Tuesday 25 August 2020

#கன்னியா_மலையில்_காணப்படும் #இராவணனின்_தாயின்_சமாதி அது தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்

 இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது.


திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.

இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள். இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக  கூறப்பட்டு வருகிறது.

 கன்னியா வெந்நீர் கிணறுகளையும், அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன். அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்தது. மலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளது, அதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி, இஸ்லாமியர்கள் அதை ஓர் இஸ்லாமிய பெரியவரின் சமாதி என்று சொல்கின்றனர், நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறி, தனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார். மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த  சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன். அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன். மலையில் இருந்து இறங்கி வந்ததும் இது இராவணனின் தாயின் சமாதி தானா? என மீண்டும் அவரிடம் கேட்டேன். ஆம், எனது மூதாதையர்கள் அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள் என்றார் காவலாளி. வெந்நீர் ஊற்றுக்களில் நீராடியதும், மிகப்பெரிய சமாதியைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது.

அதன்பின் 2014 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்” எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போது, இராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. அது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன். கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லை. இராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து “யார் இந்த இராவணன்” கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன்.  2018 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்?” புத்தகமாக வெளிவந்தது.

இது இப்படி இருக்க, கடந்த வருடம் கன்னியா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டது. அப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில், பிள்ளையார் கோயில், இராவணனின் தொடர்பு, இராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும், ஐதீகங்களும் மட்டுமே இருந்தன. இவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.

இந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும்  என்பதே. 
 
கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன். கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை அவ்வளவு  பழைய ஆதாரங்கள் அல்ல. இருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை. 

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன். விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன். இறுதியில் இங்கிலாந்து, கலிபோர்னியா(அமெரிக்கா), கனடா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தன. இங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள். மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தன. இவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும். இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.

பிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும். இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கி, நீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும். இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளன. கன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளது. இவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டது. அடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளது. இது 100 மீற்றர் உயரமானது.  கன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும். இக்காடு கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும், மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும், தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும். 

கன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

தீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும், தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளது. இத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள். தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.

கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும். தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு  நீளமாக ஏன் இருக்க வேண்டும்? 

அதற்கும் ஓர் காரணம் உள்ளது.

கன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம்  வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும். இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும். எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 அல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும், அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.

இராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்?
 
அதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளது. இராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும். ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. தாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார். அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான். இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம். எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும்  எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும். இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும், சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.

இச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர். இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லை. மாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
 
கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.

ஜேம்ஸ் கோர்டினரின் குறிப்பு

கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 “On the Summit of the above mentioned Hill are shewn two monumental piles of earth enclosed with loose stones, one thirty-six feet in length, and ten in breath, the other ten feet long, and three broad. They are said to be the dimensions of a giant and his son, who were buried there at a very remote period in the fabulous History of Ceylon.”

இக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறது. இவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும் “இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.

இவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும், இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளன. அண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள்  60 அடி சமாதி எனப் பெயரிட்டு,  இது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.

சைமன் காசிச்செட்டியின் குறிப்பு

மேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார். இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.
    
சார்லஸ் ப்ரிதாமின் குறிப்பு

இதே குறிப்பை சார்லஸ் ப்ரிதாம் எனும் ஆராய்ச்சியாளர் 1849 ஆம் ஆண்டு தான் எழுதிய “An Historical Political and Statistical of Ceylon” எனும் நூலில் “The Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.”  எனக் குறிப்பிட்டுள்ளார்.37

மூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு

கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார். மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும்  “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர். இது  இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும். இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும். இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பின்  பின்பகுதி கீழ்வருமாறு.

“According to them King Ravanna, during his long war with Vishnu, was informed by that deity that Kanya virgin mother of the King of Ceylon, was dead. Ravanna naturally had to set about the task of performing the necessary obituary services for the beloved dead, and Vishnu to help him … and incidentally to accomplish his main design of delaying him … Caused hot springs to burst out of the ground for the Giant’s use. and there they remain.
 
மேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. இப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும். 

இதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளது. இது “வெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து  திடீரெனத் தோன்றின. அங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறது. இதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார். 

எனவே “Tombs of a Giant and his Son”  என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.  

1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி

கன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறது. அது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும். இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதி) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அறிஞர்களும் இச்சமாதிகள் இராட்ச சர்களின் சமாதிகள் எனும் பொருள்படக் கூறியுள்ளனரேயன்றி  இஸ்லாமியப் பெரியாருடையது எனக் கூறவில்லை. இவ் அறிஞர்கள் கன்னியா மலைக்கு சென்றபோது இப்பகுதியில் வசித்த மக்கள் இராவ ணன் மற்றும் அவனின் தாய் ஆகியோருடன் கன்னியாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறியுள்ளனர். அவர்களின் சமாதியே மலை உச்சி யில் இருப்பவை எனவும் கூறியுள்ளனர்.அறிஞர்களும் இக்கருத்தையே தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன்பும் இது இராட்சதர்களின் சமாதியாகவே காணப்பட்டுள்ளது.
 
இறுதியில் கன்னியா மலையில் உள்ள சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி என இதுவரை கூறப்பட்டு வந்த கூற்றுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதும், இச்சமாதி இராவணனனினதும், அவனின் தாயாரினதும் சமாதியே என்பதுக்கு 300 வருடங்களுக்கு முற்பட்ட ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது. 
  
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர் 
இலங்கை 
 

Monday 10 August 2020

தொடரும் கைதுகளும் ஊடக சுதந்திர மறுப்பும்

 இலங்கையில்  2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பல ஆயிரம் போராளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு அவரவர் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர். 


விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டோம் இலங்கையில் எந்த பயங்கரவாதிகளும் இல்லை இலங்கையில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் சுதந்திரமாக நிம்மதியாக வாழலாம் என்று சர்வதேச சமூகத்திற்கு கொக்கரித்த ராஜபக்ச அரசு மீண்டும் 2020 இல் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறி உள்ளது. 2009 யுத்தம் முடிவுக்குப் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியாக பொதுச்சேவைகள், மற்றும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மை. 


இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் இலங்கையில் மீண்டும் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோரோனோ என்கின்ற கொடிய வியாதி இலங்கை மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து நமது வாழ்க்கையை நடத்திவந்த மக்கள் அன்றாட உணவுத் தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதன் காரணமாக சர்வதேச சமூகத்தில் வாழ்கின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி ஓரளவுக்கு பசி பட்டினியில் இருந்து மீட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு நேரடியாக சென்று உதவிகளை வழங்கிய முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என அனைவரையும் பின்தொடர்ந்த இலங்கை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் தங்கள் கை வரிசைய காட்ட ஆரம்பித்துள்ளனர். 



கைது செய்யப்படட மாஸ்டர்- புலிகளின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்  அல்பிரட் சிவலிங்கம் (வயது: 44) 4அம்  மாடிக்கு அழைத்து செல்லபட்டார்.

இது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் விபரங்களையும் திரட்டி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகளையும் இலக்கு வைத்து மிகவும் நெருக்கடியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது ஈழத்தில் நடக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்தி ஊடகங்களில் பதிவு செய்வதற்கு தடைகளை விதித்து வருகின்றனர். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தில் நடக்கும் கைதுகள் மற்றும் கொலைகள் தொடர்பான செய்திகள் சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டிலேயே வாழுகின்ற மக்களுக்கும் சென்றடையாதவாறு மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வு துறையினர். எது எப்படி இருப்பினும் சில கைது நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.


