Monday 4 May 2020

விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிந்து போன கதையா?

'கலாட்டா தமிழ்' என்ற யூடியூப் வலைதளத்தில் திமுகவைச் சார்ந்த தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு. செந்தில் குமார் அவர்களின் பேட்டியைப் தற்பொழுதுதான் பார்த்தேன். தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் குறித்து பேசுகின்ற இடங்கள் முழுவதும், 'இது என் சொந்தக் கருத்து' என்ற விதமாக பேசி, ஒட்டுமொத்த திமுகவின் உண்மையான குரூர முகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 



தலைவர் பிரபாகரன் அவர்களை துல்கர் சல்மானும் அவரது படக் குழுவினரும் தவறாக சித்தரித்தக் காட்சியை நீக்க கோரி, தமிழக இளையோர் கூட்டம் கொந்தளித்த சமயத்தில் ஐயா கொளத்தூர் மணி, 'பிரபாகரன் என்ற பெயரை மலையாளிகள் அதிகமாக வைக்கின்றனர், அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என்று பதிவு செய்ததை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பேசுகிறார் ஐயா செந்தில் குமார். 

திமுகவிற்கு சொம்பு தூக்குவதற்காகவே கொளத்தூர் மணி போன்ற பல சில்லுவண்டுகள் பத்து பேரை வைத்துக் கொண்டு கட்சி நடத்துகிறேன் என்ற பெயரில் தலைவர்களாக சுத்திக் கொண்டு, தமிழினம் சிக்கல்களை சந்திக்கும் போதெல்லாம் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கும் வேலை செய்துவிடுகின்றனர். 

2009-க்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நெருங்கும் போதெல்லாம் கருணாநிதியை புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழரின தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையோ, விடுதலைப் புலிகளையோ அநாகரிகமாக விமர்சிப்பதையே தங்களின் முழு நேர வேலையாக திமுக தொண்டர்களும், திராவிட சொம்பு தூக்கிகளும் செயல்படத் தொடங்கிவிடுகின்றனர். 

பேட்டியில் ஒரு இடத்தில் 'விடுதலைப் புலிகள் முடிந்து போன கதை' என்று செந்தில் குமார் சொல்கிறார். ஏன் விடுதலைப் புலைகளை முடிந்த கதையென இவர் சொல்ல வேண்டும்? அங்குதான் பல சூட்சம காரணங்கள் மறைந்து கிடக்கின்றன. 

'தலைவர் பிரபாகரன்' என்ற வார்த்தை சில காலமாக பெரும் அதிர்வுகளை சமூக வலைதளம் முழுவதும் உருவாக்கி நிற்கிறது. இணைய வெளி முழுவதும் எங்கு திரும்பினாலும் 'பிரபாகரன்' என்ற மந்திரச் சொல்லே உச்சரிக்கப்படுகிறது. உலகத் தமிழினத்தின் ஒற்றை முகமாக, ஒரே அடையாளமாக பிரபாகரன் உயர்ந்து நிற்கிறார். இது இப்படியே தொடர்ந்தால் கருணாநிதியின் பிம்பம் உடைந்து, கருணாநிதியின் கதையும் திமுகவின் கதையும், ஒரு முடிந்து போன கதையாகவே அழிந்து போகும் என்ற பயம்தான் இவர்களை இப்படி எல்லாம் பேச வைக்கிறது. 

திராவிட கூட்டத்திற்கு நாங்கள் மீண்டும் மீண்டும் ஒன்றைத்தான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம்... 

தமிழர் இன வரலாற்றில் இனி கருணாநிதியின் பெயர் 'துரோகி' என்றே உச்சரிக்கப்படும். இனி இதை யாராலும் மாற்றவே முடியாது. 

எங்கள் அண்ணன் சீமானின் வரிகளில் சொல்வதானால்... 

''விழுந்த திமுக.. விழுந்தது தான்... இனி வரலாற்றில் ஒருபோதும் எழவே முடியாது...'' 

பேட்டியில் ஐயா செந்தில் குமார் சொல்கிறார்... 

'சீமான்தான் பிரபாகரனை வியாபாரமாக பயன்படுத்துகிறார்' என்று. 

ஐயா செந்தில் குமார் அவர்களே... 'பிரபாகரன்தான் இந்த இனத்தின் ஒரே ஒப்பற்ற தலைவன்' என்று என்னைப் போன்ற முன்னாள் திமுக தொண்டர்களுக்கு பொட்டில் அடித்தார்போல பதிய வைத்தவனே எங்கள் அண்ணன் சீமான்தான்... 

அரசியலை வெறும் வியாபாரமாக மட்டுமே செய்து பழகிய கருணாநிதியின் வாரிசுகளுக்கு பிரபாகரனும் வெறும் வியாபாரப் பொருளாகத்தான் தெரியும். ஆனால், நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கோ, அண்ணன் சீமானுக்கோ பிரபாகரன் என்ற வார்த்தை உயிருக்கு இணையானது... 

திமுகவின் ஒரு தலைமுறையே உதயநிதிக்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டு இருக்கும் இதே காலத்தில்தான், ஈழ நிலத்தில் எங்கள் தலைவன் பிரபாகரன் உயர்த்தி பிடித்த அதேப் புலிக்கொடியை தமிழர் நிலமெங்கும் நாம் தமிழர் பிள்ளைகள் ஊன்றி நிற்க தொடங்கினர் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள். 

கருணாநிதி என்ற அரசியல் வியாபாரியின் பிம்பம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சரிந்து விழத் தொடங்கிய காலத்தில்தான் 'பிரபாகரன்' என்ற உன்னத தலைவனின் முகத்தை தமிழர் நிலமெங்கும் கொண்டு சென்று நிறுவி முடித்தனர் நாம் தமிழர் தம்பிகள். 

விடுதலைப் புலிகளின் வரலாறு முடிந்து போன கதையா? அல்லது திமுக மற்றும் துரோகி கருணாநிதியின் வரலாறு முடிந்து போன கதையா? என்பதை 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் காட்டுகிறோம்... 

தேர்தல் களத்தில் திமுகவின் துரோக வரலாற்றை வீதி வீதியாக கொண்டு செல்வோம்... ஏற்கனவே பத்து ஆண்டுகளாக அதிகாரமற்ற அகதி போல தமிழ்நாட்டில் சுத்தி திரியும் திமுக கட்சியை மொத்தமாக முடித்து வைக்கும் வேலையை இந்தப் பிரபாகரனின் பிள்ளைகள் செய்து முடிப்போம்... 

2021-ஆம் ஆண்டோடு திமுகவின் சகாப்தமே முடிந்தது என்ற வரலாற்றை உறுதியாக பதிவு செய்வோம்... 

அதுவரை நீங்கள் கதை பேசிக் கொண்டே இருங்கள் உடன்பிறப்புகளே...

-ஆ. அருளினியன்

No comments:

Post a Comment