Sunday 28 June 2020

TELO, EPRLF போன்ற அமைப்புகளை ஏன் புலிகள் தடை செய்தார்கள்? அது சகோதரப்படுகொலை தானா?

எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கியமான விடையம் ஒன்றை கையில் எடுத்துள்ளேன். "சகோதரப்படுகொலை" என்று, தமிழர் தேச எதிர்ப்பாளர்களால் புனையப்பட்ட,சம்பவத்தின் பின்னால் உள்ள நிஜங்கலையே உங்களோடு பகிர விளைகின்றேன். "சகோதரப்படுகொலை" என்னும் சொல்லை முதல், முதலில் அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி தான்.


அடுத்ததாக சுப்பிரமணியசாமி (இவர்கள் இருவரும் TELO அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள்) அடுத்ததாக இவற்றை பல கற்பனைகளுடன், உண்மைக்கு புறம்பாக பொய்களை புகுர்த்தி, எழுதி வந்தவர் EPDP இன் தினமுரசு பத்திரிக்கை ஆசிரியர் அற்புதன் (இவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்) ஆகும். இவர்களாலேயே உண்மையை, திட்டமிட்டு மறைக்க முயற்சி செய்யப்பட்டது.

இவர்களது பொய்களை இன்றும் சிலர் நம்பத்தான் செய்கிரார்கள். புலிகள் ஏன் மாற்று இயக்கங்களை தடை செய்தார்கள். இது ஒரு சிறிய கேள்வி தான். ஆனால் இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத எமது போராட்டத்திற்கு, எதிரான காரணங்கள் நிறையவே இருந்தன. அதற்கு கொஞ்சம் பின்நோக்கி சென்று பார்க்க வேண்டும்.

சிங்கள அடக்கு முறைக்கு எதிராக தமிழர் கிளர்ந்தெழுந்த போது பல ஆயுதக்குழுக்கள் ஈழத்தில் தோன்றின. ஒவ்வொரு தலைவரின் கீழும் பல இளைஞர்கள் உண்மையான தேசப்பற்றில் தான் போராட புறப்பட்டனர். ஆனால் அந்த தலைவர்கள் உண்மையுடனும், விசுவாசத்துடனும் இருந்தார்களா என்பது தான் கேள்விகுறி?

இதில் 1983ம் ஆண்டு புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலுக்கு பின்னர் தான் இந்த அமைப்புகள் கொஞ்சம் வீரியம் பெற்றன. சில ஆயுதக்குழுக்களும் புதிதாக உருவாகி இருந்தன. இந்த ஆயுதப்போராட்டங்கள் ஆரம்பித்த 1980களில் சிங்கள அரசு அமெரிக்கா மற்றும் இஸ்ரவேலுடன் நட்புறவை பேணியது. இது அப்போதைய இரசிய(USSR ) சார்புடைய இந்திய அரசுக்கு கோபத்தை உண்டாக்கியது.



அதனால் சிங்கள அரசை அடிபணிய வைக்க இந்திராகாந்தி எடுத்த முடிவு தான் ஈழப்போராளிகளுக்கு பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்தமையாகும். இந்திய அரசு பயிற்சியையும், ஆயுதங்களையும் வந்து பெறுமாறு எல்லா இயக்கங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எல்லா இயக்கங்களும் உடனேயே போய்விட்டன.

ஆனால் தலைவர் மட்டும் இந்த திட்டத்திற்கு பின் நின்றார். ஏனெனில் அன்றே தலைவர் இந்திய அரசின் கபடத்தை புரிந்து கொண்டிருந்தார். எங்கள் மக்கள் கூறும் பழமொழி ஒன்று "நக்கினார் நாவிழந்தார்" என்பது. இந்திய அரசிடம் கடமைப்பட்டால், எல்லாவற்றுக்கும் அவர்களையே நம்பி இருக்கவேண்டி வரும் என்பதை தலைவர் திடமாக நம்பினார். அதனால் எந்த அழுத்தங்களையும் புலிகலமைப்புக்கு இந்திய அரசு போடக்கூடாது என்னும் வாக்குறுதியுடன், இறுதியாகவே இந்த பயிற்சி திட்டத்தில் புலிகள் இணைந்தனர்.