கடந்த 29 ஆம் தேதி அன்று அதிகாலை 3.30 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் சமூக சேவையாளர்கள் இருவர் வெள்ளை வாகனத்தில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அல்பிரட் சிவலிங்கம் (வயது: 44) என்பவரும், அருள்நேசன் (வயது:42) என்பவரும் கிளிநொச்சி மாவட்டம் விநாயகர் புரத்தைசேர்ந்த கலா (வயது: 44) என்ற குடும்ப பெண்ணும், யாழ் மாவட்டம் மானிப்பாயை சேர்ந்த கந்தசாமி, ரமேஷ் (வயது:38) என்பவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றமை, விடுதலைப்புலிகளை மீள உருவாக்கம் செய்தல் போன்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பிலுள்ள நான்காம் மாடி குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எந்தவித நீதிமன்ற ஆணையும் இன்றி இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் பல இளைஞர்களை கைது செய்து காலவரையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்வது இலங்கையில் வாழ்கின்ற இளைஞர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



01.07.2020 தொடக்கம் 10.08.2020 வரையிலான காலப்பகுதிக்குள் 30 க்கு மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளதும், புகார்கள் தொடர்பாக விசாரணை செய்வதை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தடுத்து நிறுத்துவதாகவும் மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. உலகத்தில் நடக்கும் கேளிக்கை செய்திகளை முதன்மையாக வெளியிடும் இணைய ஊடகங்கள் இலங்கை அரசோடு ஒத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருவது உலகத்தில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Lankasri, IBC Tamil,  Tamil win, JVP news போன்ற ஊடகங்கள் இலங்கையில் தமது அலுவலகங்களை பரந்த அளவில் திறந்துவைத்து தமிழர்களின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கோடு இயங்கி வருவதோடு இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை செய்திகளாக பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருகிறது இதனால் மக்களிடையே ஊடகங்களின் நம்பிக்கை அற்றுப் போகின்றமை மிகுந்த கவலை அளிக்கிறது. ஒரு மாத காலத்துக்குள் 30 பேர் கைது செய்யப்படும் எந்தவிதமான செய்திகளும் இணைய ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சி செய்திகளிலோ வெளிவராதவாறு இலங்கை அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கியுள்ளது. 

இது ஒரு புறமிருக்க தமிழர்களிடம் வாக்கு பெற்று பாராளுமன்றம் சென்று தமது சுகபோக வாழ்க்கைகளை அனுபவித்து வரும் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு நடக்கும் இன்னல்களை கண்டு கொள்ளாதது தமிழ் மக்களிடையே அரசியல் தலைவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போய் உள்ளமை 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக பறைசாற்றி நிற்கின்றது. இது தவிர தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மீதும் இலங்கை அரசு கை வைக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை புலனாய்வுத்துறையினர் தமிழக புலனாய்வுத்துறையினர் உடன் இணைந்து செயல்படுவதும், தமிழக புலனாய்வுத்துறையினர் ஈழ அகதிகள் மீது நடந்துகொள்ளும் புலனாய்வு நடவடிக்கைகளினால் தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகள் மிகுந்த அச்சத்துடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலுள்ள சிறப்பு முகாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இலங்கை புலனாய்வுத்துறையினர் அவர்களைக் கைது செய்து விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய வந்ததாக கூறி சித்திரவதை செய்வதும் காணாமல் ஆக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் தொடர் கதையாகவே உள்ளது. 

தமிழர்களின் உயிர்களையும், வாழ்க்கையையும் கருத்தில் கொள்ளாத தமிழக அரசு எடுக்கும் விபரீதமான முடிவுகளால் ஈழத்தமிழர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதை எதிர்பார்த்து ஈழ அகதிகள் வேதனையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இது மட்டுமல்ல சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மீது ஒரு தெளிவான இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் ஈழத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலத்திலும் சரி பரந்து வாழ்கின்ற ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஒரு நிம்மதியான வாழ்வினை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பததில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.

2009ஆம் ஆண்டு லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றழித்த ராஜபக்சே அரசுகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறி உள்ளதால் தமிழர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பது யதார்த்தமான உண்மை.. சர்வதேச மனித உரிமை விதிகளை தூக்கி எறிந்துவிட்டு எந்த வித அச்சமும் இன்றி நினைத்ததை நடத்தி முடிக்கும் இலங்கை ஏகாதிபத்திய அரசுகள் மீது சர்வதேச சமூகம் ஒரு நல்ல தீர்வினை எடுக்காத பட்சத்தில் மீண்டும் இலங்கையில் இரத்த ஆறும், இன அழிப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக பல அச்சங்களை வெளியிட்ட போதிலும் இலங்கை அரசு அவற்றைக் கண்டுகொள்ளாது தொடர்ந்து இராணுவ பிறர் கண்ணங்களையும், வீதிச் சோதனைகளையும் முடுக்கிவிட்டு தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனால் அன்றாட வாழ்க்கையை தொடரும் மக்கள் நாள்தோறும் அச்சத்துடன் தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கை அரசு மீது சர்வதேச சமூகமும், நமது அண்டை நாடான இந்திய அரசும் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள போகின்றது என்பதே உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது.

சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்கள்மீது கரிசனை கொள்ளுமா? தமிழர்களின் அவல நிலை மாறுமா? ஒரு நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை தொடர்வதற்கான நல்ல தீர்வினை சர்வதேச சமூகம் பெற்றுத் தருமா என்பதே ஈழத்தமிழர்களின் அவா……!


எழுத்து:
வன்னி வாணன்
10.08.2020

Wednesday 5 August 2020

ரஷ்யா அனுப்பிய கெமிக்கல்.. 12ம் எண் அறையில் நடந்த சம்பவம்.. லெபனான் வெடிப்பிற்கு முன் நடந்தது என்ன?

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த கிடங்கு வெடிப்பிற்கு பின் என்ன காரணம், எதனால் அங்கு அவ்வளவு கெமிக்கல் குவிக்கப்பட்டு இருந்தது என்றுவிவரங்கள் வெளியாகி உள்ளது. பெய்ரூட் நகரில் இருக்கும் கிடங்கு ஒன்றில்தான் இந்த வெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் இந்த கிடங்கு, துறைமுகத்தில் இருந்து வரும் பொருட்களை வைப்பதற்காக பயன்படும் பகுதியாகும். இங்கு பெரிய அளவில் கெமிக்கல்களை கட்டுப்படுத்தும் வசதி எல்லாம் இல்லை. இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு இந்த கிடங்கிற்கு அம்மோனியம் நைட்ரேட் பார்சல் வந்துள்ளது. மொத்தம் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் பார்சல் இந்த பகுதிக்கு வந்துள்ளது.



எப்படி வந்தது?

 இந்த பார்சல் ரஷ்யாவில் இருந்து வந்தது.லெபனான் கடல் பகுதிக்கு அருகே 2013ல் இந்த பார்சல் வந்த போது, கடலில் ஏற்பட்ட காற்று காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், லெபனான் அரசு அனுமதியோடு இந்த ரஷ்யாவின் கப்பலை இங்கே நிறுத்தி உள்ளனர். இது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்கிறார்கள். அதன்பின் இந்த கப்பலை மீண்டும் துறைமுகத்தில் இருந்து அனுப்ப லெபனான் துறைமுக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அங்கேயே வைத்தனர்

 கிடங்கில் வைத்து பின் பணம் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அம்மோனியம் நைட்ரேட் விலை குறைவானது என்பதால் அதற்கு உரியவரும் (பெயர் வெளியிடப்படவில்லை) அதை உரிமை கோராமல் விட்டுவிட்டார். இதையடுத்து அதில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் வைக்கப்பட்டது. அங்கிருக்கும் அறை 12 மிகவும் பெரியது என்பதால், அங்கு மொத்தமாக 2750 அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டது.

ஆனால் அதன்பின் 

ஆனால் அதன்பின் இந்த அம்மோனியம் நைட்ரேட்டை அங்கு யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் இதை என்ன செய்வது என்று தெரியாமல் கஸ்டம்ஸ் அதிகாரிகள் குழம்பி போய் இருக்கிறார்கள். மீண்டும் அதை ஓனருக்கே விற்க முயன்றால், அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்நாட்டு நீதிபதிகள் குழுவிற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை என்ன செய்வது என்று கேட்டு இருக்கிறார்கள்.



கடிதம் எத்தனை

 ஒருமுறை அல்ல மொத்தம் 6 முறை இது போல கடிதம் அனுப்பி உள்ளனர். 2014, 2015, 2016, 2016 (மீண்டும்), 2017, 2018 என்று ஆறு முறை கடிதம் அனுப்பி உள்ளனர். ஒவ்வொருமுறை இதை மக்களிடம் விற்றுவிடுங்கள், ராணுவத்திற்கு விற்றுவிடுங்கள், குண்டுகள் தயாரிக்கும் அதிகாரபூர்வ நிறுவனங்களுக்கு விற்று விடுங்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒருமுறை கூட அம்மோனியம் நைட்ரேட்டை வாங்க யாருமே முன் வரவில்லை.

