleistarchus ) முறைப்படி முடி தரித்தான்.  அவன் வயதால் சிறியவனாக காணப்பட்டதால்   லியோனிடான்ஸின் சகோதரர் மகன்    பொசானியஸ் (Pausanius)  இடைக்  காலத்துக்கான பரிபாலன ஆட்சியாளனாய்  நியமிக்கப்பட்டார்.  லியோனிடாஸின்  மனைவியான மகாராணி  கோற்கோ(Gorgo)  ஆட்சி கலையில் திறமை மிக்கவர்.   பொசானியஸ்   ஆற்றல்மிகு  தலைசிறந்த  தரைப்  படைத் தளபதி .

பாரசீகப் பெரும்படையை எதிர்த்து லியோனிடான்ஸ் போர் புரிந்த அந்தக் காலகட்ட சூழலில் தனது அரசுக்கு உள்ளோ,   அண்டை அரசுகளுடனோ ,  மற்றும்  கிரேக்க சூழலுக்குள்ளோ இருக்கக்  கூடிய உறவுகளையும் மற்றும் சூழல்களையும் அவர் காயப்படுத்தவுமில்லை, சேதப்படுத்தவுமில்லை,  சீரழிக்கவுமில்லை.    நல்லுறவை வளர்க்க ஏதுவான இத்தகைய ஒரு  நல்ல சூழலை அவர் தனது முதுசமாக கிரேக்கர்களுக்கு விட்டுச் சென்றார். அத்தகைய சூழலை பயன்படுத்தி அதனை   முது சொத்தாகக் கொண்டு ஒரு காத்திரமான ஐக்கியத்தை உருவாக்கவும் கூட்டுப் படையை கட்டியெழுப்பவும் முடிந்தது.

லியோனிடாஸ் எதிர்பார்த்தவாறு கிரேக்க மக்கள்   மத்தியில்  எழுச்சி ஏற்பட்டது .எப்படியோ அரும்பாடுபட்டு வெற்றிகரமாக 100 அரசுகளை ஒன்றிணைக்க முடிந்தது. இணையும் அரசுகள்  இணையட்டும்  இணைய மறக்கும்  அரசுகளைக் கைவிட்டு  இணையும் அரசுகளை கொண்ட கூட்டுப் படையைப் பலப்படுத்தி பாரசீகர்களை எதிர்கொள்வது என்று  முன்னணித் தலைவர்கள் திடசித்தம் பூண்டனர்.  

கிரேக்க  தரைப் படையின்  கூட்டுத் தலைமைத் தளபதியாக   பொசானியஸ்  நியமிக்கப்பட்டார் . கிரேக்க கூட்டு கடற்படைத் தளபதியாக  ஆற்றல் மிக்கவரான ஏதென்ஸின்  கடற்படைத்  தளபதி    தெமிஸ்ரோக்ளெஸ் (Themistocles) நியமிக்கப்பட்டார். 100 நகர அரசுகளில்  இருந்து 60 ஆயிரம் வரையிலான கடற் படையினரும் 40 ஆயிரத்துக்கு உட்பட்ட  தரைப் படையினரும் திரட்டப்பட்டனர்[ படையினரின் எண்ணிக்கைகள் பொறுத்து  மாறுபட்ட தகவல்கள் உண்டு].

நகர அரசுகள் கடல்சார்  பின்னணியைக் காணப்பட்டமையால் ஏற்கனவே கைவசமிருந்த பயிற்சி பெற்ற நகர அரசுகளின் கடற்படையினர் ஒரு மாதத்துக்குள் ஒன்று திரட்டப்பட்டு சிறப்பான முறையில் ஒரு பலம் பொருந்திய கூட்டுப் படை யாக வடிவமைக்கப்பட்டனர்.  

சலமிஸ் போரில்  ( Battle of Salamis )    பேரரசன் செர்ஸீஸ் தலைமையிலான  1,00,000  வரையிலான கடற்ப் படையினரை  எதிர்த்து   சுமாராக 60,000 கடற்படையினருடன்    தெமிஸ்ரோக்ளெஸ்   செப்டம்பர் மாதம் பெரும் போர் தொடுத்தார்.  தனது 40 கப்பல்களின் இழப்புடன்  300   முதல்  400 வரையான பாரசீக கப்பல்களை வெற்றிகரமாக மூழ்கடித்தான். தான் மடக்கிப் பிடிபடப் போகும் ஆபத்தை உணர்ந்த செர்சீஸ் உடனடியாக பின்வாங்கினான். 

80,000 - 1,00,000  வரையிலான தரை படையினரை தனது தலைமைத்  தளபதி மறடோனியஸ் (Mardonius) என்பவரிடம் ஒப்படைத்துப்  போரைத்  தொடருமாறு கூறிவிட்டு செர்ஸீஸ் தனது  எஞ்சிய  படையுடன் பாரசீகம் திரும்பினான்.

பத்து  மாதங்களின் பின்பு அதாவது அடுத்த ஆண்டு 479  ஜூலை மாதம்  மறடோனியஸின் பெரும் படைக்கும்   30,000- 40,000  வரையிலான  கிரேக்க  படையினருக்கும்  இடையே  பிலெரியா  யுத்தம் (Battle of Plataea  )  ஆரம்பமானது. பதினோரு நாட்கள் நீடித்த இந்த யுத்தத்தில் 2000 கிரேக்கப் படைகள் இழப்புக்கு 30,000   பாரசீகப் படையினர்  கொல்லப்பட்டனர்.  இந்த யுத்தத்தில் பாரசீக படைத்  தளபதி  மறடோனியஸ்  களத்தில் கொல்லப்பட்டதும்  பாரசீகப் படை  தலைமையை இழந்து  சிதறி  ஓடியது.    இப்பெரும் தோல்வியுடன் பாரசீகப் பெரும் பேரரசு உடைந்து  விழுந்தது.   அதன்பின்  இன்று வரை அதனால்  மேற்குலகை வெற்றி கொள்ள முடியாது  காணப்படுகின்றது.

கிரேக்கத்துக்கு எதிரான  படையெடுப்பை மேற்கொள்ள செர்ஸீஸ்  முற்பட்ட போது அவ்வாறு கிரேக்கத்துக்கு எதிராக படையெடுப்பை மேற்கொள்ள வேண்டாம் என்று அவரது சிறிய தந்தையாகிய ஆட்டபனெஸ்(Artabanus) ,  தந்தையாரின் கூடப்பிறந்த சகோதரன் ,  கூறிய போது  அந்த ஆலோசனையைசச்  செர்ஸீஸ் எள்ளி  நகையாடி புறந்தள்ளினார்.    அப்போது  சிந்து வெளியில் இருந்து    துருக்கி  வரை பரந்திருந்தது பாரசீகப் பேரரசு. அதுவே அன்றைய உலகில் காணப்பட்ட மிகப்பெரிய பேரரசு ஆகும்.  அந்தப் பரந்த பெரிய பேரரசை பாதுகாத்தாலே போதும் என்றும் , கிரேக்கத்தின் மீது படையெடுத்து பேரரசை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அவரது சிறிய தந்தையார் ஆலோசனை கூறியிருந்தார்.

யுத்தத்தில்   பெரும்  படைகளை  இழந்து  பேரிழப்புக்குள்ளாகி  இருந்த நிலையில்    தனது சிறிய தகப்பனாரின் ஆலோசனையைத்  தான் புறந்தள்ளியதை எண்ணிச் செர்ஸீஸ் பெரும் வேதனையுற்றுத்  தேம்பி அழுதான்  என்று   ஹெரடோட்டஸின்  வரலாற்றுப் பதிவு கூறுகின்றது. 

பேரரசன் ஸெர்ஸீஸ்   நலிவுற்றிருந்த  சூழலில்  அவனது   அரச  மெய்க்காவற்ப் படை   கமாண்டரினால்  அவன்கி-மு 465  ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டான்.

அதேவேளை   மறுபுறமாக லியோனிடாஸும்  அவரது சக வீரர்களும் மடிந்த இடத்தில் பளிங்குக் கல்லில் வடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில்  அழியாவரம் பெற்ற பின்வரும் வாசகதின் வாயிலாக  இற்றை  வரை 2500 ஆண்டுகளாக மதிப்புடனும் மரியாதையுடனும் போற்றிப்  புகழப்பட்டவாறு  நினைவு கூரப்படுகின்றனர். 

"" இவ்வழியாற்  செல்பவர்களே!   ஸ்பாட்டா  எனும் நங்கையிடம்  சொல்லுங்கள்,  அவளது வார்த்தைக்கு பணிந்து  இங்கு நாங்கள் புரண்டு கிடக்கிறோம் ""என்று.
( Go tell to Sparta, thou that passest by,that here obedient to her  words we lie"") . 