ஆனால், மற்றைய ஆயுதக்குழுக்கள் எந்த வித தூரநோக்கமோ, இந்திய அரசின் கபட எண்ணமோ தெரியாது, முதலாவதாக ஓடிச்சென்று பந்தியில் இருந்து, வாழை இலைக்கு சண்டை பிடித்துக்கொண்டிருந்தனர். அன்றே இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரிந்து விட்டது புலிகல் தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று.

அதனால் அடுத்த நிலையில் இருந்த TELO அமைப்பை தங்கள் சொல்லுக்கு கட்டுப்படும் அமைப்பாக மாற்றமுடியும் என்று கணக்கு போட்டு, அவர்களுக்கு சிறந்த பயிற்சியும், பெரும் தொகையான ஆயுதங்களையும் வழங்கப்பட்டது. இதே போல TELO சொல்லு கேட்காக விட்டாலும் என்று எண்ணி இதே போல EPRLF அமைப்பிற்கும் எல்லா சலுகைகளையும் கொடுத்தனர்.

சில மாதங்களிலேயே எல்லா விதத்திலையும் பின் தங்கி இருந்த இரு அமைப்பும் பெரும் தொகை ஆயுத கையிருப்புடன் வலம் வந்தன. அதனால் தான் புலிகளமைப்பு சொந்தமாகவே அதி நவீன ஆயுதங்களான M-203,M-16, AK 47,RPG போன்ற ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தாயகம் கொண்டு வந்தனர்.

TELO அமைப்பின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் கைது செய்யப்பட்டபின் (இவர்கள் இந்தியாவிற்கு தப்பிப்போக இருந்த இவர்களை, ஸ்ரீசபாரட்ணம் தான் காட்டிக்கொடுத்திருக்கலாம் என்று கிட்டண்ணை சந்தேகப்பட்டார். இதைஅவர் கூறும் போது கேட்டுள்ளேன்) ஸ்ரீசபாரத்தினம் அதன் தலைவராக வந்தபின், எந்தவித தனி ஆளுமையும் இல்லாது, இந்திய அரசின் சொல்படியே கேட்டு வந்தார்.

இப்படி இருக்கும் போது சிங்கள இராணுவத்திற்கு எதிராக புலிகள், தினமும் தாக்குதல்களை மேற்கொண்டபடி இருந்தனர். ஆனால் மற்றைய இயக்கங்கள் பெயருக்கு ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில் உலா வந்தனர். இதில் TELO மட்டுமே ஓரிரு தாக்குதல்கள் செய்துள்ளார்கள். ஏனைய அமைப்பினர் பெயருக்கு பந்தா காட்டுவதோடு முகாமில் முடங்கி இருந்தனர்.
அத்தோடு களவு, பாலியல் வல்லுறவு, கொலைகலிலும் ஈடுபட்டனர். பல ஆயுதக்குழுக்கள் இருந்தமையால், இதை யார் செய்தார்கள் என்ற குழப்பமும் மக்களுக்கு எழுந்தது. அத்தோடு ஒவ்வொரு இயக்கத்திலும் மாறி,மாறி போராளிகளையும் கொலை செய்துகொண்டிருந்தனர். இதனால் உண்மையாகவே போராடப்புறப்பட்ட போராளிகளும் பிழையான தலைமையின் வழிகாட்டல்களால் திசை மாறிப்போயினர்.

இப்படி ஆண்டுகள் கடந்த போது இந்திய அரசிற்கு, சிங்கள அரசை பணியவைப்பதற்கு புலிகள் தடையாக இருந்தனர். அதனால் TELO மூலமாக புலிகளை பலமிழக்க செய்யும் திட்டம் ஒன்றை போடுகின்றனர். இதற்கு பின்னால் இந்திய அரசே இருந்து செயல்பட்டது. அதன் ஆரம்பமாக தீவுப்பகுதியில் வைத்தும் அராலி,வட்டுகோட்டை பகுதியிலும் சில புலி உறுப்பினர்கள் இவர்களால் கொல்லப்பட்டனர்.

சமகாலத்தில் TELO வின் செயல் பாட்டில் சந்தேகம் கொண்ட புலிகள் TELO அமைப்பில் இருந்த கோணேஸ் என்பவர் மூலமாக தகவல் சேகரித்தனர். (மேஜர்.கோணேஸ். இவர் 1991ம் ஆண்டு ஆணையிறவு முகாம் தகர்ப்பின் போது லெப்.கேணல்.சராண்ணை. மேஜர்.குகதாசண்ணை போன்றோருடன் கவசவாகனத்தில் சென்று தாக்குதல் மேற்கொண்டு வீரச்சவடைன்தவர்) இவரது அண்ணன் புலிகளமைப்பில் இருந்தவர்.

