Tuesday 29 September 2020

தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும்.

 பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார்.




தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை  தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை.  எப்படி அதை நான் செய்யமுடியும்” என்றேன்.  “அதனால் தான் அண்ணா, உங்களிடம் அப்பொறுப்பைக் கொடுக்கின்றோம்” என்றார்.

முதல் ஒலிப்பேழை – கடற்புலிகளுக்காக செய்தோம்.  கவிஞர் காசி ஆனந்தன் மூன்று பாடல்கள எழுதினார்.  புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்து, பல ஆண்டுகாலம் இயக்கத்துடன் விடுபட்டிருந்த தொடர்பை புதுப்பித்தேன்.  அவர் மூன்று பாடல்களை எழுதினார்.  (1. இது கடற்புலிப்படை, 2. மனித சுனாமி தான்.. 3. நாம் நீரிலும் வெடிக்கும் எரிமலைகள்).  கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு. வீரா., போன்றவர்களின் பாடல்களும் இருந்தன.

பாடல்கள் அனைத்திற்கும் அற்புதமான எழுச்சி மிகுந்த இசையை இசையமைப்பாளர் தேவேந்திரன் அமைத்திருந்தார்.  பாடல்களை, S.P பாலசுப்பிரமணியம், S.M. சுரேந்தர், திப்பு, கார்த்திக், T.L. மகாராசன், மனோ, சுஜாதா, கல்பனா, மாணிக்கவிநாயகம், சத்தியன், ஹரீஸ் ராகவேந்திரா போன்ற தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களை பாடவைத்தேன்.

“இத்தொகுப்பில் S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பொறுப்பாளரும் போராளியுமான சேரலாதன் என்னிடம் கேட்டபிறகு, புலவர் புலமைப்பித்தன் அவர்களிடம் செய்தியைக் கூறினேன். அவர் S.P.B அவர்களுடன் எனக்கு தொடர்பைத் ஏற்படுத்தித் தந்தார்.

அப்போது (2006-2007) S.P.B ஜெயா தொலைக்காட்சியில் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சியை (என்னோடு பாட்டுப் பாடுங்கள்) நடத்திக்கொண்டிருந்தார். நானும் அந்நிகழ்வை தொடர்ந்து பார்ப்பதுண்டு. ஒரு இசைப் பேராசிரியர் வகுப்பு எடுப்பது போல் இருக்கும். “அந் நிகழ்வை பதிவு செய்து தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார். இசையைக் கற்றுக்கொள்பவர்களையும் இசையில் ஆர்வமுள்ளவர்களையும் பார்க்கச் சொல்வதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று பலரையும் பார்க்கச் சொல்லியிருக்கிறார். தலைவருக்கு மிகவும் பிடித்த நிகழ்வு” என்று சேரலாதன் என்னிடம் கூறியதோடு   எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை சந்திக்கும் போது இதைக் கூறுங்கள் அண்ணா என்றார்.

முதல் ஒலிப்பேழைக்காக பாடல் பதிவுக்கு வந்தபோது சந்தித்தேன். அதுதான் முதல் சந்திப்பு. 21.06.2007 அன்று சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. முதல் சந்திப்பு போல் இல்லாமல் பல நாட்கள் பழகியதுபோல் மிக இயல்பாக இருந்தது. சந்தித்த உடனே தலைவர் குறிபிட்டதாக சேரலாதன் கூறிய செய்தியைக் கூறினேன். மிகவும் மகிழ்ந்தார். “அவர் பார்த்து கருத்துக் கூறியது எனக்குப் பெருமை” என்றும் நெகிழ்ந்தார். இதை தலைவருக்கும் பகிர்ந்தேன்.