பாரசீக -- கிரேக்க வரலாற்று அனுபவங்கள் எமக்குப் பல   அரிய படிப்பினைகளைப்  போதிக்கின்றன.   இனியாவது , இனிமேலாவது மேற்படி அனுபவங்களை   உற்று நோக்கி , நின்று நிதானித்து ,  அவற்றிலிருந்து உரிய படிப்பினைகளைப்  பெற்று  தமிழ் மக்களின் விடிவுக்கான புதிய பாதையை உருவாக்க வேண்டும் ,   புதிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் , புதிய தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டும்.



""தொடர்ந்து வடக்கு நோக்கி பயணிப்பவன்  இறுதியில் தெற்கே அதுவும்  தான் தொடங்கிய இடத்தில் வந்து மிதப்பான்.""

இப்போது தமிழ் மக்களுக்குத் தேவைப்படுவது மாற்றுத் தலைவர்களைக் கொண்ட  ஒரு பலம் பொருந்திய கூட்டு முன்னணிதான். இதனை உருவாக்கி முன்னெடுப்போரே  தலையாய வரலாற்று  நாயகர்கள் ஆவார்கள்.


  :: மு.திருநாவுக்கரசு

Saturday 13 July 2019

மதம் பிடித்த பிராந்தியங்கள்

மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின் அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.
பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள், மத கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்றி தமது நம்பிக்கைகளையும் புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தக்கங்களை விளைவித்து வருகின்றனர்.


தமது ஆட்சி அதிகாரப்போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை கொண்டிருக்கின்றனர். கல்வி தலையீடுகள், வேலைவாய்பு தலையீடுகள் மட்டுமல்லாது புதிய சமநிலையற்ற சமூக வாழ்விற்கான காரணிகளாகவும் சமய அதிகார ஆட்சி யினர் உள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் சனநாயக விழுமியங்களுக்கு முரண்பட்ட ஆட்சியாளர்கள் எவ்வாறு தமது அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதில் திட்டமிட்ட வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் தாக்கத்தினால் எவ்வாறு சமுதாய சீர்கேடுகள் உருவாகின்றது என்பதை இந்த கட்டுரைகள் ஆய்வு செய்கின்றன.
மதமும் அரசியலும்
சிறிலங்காவில் அண்மையில் இடம் பெற்று வரும் நிகழ்வுகள் மதங்களின் பெயரால் இடம் பெற்று கொண்டிருக்கின்றன. இதுபோல் தெற்காசியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கில் பலவருடங்களாக இடம் பெற்று வருகிறது.
மதத்தை மனிதன் உருவாக்கிய மூல நோக்கத்திலிருந்து தவறி, மனித உயிர்களை சீரழிக்கும் ஒரு காரணியாக மதத்தை மனிதன் உபயோகப்படுத்தவது மிகவும் இழிவுத்தனமானதாகும்.
மத போதனை எனும் பெயரில் வன்முறையை தூண்டும் படியான அறிவுரைகளும் அதற்கான வியாக்கியானங்களும் உருவாக்கப்பட்டு இன்னும் ஒரு மத நம்பிக்கையை சார்ந்தவர்களை நோக்கி வன்மத்துடன் திருப்பி விடப்படுகிறது.
இந்த வன்முறை தூண்டல்களின் பின்னால் அரசியல் லாபங்களே எப்பொழுதும் உள்ளன. மக்கள் மத்தியிலே நிலவும் சகிப்பு தன்மை அற்ற நிலையை தந்திரமாக உபயோகப்படுத்தும் சில அரசியலாளர்கள், சர்வதேச அளவில் பரந்து பட்டு உள்ளனர் என்பது உண்மை.
சிறிலங்காவில் இடம் பெற்ற குண்டு தாக்குதல்களுக்கு நாட்டு எல்லைகள் பிராந்திய எல்லைகள் கடந்த அமைப்புகள் உரிமை கோரி நிற்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.