புலிகளின் உளவுத்துறைக்காக வேலை செய்து கொண்டிருந்த கோணேஸ் மூலமாக தொடர்ந்து தகவல் வந்துகொண்டிருந்தது. இது அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தெரியாது. அப்போது இவர்கள் ரகசியமாக புலிகள் மீதான தாக்குதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அதன் முதல் கட்டமாக புலிகளின் இரண்டு உறுப்பினர்களை கடத்தினர். இவர்களை மீட்பதற்காக, பேச்சுவார்த்தைக்கு, நிராயுதபாணியாக சென்ற புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன். லிங்கமண்ணையை அந்த இரு போராளிகளுடனும் சேர்த்து TELOஅமைப்பினர் கொலை செய்தனர்.

அதுவரை பொறுத்து போய்க்கொண்டிருந்த புலிகள், தம்மை அழிக்க ஆயத்தம் செய்கின்றார்கள் என்பதை தமது உளவாளியான மேஜர்.கோணேஸ் மூலமாக தகவலறிந்து, அவர்களுக்கு முன் புலிகள் முந்தினர். அப்போது பழைய பூங்காவில் இருந்த TELO முகாம் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் தலமைக்காரியாலயம் அப்போது கல்வியங்காட்டில் இருந்தது.

முதலாவது தாக்குதலின் பின் உயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி மூலமாக TELO அமைப்பினரை சரணடையும் படி கூறப்பட்டது. பலர் நூறு பேர் சரணடைந்தனர். சிலர் புலிகளுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டனர். அவர்களுக்கு எதிராக புலிகளின் துப்பாக்கியும் நீண்டது. அன்று அவர்களே கொல்லப்பட்டனர். அந்த சண்டையில் இவர்கள் கூறியது போல ஆயிரகணக்கில் கொல்லப்படவில்லை. 90பேர் வரையே கொல்லப்பட்டிருந்தனர்.

இதை நான் நியாயப்படுத்தவில்லை. அந்த இளைஞர்கள் மேல் நான் கரிசனை கொள்கின்றேன். பிழையான தலைமையால், பிழையாக வழிநடத்தப்பட்டிருந்தார்கள். சண்டை ஆரம்பமானவுடன் லெப்.கேணல்.திலீபண்ணை தலைமையில் ஒரு அணியினரால் கல்வியங்காட்டில் வைத்து TELO அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் சுற்றி வளைக்கப்பட்டார். அப்போது இவர்களிடமிருந்து தப்பும் நோக்கில் அவர் புகையிலை தோட்டமொன்றினுள் பதுங்கி இருந்தார்.

அப்போது தேடுதல் மேற்கொண்டிருந்த புலிகளின் போராளியான மேஜர்.டொச்சன் இவரை கண்டு விட்டார். அப்போது ஸ்ரீசபாரத்தினம், டொச்சண்ணையை சுட எத்தனித்த போது, டொச்சண்ணை முந்திவிட்டார். அன்று ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதும் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இந்திய அரசின் சொல்லைக்கேட்டு TELO ஆரம்பித்ததை புலிகள் முடித்து வைத்தனர். இது தான் அன்று நடந்த உண்மை.

அது போலவே, TELO வின் நடவடிக்கை வெற்றி அழிக்காமையால், தங்கள் அடுத்த வளர்ப்பான EPRLF அமைப்பினரை, புலிகள் மீது ஏவி விட்டனர். அதுவரை இவர்களை தடை செய்யும் முடிவை புலிகள் எடுத்திருக்கவில்லை. ஆனால் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டனர். மன்னாரில் வைத்து EPRLF உறுப்பினர்களிடமிருந்து ஒரு வரைபடத்துடன் கூடிய கடிதமொன்று கிடைத்தது. அதில் குறிப்பிட்ட நாளில் புலிகளின் முகாமை தாக்கும் படி விவரிக்கப்பட்டிருந்தது.