S.P. பாலசுப்பிரமணியம் ஒலிப்பதிவுக் கூடத்தில் என்னோடும் இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களோடும்  சில நிமிடங்கள் பொதுவான உரையாடலுக்குப் பிறகு தான் பாடவேண்டிய பாடல் வரிகளைக் கேட்டுப் பெற்று தான் கொண்டுவந்திருந்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதினார். மிகவும் வியந்து அதுகுறித்து அவரிடம் கேட்டேன் “திரைப்படப் பாடலாக இருந்தாலும் அல்லது தனி தொகுப்புப் பாடலாக இருந்தாலும் தன்னுடைய இந்த பதிவேட்டில் பாடல் வரிகள், எந்தத் தேதியில், யாருடைய இசையமைப்பில், எந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை எழுதி வைப்பது எனது வழக்கம்” என்று கூறினார்.

அதன் பிறகு பாடலின் இசைக்கோர்வையை தன்னுடைய Tape Recorder இல் பதிவு செய்து தரக்கூறி பாடலை அதனோடு இணைத்து ஒருமுறைக்குப் பலமுறைப் பாடிபார்த்தபிறகு பாடல் பதிவுக்குத் தயாரானார்.

அன்று அவர் பாடியப் பாடல் கவிஞர் கு.வீரா எழுதிய

“உலக மனிதம் தலைகள் நிமிரும்

விடுதலைப் போரின் வீரத்திலே”

என்றபாடல். அந்தப் பாடலை அவர் எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு வரிகளையும் உள்வாங்கி “உணர்வோடும் உண்மையோடும் கவித்துவத்தோடும் எழுதியிருக்கிறார்” என்று வீராவைப் பாராட்டினார். இசையைக் கேட்டபிறகு  தேவேந்திரனையும் பாராட்டினார்.

“எங்கள் மண்ணில் நாங்கள் வாழ

எவரும் தடுத்தல் சரிதானா

சொந்த மண்ணில் வாழும் உரிமை

எமக்கு என்ன கிடையாதா

குண்டை போட்டார் கூச்சல் போட்டோம்

எவரும் அதனைக் கேட்கவில்லை

குண்டை போட்டார் குண்டே போட்டோம்

கூடா தென்றால்  ஞாயமில்லை”

என்று சரணத்தில் வருகின்ற வரிகள் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வரிகள். மிகவும் அற்புதமாக அப்பாடலை பாடினார். பாடி முடித்ததும் நானும் தேவேந்திரனும் அவரைப் பாராட்டினோம்.

‘எங்களின் கடல்’ தொகுப்பில் இறுதிப் பாடலாக அதை வைத்தோம்.

இரண்டாவதாக இம்ரான் பாண்டியன் படையணிக்காக ‘ஈட்டிமுனைகள்’ என்றத் தலைப்பில் ஒரு பாடல் ஒலிப்பேழையை தயாரித்தோம்.

அனுராதபுர விமானப்படைத் தளம் தாக்குதல் ‘எல்லாளன் நடவடிக்கை’ குறித்த ஒலிப்பேழை தொகுப்பையும் மூன்றாவது முறையாக தயாரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டது.  அத்தொகுப்பிற்கும் இசையமைபாளர் தேவேந்திரன் தான்.

“இத்தொகுப்பில், S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது இரண்டு பாடல்களையாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்தார் சேரலாதன்.

“அள்ளித்தின்ற ஆனா எழுதிய – அன்னை மண்ணைக் கடக்கிறோம். அன்னியச் சேனை கோட்டை இருக்கும் அனுராதபுரத்திற்கு நடக்கிறோம்” என்ற யோ. புரட்சியின் பாடலையும்,

“வானத்திலேறியே வந்து வந்து குண்டு

போட்டவன் கோட்டையிலே – துட்ட

காமினிமுன்னர் எல்லாளனை வீழ்த்திய

கோட்டையின் வாசலிலே” என்ற புதுவை இரத்தினதுரையின் பாடலையும் S.P பாலசுப்பிரமணியம் மிக அற்புதமான உணர்ச்சிகளோடும், சங்கதிகளோடும் அவருக்கே உரிய தனித்துவத்தோடும் பாடியிருந்தார்.