தெற்காசியாவை பொறுத்தவரையில் இந்தியாவிலும் நேபாளத்திலும் இந்து மத ஆதிக்கமும் பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் மாலைதீவிலும் இஸ்லாமிய மத ஆதிக்கமும் சிறிலங்காவில் பௌத்த மத ஆதிக்கமும் உள்ளது. இந்த மதங்கள் அந்த நாட்டு அரசியலில் பெரும் தலையீடுகள் செய்கின்றன.
அதேவேளை, மத நம்பிக்கை மூலம் உருவாக்கிய சமூக ஊடுருவல் காரணமாக குறிப்பிட்ட சில மத பிரதானிகள் தமது அரசியல் செல்வாக்கை பிரயோகிப்பது வெளிப்படையான உண்மையாகும் . மத செல்வாக்குகள் அதிகரித்து இருக்கும் நிலையில் சர்வதேச அரசியலில் தமது செல்வாக்கை செலுத்தும் பொருட்டு தெற்காசிய பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் சர்வதேச வல்லரசுகள் தமது செயற்பாடுகளுக்கு சாதகமாக்க முனைந்துள்ளன.
மதமும் பிராந்தியமும்
இரண்டாம் உலக போரின் பின் பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த இந்த நாடுகள், சமூக அரசியல் பொருளாதார நிலையில் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறுபட்டவை அல்ல.
அடிப்படையில் தமது விடுதலை சாசனத்தில் தாம் பல்லின ஆட்சி அரசாக இருக்கப் போவதாகவே சுதந்திரம் பெற்று கொண்டன. மதசார்பின்மையை கடைப்பிடிக்கப் போவதாகவே உறுதி கொண்டிருந்தன. ஆனால் காலப்போக்கில் பெரும்பான்மை இன மதங்களின் கைகளில் தெற்காசிய நாடுகளின் அரசியல் சிக்குண்டு போய் உள்ளது.
உதாரணமாக இந்து மதத்தின் கையில் இந்தியாவும் நேபாளமும், இஸ்லாமிய மத்தின் கையில் பாகிஸ்தான், வங்காளதேசம் , மாலைதீவு போன்றனவும் பௌத்தத்தின் கையில் சிறிலங்காவும் சிக்குண்டு போய் உள்ளது. இதனால் தற்போது மத அரசியலும் அதன் பின்விளைவுகளும் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றன.
இதனை மேலும் பற்றி எரியக்கூடிய செயற்பாடுகளாக சர்வதேச சூழலில் மதம் சார்ந்த போர் மேகம் ஒன்று மீண்டும் சூழ்ந்து வருகிறது. இந்த சர்வதேச போரிற்கான அத்திவாரங்களாகவே கொழும்பு குண்டு வெடிப்புகளும் சர்வதேச அளவில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான உளப்பார்வை உருவாக்கும் போக்கும் உள்ளதோ என்ற எண்ணத்தை தருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ அவர்கள் ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.
அத்துடன் ஈரானிய புரட்சிகர காவலர் படைகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தார். அது மாத்திரம் அல்லாது B52ரக போர் விமானங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய மத்திய கிழக்கு அரசியல் எவ்வாறு தெற்காசியாவில் தாக்கம் விளைவிக்கின்றது என்ற நிலைமையை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
மத்திய கிழக்கு மதப்பிராந்தியம்
அரபு நாடுகள் தம்மிடையே கூட்டு உறவு ஒன்றை ஏற்படுத்தி கொள்வதில் பெரும் தோல்வி அடைந்துள்ளன. தமது பொருளாதார அரசியல் சமூக வாழ்வை சமாதானமாக உறுதி செய்து கொள்ள முடியாத நிலையை இன்று அடைந்திருக்கின்றன. ஒரு நிரந்தரமான மத்திய கிழக்கு கூட்டு ஒன்றை உருவாக்க முடியாது உள்ளன.
மத அரசியல் காரணமாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையை கொண்டிருப்பது, அருகாண்மை பிராந்தியமான தெற்காசிய நாடுகளில் இன்று தாக்கங்களை விளைவிக்க ஆரம்பித்திருக்கிறது.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் ஆரம்பமான ஆட்சி கவிழ்ப்பு போராட்டங்களை தொடர்ந்து நிலைமை மேலும் சிக்கல் நிலையை அடைந்திருக்கிறது. சிரிய அரசியல் நிலவரம் சர்வதேச வல்லரசுகளை தலையீடு செய்யும் நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
அல்லது மறுவளமாக பார்த்தால், அரபு நாடுகளிடையே நிரந்தரமான உறுதியான அரசுகள் அமைவது பொருளாதார மற்றும் எரிபொருள் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடு அற்ற நிலையை கையாளும் வகையில் அரபு நாடுகளை முரண்பட்ட நிலையில் வைத்திருக்க சர்வதேச வல்லரசுகள் திடம் கொண்டுள்ளன.
அதேவேளை, மத்திய கிழக்கு அரபு நாடுகள் மத்தியில் இருக்கக்கூடிய இஸ்ரேல், தனது பாதுகாப்பை மையமாக கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்குவதிலும் சமூக பொருளாதரத்தில் மேம்பட்ட நிலையை அடையாத வகையில் வைத்திருப்பதன் ஊடாக, பலவீனப்படுத்துவதில் பல்வேறு பொறி முறைகளை கையாளுகிறது.
அதற்கு நல்ல உதாரணமாக சிரியாவில் இடம் பெறும் யுத்தத்தை எடுத்து கொள்ளலாம்
சிரிய பிரச்சினையில் பல்வேறு தரப்புகளுக்குமான உதவிகள் சர்வதேச அளவில் பல்வேறு வல்லரசுகளிடம் இருந்தும் பெறப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் நேரடியாக அல்லாது மறைமுகமாக முகவர்கள் ஊடாக யாரிடம் இருந்து யாருக்கு செல்கிறது என்பது வெளியே தெரியாத வகையில் முகவரிகள் தவறாது போராட்ட தரப்புகளுக்கு வந்து சேர்கிறது.
இதனாலேயே சிரிய யுத்தத்தை இது ஒரு முகவர் யுத்தம் Proxey War என்ற சொற்பதங்களுடாக மேலைத்தேய பத்திரிகைகள் அழைக்கின்றன.
சிரிய அரசுக்கு எதிராக போராடும் விடுதலைப் போராளிகளுக்கு துருக்கி ஊடாக சவுதி அரேபியா உதவுகிறது. சுண்ணத்து இஸ்லாமிய மதப்பிரிவை உள்ளடக்கிய இந்த போராளிகளுக்கு வோகாபிஸ் என்று அழைக்க கூடிய சவுதி அரேபியாவின் ஆளும் பழைமைவாத முதலாளித்துவ அரச வர்க்கத்திடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன,
அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் அரச படைகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய வர்களுக்கு ஈரானும் உதவுகின்றன. சியா இஸ்லாமிய வகுப்பை சேர்ந்த ஈரானிய தலைமை மிகப் பெரும் தொகை ஆயுத மற்றும் உணவு உதவிகளை செய்து வருகிறது.
அதேவேளை ஈராக்கிய யுத்தத்தின் போது தமது தாயக பிராந்தியத்தை அந்த பகுதியில் தக்க வைத்து கொண்டுள்ள குர்திஷ் இன போராளிகள் சிரிய தேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமது ஒருபகுதி தாயகப் பிரதேசத்தை மீட்கும் பொருட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலிய உதவி கிடைக்கிறது.
2014 ஆம் ஆண்டு வரை உக்கிரமாக நடந்த போர் நடவடிக்கைகள் அதிபர் டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சி ஏற்புடன் அமெரிக்க செயல்பாடுகளில் தொய்வு கண்டது . இந்த நிலையில் ரஷ்ய கூட்டுடன் சிரியா அரச படைகள் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக கடுமையான தாக்கதல்களை நடத்தி திரும்பவும் தமது இழந்த பிரதேசங்களை மீட்டு எடுத்து கொண்டன.
ஐஎஸ் ஐஎஸ் உருவாக்கம்
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிரியாவுக்கு எதிராக போராட்ட குழுக்களுடன் இணைந்து போரிட்ட சுண்ணத்து இஸ்லாமிய பகுதியான அல் குவைதா அமைப்பிலிருந்த ஒரு சிலரால் இராக்கிய சிரிய இஸ்லாமிய அரசு என்ற ஐஎஸ் ஐஎஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஈராக்கிய யுத்தத்தின் போதே ஐஎஸ் ஐஎஸ் தோற்றம் பெற்று விட்டபோதிலும், தமது உக்கிரமான நடவடிக்கைகளை சிரியாவிலேயே ஆரம்பித்தனர். இந்த அமைப்பு சவுதி அரேபிய, அமெரிக்க, இஸ்ரேலிய நேரடி மற்றும் மறைமுக உந்துதல்களின் அடிப்படையிலேயே உருவாகியது.
மத்திய கிழக்கு குறித்த மேலைத்தேய ஆய்வாளர்கள் பலரின் ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் , ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு சவுதி அரேபிய ஆட்சிப்பீடத்தில் உள்ள வொகாபிஸ் களின் உதவியிலேயே இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சர்வதேச ரீதியாக மிகவும் செல்வாக்கு பெற்றதாகும். அத்துடன் பல்வேறு கிளை அமைப்புகளை தனது வலைஅமைப்பினுள் கொண்டதாகவும் ஐஎஸ் ஐஎஸ் உள்ளது.
கடந்த காலங்களில் மேலைத்தேய அவுஸ்திரேலிய நாடுகளில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு உரிமை கோரியதன் மூலம், உலக மக்கள் மத்தியிலே இஸ்லாத்தின் மீது ஒரு வெறுப்பை உருவாக்குவதே இந்த அமைப்பின் பெரும் வெற்றியாக மேலை நாடுகளில் உணர்ந்து கொள்ளப்படுகிறது.
வெறுப்புருவாக்கம்
சிரிய யுத்தத்தில் சியா இஸ்லாத்தை தழுவும் ஈரானும் சுண்ணத்து இஸ்லாத்தை தழுவும் சவுதி அரேபியாவும் மிக கடுமையான முகவர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை , மத்திய கிழக்கு நாடுகளில் உறுதியான அரசியல் கட்டமைப்புகள் கொண்ட ஈராக்,லிபியா,எகிப்து ஆகிய நாடுகளை சிதைத்துவிட்ட இஸ்ரேலிய மேலைத்தேய கூட்டு சதியானது தற்போது ஈரானின் உறுதியான அரசியல் கட்டமைப்பை உடைத்து தமது பாதுகாப்பை உறுதி செய்வதில் கருத்தாக இருக்கின்றன.
ஈரான் மீது தமது தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் தேடும் வகையில் இஸ்லாத்தின் மீது வெறுப்புருவாக்கம் நடத்தப்படுகிறது. இதற்கு மறைமுக வொகாபிஸ் ஆட்சியாளர்கள் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.
அதேவேளை 2011 இல் அரபு இலைதுளிர் கால போராட்டங்களால் இவர்கள் மிகதாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனலாம். சனநாயகத்தின் பெயரால் தமது ஆட்சி அதிகாரத்தை இழக்க சவுதி மன்னர் ஆட்சி என்றும் தயாராக இல்லை.
மேலும் பல அரசியல் கொலைகளில் இருந்து அரச குடும்பத்தினர் மேலைத்தேயத்தால் காப்பாற்றப் பட்டு உள்ளனர். இதனால் மேலைத்தேய இஸ்ரேலிய பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்து போக வேண்டிய தேவையும் வொகாபிஸ் அட்சியாளர்களுக்கு உள்ளது.
இந்த நூற்றாண்டின் மிக ஆரம்பத்தில் ஈராக் மீதான படை எடுப்பு நிகழ்த்தும் பொருட்டு அன்றைய அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பல்வேறு நாடுகளையும் சம்மதிக்க வைப்பதில் பெரும் பாடுபட்டார். அதிபர் சதாம் குசைனிடம் மனித இனத்தை அழித்துவிட கூடிய இராசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டது. இறுதியாக பிரான்ஸ் ரஷ்யா சீன நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமலே ஈராக் மீது படைஎடுப்பு நிகழ்த்தப்பட்டது.
ஈராக்கில் இன்று மேற்கத்தேய ஆதரவு அரசு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகம் என்ற பெயரில் அதன் இராணுவ, அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு வலு குறைக்கப்பட்டு உள்ளது . இருந்த போதிலும் ஈரானின் செல்வாக்கு அங்கு மிக அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீதான ஒரு நடவடிக்கை நிகழ்த்துவது குறித்து தீவிரமான அடித்தள முயற்சிகள் தற்போழுது ஆரம்பமாகி உள்ளது. கடந்த கால குண்டு வெடிப்புகள் அனைத்தும் இதந்கு அமைவாக உருவாக்கப்படும் இஸ்லாமிய வெறுப்புருவாக்கத்தின் அடிப்படைகளே எனலாம்.