சிக்கல் கடைசியாக எழுதிய கடிதத்தில், அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை யாரும் வாங்கவில்லை. இதை பாதுகாப்பாக வைக்கும் வசதி எங்களிடம் இல்லை. இதனால் இதற்கு தக்க வழியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நீதிபதிகள் குழுவில் இருந்து பதில் வரவே இல்லை. இதன்பின் அந்த அம்மோனியம் நைட்ரேட் விஷயத்தை அப்படியே கஸ்டம்ஸ் குழுவும் மறந்துவிட்டது.

விதி விளையாடியது 

இங்குதான் விதி விளையாடி இருக்கிறது. அம்மோனியம் நைட்ரேட் என்பது மொத்தமாக குவிக்கப்பட்டு இருந்தால் வெப்பத்தை வெளியிடும். அதேபோல் வருடம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மொத்தமாக இந்த அம்மோனியம் நைட்ரேட் நெருப்பை உருவாக்கும். தீயே இல்லாமல் நெருப்பை உருவாக்கும் சக்தி கொண்டது இந்த அம்மோனியம் நைட்ரேட். அந்த கிடங்கில் இப்படித்தான் மொத்தமாக அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

12ம் எண் அறை

 சரியாக 12ம் எண் அறையில் அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் 6 வருடம் போனதாலும், மொத்தமாக ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாலும் அழுத்தம் அதிகரித்து வெப்பம் வெளியாகி உள்ளது. இந்த வெப்பமே வெடிப்பிற்கு காரணமாக மாறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த 12ம் எண் அறையில் இருந்த கெமிக்கல் வெடித்துதான் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தற்போது வல்லுநர்கள் குழு தெரிவிக்கிறது.

Tuesday 4 August 2020

ஹாலிவுட் விரும்பாத உண்மைக் கதை – கொரோனாவிடம் தொற்றுப் போன அமெரிக்கா !:

ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா தோற்கடிக்காத ஒரு நபரோ, நாடோ, உயிரோ இந்த பூமியில் மட்டுமல்ல, நமது பால்வெளி மண்டலத்திலே கூட இல்லை. அமெரிக்க நாயகர்கள் செய்யாத சாகசம் இல்லை. இருப்பினும் ஒரு வைரஸ் நிஜ அமெரிக்காவை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த நிலைகுலைவிற்கு காரணம் ஏழை நாடுகளில் கூட இருக்கும் பொது சுகாதாரக் கட்டமைப்பு அங்கே இல்லை என்பதுதான்.
இலாபத்தை இலட்சியமாக வரித்திருக்கும் ஒரு சுகாதார அமைப்பின் தோல்வியை அமெரிக்க கொரோனா வைரஸ் நெருக்கடி நிரூபித்திருக்கிறது.



கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனா, அமெரிக்காவை விட நான்கு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் கொரான தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவோடு ஒப்பிடும் போது பத்தில் ஒரு பங்கையே கொண்டிருக்கிறது.வல்லரசு அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ புள்ளிவிவரங்கள் உருவாக்கியிருக்கும் வலிமையை கோவிட் 19 விவரங்கள் கலைத்துப் போட்டுவிட்டன. உலகளாவிய மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தை கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகளாவிய கோவிட் 19 தொற்றுகளில் 32 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக இருக்கிறார். போலவே உலக கொரோனா மரணங்களின் 32 சதவீதத்தை அமெரிக்காவே வைத்திருக்கிறது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவு அமெரிக்கா முழுவதும் தாண்டவமாடுகிறது. குறிப்பாக நியூயார்க் நகரத்தை பாருங்கள்; இறந்தவர்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான குளிர்சாதன சுமையுந்துகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. மருத்துவ சிகிச்சை கிடைக்க வழியில்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் தமது இல்லங்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சவக்கிடங்கின் தேவை அதிகரித்துக் கொண்டே போவதால் சமூகக் கல்லறைகளில் எண்ணிறந்த உடல்கள் சேமிக்கப்படுகின்றன. பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், டயாலிசிஸ் எந்திரங்கள் போன்றவைகளின் பற்றாக்குறை நெருக்கடியோடு மருத்துவத் துறை பணியாளர்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