இதே காலகட்டத்தில் எல்லாளன் திரைப்படப் படப்பிடிப்பு தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அத்திரைபடத்திற்கான அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய

“தாயக மண்ணே! தாயக மண்ணே!!

விடைகொடு தாயே! விடை கொடு

தலைவனின் தேசப் புயல்களுக்காக வழிவிடு தாயே! வழிவிடு”

என்ற பாடலை எனக்கு அனுப்பிய சேரலாதன், உடனடியாக தேவேந்திரன் அவர்களை இசை அமைக்கச் செய்து, S.P பாலசுப்பிரமணியம் அவர்களை பாடவைத்து அனுப்பி வையுங்கள் அண்ணா” என்றார், சேரலாதன்.

அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாடல் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ற வகையில் இசைக்கோர்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் பிற விடயங்கள் குறித்தும் நீண்ட நேரம் என்னிடம் கைபேசியில் உரையாடினார். அன்பைப் பொழிந்தார். நெகிழ்ந்தார். அதன் பிறகு அவரோடு தொடர்பே இல்லை.

அப்பாடல் தொகுப்பிற்கு இடையில் இப்பாடலையும் இசையமைத்து, S.P.B அவர்களைக் கொண்டு பாடச்செய்து உடனடியாக அனுப்பினேன்.  மிகவும் அற்புதமாக அப்பாடலை S.P.B பாடியிருப்பார்.  புதுவையின் வரிகளுக்கு ஏற்ற இசையை தேவேந்திரன் கோர்த்திருந்தார்.  காட்சிப்படிமங்களாக விரியும் அந்த இசைக்கான வரிகளுக்கு S.P.B  தன் குரலால் உயிர் கொடுத்திருந்தார்.

அந்தப் பாடலில் இருந்த உயிர்த்துடிப்பு மிக்க காட்சிப் படிமங்கள் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

காற்றும் தமிழும் உள்ளவரை அவரும் வாழ்வார்.

-ஓவியர் புகழேந்தி-

Saturday 26 September 2020

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்...

 மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்....தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!





1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது.
 

பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல். “நவீனன்……” என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ‘ஜில்’ லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.
 
மனம் ‘பட பட’ வென்று அடிக்கத் தொடங்கியது… மீண்டும் ‘நவீனன்” என்று அழைத்தேன். நவீனன் எழும்பி விட்டான். ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது… மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது… ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது….. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது… திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது… நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை…. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது…. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன்… அது மிகவும் குறைவாக இருக்கிறது… 50ஃ? என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது.
 
திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது… அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது… சுயநினைவோடு என்றாலும் சரி… சுய நினைவில்லை என்றாலும் சரி…. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ…” என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி;த்தார் அவர். அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் – அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?……. எது? ஆம்@ “சத்தியம்!” என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ” அகிம்சை” என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான்.
 
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், ‘கட்டுப்பாடு’ என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே ‘பலி’ கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை. என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.
 
“புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள்… ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம்… இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை…” இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, “புலிகள் பொய்யர்கள்” என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.

எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம்…. ஆனால்…… முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான். உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்? 265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09. 1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.
 
ஆம்! தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்;த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்… எங்கும் அழுகைச் சத்தம்…. விம்மல் ஒலி… சோக இசை…. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு! காலை 11 மணிக்கு ‘என்பார்ம்’ செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம். பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
 
விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் – கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, ‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும்…….
 
ஆனால், என்ன செய்ய முடியும்? அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் “ஓ…” என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
 
தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.

சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.
 
திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன்.
 
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்… அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்… ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு… அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Saturday 12 September 2020

தமிழினப் போரில் தவிர்க்கமுடியாத போராளி தியாக தீபம் திலீபன்...

 அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இயக்கம் முப்படைகளைக்கொண்டு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, ஒரு அரசு தன் மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அது அனைத்தையும் கொடுத்து, வெற்றியின் விளிம்பு வரை சென்று தோற்றுப்போனாலும், அந்த சமகாலத்தின் வரலாறு, மனித இனம் இருக்கும்வரை அழியப்போவதில்லை. உரிமைகளுக்காக ஒர் இனம் போராடி மடிந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் இன்றுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. சர்வதேச நீதி விசாரணையிலிருந்து உள் நாட்டு விசாரணைக்கு மாற்றி நேர்மையாக விசாரணை நடைபெறும் என்ற வாக்குறுதி கொடுத்தும் காலங்கள் ஓடிவிட்டன. குறைந்தபட்சமாக காணாமல் போனவர்களின் நிலையையாவது வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதுவும் இன்றுவரை முழுமையாக நடக்கவில்லை. 




ஈழ விடுதலைப் போரும், அதற்காக உயிர் நீர்த்த தியாகிகளின் வரலாறும் மனித இனம் இருக்கும்வரை பொதுவெளியில் பேசப்படும், ஒன்று, இரண்டு அல்ல, ஆயிரக்கணக்கான உயிர் தியாகங்கள் அதில் அடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தின் இறுதி வாரம் முழுக்க விடுதலைப்புலிகள் வாரம் என்றே சொல்லலாம். நவம்பர் 26 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள், நவம்பர் 27 விடுதலைப்புலிகள் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் மற்றும் நவம்பர் 29 ஈழ விடுதலை மற்றும் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பார்த்திபன் இராசையா எனும் திலீபனின் பிறந்தநாள்.

 

திலீபன், ஈழவிடுதலையில் மாபெரும் அஹிம்சை போராட்டம் நடத்தி உயிர் நீர்த்தவர். 29 நவம்பர் 1964-ல் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள ஊரெழு எனும் இடத்தில் பிறந்த இவர் தமிழீழ விடுதலைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துகொண்டார்.

 

இவர் 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

அவர் வைத்தக் கோரிக்கைகள்:

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் தமிழர்கள் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2. சிறையிலும், இராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

5. தமிழர் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுவதும் நிறுத்தப்பட வேண்டும்.
 

 

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தண்ணீரும்கூட அருந்த மாட்டேன் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.




 

அவரின் பனிரெண்டு நாள் போராட்டம் எப்படி இருந்தது என்பதை பார்ப்போம். முதல் நாள் போராட்டம் தொடங்கிய அன்று திலீபன் மேடை ஏறி உண்ணாவிரத போராட்டத்தைப் பற்றிய விளக்க உரை கொடுத்துவிட்டு, அவர் வாசிப்பதற்காக சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தன்னிடம் வைத்திருந்தார். மேலும் அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், திலீபனை சந்தித்தார். இரண்டாம் நாள் அதிகாலை திலீபன் எழுந்து சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு மேடை ஏறினார். உடல் சக்தி விரயமாகும் என்று இரண்டு நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்தினார். அன்றும் பிரபாகரன், திலீபனை சந்தித்தார்.


மூன்றாம் நாள் திலீபன் விழிக்கும் போதே தண்ணீர் வற்றி உதடுகள் வெடிப்படைந்திருந்தன. மேலும் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். மருத்துவ சோதனைக்கு மறுத்துவிட்டார். நான்காம் நாள் திலீபனால் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டும் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல்போனது. ஐந்தாம் நாள் அவரால் எழவே முடியவில்லை. சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கியது. இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ கர்னல் அவரை சந்தித்து பேசிவிட்டு, மேலிடத்தில் பேசுவதாக சொல்லியிருந்தார். ஆறாம் நாள் திலீபனால் பேசமுடியாமல்போனது. ஏழாம் நாள் இந்திய பத்திரிகைகள் இலங்கை சென்றிருந்தது, அவர்களிடம் திலீபன் “எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேண்டும். இல்லையென்றால், நான் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்” என்றார். எட்டாவது நாள் அவருடன் சேர்ந்து பொது மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள். ஒன்பதாவது நாள் திலீபனால் கண் திறக்கமுடியவில்லை. அன்று இந்தியத் தூதுவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இடையே இரண்டுகட்டமாக  பேச்சுவார்த்தை நடந்து தோல்வியில் முடிந்தது. பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 52 எனவும், இரத்த அழுத்தம் 80/50 எனவும் இருந்தது. அவர் அன்று “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன்” என்றார். பதினோராவது நாள் உடல் அசைவற்று இருந்தார் திலீபன். அவருக்கு மிகவும் பிடித்த பாடலான “ஓ மரணித்த வீரனே! உன் ஆயுதங்களை எனக்குத்தா. உன் சீருடைகளை எனக்குத்தா” என்ற பாடலை அங்கிருந்தோர் பாடினார்கள். அவர் வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், பனிரெண்டாவது நாள் காலை 10.48 மணிக்கு அந்த வீரன், ஒரு சொட்டு தண்ணீர், ஒரு பருக்கை உணவு என எதையும் உட்கொள்ளாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்துகொண்டு வீர மரணம் அடைந்தார். 