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும் மதம், அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையை பெற்று கொண்டுள்ளது. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
இந்த நாடுகள் மத்தியிலே இருக்கக்கூடிய பொதுவான பண்புகளை முதலில் கருத்தில் கொள்வது நல்லது.
முதலாவதாக, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தை தம்மகத்தே கொண்டனவாக காண்பித்து கொண்டுள்ளன. பெரும்பான்மை ஜனநாயகம் என்றதன் பெயரில், அந்நாடுகளில் சனத்தொகையில் அதிகம் கொண்ட மதம் அல்லது மொழி ஆட்சியில் அதிகாரம் செலுத்துகின்றது. மேலும் தேசியவாதம் என்பது அதிகாரம் செலுத்தும் மதமும் அது சார்ந்த மொழியையும் முதன்மைப்படுத்தவதாக உள்ளது.
இரண்டாவதாக, அவை அனைத்தும் மதத்தையே அடிப்படையாக வைத்து பெரும்பான்மை அரசியல் நடத்தி வருகின்ற போதிலும் பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தள நிலையில் உள்ள மக்களை, பெரும்பான்மையாக தம்மகத்தே கொண்டுள்ளன. கல்வி அறிவு விகிதம் குறைந்த மக்கட் தொகை அதிகம் காணப்படுகிறது
மூன்றாவதாக, இந்த நாடுகள் அனைத்தும் பெரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளன. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் , சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் மதக்கூறுகளின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது
இத்தகைய நிலைமையினால், சமூகப் பிரிவினைகளை கொண்ட நாடுகளாக இந்த நாடுகள் உள்ளன. சமூகப் பிரிவினைகள் உள்நாட்டு நிர்வாகத்தில் அரசியல் அமைதி இன்மையை உருவாக்குகின்றது அல்லது இலகுவாக சமூக சீர் கேடுகளை உருவாக்க கூடிய நிலை உள்ளது.
மோசமான, அரசியல் சமூக உறுதியற்ற தெற்காசிய நாடுகளை தமது பூகோள அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்றாற்போல், வல்லரசு நாடுகள் உபயோகப்படுத்த முனைகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளை எவ்வாறு தமது முகவர் யுத்தத்துக்கு தகுந்த வகையில் பயன்படுத்துகின்றனவோ, அதேபோல தெற்காசிய நாடுகளையும் தமது பொருளாதார இராணுவ நலன்களுக்கு ஏற்ற வகையில் வல்லரசுகள் அவற்றின் உள்நாட்டு பிரிவினைகளை, தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.
இதனை மேலைத்தேய இராஜதந்திர நகர்வுகளில் internal mechanism என்ற கவர்ச்சி மிக்க சொற் தொடர் கொண்டு உள்ளக பொறி முறையை கையாளும் வகையை குறிப்பிடுகின்றனர். இதில் மிதமான பாதையாயின், எதிர் கட்சிகளை தூண்டி விடுதல், கடினமான பாதையாயின் மதங்களிடையே கலவரங்களை உருவாக்கும் வகையில், முகவர்கள் மூலம் குண்டு தாக்குதல்களை நடத்துதல் என அனைத்தும் அடங்கும்.
இந்த வகையில் தெற்காசிய நாடுகள் அனைத்தும் தமது முன்னேற்றம் என்பதன் பெயரில் சீனாவிடம் கடன் பெற்றுக் கொள்வதிலும், அமெரிக்காவுடன் ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதன் ஊடாகவும், தமது சுதந்திர அரசியலையும் இறையாண்மையையும் பறி கொடுத்தனவாக உள்ளன. இந்த வரிசையில் அடங்கக்கூடிய தெற்காசிய நாடுகளில் முக்கியமானவற்றை இங்கே காணலாம்.
மதம்பிடித்துள்ள இந்தியா
2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததிலிருந்து இந்து அடிப்படைவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் என அழைக்கப்படும், தேசிய தன்எழுச்சி தொண்டர்கள் அமைப்பு (Rashtriya Swamyam Sevak Sangh) தனது சித்தாந்தத்தை வெகு வேகமாக நிலைநிறுத்துவதில் கவனமாக உள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்து அடிப்படைவாதம் அரச நிர்வாகப் பிரிவுகளுக்குள் இரகசிய, அத்துமீறிய ஆக்கிரமிப்பகளை செய்து வருகிண்ற போதிலும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வின் வெற்றி இந்து அடிப்படைவாதத்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது
இது வரை காலமும் குற்றச்செயல்களாக கருதப்பட்ட இதர மதநம்பிக்கைகளை தவறாக தூற்றுதல், மதிப்பளிக்காது விடுதல் போன்ற செயற்பாடுகள், தற்போது ஏற்று கொள்ளத்தக்கதாக அல்லது அரச சேவையாளர்களால் கூட உதாசீனம் செய்யப்படுவதாக உள்ளது.
இத்தகைய இதர மதங்கள் மீதான வெறுப்பு குறிப்பாக, வட இந்திய சமூகங்களால் அதிகம் மேற்கொள்ளப்படுவதாக நியூயோக்கர் என்ற அமெரிக்க சஞ்சிகை கூறுகிறது.
இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம் சமய சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் பெரும் இடையுறுகளை விளைவிப்பதாக உள்ளது. உதாரணமாக இந்து சாதீய அமைப்பிலிருந்து தப்பும் பொருட்டு, பல இந்து தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், மதம் மாறும் நிலை காணப்படுவதாகவும், ஆனால் இந்த நிலைக்கு எதிராக பல மாநில அரசுகள் மதமாற்ற சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவிக்கிறது.
மேலும் பஜ்ஜிரங் தள் எனப்படும் இந்து அதீத வலது சாரி அமைப்பு பல மத கலவரங்களை நடத்தி வருவதாகவும் அத்துடன் பாதிரியார் ஒருவர் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒருவரை மதமாற்றம் செய்தார் என்று அவரை மொட்டை அடித்து கழுதையில் ஏற்றி, நகர் வலம் வந்ததாகவும் அந்த சஞ்சிகை கட்டுரை வரைந்துள்ளது.
கடந்த வருடம் மகாராஷ்டிராவில் சிறு நகரமான குர்கான் எனும் இடத்தில் இந்து தேசியவாத குழுக்கள் பொது இடங்களில் தொழுகைகள் நடத்துவது தடை செய்யப்பட வேண்டும் என்ற மிரட்டியதுடன் அவ்வாறு தொழுகை நடத்த முற்பட்டவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நிலைநாட்டல் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியது.
இது போல் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதீயர்களுக்கும் எதிராக பரவலாக கடுமையான தாக்குதல்கள், வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறித்த செய்திகள், பல மேலைத்தேய பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களில் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளன.
அண்மையில் வெளிவந்த Financial Times Weekend இணைப்பு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில, மோடி அவர்களின் ஆட்சியில் இந்து தேசிய வாதம் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுதல் குறித்து அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டு அதற்கான கற்சிற்பங்களும் தூண்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது மிக விரைவாக பொருத்தி அடுக்கப்பட கூடிய வகையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன் மூலம் அரசியல் வெற்றிக்காக மதசித்தாந்த கருத்துகளை உள்நாட்டில் உபயோகப்படுத்தும் பாஜக அரசாங்கம், வெளியுறவு கொள்கையிலும் கூட சர்வதேசத்தில் அதீத வலதுசாரி தேசியவாத அரசுகளுடனும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த நிலையை தூண்டும் அரசுகளுடனும் அதிக உறவு நிலையையும் பேணும் போக்கையும் காணக்கூடியதாக உள்ளது.
சுவர்க்கத்தில் நடந்தது