மருத்துவமனைகளில் இருக்கும் ஊழியர் பற்றாக்குறை, அது ஏற்படும் மன அழுத்தம், மருத்துவமனைகளின் பொது அரங்குகள் மற்றும் உணவகங்களை கூட நோயாளிகளுக்கான படுக்கைகளை போட்டு பயன்படுத்த வேண்டிய நிலை, மருத்துவமனை நிர்வாகங்கள் வென்டிலேட்டர்களை வாங்குவதற்கு காட்டும் தயக்கம் போன்றவற்றையும் அந்த மருத்துவர் பட்டியிலிடுகிறார்.நியூயார்க் நகரில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அவரும் பிற சுகாதரத்துறை நிபுணர்களும் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிடுகிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டிய முகமூடி மற்றும் கவச ஆடைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சில நேரம் இவை இல்லாமலும் பணியாற்றுகிறார்கள். சில இடங்களில் தொற்றிலிருந்து பாதகாத்துக் கொள்ள பெரிய குப்பை பைகளை அணிந்து வேலை செய்கின்றனர்.



ட்ரம்ப் முட்டாள் போல பேசுகிறார். ஹாலிவுட் ஹீரோக்களின் அமெரிக்க பெருமிதத்தை வெட்டித்தனமாக பீற்றுகிறார். ஆரம்பத்தில் கொரோனா வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என்றார். பின்னர் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சீன வைரஸ் என்று சீனாவின் மீது பழி போட்டார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தினார். இவையெல்லாம் டிரம்ப் எனும் ஒரு தனிநபரின் பிரச்சினை போன்று புரிந்து கொள்வது தவறு. அமெரிக்காவின் மருத்துவத் தோல்வி என்பது டிரம்பையும் தாண்டியது.பரவலாகி அழிவை ஏற்படுத்தும் தொற்று நோய் மற்றும் சரிந்து வரும் பொருளாதார நெருக்கடிகள்…. என இரட்டை நெருக்கடிகள் அமெரிக்க மக்களை சூழ்ந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், நிதி உதவியையை வழங்கவும் துரிதமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக டிரம்ப் நிர்வாகத்தை குறை கூறுவது எளிது. உண்மையில் நெருக்கடிகளின் வேர்கள் டிரம்பின் காலத்திற்கு முன்பே ஆழப் புதைந்து விட்டன. எந்த ஒரு அதிபராக இருந்தாலும் அவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா தொற்று நோய் பேரிடர் காலத்தில் மோசமாகித்தான் போயிருக்கும்.
தற்போதைய பேரழிவு பெருமளவில் இருப்பது ஏன்? ஏனெனில் அமெரிக்க சுகாதரத் துறை இந்த பேரழிவை தடுக்கும் வலிமையற்றது. அது துண்டு துண்டாக உடைந்து போயிருக்கிறது – மையப்படுத்தப்படவில்லை, அது பாரபட்சமானது – சமத்துவமானது அல்ல, அது பெருநிறுவனங்களில் இலாபத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது – மக்களின் நலனுக்காக அல்ல. கொரோனா தொற்று நோய்க்கு முன்னரே மற்ற மேற்கத்திய செல்வந்த நாடுகளை ஒப்பிடும் போது தடுத்திருக்க கூடிய இறப்புகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகம். அதாவது மருத்துவ சிகிச்சை இருந்தால் அந்த இறப்புகளை தவிர்த்திருக்கலாம். மேலும் 2014-ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கர்களின் சராசரி ஆயுட் காலம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
