Thursday 20 February 2020

ஆயுதங்கள் கொடுத்து முதுகில் குத்திய இந்தியாவும் ... கைவிட்டு போன தமிழீழமும்.!

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக 1995ம் ஆண்டு, யாழ்பாணத்தில் இருந்து புலிகள் வன்னிக்கு பின் வாங்கிய போது, சிங்களம் அதை பெரும் வெற்றியாக அன்று கொண்டாடியது. 

சர்வதேச ஊடகங்களும், புலிகளால் மீண்டும் எழவே முடியாத இராணுவ தோல்வியாக இதை வர்ணித்தன. உண்மையில் புலிகளின் இராணுவ இயந்திரம், அன்றைய நேரத்தில் யாழிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே வன்னிக்கு, சேதமில்லாது நகர்த்தவேண்டிய பெரும் சவாலை அன்று புலிகள் சந்தித்தனர்.



படையியல் ரீதியாக அது ஒரு பின்னடைவாக இருந்த போதும், தலைவரின் வேகமான ஒருங்கமைப்பும், போராளிகளை இராணுவக் கட்டுக்கோப்பை சிதறவிடாமல், அவர்களின் "உளவுரணை" சிதறவிடாமல் பேணியமையும், மிகப்பெரிய இராணுவ சாதனையென்றே நான் கூறுவேன். 

எதிரி யாழை முழுவதுமாக கைப்பற்றி (24/04/1996 என்று நினைக்கின்றேன்) மூன்று மாதங்களிலேயே, 
முல்லைத்தீவு படை தளம் மீதான பெரும் தாக்குதல் மூலம், ஒரே நாளில் 1800க்கு மேட்பட்ட இராணுவத்தினரை கொன்று, ஆட்லறிகள் உட்பட, பல பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, பெரும் பாச்சல் ஒன்றை செய்து, சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும், தங்கள் இராணுவ வலிமையை மீண்டும் நிருபித்தனர் புலிகள்.



தொடர்ந்து ஜெயசிக்குறு முறியடிப்பு, சத்ஜெய முறியடிப்பு, கிளிநொச்சி படைத்தள அழிப்பு, ஆனையிறவு மீட்பு என புலிகளின் இராணுவ தாக்குதல்கள் உச்சம் பெற்றிருந்த நேரம் அது. 2001ம் ஆண்டு புலிகளின் பார்வை யாழின் மேல் பதிந்திருந்தது. யாழ் குடாவை கைப்பற்றும் திட்டம் தலைவரால் போடப்பட்டு புலிகள் சேனை தயாரானது.

புலிகளின் அதி சிறப்பு அணியொன்று தனம்கிளப்பு, கோயிலாக்கண்டி கடற்கரைப் பிரதேசங்களில் தரையிறங்கி, அதிரடி தாக்குதல் மூலம் அந்த பிரதேசங்களை இராணுவத்திடமிருந்து கைப்பற்றி, புலிகளின் தாக்குதல் படையணிகள் யாழ் நகரை கைப்பற்றுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க, புலிகள் யாழ்பாணத்தினுள் நுழைந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது, முன்னர் புலிகளால், இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த 120MM, 152MM ஆட்லறிகள், அத்தோடு புலிகளாலும் கடலால் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த ஆட்லறி மற்றும் அதன் "எறிகணைகளால்" யாழ்பாணத்தில் இருந்த இராணுவத்தின் தலைகளில் துல்லியமாக விழுந்தன. 

யாழின் எந்த மூலைக்கும் புலிகளின் ஷெல் வீச்சு துல்லியமாக இருந்தது. இராணுவம் எங்கும் ஓடி  ஒழிக்க முடியாத நிலையை புலிகள் எதிரிக்கு ஏற்படுத்தினர். உளவுரண் முற்றாக சிதைந்திருந்த  இராணுவம் பலாலிக்கு பின்வாங்கத் தொடங்கியது.



அந்த நேரத்தில் புலிகளின் தாக்குதல் அணிகளும், அதிவேக தாக்குதல் மூலம் சாவகச்சேரி உட்பட அரியாலை வரை முன்னேறி, யாழ் நகரிலிருந்து 2KM தூரத்தில் நிலைகொண்டிருந்தனர். 

புலிகளின் மின்னல்வேகத் தாக்குதலில், பல நூறு இராணுவத்தினர் கொல்லப்பட ஏனையோர் ஓட்டம் எடுத்தனர். 

புலிகளின் விசேட பயிற்சி பெற்ற போராளிகள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களில் சிறு, சிறு அணிகளாக ஊடுருவி அதிரடித்தாக்குதலை மேற்கொண்டு, இராணுவத்தினரின் உளவுரனை சிதைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் யாழிலிருந்த 38000இராணுவத்தினரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. சிங்கள இராணுவத்தின் போரிடும் உளவுரண் முற்றாகப் புலிகளால் சிதைக்கப்பட்டு, கிட்டதட்ட இராணுவத்தினர் சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

அதற்கான முன்னெடுப்பில் புலிகள் இருந்த நேரம், சிங்கள அரசானது, இந்திய அரசின் உதவியை நாடியது என்பதை விட, காலில் விழுந்து என்பதே சரியாகும்.