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4அம் திகதி இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அதுவே முதன் முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு சென்ற சந்தர்ப்பமாகும். முன்று நாள் பயணத்தின் இறுதியில் இடம்பெற்ற இருதரப்பு தலைவர்களதும் செய்தியாளர் மாநாட்டில் பேசிய இஸ்ரேலியப் பிரதமர், ”இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான திருமணம் சுவர்க்கத்தில் நடந்தது. அதனை இவ்வுலகில் நடைமுறை படுத்துகிறோம்” என்று களிப்புடன் கூறி இருந்தார்.
வலது சாரி தேசியவாதகொள்கை கொண்ட இரு தலைவர்களுக்கும் இடையில் பெருமெடுப்பிலான ஒற்றுமைகள் உள்ளன. இஸ்லாமிய எதிர்ப்புவாத கொள்கை . பொதுவாக பயங்கரவாத எதிர்ப்பு என்ற வார்த்தையை தமது முக்கிய ஆயுதமாக கொண்டு செயற்படக் கூடிய தன்மை ஆகியன இஸ்ரேலிய இந்திய உறவை என்றும் இல்லாத வகையில் நம்பிக்கைக்குரியதாக உருவாக்கி உள்ளது.
கடந்த கால இந்திய அரசாங்கங்கள் பாலஸ்தீனத்தில் ஒரு அரசு நிறுவுவதற்கு தமது ஆதரவுகளை கொடுத்திருந்தனர். இதுகுறித்து பாராளுமன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மோடி அவர்களின் 2017 இஸ்ரேலிய பயணத்தின் போது, அவர் ஜெருசலேமில் இருந்த போதிலும் ஒரு நடுவு நிலைமையை காட்டும் பொருட்டாவது, பலஸ்தீன தலைமையை சந்திக்காது திரும்பியது அவரது இஸ்ரேலிய சார்பு கொள்கையை மிகவும் தெளிவாக காட்டியது.
அதேவேளை இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாட தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், இந்தியாவின் ஆயுத கொள்வனவு ஒப்பந்தம் பிரதமர் மோடி அவர்களால், 4 பில்லியன் டொலர் வரையில் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாஅதிகமாக இறக்குமதி செய்யும் ஆயுத தளவாடங்களில், ரஷ்யாவுக்கு அடுத்தாக தற்பொழுது இஸ்ரேலிய உற்பத்திகள் ஆகும்.
சுவர்க்கத்தில் இடம் பெற்ற திருமணம் என்ற இஸ்ரேலிய பிரதமரின் வார்த்தைகளின் இந்தியாவிற்கான ஆயுத வழங்கல் உடன்படிக்கைகளின் அடிப்படையிலிருந்தே வருகிறது என்பது இப்பொழுது தெளிவாகிறது.
மசகு எண்ணையில் மதம்
இதேபோல பிரதமர் மோடி அவர்களின் சவுதி அரேபியாவுடனான உறவும் மிகவும் நெருக்கமானதாக எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளியுறவு கொள்கை ஈரானுடனான உறவை முறித்து கொள்ளுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
இந்த கட்டுரை எழுதி கொண்டு இருக்கும் பொழுது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜாவீட் சரீப் அவர்கள் புது டில்லியில் பேச்சுவார்த்தைகளுக்காக வந்திருந்தார்
ஏற்கனவே இந்த கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ , ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணையை நிறுத்தி கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மசகு எண்ணை இறக்குமதி நிறுவனமான இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எனப்படும் IOC தனது வருடாந்த இறக்குமதி ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டுக்கு புதுப்பிக்கமாட்டாது என அறிவித்துள்ளது.
அதேவேளை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு பதிலாக இவ்வருடம் ஜூலை மாதம் முதல் ஒரு நாளுக்கு 2மில்லியன் மசகு எண்ணெயை சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு IOC உடன்பட்டிருக்கிறது.
ஆக, இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக செயலாற்றவதற்கு முன் வந்துள்ளது. இந்தியாவின் இந்த நகர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சவுதி இளவரசர், அண்மைய இந்திய பயணத்தின் போது இந்தியாவில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு கைத்தொழிலில் முதன்மை வகிக்கும் Reliance Industries எனும் நிறுவனத்துடன் இணைந்து அந்த கைதொழிலில் 25 சதவீத நிதி முதலீடு செய்வதற்கு முன் வந்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி கைத்தொழிலாக கருதப்படும் இந்தியாவில் உள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு வியாபாரம் குறிப்பாக Reliance Industries அம்பானி சகோதர்களுக்கு சொந்தமானதாகும். பல கோடிகளுக்கு சொந்தக்கார்களாகிய அம்பானிகள் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சகபாடிகள் என இந்திய பத்திரிகைகள் பல தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.
வெறும் வியாபார ஒப்பந்தங்களிலே மதம் எங்கே உள்ளது என்ற கேள்வி எழுமானால் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஈரானை தமது எதிரியாக பார்க்கின்றன. இந்த இரு நாடுகளுமே தமக்கிடையிலான மத பிரிவினைகளை ஒருபுறம் வைத்து விட்டு, சியா இஸ்லாமிய ஈரானை அமெரிக்க துணை கொண்டு தாக்கி விடுவதற்கு முனைகின்றன.
இதற்கு ஏற்றவகையில் பிராந்திய நாடுகளை தமக்கு சார்பாக மாற்றும் பொருட்டு நிதி முதலீடுகள் ஆயுத விற்பனைகள் மட்டுமல்லாது மேலைத்தேயத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச விதி முறைகள் என பல்வேறு காரணிகளையும் சமயோசிதமாக பயன்படுத்தி வருகின்றன.
அதேவேளை தலைமை பிராந்திய நாடுகளின் கீழ் இருக்கக் கூடிய நாடுகளில் தமக்கு சாதகமான யுத்த சூழலை உருவாக்கும் பொருட்டும் சமூக மனமாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் குண்டு வெடிப்புகள் யுத்தக் கப்பல்களின் வரவுகள் என பதற்ற சூழலை குறிப்பாக தெற்காசிய நாடுகளில் ஏற்படுத்துகின்றன.
ஆனால் இந்த நாற்றாண்டின் ஆரம்பத்தில் ஈராக் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட தன் பலனாக, மேலைத்தேயம் சந்தித்த பொருளாதார முடக்கம் அதே காலப்பகுதியில் சீனாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் இராசதந்திர நகர்வுகள் இடம் பெறுகின்றன.
இவ்வார economist சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல “சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டு மூன்று பத்தாண்டுகளின் பின் ஒற்றை மைய உலகு என்னும் நிலை இன்று முடிவு கண்டிருக்கிறது. சீனாவும் அமெரிக்காவும் யார், “நம்பர் வண்“ என்று பெயர் எடுப்பதில் திடகாத்திரமாக பரவலான போட்டியில் உள்ளன.
வர்த்தகத்தின் மூலம் உறவு வலுப்பெறும் என்று இருந்த நிலை மாறி வர்த்தகமே போராகி விட்டது. வல்லரசுப் போட்டிகளை தவிர்க்கும் பொருட்டு புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நிலைமை நிலவுகிற போதிலும் இருதரப்பும் சட்டதிட்டங்களை மீறும் செயற்பாடுகளிலேயே உள்ளன” என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தை முடித்திருக்கின்றது
இருந்த போதிலும் அமெரிக்கா இன்னமும் முழுமையான யுத்தம் ஒன்றிற்கு தயார் நிலையில் இல்லை. இதற்கு பல்வேறு உள்ளக வெளியக காரணிகள் உள்ளன. ஆனால் சந்தர்பங்களுக்காக நிகழ்வுகளை உருவாக்குவதும், நிகழ்வுகளுக்காக சந்தர்ப்பங்களை உருவாக்குவதுமே ஏகாதியத்திய சிந்தனையாளர்களின் அடிப்படை நோக்கமாகும்.