அமெரிக்க சுகாதரத் துறையின் ஒவ்வொரு அங்கத்தை எடுத்துக் கொண்டாலும் அது மற்ற வளர்ந்த நாடுகளை விட இரண்டு மடங்கு செலவு பிடிக்கும் கட்டுமானத்தையே கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் ஒரு சிகிச்சை ஆயிரம் டாலர் என்றால் அமெரிக்காவில் அது 2000 டாலர். அந்த அளவுக்கு அமெரிக்கர்களின் ஆரோக்கியம் பற்றிய விதி முற்றிலும் இலாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் சந்தையின் விதிக்கு உட்பட்டது. அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் இருந்தாலும் அங்கே ஆரோக்கியம் என்பது சந்தையின் பிடியில் மட்டுமே இருக்கிறது. சந்தையின் பிடிமானம் என்பது உங்களது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. சான்றாக மகப்பேறியல், குழந்தை மருத்துவம் போன்ற அத்தியாவசிய துறைகளில் வருமானம் அதிகம் இல்லை என்பதால் பல தனியார் மருத்துவமனைகள் அத்துறைகளை மூடி விட்டு இலாபம் அதிகம்   வரும் இதயவில் மற்றும் எலும்பியல் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை தருகின்றன.
ஒட்டு மொத்தமாக திவாலடையும் அமெரிக்க மக்களை எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு திவால் நிலைமைகளை மருத்துவமனைகளின் கட்டணங்களே உருவாக்குகின்றன. இப்போதும் கூட அமெரிக்காவில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் சுகாதாரக் காப்பீடு இல்லாமல் இருக்கின்றனர். கொரோனா தொற்று அதிகமாகிய கடந்த ஐந்து வாரங்களில் வேலையின்மை நலத்திட்ட பலன்களை பெற இரண்டு கோடியே அறுபது இலட்சம் அமெரிக்கர்கள் முதன்முறையாக பதிவு செய்திருக்கின்றனர். அவர்களிலும் ஐம்பது இலட்சம் பேர் மருத்துவ காப்பீடுகளை இழந்தவர்கள். காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதிக்குள் ஒரு கோடியே முப்பது இலட்சமாக உயரும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் சுகாதாரக் காப்பீட்டை வைத்திருக்கும் மக்களும் தங்கள் காப்பீட்டு சலுகைகளை பெறுவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களாலும் மருத்துவ கட்டணங்களை சமாளிக்க இயலாது.
சுகாதாரத் துறை காப்பீடுகளை ஒரு நபர் கொண்டிருந்தாலும் அவர் சிகிச்சைக்காக எங்கும் போக இயலாத நிலையும் அமெரிக்காவில் இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் அமெரிக்க மக்கள் தொகையில் பத்து கோடி அதிகரித்திருந்தாலும் மருத்துவ படுக்கைகள் ஆறு இலட்சமாக மட்டுமே சுருங்கியிருக்கிறது. இலாபம் இல்லை என்பதற்காக பல ஊரக மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது ஊரகப் புறங்களில் இருக்கும் 1 ,844 மருத்துவமனைகளில் சுமார் 453 மருத்துவமனைகள் மூடுவதை நோக்கிய அபாயத்தில் இருக்கின்றன. நகரங்களிலோ வறியவர்களுக்காக நூறு ஆண்டுகளாக சிகிச்சை அளித்த மருத்தவமனைகள் எல்லாம் இரக்கமின்றியே மூடப்பட்டிருக்கின்றன. இந்த இடங்கள் ஆடம்பர இல்லங்களை கட்டும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கோ இல்லை இதர வணிக பயன்பாடுகளுக்கோ மாற்றப்பட்டிருக்கின்றன.
அமெரிக்க சுகாதரத் துறைக்கு தேவைப்படும் பொருட்கள் உபகரணங்களின் விநியோகச் சங்கிலி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை கோவிட் 19 அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கம் வரை கொரோனா அறிகுறிகளோடு மக்கள் மருத்துவமனைகளுக்கு சென்றாலும் அவர்களை சோதிப்பதற்கு அங்கே போதிய கருவிகள் இல்லை. அந்த சோதனைக் கருவிகளை உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து வாங்குவதை விட தானே தயாரிக்கலாம் என அமெரிக்க முடிவு செய்தது. மேலும் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆடை, உபகரணங்களுக்கும் அங்கே கடும் தட்டுப்பாடு. இத்தகை மருத்துவ உபகரணங்களின் விலைகளை மருந்து நிறுவனங்கள் 1000 சதவீதம் உயர்த்தியிருப்பதால் இவற்றை பெறுவதற்கு மாநிலங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. எரியும் வீட்டில் பிடுங்கும் வரை ஆதாயம் என்ற நிலைதான் இந்த ஆயிரம் சதவீத கட்டண உயர்வுக்கு காரணம் என்றால் அந்த நாட்டை எப்படி யாரால் காப்பாற்ற முடியும்?