சிங்கள அரசால், தமது இராணுவத்தினரை "உயிருடன்" யாழில் இருந்து கடல் மூலமாக மீட்க உதவும் படியே, இந்திய அரசிடம் உதவி கோரப்பட்டது.! 

உடனே இந்திய அரசும், புலிகளின் கைகளில் யாழ்பாணம் விழுந்தால் "தமிழீழம்" இலகுவில் தமிழர் கைகளில் வந்து விடும் என்பதை உணர்ந்து, அதை தடுக்க, இந்திய அரசால் நயவஞ்சகமாக ஒரு கோரிக்கை, உத்தியோக பூர்வமாக புலிகளிடம் விடப்பட்டது. 

அதாவது இந்திய அரசு, சிங்கள இராணுவத்தை,கடல் மூலமாக யாழை விட்டு வெளியேற்ற உதவ போவதாகவும், ஒரு மாதகால அவகாசமும் கோரப்பட்டது.

இந்திய இராணுவத்தினருடனான போர் மற்றும் "வேறு சில" காரணங்களாலும், இந்திய அரசுடன் ஏற்பட்டிருந்த விரிசலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு, தலைவரால், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. 

தந்திரமாக ஒரு கால அவகாசத்தை,புலிகளிடம் பெற்ற இந்திய அரசு, சிங்களத்திற்கு புத்துயிர் ஊட்டியது. ஆயுதம், மற்றும் பண உதவி மூலமாக பின்நிற்பதை உறுதிப்படுத்தியது. 
இதே நேரம் மறுவளத்தால் இந்திய உளவுத்துறையான "ரோ" களத்தில் இறக்கி விடப்பட்டது.

பனிப்போரின் போது இந்திய அரசானது இரசியாவின் சார்ப்புநாடாகவே இருந்தது. இரசியாவிடமிருந்தே, தனக்கு தேவையான இராணுவத்தளபாடங்கள் அனைத்தையும் கொள்முதல் செய்துகொண்டிருந்தது. 

இது போலவே தான் "செக் குடியரசும்" தமக்கு தேவையான ஆயுதங்களை இரசியாவிடமே இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், சில பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு "செக் குடியரசு" நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது.

2000,மாம் ஆண்டு "செக் குடியரசு" நேட்டோவில் இணைந்தபோது, நெட்டோவால் சில நிபந்தனைகள் செக். குடியரசுக்கு விதிக்கப்பட்டது. 

செக். குடியரசு, நேட்டோவில் இணைந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று, செக் குடியரசு ராணுவத்திடம் இருந்த, இரசியத்தயாரிப்பு MBRLகளை (Multi Barrel Rocket Launcher) அழித்து விடலாம் அல்லது நட்பு நாடு ஒன்றுக்கு கொடுத்து விடலாம். இது தான் நேட்டோவுடனான அந்த ஒப்பந்தம்.! 

இது நடந்த சமகாலத்தில் இந்திய அரசு, "செக் குடியரசுடன்" மிக நெருங்கிய, இராணுவத்  தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு காரணம், இரசியாவின் இராணுவ ஆயுதங்களையே இந்திய இராணுவமும் பாவனையில் வைத்திருந்தமையால், அதற்கான உதிரிப்பாகங்கையும் இரசியாவிடமிருந்தே பெற்று வந்தது. 

சில நேரங்களில், இந்திய இராணுவத்திற்கு தேவையான உதிரிப்பாகங்கள், மற்றும் கடற்படை கப்பல்களின் உதிரிப் பாகங்கள் என்பன, ரஷ்யாவால் உரிய நேரத்தில் இந்திய அரசுக்கு கொடுக்க முடிவதில்லை.

ஆனால், அதேபாகங்கள் செக் குடியரசிடம் எதுவித பயன்பாடும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்த ரஷ்யா, அவற்றை அங்கிருந்து பெற்றுக் கொள்ளும்படி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தது. 

அந்த நேரத்தில் இரசியத் தயாரிப்பு ஆயுதங்களைக் குறைந்த விலைக்கு எப்படியாவது யார் தலையிலாவது கட்டி அடிக்கவேண்டும் அல்லது அழித்து விடவேண்டிய நிலையில் செக்குடியரசு இருந்தது. இந்த விவகாரத்தை செக் குடியரசு இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. காரணம், ஆயுதங்களை அழிக்க அவர்கள் விரும்பவில்லை.

உடனே இந்திய அரசு தமது உளவுத்துறை "ரா" மூலமாக, அப்போது யாழில் நெருக்கடியிலிருந்த சிங்கள இராணுவத்திற்கு, யாருக்கும் தெரியாமல் இந்த ஆயுதங்களைப் பெற்று கொடுக்க காய்களை நகர்த்தியது. 