பிராந்திய ஏகாதிபத்திய அரசியலில் மத்திய கிழக்கை இஸ்ரேல் தனது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அதேவேளை, தெற்காசிய அரசியலில் இந்திய பிராந்திய வல்லரசு தனது மேலாண்மையை நிச்சயப்படுத்த முனைகிறது.
இந்த வியூகத்தை மையமாக கொண்டு இரு பிராந்தியங்களிலும் மதம் உள்நாட்டு சமூக பிரிவுகள் மத்தியில் எழுச்சி ஊட்டும் உபாயமாக ஆங்காங்கே தேசங்களுக்கு ஏற்ற வகையில் பயன் படுத்தப்படுகிறது
சமூகங்கள் மத்தியில் இருக்கக் கூடிய மத வேறுபாடுகளை ஏகாதியத்திய சிந்தனையாளர்கள் கையாளுகின்றனர். தமது பாதுகாப்பான இருப்பை மையமாக கொண்டு, சர்வதேச வல்லரசுகள் ஏகாதியத்திய பிராந்திய கூட்டு கோட்பாடுகளை மையமாக கொண்டு, மத அடிப்படையிலான வேற்றுமை மற்றும் எழுச்சி ஊட்டலுக்கு துணை போகின்றன.
அதிலும் பல்வேறு படிகள் மேலாக அதீத பலன்களை அடையும் முகமாக பல தசாப்தங்களுக்கு மத வேற்றுமையை வளர்த்தலில் வியூகம் அமைத்து செயலாற்றுகின்றன.
மேலும் யுத்தநோக்கு கொண்ட நகர்வுகளை செய்வதன் ஊடாக சர்வதேச வல்லரசுகள் ஆயுத வியாபார பொருளாதாரத்தை வளம் பெற வைத்தல், எதிர் பிராந்திய கூட்டுகளை யுத்த செலவீனத்திற்குள் உள்ளாக்குவதன் மூலம் எதிர்தரப்பின் பொருளாதார வளத்தை சிதைத்தல் ஆகியவற்றை மையமாக கொண்டு தாம் இயற்றிய சர்வதேச சட்ட திட்டங்களையே மீறும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன
இந்த வல்லரசுகளின் அரசியல் நகர்வுகள் குறித்தும், பிராந்திய வல்லரசுகள் தமது பிராந்தியத்தில் நேரடியாக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடாது முகவர்களுடாக தமது நோக்கங்களை அடைவதில் ஆர்வமாக உள்ளன என்பது குறித்தும் கடந்த கட்டுரைகளில் கண்டிருந்தோம் .
இவ்வாரம் வெளிவந்திருக்கும் கட்டுரையில் பிராந்திய நகர்வுகள் எவ்வாறு கோட்பாடு ரீதியாக ஒருமித்த தன்மையை கொண்டிருக்கின்றன என்று பார்ப்பதன் மூலம் சர்வதேச நிகழ்வுகளாக நடக்கும் பல்வேறு விடயங்களும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்கின்றன என்பதை காண முடியும்
இந்த ஒருமித்த தன்மையை காணும் விடயத்தில் பல தனிமங்கள் ( இவை அமைப்புகளாகவோ அல்லது தேசிய இனங்களாகவோ அல்லது தனிநபர்களாகவோ அரசியல் கட்சிகளாகவோ இருக்கலாம் ) நேரடி முகவர்களாக தென்படாது போனாலும் அவர்கள் பல இடங்களில் சித்தாந்த முகவர்களாக செயலாற்றும் தன்மையையும் காணலாம் .
பிராந்திய கோட்பாடு
ஒரு அரசு அதிக ஆதிக்கத்தை குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் கொண்டிருக்கும் பொழுது, சிறிய வலு குறைந்த நாடுகள் தமது இருப்பில் அதிக கவனம் செலுத்தும் மனோ நிலையை பெறுகின்றன. அந்த சிறிய நாடுகளுக்கு பாதுகாப்பு இன்மை குறித்த எண்ணக்கருத்தின் ஆரம்ப பொருளாக அதிக ஆதிக்கத்தை கொண்ட நாட்டின் செயற்பாடுகள் அமைகின்றன.
சமச்சீரற்ற தோற்றப்பாடு குறிப்பாக மூலோபாய நிலைகளாயினும் ,இராணுவ பாதுகாப்பு வளங்களாயினும் பொருளாதார வலு எனஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்த காரணியாயினும் இந்த பாதுகாப்பு அற்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.
தெற்காசிய பிராந்தியத்தின் பிரதான இந்திய நாட்டிற்கும் அதனை அயல் நாடாக கொண்ட பாகிஸ்தான், பங்களாதேசம்,சிறிலங்கா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு அசெளகரீயங்களை உள்ளூர உணர்ந்து வரும் நிலையும் அரசியல் பதட்ட நிலையும் எப்பொழுதும் இருந்து வருகிறது.
இந்த பதட்ட நிலை மறுவளமாகவும் செயற்பட வல்லது. அதாவது சிறிய நாடுகளில் ஏற்படக் கூடிய உள்ளுர் அரசியல் மாற்றங்களும் பெரிய அயல் நாடான இந்திய பாதுகாப்பு செளகரீய உணர்வுக்கு ஏற்றதல்ல.
உதாரணமாக சிறிலங்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு அதே காலப்பகுதியில் இடம்பெற்ற இந்திய தேர்தல் களத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருந்தது. ஆளும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இஸ்லாமிய அபாயம் நெருங்கி வருவதாக பிரச்சாரம் செய்வதற்கு பெரும் வாய்ப்பளித்தது.
அதேபோல பாகிஸ்தானிய அரசியல் பொருளாதார மாற்றம் துல்லியமான வகையில் உடனடியாக இந்தியாவில் நிலவர மாற்றத்தை காட்ட வல்லது. இதற்கு நல்ல உதாரணமாக சீன -பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை ஒப்பந்தமும் அதில் இந்தியா கொண்டுள்ள ஐயப்பாடுகள் குறித்தும் எழுந்துள்ள பிரச்சினைகளை குறிப்பிடலாம்.
அராபிய பார்சிய இன மக்களை அதிகம் கொண்டுள்ள பாகிஸ்தான் இஸ்லாத்தை தனது தேசிய மதமாக கொண்டுள்ளது. 82 சத வீத சுண்ணத்து இஸ்லாமியரையும், 11.8 சதவிகிதம் சியா இஸ்லாத்தையும் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு நிகழ்ந்து வந்தது.
இரு நாடுகளும் சுண்ணத்து இஸ்லாத்தை தழுவுபவர்களாக இருப்பதால், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அதிக உறவு கொண்டாடி வந்தனர்.
இரண்டு வரலாற்று ரீதியான நிகழ்வுகள் சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிக நெருக்கத்தை உருவாக்கின. முதலாவது 1979 ஆம் ஆண்டு நடை பெற்ற ஈரானிய புரட்சி. ஈரானில் சியா இஸ்லாமியர்களின் எழுச்சி சுண்ணத்து இஸ்லாமிய பாகிஸ்தான் மீது அதிக கவனம் செலுத்த வைத்தது.
இரண்டாவதாக அதே ஆண்டு இடம் பெற்ற ஆப்கனிஸ்தான் மீதான சோவியத் படைகளின் நகர்வு பாகிஸ்தானிய இஸ்லாத்தை காப்பாற்றும், பொருட்டு மதராசா பள்ளி கூடங்கள் ஊடாக சவுதி அரேபியா பொருளாதார வசதிகள் செய்து கொடுத்தது.
2015இல் யேமன் நாட்டின் மீது சவுதி அரேபியா படை எடுத்த போது, ஈரானிய சார்பு கவுட்டி படைகளுக்கும் சவுதி அரேபிய படைகளுக்கும் இடையில் பாகிஸ்தான் நடு நிலைமை வகித்தது. ஆனால் பின்பு சவுதி அரேபியாவின் அழைப்பிற்கு ஏற்ப பாகிஸ்தானிய இராணுவத்தை நேரடி யுத்தம் அல்லாத பகுதிகளில் சவுதி அரேபிய தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும் வகையில் யுத்தப் பகுதிகள் அல்லாத பிரதேசங்களில் பணியாற்ற படைகளை அனுப்புவதற்கு ஒப்பு கொண்டது
அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கும் வந்திருந்த சவுதி இளவரசர் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இருதரப்பு இணக்க உடன் படிக்க செய்து கொண்டதிலிருந்து பாகிஸ்தானிய சவுதி உறவுகள் மேலும் வலுப்பெற்று உள்ளது.
தாக்குதலும் சவுதி இளவரசரும்
காலாகாலம் சவுதி அரேபியாவினால் வழங்கப்படும் தாராள பொருளாதார உதவிகள் சவுதி ஆளும் வர்க்க வொகாபிஸ்களுடன் இணைந்து செல்லக்கூடிய தூய இஸ்லாமியம் என்ற பெயரிலான- ஈரானியர்களுக்கு எதிரான வகையில் கட்டுக்குள் வைத்து கொள்ளக் கூடிய வகையிலான- ஒரு நிலையை சவுதி அரேபியாவினால் பாகிஸ்தானில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, இந்திய தேர்தலுக்கு சற்று முன்பாக இடம் பெற்ற புல்வாமா தாக்குதல்களும் அதனை இந்திய- பாகிஸ்தானிய -சவுதி அரேபிய கூட்டு எவ்வாறு செயல்படுத்தியது என்பதை காணலாம் .
புல்வாமா தாக்குதலும், அதிலே இறந்த இந்திய இராணுவத்தினரும் அதனை தொடர்ந்து இந்திய விமானப்படையின் பாகிஸ்தானிய எல்லையை மீறி சென்று நடத்திய தாக்குதல்களும் இந்திய தேர்தலை மையமாக கொண்டு இடம் பெற்றவையே என்பது இங்கே வெளிச்சமாகிறது.
ஏற்கனவே திட்டமிட்டபடி சவுதி இளவரசர் இந்திய – பாகிஸ்தானிய பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத் திட்டத்திற்க ஏற்ப தாக்குதல் நாடகம் அரங்கேற்றப்பட்டது மட்டுமல்லாது. இதன் பலனாக நீண்ட கள மோதல் ஒன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம் பெறாது பாதுகாக்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.
சவுதி இளவரசர் இந்திய வருகை இந்த திட்டத்தை சமநிலைபடுத்தியது. இதிலே சுவுதி அரேபியாவின் பங்களிப்பு எந்த அளவு என்பது சரியாக குறிப்பிட முடியாது போனாலும் அனைத்து நிகழ்வு களும் காலம் தவறாது இடம் பெற்றன என்பது மட்டும் உண்மை.
அத்துடன் இந்திய மக்கள் மத்தியில் மோடி அவர்கள் ஒரு பாதுகாவலன் என்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் பொருட்டு தான் இந்த தாக்குதல் இடம் பெற்றது என்பதுவும் வெளிவருகிறது.
பணமும் குற்றவாளிகளும்
900 மில்லியன் வாக்காளர்கள் பங்குபற்றிய அண்மைய இந்திய தேர்தல் உலகிலேயே மிகவும் அதிக செலவீனம் கொண்ட தேர்தல் என புதுடெல்லியை மையமாக கொண்டு இயங்கக் கூடிய தகவல் தொடர்பு கற்கைகளுக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே 60 000 கோடி இந்திய ரூபா செலவிடப் பட்டிருக்கிறது. இது சுமார் 8.7பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையானது என்பது மட்டுமல்லாது, 2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தல் செலவீனங்ளிலும் பார்க்க இது இரண்டு மடங்க அதிகமானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .
இப்பொழுது தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மகத்தான வெற்றி இந்துத்துவா என்று ஆங்கிலத்தில் அழைக்க கூடிய இந்து அடிப்படைவாத கோட்பாட்டிற்கு புதிய ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இங்கே ஒட்டு மொத்தமாக 539 பாராளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்ட்டனர். இவர்களில் 233 பேர் மீது கற்பழிப்பு, கொலை கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற குற்ற சாட்டுகள் உள்ளதாக சனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது அரைவாசி பேர் குற்ற விசாரணைக்குட்பட்டவர்களாகவோ அல்லது சட்டத்தை ஏய்த்தவர்களாகவோ உள்ளனர் என்பது அந்த நிறுவனத்தின் அறிக்கையாகும். இதிலே பாஜக வை சேர்ந்தவர்கள் 116 பேர் எனவும் தெரிவு செய்யப்பட்ட 54 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து முக்கியமான துறைகளான பொருளாதாரம் வெளியுறவு ஆகியவற்றிற்கு அமைச்சர்களை தெரிந்து எடுக்க முடியாமல் இருவரையும் தமிழ் நாட்டிலிருந்து தெரிவு செய்திருப்பதுவும் யதார்த்தம் தான்.
இருப்பினும் தெற்காசிய பிரந்திய நாடுகள் மத்தியில் மத உணர்வை மையமாக வைத்து அரசியல் செய்யும் தன்மை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டிலும் மிக அதிகமாக காணப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
அடுத்த கட்டுரையில் எவ்வாறு இந்திய -இலங்கை நாடுகளுக்கு இடையிலான பௌத்த உறவு அரசியல் மற்றும் வெளியுறவு சார்ந்தது. சிறிலங்காவின் பௌத்தம் தனது இருப்பை அந்த தீவில் உத்தரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு எந்த வகையிலும் நிறம் மாறி கொள்ளும் போக்கு கொண்டது என்பதையும் முன்பு என்றும் இல்லாதவாறு பௌத்த சிங்களம் எவ்வாறு தனி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் பார்க்கலாம்.
–லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