தியாக தீபம் திலீபன் இறந்தபோது அவரின் வயது 23 மட்டுமே. இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கர்னல் திலிபன் எனும் பதவி உருவாக்கப்பட்டது. 


இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இவருக்கு நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. ஆனால், 1996-ம் ஆண்டு இலங்கை இராணுவம் ஜஃப்னா பகுதியைக் கைப்பற்றியதும், அவரின் நினைவுத்தூண் இலங்கை இரணுவத்தால் இடிக்கப்பட்டது. மீண்டும் அவரது நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அதன் பிறகு 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் அவரின் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது. அரைநாள் உண்ணாவிரத போராட்டத்திலும்கூட ஆயிரம் குறுக்குவழிகளை கையாலும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், 12 நாட்கள் கடந்தும் கொண்ட கொள்கையில் உறுதியாக, நீர்கூட பருகாமல் வீரமரணம் அடைந்த அவரது தீர்கத்திற்காகவாவது நாம் அவரை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்... 

Tuesday 1 September 2020

இலங்கையின்: ஈழத்தமிழர்களின் நிலை என்னவாகும்..? புதிய ஆட்ச்சியும் தொடரும் கைதுகளும்…. !

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற பின்னர் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் இலங்கையில் அதி உயர் பதவியான ஜனாதிபதி பதவியை தன்வசப் படுத்தியதற்கு பின்னர் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் மிகுந்த அச்ச நிலையை ஏற்படுத்தியது. ஈவு இரக்கமின்றி இலட்சக்கணக்கில் தமிழ் மக்களைக் கொன்றொழித்து சர்வதேச அளவில் பல எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்ட இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் தமிழர்கள் மீது தன்னுடைய கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளார். 



கொரோனா பரவலின் மூலம் இலங்கையில் நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் தள்ளிப்போடப்பட்டது. பின்னர் கொரோனோ  நோய் பரவலை மறைத்து பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் மாதம் 2020ஆம் ஆண்டு இலங்கை அரசு நடத்தி முடித்தது. இதில் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு காரணமாக இருந்த உலகத் தமிழர்களால் போர்க்குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 

கொரோனோ நோய் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் கொரோனா தடுப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டன. இதனால் அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்க்கையை கொண்டு செலுத்தும் குடும்பங்கள் எங்கும் சென்று தொழில் செய்ய முடியாத சூழ்நிலையில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த வேளை சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர். இதன்போது தமிழர்களுக்கு நேரடியாகச் சென்று புலம்பெயர் தேசத்தில் வாழுகின்ற தமிழ் உறவுகள் ஊடாக நிதி வளங்களை பெற்று அத்தியாவசிய தேவைகளை மக்களுக்கு வழங்கி  வறுமையில் வாழ்ந்த மக்களின் பசியை போக்கி அவர்களோடு தோளோடு தோள் நின்ற சமூக பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்கள் சமூக பணியை மேற்கொண்டனர். 