அதன் ஒரு கட்டமாக அவசர அவசரமாக செக்குடியரசிடமிருந்து RM-70 ரக MBRLகளையும், அவற்றில் உபயோகிக்க 50000 ராக்கெட்டுகளையும், இரண்டு மிகப் பெரிய இராணுவ கார்க்கோ விமாங்களில் காதும், காதும் வைத்தால் போல இந்திய அரசின் முழுச் செலவில் கொழும்பில் கொண்டு வந்து இறக்கியது.

இந்திய அரசு, இலவசமாக அனுப்பி வைத்த ஒரு தொகுதி, நவீன ஆயுதங்களைக் கொண்டு இராணுவஇயந்திரத்தை மீள் ஒழுங்கு செய்த சிங்களம், அந்த ஆயுதம் கொண்டு மூர்க்கமாகத் தாக்க தொடங்கினான். 

சிங்கள இராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறையாமல் இந்திய காங்கிரஸ் அரசு தங்கள் பணத்தில் கொண்டு வந்து கொட்டியது. மேலதிகமாக இதே ஆயுதத்தை பின்னர் பாகிஸ்தானும், இந்தியாவிற்கு போட்டியாக அள்ளிக்கொட்டியது.(இறுதி யுத்தத்தில் மூன்று நாளுக்கு ஒரு கப்பல் என்ற ரீதியில் பாக்கிஸ்தான் செல்களை கொண்டு வந்து கொழும்பில் கொட்டியது.) 

சிங்களம், எந்தத்தடையுமின்றி தண்ணி போல ஷெல்களை ஏவியது. மீண்டும் உத்வேகம் பெற்றது சிங்கள அரசு இயந்திரம். 
MBRL ஒரு நிமிடத்தில் "40 ரொக்கெற்றுகளை" ஏவும் வல்லமை கொண்ட ஆயுதம். இது நாட்டுக்கு, நாடு எதிரான யுத்தங்களிலேயே பெரும்பாலும் பாவிக்கப்படுபவை. 

இது தெரிந்தும் இந்திய அரசு, தானே முன் நின்று சிங்களனுக்கு பெற்று கொடுத்தது. இந்த ஆயுதமானது குறிப்பிட்ட பிரதேசத்தை, நொடிப் பொழுதில் அழிக்கவல்ல மிகப்பெரும் அழிவு ஆயுதம்.

இதை பெற்றுக் கொடுத்து மீண்டும் தமிழர் முதுகில் குத்தி, தனது கோரமுகத்தை மீண்டும் எமக்குக்காட்டியது இந்திய அரசு. 

இதற்கு தமிழ்நாட்டு திராவிடக்கட்சிகளும், இது பற்றித்தெரிந்தும் எந்தவித எதிர்ப்பும் காட்டாது, நடுவனரசுக்கு துணை போய்த்தங்கள் பங்கையும் கற்சிதமாக நிறைவு செய்தனர்.

இந்திய அரசின் துரோகம் கையை சுட்ட பின் தான், புலிகள் தமது போராளிகளின் இழப்பைக்  குறைப்பதற்காக யாழில் இருந்து பின் வாங்க முடிவெடுத்தனர். 

உண்மையில் அன்று யாழ் புலிகளிடம் வீழ்ந்திருந்தால் இன்று தமிழீழ தனியரசு உருவாகி இருக்குமென்பது எனது நம்பிக்கை. எம் மக்களின் கனவை இந்திய நடுவண், மாநில அரசுகள் அன்று இல்லாமல் செய்து விட்டிருந்தன.

இறுதி யுத்தத்தில் கதுவி(ராடர்) மட்டும் கொடுத்ததாக கூறும் இந்திய அரசு, தங்கு தடையில்லாமல், "சிங்கள அரசு வாங்கும்"  ஆயுதங்களுக்கும் பணத்தை தானே செலுத்தி, அவர்கள் கைகளில் கிடைக்க செய்தது இந்திய அரசு. 

ஆயுதங்கள் கொடுத்தால் வெளித்தெரியும், காசு கொடுத்தால்? தமிழக தமிழனை ஏமாளியாக்கியது அன்றைய ஆளும் வர்க்கம்.

இருபது நாடுகளில் கூட்டு முயற்சியால் அழிக்கப்பட்ட தமிழர் போராட்டத்தில், இந்தியாவின் பங்கு 2001 மாம் ஆண்டு வேகம் பெற்று, கச்சிதமாக முள்ளிவாய்க்காளில் நிறைவு செய்யப் பட்டது. யாழ் நகர் அன்று கைப்பற்ற பட்டிருந்தால், குறைந்தது எங்கள் போராட்டமாவது, இன்று காக்கப் பட்டிருக்கும்..!! 

வலிகளுடன் துரோணர்..!!!

No comments:

Post a Comment