இதிலும் உடனே புலிகளே முந்தினர். TELO, EPRLF இரண்டு அமைப்பின் மீதான ஒப்ரேசனை கிட்டண்ணையே செய்திருந்தார். இதில் EPRLFமீது உடனேயே தாக்குதல் மேற்கொள்ளாமல், அவர்களின் முகாம்களை நோக்கி சத்தவெடி வைக்கப்பட்டது. அடுத்தநாள் எல்லோரையும் வந்து சரணடையும் படி ஒலிபெருக்கியில் அறிவித்தனர். அதன் படி எந்த உயிர் சேதமும் இல்லாது, எந்தவித எதிர்ப்பும் இல்லாது வந்து சரணடைந்தனர். இதில் இப்போதைய EPDP தலைவர் டக்ளஸ்தேவானந்தாவும், அன்று சரணடைந்த நிலையில் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவரே.

விசாரணையின் பின் எல்லோரும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இப்படி அனுமதிக்கப்பட்டவர்கள் தான் பின்பு இந்திய இராணுவத்துடன் வந்து கொள்ளை, பாலியல் வல்லுறவுகள், கொலைகள் என பெரும் அழிவுகளை எம் மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தனர்.

இதோடு EROS அமைப்பு அதன் தலைவர் பாலகுமார் அண்ணையுடன் புலிகளமைப்பில் இணைந்தனர். மற்றைய குழுக்கள் தாமாகவே நாட்டை விட்டுச்சென்றனர். அத்தோடு தமிழர் தேசமெங்கும் ஒரு அமைப்பாக விடுதலைப்புலிகள் மட்டுமே இருந்தனர். அதுவரை பல குழுக்களாக பிரிந்திருந்த தமிழ் இளைஞர்கள் தலைவரின் கீழ் அணிதிரண்டனர்.

இந்த சதிகளின் பின்னால் இருந்த இந்திய அரசின் சூழ்ச்சியை அன்றே புலிகள் மோப்பம் பிடித்திருந்தமையால் அன்று எமது போராட்டம் காக்கப்பட்டது. அத்தோடு மற்றைய அமைப்புகளை தடை செய்த போதும், எதிரியுடன் மோதலில் கொல்லப்பட்ட ஏனைய அமைப்பு போராளிகளையும் மாவீரர் பட்டியலில் புலிகள் இணைத்தனர். இந்த சம்பவம் ஏனையோரையும் புலிகள் மதித்து நடந்தமையை காட்டுகின்றது. இது தான் அன்று நடந்தது.
தாயகம், தமிழ்நாட்டு, புலம் பெயர்ந்து வாழும் இளையோர்களே பல உண்மைக்கு புறம்பான கதைகளை புனைந்து புலிகள் மீது பழி போடவென்றே பலர் (2009 க்கு பின்) கிழம்பி இருக்கின்றார்கள். அவர்கள் மேல் மிகவும் அவதானமாக இருக்கவும்.!

உண்மையுடன் துரோணர்.!!!
ஈழத்து துரோணர்.!!

Sunday 14 June 2020

மே 18, கொவிட்-19 என்பவற்றின் பின்னணியில்

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின்னரும் கூட ஓர் உலகப் பெரும் தொற்று நோயின் காலத்திலும் கூட நாடு அதன் அரசியல் அர்த்தத்தில் இரண்டாகப் பிரிந்தேயிருக்கிறது என்பதனைத்தான் மே 18ஆம் திகதி தமிழ் பகுதிகளிலும் தெற்கிலும் இடம்பெற்ற சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன.
தமிழ் பகுதிகளில் இறந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர். தென்னிலங்கையில் யுத்த வெற்றி கொண்டாடப்பட்டது. அந்த வெற்றியை நினைவுகூர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ஒரு விடயத்தை துலக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
அரச படைகளை விசாரிக்க முற்படும் அல்லது தண்டிக்க முற்படும் எந்த ஒரு சர்வதேச நிறுவனத்திலிருந்தும் இலங்கை வெளியேறும் என்பதே அந்தச் செய்தி ஆகும். அதாவது படைத் தரப்பை விசாரிக்க முற்படுகின்ற எந்த ஒரு வெளித்தரப்புக்கும் எதிராக தான் செயற்படுவார் என்பதனை அவர் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார்.