இப்போதைய கொரோனா நெருக்கடி நிலை நாடு முழுவதும் மொத்த அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய மேம்பட்ட மருத்துவத்திற்கான தேவை முன்னெப்போதையும் விட பலமாக இருக்கிறது. ஒருவேளை முன்னரே அனைவருக்கும் மருத்துவ பாதுகாப்பை வழங்கியிருந்தால் இப்போது எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியிருக்காது. அப்படி இருந்தால் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு அமெரிக்கரும் பணம் தேவைப்படாமலேயே பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
ஊடக செய்தி ஒன்றின் படி கடந்த மார்ச் மாதத்தில் செவிலியர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுக்காக சிகிச்சையையும், பரிசோதனையையும்  செய்ய முயன்றார். மருத்துவமனையில் சேர்க்கப்படாமேலேய முதல் கட்ட செலவுகள் மட்டும் அவருக்கு 35,000 டாலர் ஆகியிருக்கிறது. ஆம் இப்படித்தான் மூன்றில் இரண்டு பங்கு தனிநபர் திவால்கள் மருத்துவக் கட்டணங்களை முன்னிட்டு அங்கே நடக்கிறது.
உலகில் எந்த வகையான சுகாதாரக் கட்டமைப்புகள் வெற்றி பெறுகின்றன? பாதுகாப்பு, மையத் திட்டமிடல், இலாபத்தை முன்னிறுத்தாமல் மக்களின் ஆரோக்கியத்தை முன்வைக்கும் அணுகுமுறை ஆகியவையே கொரானவை உலக அளவில் எதிர் கொள்ள தேவையானதாகும். அதனால்தான் இத்தகைய கட்டமைப்பு கொண்ட நாடுகள் சில அவை அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருப்பினும் தொற்றின் பவரலை கட்டுப்படுத்தும் பணியினை சிறப்பாகவே செய்கின்றன.
அமெரிக்காவில் அனைவருக்குமான மருத்துவம் இருந்திருந்தால் மருத்துவமனைகள் தமது கதவுகளை அனவருக்கும் திறந்தே வைத்திருக்கும். போலவே இலாபம் தராத ஆனல் மக்களுக்கு தேவைப்படும் பல்வேறு மருத்துவத் துறைகளையும் மூடியிருக்காது. மேலும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளை வாங்குவதும் இலாபம் இல்லையென்றால் அவற்றை மூடுவுதம் கூட நடந்திருக்காது. அதே போன்று மத்திய அரசு மருந்துகளையும், மருத்துவப் பொருட்களை மொத்தமாக மலிவாக கொள்முதல் செய்வதற்கும், மாநிலங்களுக்குத் தேவையானதை அளிப்பற்கும் கூட வாய்ப்பிருந்திருக்கும். ஏலப் போர்களும், விலைவாசி உயர்வும் மருத்துவத் துறையில் பேயாட்டம் போட்டிருக்காது.
ஒரு நிபுணரது மதிப்பீட்டின் படி அமெரிக்காவின் அடுத்த குளிர்காலம் நோய்த்தொற்று காரணமாக இன்னும் மோசமாக இருக்கும். உலகளவில் கொரானா நோய்த் தொற்றின் சர்வதேசப் பரவலை சீனா, தென்கொரியா, கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. காரணம் அந்த நாடுகள் மையப்படுத்தப்பட்ட திட்டத்தையும் மக்கள் நல சுகாதாரத் துறைகளையும் கொண்டிருப்பதுதான்.
அமெரிக்காவிலோ சந்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் சுகாதாரத் துறையில் கோலேச்சுகின்றன. எனவே கொரானாவால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட முதலாளித்துவத்தால் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் அங்கே அதிகம். இதுதான் ஹாலிவுட் படங்கள் மூலம் இந்த பிரபஞ்சத்தையே நடுநடுங்க வைத்த அமெரிக்காவின் உண்மைக் கதை!