Tuesday 9 July 2019

'றோவும்" தமிழரின் உரிமைப்போரும்`

#நீலன் என்ற புனை பெயரில் புலிகள் இயக்கத்தின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர் ஊடகங்களில் எழுதியிருந்த கட்டுரைகளுள் ஜனவரி 2005 இல் ஈழநாதம் வெள்ளி மஞ்சரியில் வெளிவந்த கட்டுரை இது. காலத்தின் தேவை கருதி இங்கே பகிர்கிறோம்.

-------------------------------------------------
'றோவும்" தமிழரின் உரிமைப்போரும் -நீலன்
-----------------------------------------------


அண்டத்திலுள்ள சக்தி வாய்ந்த ஒரு சில நவீன புலனாய்வு அமைப்புகளினுள் 'றோ"வும் (Research and Analysis Wing -RAW) ஒன்றாகத் திகழ்கின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களுக்காக இந்திய அரசு 1968 இல் 'றோ" அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு இந்தியப்பிரதமரின் நேரடிப்பொறுப்பின் கீழ் புதுடில்லியில் லோதி வீதியிலுள்ள 13 மாடிக்கட்டடத்தை தலைமையமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்திய அரசு ஆரம்ப காலங்களில் 'றோ" விற்கென இரண்டு கோடி (இந்தியப் பணம்) நிதியை பாதீட்டில் ஒதுக்கியது. இன்று ஜயாயிரம் கோடி ரூபாய்களாக பாதீட்டுத்தொகை விரிவடைந்து, ஒரு பலமான நவீன உளவறியும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.

 தெற்காசியாவைப் பொறுத்தவரையில். சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஸ்தரிப்பு அல்லது பிராந்திய ஆதிக்க முனைப்புக்கள், இந்தியாவின் கேந்திர, பொருளாதார நலன்களை ஸ்திரப்படுத்துவதற்கும், விஸ்தரிப்பதற்கும் பிரதான முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது. இந்தியாவினது பிராந்தியப் பாதுகாப்பும், அயலுறவுக் கொள்கையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. இவைகள் இரண்டும் இணை கோடுகளாக செல்லக்கூடியதாக இருக்கின்றதனால் இவ் விடயங்களில் 'றோ" முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றது. 

'றோ" சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் கண்காணித்தும், இந்திய நலனுக்கு ஏற்ப அயல் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தி ஆட்டம் காணச்செய்தும் வருகின்றது.

 அயல் நாடுகளிலுள்ள இனச்சிக்கலின் ஊடாக அரசியல், இராணுவ, பொருளாதாரத் தளங்களில் சேதாரங்களை உண்டுபண்ணியும், சனநாயகத்திற்கான போராட்டங்கள் மூலம் அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தும் பின்கதவுக் காரியங்களை 'றோ' செய்தும் வருகின்றது. 

இந்தியா பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தை (கிழக்கு பாகிஸ்தான்) பிரித்தெடுப்பதற்கு வங்களாதேச விடுதலை வீரர்களாக முக்தி பாகினிக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. 'றோ" வினது உளவுச்சேவைச் சரித்திரத்திலேயே பாகிஸ்தானை வெற்றி கொண்ட மறைமுக நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் ஒரு தனியான, பலமான தேச அரசுப் பண்பை கொண்டிருந்தது. அது 'றோ"வின் புலனாய்வுத் தந்திரோபாயப் பண்பினால் பாகிஸ்தான், வங்களாதேசம் என இரு நாடுகளாக 1971 இல் பிரிந்தன. 

இந்த புலனாய்வு செயற்பாடுகளுக்குப் பின்னரும் இவ்விரு நாடுகளில் இத்தகைய மறைமுக வேலைகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவி விடவில்லை. அது தனக்குச் சார்பான உளவு வட்டத்துக்குள் நுழைவதற்காக வங்காள தேசத்திலுள்ள மதச் சார்பற்றவர்களுக்கும், இந்து சிறுபான்மையினருக்கும் மறைமுக ஆதரவுகளை வழங்கி இருகின்றது. 'றோ" கழுகுக்கண் கொண்டு கூர்ந்து அவதானித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானிலுள்ள சின்ட், புன்சாப் பிரிவினரிடையேயுள்ள பல்வேறு இனக்குழுக்கள் கருத்து முரண்பாடுடையவர்கள் மத்தியில் விரிவான உளவு வலையமைப்பை அமைத்துள்ளது. இதனைவிடவும் பாகிஸ்தானில் உளவு பார்க்க திறமையான இந்து உறுப்பினர்களை ஆர்.எல்.எஸ் மூலம் ஆள் திரட்டல்களைச் செய்து அவர்களுக்கு உளவுப் பயிற்சிகளை வழங்கிக் களத்தில் இறக்கியுள்ளது.

 உலகில் வல்லரசுகளின் பல்போட்டியில் சமநிலையேற்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படும் உளவுச் செயல்கள் உளவு வரலாற்று ஏடுகளில் தனித்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறே சர்வதேச ஆதிக்க சக்திகளின் கைகள் இலங்கைக்குள் உள்நுழைய தொடங்கியதும் இந்தியா இலங்கையை தனது செல்வாக்கினுள் கொண்டுவருவதற்காக ஏனைய வல்லரசுகளைப்போல் தமிழர் தேசிய இனச்சிக்கலை கையாளத்தொடங்கியது. இந்தத் தந்திரோபாயப் பண்பு அடிப்படைக் கொள்கையின் அத்திவாரத்தில் இருந்து கொண்டு 'றோ" தமிழ் இளைஞர்களின் தீவிரவேட்கை உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது. அது உயர்பாதுகாப்பு நிலையங்களான புதுடில்லியிலுள்ள சக்ராட்டாவிலும், மையங்களை உருவாக்கி 'ஜந்து" தமிழ் குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்கியது. 

தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் நெருக்கடியை நல்லிணக்கப் போக்குடன் மாத்திரம் அணுகவேண்டிய நியாயம் அல்லது தேவை இருந்தபோதும் 'றோ" இந்திய நலன்களுக்கான உணர்வுகளுடன் அந்த நெருக்கடியை அணுகத்தலைப்பட்டது. இதுவே எல்லாக் குழப்பத்துக்கும் அடிப்படையாக அமைந்தது. 

தமிழரின் இனச் சிக்கலை சரிவரப் புரிந்துகொள்ளாமல், தொலை நோக்குப் பார்வையெல்லாம் இல்லாமல் 'றோ" உயர் குழாமினரின் விருந்து உபசார மேசையில் கதைக்கப்படும் விடயங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துத் திட்டங்களை வகுத்து வருகின்றது. இந்தக் குறுகிய வெளிப்பாட்டில் ஏற்பட்ட ஒருவகைப் பண்பு மாற்றமாகத்தான் 'றோ" புலிகள் இயக்கத்திலிருந்து தமிழர் உரிமைப் போராட்டத்தின் முன் நோக்கிய வீறு நடையைத் தடுத்து நிறுத்துவதற்கு தன்னாலான சகலதையும் செய்தது. ஆனாலும் புலிகள் பலம்பெற்றனர். தமிழரின் படையான புலிப்படை பலமாகியபோதே சிங்கள ஆளும் உயர்பீடம் நிலை குலைந்துபோய் இந்திய அரசின் காலடியில் சென்று விழுந்தது. 