இவற்றையெல்லாம் கண்காணித்து வைத்திருந்த இலங்கை புலனாய்வுப் பிரிவினர் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இரவோடு இரவாக அனைவரையும் கைது செய்து விடுதலைப்புலிகளை  மீள  உருவாக்குதல், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றவை போன்ற  குற்றச்சாட்டுகளில் பயங்கரவாத சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டு  சித்திரவதை செய்து வருவது இலங்கையில் வாழுகின்ற அனைத்து தமிழர்களிடமும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது 2009க்கு பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரினதும் விவரங்கள் சேகரிக்கப்படுவதும் வெள்ளைவான் கடத்தல்காரர்கள் இரவோடு இரவாக முன்னாள் போராளிகள் ஆண்,  பெண் என்ற வேறுபாடின்றி கடத்திச் சொல்லப்படுவதும் இன்று இலங்கையில் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது ஈழத்தில் வாழ்கின்ற மக்கள்  மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ பிரசன்னத்துக்கு  மத்தியில் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியாது உயிரை கையில் பிடித்தவாறு பெற்றோர்கள் கண்ணீருடன் வாழ்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை இன்று ஆட்சியில்  ஏறியுள்ள புதிய அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். 




 இது ஒருபுறமிருக்க இந்தியாவில் இருந்து செயல்படக்கூடிய இணைய ஊடகங்கள் பலவிதமான செய்திகளை பரப்பி வருகின்றன. இந்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்குகின்றது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது ஈழத்தை பெற்றுக் கொடுக்க போகின்றது என்றெல்லாம் இப்படிப்பட்ட பல செய்திகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக பரவி வருவதால் இலங்கை அரசு இதை சாதகமாக பயன்படுத்தி முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து ஆள்கடத்தல் வேலைகளில் இறங்கி உள்ளது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனா இறங்கியுள்ளதாலும்,  இலங்கையில் சீனா தனது அகன்ற காலடியைப் பதித்துள்ளதாலும் இந்தியாவின் பார்வையை தமிழர்கள் மீது திரும்புவதற்கு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. ஆனால் இதன் விளைவு ஈழத்தில் வாழ்கின்ற தமிழ்மக்கள் மட்டுமன்றி, உலகம் முழுதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் இலங்கை அரசு இலக்கு வைக்க தூண்டும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது.




ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தாலும்கூட இந்திய அரசு தமிழ் மக்களுக்கு நிம்மதியான நிரந்தரமான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்பதில் எந்தவித நம்பிக்கையும் அற்றவர்களாகவே ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஏனெனில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது பலவகையான ராணுவ உதவிகளை செய்து, பல அரசியல் சூழ்ச்சிகளை செய்து ஈழத் தமிழரைக் கொன்று அழிப்பதற்கு இலங்கை அரசுடன் துணையாக நின்ற ஒரு முக்கிய பங்கை இந்தியாவில் ஆட்சியில் இருந்த அன்றைய காங்கிரஸ் அரசு வகித்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. இந்தநிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே ஈழத் தமிழர் விடயத்தில் பின்பற்றி வருகிறது என்பது யதார்த்தமான உண்மை. அதுமட்டுமன்றி இலங்கை புலனாய்வு பிரிவினருடன் இணைந்து உலகத்தில், மற்றும் தமிழகத்தில் அகதிகளாக வாழுகின்ற ஈழத்தமிழர்களை இலக்கு வைத்து பல புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது என்பது பல ஊடகங்கள் அறிந்திராத உண்மை.