நடைமுறையில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்திருக்கிறது என்பதனை உலகில் பெரும்பாலான நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐநா போன்ற உலக பொது அமைப்புகளும் அவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. சில சுயாதீன செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோரே இது தொடர்பில் தொடர்ந்தும் ஆணித்தரமாகவும் கூர்மையாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மற்றும்படி உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ அல்லது மனித உரிமைகள் ஆணையரின் உத்தியோகபூர்வ அறிக்கையிலோ போர்க்குற்றம் தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. இது முதலாவது.
இரண்டாவது- அவ்வாறு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓர் அனைத்துலக பொறிமுறையை ஐநா பரிந்துரைக்கவில்லை. ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக ஒரு கலப்பு பொறிமுறையை தான் ஜ.நா.முதலில் ஏற்றுக் கொண்டது. அதைக்கூட பின்னர் கைவிட்டது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையே போதும் என்ற தனது முடிவை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தான் மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைக் கவிழ்த்தார்.
மூன்றாவது- ஐநாவும் உட்பட பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் தமிழ்மக்களுக்கு நிலைமாறு கால நீதியைத் தான் வழங்கத் தயாராக காணப்படுகின்றன. ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் கேட்கும் பரிகார நீதியை அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை தருவதற்கு அல்லது அதற்கு உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பெரும்பாலான உலக நாடுகள் தயாராக இடல்லை.
ஏனைய உலக பொது நிறுவனங்களும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் நிலைமாறுகால நீதிக்குரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டார். ஆனால் அதையும் ராஜபக்சக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் நிலைமாறுகால நீதியை அமுல்படுத்தும் ஐநா தீர்மானத்தை நிராகரித்து விட்டார்கள்.
நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் சாராம்சத்தில் பொறுப்புக் கூறல் தான். ஆனால் ராஜபக்சக்கள் என்றைக்குமே தாங்கள் பொறுப்புக்கூறத் தயார் என்று ஏற்றுக்கொண்டதில்லை. இது விடயத்தில் அவர்கள் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் கூர்மையாகவும் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிக் காட்டி வருகிறார்கள். அந்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியே கடந்த 18ம் திகதி வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் ஆகும்.
அதாவது உலக சமூகம் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சேர்க்கும் பரிகார நீதியை தரத் தயாரில்லை. நிலைமாறுகால நீதியைத்தான் அவர்கள் தரத் தயாராக இருக்கிறார்கள். அதைக்கூட ராஜபக்சக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஜ.நாவை எதிர்க்கும் சமிக்ஞையை கடந்த 18 ஆம் திகதி கோட்டாபய வெளிப்படையாக காட்டினார்.
அவர் இவ்வாறு தெரிவித்தமை தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனங்கள் எழுந்தன. அவர் அவ்வாறு உலக சமூகத்தை பகைக்கக் கூடாது என்று உள்நாட்டிலேயே ஓய்வுபெற்ற ராஜதந்திரிகள் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். பெரும்பாலான மேற்கத்திய ராஜதந்திர வட்டாரங்களில் அவருடைய கருத்துக்கள் சினேகபூர்வமாக பார்க்கப்படவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அவர் அவ்வாறு உரையாற்றி சரியாக 5 நாட்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
இந்த உரையாடலின் போது இருவரும் ஒருவர் மற்றவரை புகழ்ந்திருக்கிறார்கள். ‘தெளிவான சிந்தனையுடன் விரைவாக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தான் புரிந்து வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல அந்த உரையாடலில் மேலும் ஒரு விடயம் உரையாடப்பட்டிருக்கிறது.
அது என்னவெனில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றியதாகும் இதுதொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….
‘தற்போது தனது முன்னுரிமை பொருளாதார புத்தெழுச்சியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சில முன்னணி திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக நிர்மாணிப்பது அவற்றில் ஒன்றாகும்.’
இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். மேற்படி முனையத்தை இந்தியாவின் உதவியோடு நிர்மாணிப்பதற்கு முன்னர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராக காணப்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆட்சியை குழப்பிய மைத்திரிபால சிறிசேன அதற்கு தடையாக காணப்பட்டார்.
அவருக்கு பின்னணியில் ராஜபக்சக்கள் இருந்ததாக நம்ப முடியும். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் இந்தியாவுக்குத் தர மறுத்த ஒரு வாய்ப்பை இப்பொழுது கொவிட்-19 சூழலுக்குள் வழங்கத் தயாராக இருப்பதாக சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மே 18ஆம் திகதி ஜ.நாவைப் புறக்கணிக்கும் தொனியில் அமைந்த ஒரு உரையை ஜனாதிபதி ஆற்றிய பின்னரே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
ஒரு நோய்த்தொற்றுக் காலத்திலும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை ராஜபக்சவின் அரசு முன்னெடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில் ஐநாவைப் புறக்கணிக்கும் கருத்துக்களை தெரிவித்து சரியாக ஐந்தாவது நாளில் ராஜபக்சக்கள் இந்தியாவுக்கு சாதகமான ஒரு சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது?
ஒருபுறம் அவர்கள் மேற்குநாடுகளுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு முரண்படத் தயாராக காணப்படுகிறார்கள் அதேசமயம் சீனாவைத் இதயத்தில் வைத்துக்கொண்டு இந்தியாவைத் தூக்கி மடியில் வைத்திருக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்கிறார்கள். சீனாவின் பின் பலமே ராஜபக்ஷக்களுக்கு ஐநாவை எதிர்க்கும் துணிச்சலைக் கொடுக்கிறது. மேற்கு நாடுகளோடு முரண்படும் துணிச்சலை கொடுக்கிறது.
இவ்வாறு சீனாவை இதயத்தில் வைத்துக்கொண்டு இந்தியாவை மடியில் வைத்திருப்பதன் மூலம் மேற்கு நாடுகளின் எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவுக்கு வரையறைக்கு உட்படுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் சிந்திக்கின்றது. இப்போது உள்ள பூகோள ஒழுங்கின்படி இந்தியாவும் அமெரிக்காவும் பூகோளப் பங்காளிகள்.
இதில் அருகில் இருக்கும் பங்காளியை அரவணைக்கும் அதேசமயம் பிராந்தியத்துக்கு வெளியே இருக்கும் பங்காளியை எதிர்க்கும் ஒரு உத்தியை ராஜபக்சக்கள் கெட்டித்தனமாக முன்னெடுக்கிறார்கள். இந்தியாவை அரவணைத்து வைத்திருக்கும் வரை மேற்கு நாடுகள் தம் மீது ஒரு கட்டத்துக்கு மேல் அழுத்தத்தை பிரயோகிக்க போவதில்லை என்று அவர்கள் சிந்திக்கிறார்கள் உலகப் பெருந் தொற்று நோய்க்கு எதிரான ஓர் அரசியல் சூழலிலும் அவர்கள் தமது வெளியுறவுக் கொள்கையை ஸ்திரமாக முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் தமிழ்த் தரப்போ கடந்த 11 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது ?
ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதி பரிகார நீதியை கேட்கிறது. இன்னொரு பகுதி நிலைமாறுகால நீதியைக் கேட்கிறது. அதேசமயம் தாயகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்கிறார்கள். தாயகத்திலுள்ள பரிகார நீதிகோரும் கட்சிகள் மக்கள் ஆணையை இன்னமும் பெற்றிருக்கவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை உற்றுக் கவனித்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும் 2009 க்குப்பின் தமிழகத்தில் காணப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கொதிப்பு மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது.
இப்படியே போனால் தமிழகத்தை வெற்றிகரமாக கையாள்வதும் கடினமாகி விடும். தமிழகத்தை வெற்றிகரமாகக் கையாளவில்லை என்றால் இந்திய மத்திய அரசை கையாள முடியாது. எனவே கடந்த பதினோரு ஆண்டுகளாக நீதியைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் போராட்டம் முன்னேறிய தூரத்தை விடவும் அதற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் அதிக தூரம் முன்னேறியிருப்பதாகவே தெரிகிறது.
ராஜபக்சக்கள் நிலைமாறுகால நீதியை நிராகரித்து விட்டார்கள். இந்த லட்சணத்தில் நிலைமாறு கால நீதியிலிருந்து பரிகார நீதியை நோக்கி செல்வதற்கு ஒரு வேலைத் திட்டமும் வழி வரைபடமும் தாயகத்திலுள்ள தமிழ்த் தலைவர்களில் யாரிடமுண்டு? தாயகத்தில் அப்படிப்பட்ட தரிசனம் இல்லையென்றால் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத்தையும் இணைத்து நீதியைப் பெறுவது கடினமாக இருக்கும்.
ராஜபக்ச சகோதரர்களின் இரண்டாவது ஆட்சியானது புவிசார் அரசியலைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புக்கள் திறக்கப்படுமாக இருந்தால் அதைக் கையாள்வதற்கு தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான தரிசனங்களை கொண்ட அதேசமயம் மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகள் இருக்க வேண்டும்.