புலிகளின் பலத்தால்தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ய வழி வகுத்தது. இந்த யதார்த்த அரசியல் களநிலைவரங்களை பகுத்துணரும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புலிகளின் தொடர்ச்சியான போராட்ட வரலாற்று நீட்சி காரணமாக உள்ள தமிழரின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ள பின்நிற்பது அல்லது தயங்குவதே கவலையானது. தமிழர் ஒவ்வொரு வீடுகளிலும் காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்திராகாந்தி இறந்ததும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தனது தாயை இழந்தது போலவே சோகத்தினுள் மூழ்கியிருந்தார்கள்.

 இப்படியான தமிழர்களின் நல்லிணக்க உறவு போக்குகளை புரிந்துகொள்ளாது தமிழர்களுக்கு 'றோ" உயர் பீடமும், இந்தியக்கொள்கை வகுக்கும் உயர்பீடமும், இந்திய அரச உயர்பீடமும், துன்பதுயரங்களை கொடுத்து. சிங்கள தேசத்தை மாறி, மாறி ஆட்சிசெய்யும் ஆளும் தரப்பினர் எல்லோரும் இந்திய நலனுக்கு விரோதமான அரசியல், இராணுவ, பொருளாதார கொள்கைகளையே கடைப் பிடித்து வந்துள்ளனர். வருகின்றனர். அதாவது நீல நிறக் கட்சிக்காரங்கள், பச்சை நிறக் கட்சிக்காரங்கள், சிவப்பு நிறக் கட்சிக்காரங்கள் என அனைத்தும் இந்தியாவிற்கு சார்பான போக்குகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை எந்ததொரு ஆய்வுகளையும் செய்யாமலே வெளிப்படையாக 'றோ" உயர் பீடத்தினர் தெரிந்துகொள்ளக்கூடிய விடயம். 

1987இல் ஜே.ஆர். ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளை இங்கு பார்ப்பதனால் உண்மையொன்று 'றோ'வுக்கு முன்னால் விரிந்து விட்டுச்சென்றுள்ளது. அதாவது, 

"இதுவரை காலமும் புலிகளும், சிங்களப் படையினரும் சண்டை பிடித்த போது இந்தியா மத்தியஸ்தம் வகித்தது. இப்போது புலிகளையும், இந்தியாவையும் மோத விட்டு சிங்கள தேசம் மத்தியஸ்தம் வகிப்பதாகவும், சிங்களவர் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தார்கள். இப்போதுதான் சிங்களவரைப் பாதுகாத்து இந்தியர்களை இரத்தம் சிந்த வைத்துள்ளேன்" என்று சொன்னார். 

அதற்கு அப்பால், ஜே.ஆர். முன்னால் இந்தியப் பிரதமர் எதிர்ப்புணர்வு மிக்க சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு உயிர்தப்பிய நிகழ்வு நடந்தது. இப்படியாக சிங்களவர்களிடையே இந்திய எதிர்ப்புணர்வு ஆழமாகப் புரையோடி இருக்கும் சிங்கள தேசத்தின் இறைமையின் பாதுகாப்பிற்காக 'றோ" உதவ முன் நிற்பது தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் இறைமையின் பாதுகாப்பை அசட்டை செய்வது தமிழருக்கு கவலை தரும் நிகழ்வாகும்.

 'றோ" தமிழரின் உரிமைப் போரை குறைத்து மதிப்பிடும் மனங்பாங்கையுள்ள முகவர் வட்டத்தினரால் வழங்கப்படும் தகவல்களையும் தமிழரின் உரிமை பற்றி சிங்கள உயர் குழாம் வட்டத்தினரால் திணிக்கப்படும் தகவல்களையும் மீள்பரிசீலனை செய்து தமிழர் தொடர்பான கொள்கை மீளுருவாக்கம் செய்யப்படும்போதே இந்திய அரசு நடுநிலை வகிக்க முடியும்.

 'றோ'வின் வான் பறப்பியல் ஆய்வு மையம் (Aviation Research Center -ARC) சுறு சுறுப்பாக இயங்குகின்றது. கப்பல்களை கண் காணிக்க 'றோ" அமைப்பின் 2ஆவது பிரிவினர் ஓரிசாவில் டொனியர் (Donier) கடல் கண்காணிப்பு விமானத்தை உபயோகிக்கின்றது. தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் புலனாய்வுத் தகவல்களை வழங்கும் இணைப்பு நிலையமொன்றை நிறுவி, இணையம் (Internet) மின்னஞ்சல் (E-mail) செய்மதி வழித் தொலைபேசி (Inmarsat) வழித் தகவல்களை கண்காணித்தும் வருகின்றது.

 இதுபோன்ற நவீனத்துவ வசதிகளைத் தாங்கிய பலம்மிக்க 'றோ" இந்தியாவினுள் உளவுவேலை செய்யப்படும் எந்தொரு சதுரங்க ஆட்ட நகர்தலையும் முறியடித்து வந்த போதிலும் சிங்கள தேசத்தில் ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களை தடுக்க எவ்வளவோ முயன்றும் 'றோ"வினால் வெற்றிபெறமுடியவில்லை. சிங்கள தேசம் இந்தியாவோடு இணைந்து நடித்த நாடகத்தின் திரை உயர்த்தி, தனது உண்மை ரூபத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் சிங்கள இறைமைக்கு, குந்தகம் விளைவிக்கும் எந்ததொரு தமிழர் சார்புநிலை அரசியல் பணிகளை இந்தியா  என்கிற அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

 இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் நடுநிலை, வகிக்கும் கண்ணோட்டத்தோடு தமிழரின் உரிமைப்போரை அணுகும் அரசியல்பண்போடு தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அதனை விடுத்து சிங்கள உயர் குழாமோடு ஒட்டி உறவாடித் தகவல்களைப் பெறும் நிரூபமா, நாராயணன், முனி போன்ற 'றோ" உயர்மட்டத்தினரின் ஆலோசனை கேட்கும் பட்சத்தில் இந்திய அரசை மீண்டும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே முடியும். மத்திய கிழக்கு நாடுகளினுள் இஸ்ரேல் தேசம் பலமாக இருப்பதனாலே அமெரிக்கா நலனுக்கு நன்மை பயக்கும் என்கிற அடிப்படைக்கொள்கையில் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்து அத்தேசத்தை பலமாக்கியுள்ளது. 

இந்த வரலாற்றுப் பாடத்தை இந்திய வகுப்பாளர்கள் கற்றுக்கொண்டிருந்தபோதிலும் தமிழர் தாயகம் விடயத்தில் 'றோ"வினது தவறான அணுகு முறைப்போக்கை மாற்றியமைக்காது இருப்பது அறிவுபூர்வமான அரசியல் பண்பிலிருந்து விலகி நிற்பதாக அமைகின்றது.

 இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தாக்கம் தமிழர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய சோகமான சூழலில் சிங்களதேசமும், ஆதிக்க சக்திகளும் பூகம்ப அரசியலைப் பயன்படுத்தி தங்களது இராணுவ நலன்களையே முதன்மையாகப் பேணி வருகின்றது. 

சிங்கள தேசம் இந்தியாவினது இறைமையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காது இந்திய நலனுக்கு பாதகமான நிலைப்பாட்டினை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் இன்றைய பூகம்ப அரசியல் சூழலை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தமிழரின் உரிமைப் போரை பலவீனப்படுத்தும் மறைமுக பணிகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவிவிட வேண்டிய நிலை ஒன்று உதயமாகியுள்ளது. 

தமிழர் உரிமைப் போராட்டம் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்றுவிட்ட அரசியற் சூழ்நிலையிலும், தமிழர் எந்ததொரு தீர்வை எட்டாத போதிலும் தமிழர்படை பலமாகவே உள்ளது. இந்தப் பலத்தை பலவீனமாக்கும் 'றோ"வின் உளவுச் செயற்பாடுகளால் தென்னிந்திய பிராந்திய பாதுகாப்பிற்கு எவ்வித நன்மையையும் பெற்றுக் கொடுக்கப் போவதும் இல்லை. அது தர்மமாகவும் இருக்கப்போவதும் இல்லை. 

ஆகவே, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமிழரின் தொன்மையை ஏற்றுக்கொண்டும் தமிழரின் உரிமைப்போரின் நியாயத்தை புரிந்துகொண்டும், தமிழரின் துன்ப துயரங்களை மனிதாபிமானமாக அணுகியும் செயலாற்றக்கூடிய கொள்கைக்கு அத்திவாரம் இடவேண்டும். இதுவே தமிழர் தாயக விடயத்தில் இந்தியாவை நடுநிலைப்படுத்த உதவும்.