விடுதலைப் புலிகள் காலத்தில் பலமாக தமது ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தபோது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த விதமான பங்கங்களும் ஏற்படாத சூழ்நிலையில் இந்தியாவின் முழு ஒத்துழைப்புடன் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ராணுவ தளவாடங்களும் , பொருளாதார வளங்கள், மற்றும் நிதி போன்ற பலவகையான வளங்களுடன் சீன அரசு இலங்கையில் அகலக்கால் ஊன்றி உள்ளது, உலகத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இயற்கை துறைமும், மன்னார் வளைகுடாவை இலக்கு வைத்து தலை மன்னாரிலும், காங்கேசன்துறை துறைமுகத்திலும், கச்சதீவு பகுதியிலும் சீன அரசு தன்னுடைய இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது யதார்த்தமான உண்மை. அவற்றையும் தாண்டி இந்தியாவுக்கு எதிராக சீனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு ஆதரவு வழங்கும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பானது இந்திய அரசுக்கு இலங்கை கொடுக்கும் மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.




 ஆனால் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப் போவதுமில்லை, இலங்கையில் ஏற்படுத்தப்படும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த போவதுமில்லை, ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய அரசு ஒரு ஆக்கபூர்வமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கப் போவதும் இல்லை என்பது ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக இந்திய அரசிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடமாகவே பார்க்க முடிகின்றது. மாறாக இதனால் ஈழத்தமிழர்கள் எதிர் கொள்ள போகும் விளைவுகள் என்பது மிகவும் பாரதூரமானதாகவே அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த அழுத்தங்களின் காரணமாக இந்திய அரசை பணிய வைத்து ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு நிரந்தரமான நிம்மதியான ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் முன் வருமேயானால் மட்டுமே ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதில் ஓரளவு நம்பிக்கை கொண்டவர்களாகவே ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளும் சரி, தமிழ் மக்களும் சரி இந்திய அரசின் அணுகுமுறை காரணமாகவும், ஈழத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் சரி ஈழத்தமிழர்களானாலும் விடுதலைப்புலிகளானாலும் இந்திய அரசின் மீது அதிருப்தியை கொண்டுள்ளவர்களாக வே இன்றுவரை அவநம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய அரசின் இந்த கடும்போக்கு சிந்தனைகள் இன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் 2009 விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். 

நாளுக்கு நாள் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், வலைகள் சேதம் ஆக்கப்படுவதும், மீனவர்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதும் இன்று வரை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தில் கூட இந்திய மத்திய அரசும் சரி, தமிழக மாநில அரசும் சரி இலங்கை அரசுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் சாதிப்பது இலங்கை இந்திய அரசுகளின் தமிழின விரோத போக்கையும், இலங்கை மீதான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள ஒற்றுமை பாட்டை வெளிப்படையாக பறைசாற்றி நிற்கிறது. இந்திய அரசின் இந்த அசமந்தப் போக்குக்கு எதிராக மீனவர்களால் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டும், பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இந்திய அரசோ மாநில அரசோ இதுவரை எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.  

எது எப்படி இருப்பினும் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கைகளும், ஆட்கடத்தல் நடவடிக்கைகளும், கொலை மற்றும் சித்திரவதைகள் போன்ற நடவடிக்கைகளும் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச அரசு இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் ஒரு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும். இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் சர்வதேச சமூகம் இலங்கை அரசு மீது ஒரு இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படாத  பட்சத்தில் இலங்கையில் வாழுகின்ற இளைஞர் யுவதிகள் அனைவரும் காணாமல் ஆக்கப்படுதல், சிறை வைக்கப்படுதல், படுகொலை செய்யப்படுதல் போன்ற நடவடிக்கைகளினால் அழிக்கப்படுவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

 ஆகவே இந்திய அரசின் விடுதலைப்புலிகளின் உருவாக்கத் திட்டம் நிறைவேறலாம் ..! அல்லது நிறைவேறாமல்  போகலாம்,,.... ! ஆனால் தமிழர்களுக்கான நிம்மதியான, சுபிட்சமான ஒரு நல்ல தீர்வினை இந்திய அரசோ,  சர்வதேச சமூகமோ பெற்று கொடுக்குமா…? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய அரசின்கைகளிலேயே உள்ளது. தமிழ் ஈழம் அமைந்தால் இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்கள் நன்றி கடன் பட்டவர்களே.....!

எழுத்து :  வன்னி வாணன்