Saturday 6 June 2020

அநீதிகளை தட்டிக்கேட்ட தமிழர்களின் முதல் குரல் -தியாகி பொன்.சிவகுமாரன்-

ஈழப்போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமைக்காய் பலர் குரல் கொடுக்க முனைந்த போதும் சிங்கள ஆட்சியாளர்களால் அவர்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தால் ஒதுங்கிய காலம்.



தமிழர்கள் தரப்படுத்தல் முதல் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்பட்டு தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜையாக இனவாதிகளால் நடத்தப்பட்ட முறைகண்டு கொதித்தெழுந்தவர்களில் முதன்மையானவன் பொன்.சிவகுமாரன். இதனால் தான் இன்றும் சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடியாக தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கின்றான். தமிழ் இளைஞர்களுக்கு முன்னோடியாக தமிழ் இளைஞர்களை தமது உரிமை மீது பற்றுறுதி கொள்ள வைத்த பெருமைக்குரியவன்.

1958 இல் ஓகஸ்ட் 26 ஆம் திகதி அவதரித்த பொன். சிவகுhமரன் யாழ். இந்துக்கல்லூரி மாணவன. பள்ளியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் தான் தமிழ் மாணவர்களின் சந்தர்ப்பங்களை தட்டிப்பறிக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் சூழ்ச்சி அரங்கேறியது.

அதாவது கல்வி தரப்படுத்தல் திட்டம் கல்விக்குள் திணிக்கப்பட்டது. இது சிவகுhமரனின் சிந்தனைகளை சமூகம் நோக்கித் திருப்பியது.

ஒரு மாணவனாய் இருந்து கொண்டு தமிழ் மாணவர் சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டமை கண்டு வெகுண்டெழுந்தான். அக்காலப்பகுதியில் கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் தன்னையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராடி பல தடவைகள் சிறைசென்று மீண்டான்.

தமிழர்களின் வரலாற்றில் அரசுக்கு எதிரான முதல் தாக்குதலை மேற்கொண்டவனும் பொன். சிவகுமாரனே. கல்வித் தரப்படுத்தலை எதிர்த்து சிறீமா ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைச்சரவையில் இருந்த யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் குண்டு பொருத்திய நிலையில் அதிர்ஸ்ட வசமாக துரையாப்பா தப்பித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரனின் உரிமைத் தாகத்தை தமிழ் இனத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டும் என்ற வீரத்தை மனத்தில் விதைத்தது யாழ்ப்பாணம் தமிழரராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்.

படுகொலைகளை நடத்தியவர்களை பழிவாங்குவேன் என பொது வெளியில் பகிரங்கமாக பேசியதால் சிவகுமாரன் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தத்தொடங்கினார்.
கோப்பாய் பகுதியில் பதில் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு திட்ட மிட்ட சிவகுமாரன் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டான்.

பொலிஸாரின் கைகளில் சிக்கி தமது திட்டங்களை வெளிப்படுத்தி விடக்கூhது, தன்னுடன் இணைந்தவர்களை பாதுகாப்பதே தனக்குப் பின் தனது கொள்கைகளை கொண்டு நகர்த்த முடியும் என்ற எண்ணத்தில் சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். தமிழர்களின் வரலாற்றில் இனத்துக்காக சயனைட் அருந்திய தற்கொடையாளராக சிவகுமாரன் பதிந்துபோனான்.

ஜூன் 05, 1974 இல் தன்னுடைய 24 ஆவது வயதில் தன் இனத்துக்காக தன்னை ஆகுதியாக்கிய சிவகுமாரன் மறைந்து 46 வருடங்கள் கடந்தோடிவிட்டன. சிவகுமாரனின் சிந்தனைகள் அவனின் மறைவுக்குப் பின்னர் எழுச்சியுற்று நான்கு தசாப்தங்களின் பின்னர் மௌனித்து நிற்கின்றன.

ஆனாலும் காலம் காலமாக ஆட்சிப் பீடமேறிய அரசுகள் தாம் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள தவறியே வருகின்றன. அன்று சிவகுமாரன் எந்த இலட்சியத்துக்காக தன்னை மாய்த்தானோ அவை இன்றும் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு மீது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இன்றும் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள் ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டுவரும் அடிப்படை உரிமை முதல் அரசியல் உரிமை வரை மீட்டெடுப்பதற்கான திறவுகோளாக, வித்ததாக ஒவ்வொரு தமிழர்களின் மனங்களிலும் தனது சிந்தனையை விதைத்து துயில் கொள்கிறான் சிவகுமாரன்........